Tuesday, January 25, 2011

உறங்கும் துயரம்


  இன்று காலையில் மின்ரயிலில் வந்து கொண்டிருந்த போது அந்தக் குழந்தையைப் பார்த்தேன். அமர இடமில்லாமல் நின்று கொண்டிருந்த அந்த வடஇந்திய தம்பதியரின் முகங்கள், செளகார்பேட்டையில் சகஜமாய் தெரியுமென்றாலும் தமிழக முகங்களுக்கு இடையில் வித்தியாசமாய் தெரிந்தன.
தகப்பனின் (என்றுதான் நினைக்கிறேன்) தோளில் சாய்ந்து நிம்மதியாய் தூங்கிக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை. நிச்சயம் பெண்தான். ஒன்றரை வயது இருக்கலாம். சலவைத்துணி மாதிரி புத்தம்புதிதாய் சிவப்பாக அழகான தங்க விக்கிரகம் போலிருந்தது. தூக்கத்தின் இடையே அவ்வப்போது தனது ரத்தநிற சிவப்பு உதடுகளை லேசாக சுழித்துக் கொண்டது, அத்தனை பேரழகாய் இருந்தது. எதற்காகவோ புன்னகைத்துக் கொண்டும், சிணுங்கிக் கொண்டும் ஆழ்ந்த தூக்கம். (ஒழுகும் சளியுடன் கருப்பு நிறக் குழந்தையை இத்தனை நேரம் ரசித்திருப்பேனா என்று பின்னர் கேட்டது அகம்)
அது தன்னை முழுமையான நம்பிக்கையுடன் தன்னைச் சுமந்திருக்கும் தகப்பனிடம் ஒப்புவித்தது போல் இருந்தது. எங்கே போகிறோம், எத்தனை மணிக்கு சென்று அடைவோம், அங்கு உணவு கிடைக்குமா, அங்கு நண்பர்கள் இருப்பார்களா, எதிரிகளா, எப்போது திரும்புவோம், .. இப்படி எந்தக்கவலைகளும் அதற்கு இல்லாதது போல் தோன்றியது. துயரம் என்கிற ஒன்றை அந்தக் குழுந்தை அதுவரை உணர்ந்திருக்குமா? விவிலியமும் இதையே சொல்கிறது. கடவுளிடம் முழு நம்பிக்கையுடன் தன்னைக் ஒப்புக்கொடுத்தவர்களை எந்தத் துயரமும் அணுகுவதில்லை.
ஆனால் வளர்ந்த பிறகு எத்தனை மாறிப் போகிறோம்? போயிருக்கிறேன்? எத்தனை நெருக்கமான நட்பாக, உறவாக இருந்தாலும் ஒரு துளி பகையாவது, துரோகமாகவது, வன்மமாவது, வெறுப்பாவது, சங்கடமாவது, அவநம்பிக்கையாவது இல்லாமலில்லை. யாரிடமாவது நம்மை  என்னை முழு நம்பிக்கையுடன் ஒப்புவித்துக் கொள்கிறோமா னா? ஒரு துளி ரகசியத்தையாவது நம்முடைய  என்னுடைய அந்தரங்கத்தின் ஆழத்தில் வெளிப்படுத்த முடியாமல்/விரும்பாமல் பத்திரப்படுத்திதானே வைக்கிறோம்? வைக்கிறேன்? நம்மால்  என்னால் அந்தக் குழந்தையின் துயரற்ற மனநிலையை மீண்டும் பெறவே முடியாது என்றுதான் தோன்றுகிறது.  * சிலவற்றை பொதுமைப்படுத்தி எழுதும் போது அது பலரைச் சங்கடப்படுத்துவதாக பின்னூட்டங்களின் மூலம் உணர்வதால் பிறகு தன்னிலை சார்ந்து மாற்றியிருக்கிறேன்.  
suresh kannan