Sunday, January 12, 2020

கென்னடி கிளப் (2019) - 'பிகிலை' விடவும் சிறந்த திரைப்படம்





ஆகஸ்ட் 2019-ல் வெளியான ‘கென்னடி கிளப்’ திரைப்படத்தை தமிழ் சமூகம் அவ்வளவு கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இதற்குப் பிறகு வெளியான ‘பிகில்’ திரைப்படத்தை விடவும் இது சிறந்த திரைப்படம் என்பேன்.

பொதுவாகவே இயக்குநர் சுசீந்திரனின் திரைப்படங்கள் அடிப்படையில் சுவாரசியமான திரைக்கதையையும் அதனுள் பொதிந்து வைக்கப்பட்ட நுட்பமான அரசியல் செய்தியுடனும் இருக்கும். தனது முதல் திரைப்படமான ‘வெண்ணிலா கபடி குழு’விலேயே இதை அழுத்தமாக நிரூபித்தவர் சுசீந்திரன்.

ஆனால் ஒரு கட்டத்தில் மிக பலவீனமான திரைப்படங்களில் அவரது பெயரைப் பார்க்க முடிந்தது. அது அவரது திரைப்படம்தானா என்று இன்னொரு முறை உறுதிப்படுத்திக் கொள்ளுமளவிற்கு அவை சுமாரான உருவாக்கங்களாக இருந்தன.

‘வெண்ணிலா கபடி குழு’வைப் போலவே ‘கென்னடி கிளப்’பும் விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட, அதன் ஆதார வடிவமைப்பில் வந்த திரைப்படம்தான். ‘வெண்ணிலா கபடி குழு’வில் சாதிய அரசியலைப் பேசிய சுசீந்திரன், ‘ஜீவா’வில் பிராமண ஆதிக்கம் நிறைந்துள்ள கிரிக்கெட் துறையைப் பற்றி பேசினார். ‘கென்னடி கிளப்’பில் ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு வீழ்கிறது’ என்கிற அரசியலைப் பேசியுள்ளார்.

**

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் வட்டம் என்னும் பிரதேசத்தில் படம் துவங்குகிறது.  ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவரான சவரிமுத்து. (இயக்குநர் பாரதிராஜா). அந்தப் பகுதியில் உள்ள இளம் பெண்களுக்கு கபடி பயிற்சி அளிக்கும் ‘கிளப்’ ஒன்றை நடத்தி வருகிறார். விளையாட்டுத் துறையில் முன்னேற்றுவதின் வறுமையிலிருந்து அவர்களை விடுவிக்க முடியும் என்பதே அவர் நோக்கம்.

வயது காரணமாக ஒரு கட்டத்தில் அவரால் பயிற்சியை தொடர முடியாமல் போகிறது. எனவே தன் முன்னாள் மாணவனான முருகானந்தத்தை (சசிகுமார்) அழைத்து பயிற்சியளிக்கச் சொல்கிறார். ஒவ்வொரு கட்டமாக முன்னேறி அந்த அணியை தேசிய அளவிலான போட்டிக்கு அழைத்துச் செல்லும் முருகானந்தம், வடவர்களின் அரசியலையும் விளையாட்டுத் துறையில் உள்ள ஊழலையும் எதிர்கொள்ளத் துணிகிறார். அவர் வெற்றி பெற்றாரா என்பதை பரபரப்பான காட்சிகளின் மூலமாக சொல்லியிருக்கிறார்கள்.

**

இதுவரை பார்த்திலேயே இந்தத் திரைப்படத்தில்தான் சசிகுமார் அத்தனை ஸ்மார்ட்டான தோற்றத்தில் இருக்கிறார். சற்று ஒட்ட வெட்டப்பட்ட சிகையலங்காரம், ஃபிட்னெஸ் உடன் கூடிய தோற்றம் என்று பார்க்கவே அத்தனை அழகாக இருக்கிறார். இவருக்கு நாயகி, டூயட் என்றெல்லாம் வைத்து திரைக்கதையை கெடுக்காத விதத்திற்காகவே இயக்குநரைப் பாராட்டலாம். என்னவொன்று, சசிகுமார் ஆங்கிலம், இந்தி பேசும் சமயங்களில் மட்டும் சற்று காமெடியாக இருக்கிறது. வீராங்கனைகளுக்கு உற்சாகம் அளித்துப் பேசும் காட்சிகளில் வசனங்களும் சசிகுமாரின் நடிப்பும் நன்றாக உள்ளன.

நடிகர் சிவாஜியை ‘முதல் மரியாதையில்’ இயல்பாக நடிக்க வைத்திருந்தாலும் பாரதிராஜாவிற்குள்ளும் ஒரு ‘சிவாஜி’ உண்டு. மேடைப் பேச்சுகளில் அதை காணலாம். அந்தத் தன்மை இத்திரைப்படத்தின் சில காட்சிகளில் வெளிப்படுகிறது. குறிப்பாக இறுதியில் அமைச்சரிடம் ‘நியாயத்தைப்’ பேசும் காட்சி. ஆனால் இதர காட்சிகளில் தன் பாத்திரத்திற்கு மிகுந்த நியாயம் சேர்த்துள்ளார் என்று சொல்லலாம்.

தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை, கன்னத்தில் அறைந்து உபதேசம் சொல்லி பிறகு அரவணைக்கும் காட்சி, ஆணாதிக்க சமூகத்தை பெண்கள் எதிர்கொள்வதற்காக உத்வேகம் அளிக்கும் துவக்க காட்சி என்று பல இடங்களில் தன் பங்களிப்பைச் சிறப்பாக தந்துள்ளார் பாரதிராஜா.

ரஜினிகாந்த் இந்த வயதிலும் இளமைத் துள்ளலாக நடிப்பதை நாம் வியக்கிறோம்; பாராட்டுகிறோம். இந்த வரிசையில் பாரதிராஜாவையும் நாம் அதிகம் பிரமிக்க வேண்டும்.

அணியில் உள்ள ஒவ்வொரு பெண்ணின் பின்னணியையும் இயக்குநர் அறிமுகப்படுத்தியிருந்தாலும் அவை படத்தின் போக்கில் அழுத்தமாகத் தொடரவில்லை. ‘பத்தோடு’ பதினொன்று என்று ஆகி விடுகிறார்கள். ‘கவிதை’ சொல்லி இம்சை செய்யும் ‘காதல்’ இளைஞனும்.. ‘டேய் புருஷா. இங்க வாடா’ என்று அலப்பறை செய்யும் பெண்ணும் கவர்கிறார்கள். பாரதிராஜாவின் மகளாக வரும் பெண்ணின் அழகான தோற்றம் காரணமாக தனித்து ‘நிற்க’ வைக்கப்பட்டிருக்கிறார்.

சுசீந்திரனின் அறிமுகமான ‘சூரி’யின் காமெடியும் ஒரு காட்சியில் உண்டு. ஆனால், ‘சூரி’ சுயநல நோக்குடன் பயிற்சியளிக்கும் அணியும் சசிகுமாரின் அணிக்கு இணையாக முன்னேறி வருவதில் ஒரு மாதிரியான லாஜிக் பிழையிருக்கிறது. (ஹீரோவும் காமெடியனும் ஒரே தகுதியில் இருக்கலாமா?)

**

ஏறத்தாழ ஷாரூக்கானின் ‘சக்தே’ திரைப்படத்தின் திரைக்கதை வடிவமைப்பையே இத்திரைப்படமும் பின்பற்றியிருக்கிறது. அதில் மத அரசியல் என்றால் இதில் இன அரசியல்.

விஜய் நடித்த பிகிலுக்கு முன்பே வெளியாகியுள்ள இத்திரைப்படத்தில் இரண்டிற்கும் சில நெருக்கமான சாயலை கவனிக்க முடிகிறது. பாரதிராஜாவின் உடல்நலம் குன்றி விடுவதால் புதிய ‘கோச்’ ஆக சசிகுமார் உள்ளே நுழைகிறார். அணியை தேசிய அளவிற்கு இட்டுச் செல்கிறார்.

‘பிகில்’ திரைப்படத்திலும் இதுவே. கோச்சாக இருந்த நண்பன் கொலை செய்யப்படவே, முன்னாள் வீரரான விஜய் புதிய ‘கோச்’ ஆக மாறுவதைப் பார்க்க முடிகிறது. (அட்லி மீது ஏற்கெனவே ஏராளமான புகார்கள் இருக்கும் போது புதிதாக நான் எதையும் சேர்க்க விரும்பவில்லை. சும்மா… சுட்டிக் காட்டினேன்).

Sports film என்னும் போது அது குறிப்பிட்ட க்ளிஷேக்களில் சிக்கிக் கொள்வது இயல்பு. இதிலும் அப்படியான தேய்வழக்குகள் உள்ளன. என்றாலும் ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பாக நகர்த்திச் செல்லும் திரைக்கதையின் மூலம் கவர்கிறார் சுசீந்திரன். குறிப்பாக விளையாட்டுப் போட்டி தொடர்பான காட்சிகள் அதற்குரிய முறையில் பரபரப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் பல கோடி செலவு செய்த ‘பிகில்’ திரைப்படத்தை விடவும் இது மேன்மையானது. மேலும் ‘பிகிலில்’ இருந்த பல அலைபாய்தல்கள் இதில் இல்லை. மிக நேர்மையாக நேர்க்கோட்டுப்பாதையில் பயணித்துள்ளது.

விளையாட்டுத் துறையில் நிகழும் ஊழல், பாரபட்சம் உள்ளிட்ட பல காரணங்களினால், இந்தியா சர்வதேச போட்டிகளில் தோற்றுப் போய் வெளியேறும் அவலம் இத்திரைப்படத்திலும் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஊழல் அதிகாரியாக முரளி சர்மா சிறப்பாக நடித்துள்ளார். பார்வையாளர்களை நன்றாகவே கோபப்படுத்துகிறார். ஆனால் தமி்ழ்நாட்டு அணியை மேம்படுத்திக் காட்ட ஏறத்தாழ அனைவரையும் வில்லனாக சித்தரிக்கத் தேவையில்லை என்று தோன்றுகிறது.

‘சக்தே’ திரைப்படத்தில், அணி ஒற்றுமையில் இருக்கும் பலவீனம் பல காட்சிகளில் திறமையாக வெளிப்பட்டிருக்கும். சுசீந்திரன் இதை நகலெடுக்க முயன்றாலும் அது சரியாக வெளிப்படவில்லை. குறிப்பாக ஆரம்பம் முதலே விரோதம் இருக்கும் இரு பெண்கள், இறுதிக் காட்சியில் செயல்படும் ‘திருப்பம்’ சக்தேவில் அருமையாக வெளிப்பட்டிருக்கும். ஒரே முகத் தோற்றத்தைக் கொண்ட இரண்டு பெண்களை வைத்து இதிலும் ‘எதையோ’ செய்ய முயன்றிருக்கிறார் சுசீந்திரன். ஆனால் அது அழுத்தமாக வெளிப்படவில்லை.

இதைப் போலவே பாரதிராஜாவிற்கும் சசிகுமாரிற்கும் இடையே எழும் முரண்களுக்கான பின்னணி போதுமான அளவிற்கு நிறுவப்படவில்லை. இந்த அணி வெற்றி பெற இவர்களே முட்டுக்கட்டையாக இருப்பார்கள் போலிருக்கிறதே’ என்று பார்வையாளர்களுக்கு திடுக்கிடலைத் தரும் நோக்கம்தான் இதில் தெரிகிறதே ஒழிய, அதற்கான காரணங்கள் அழுத்தமாக சொல்லப்படவில்லை. எனவே இது செயற்கையாகத் தெரிகிறது.

ஆர்.பி.குருதேவ்வின் ஒளிப்பதிவு இத்திரைப்படத்தின் பெரிய பலம். இமானின் பின்னணி இசையும் உறுதுணையாக நின்றிருக்கிறது. பாடல்கள் சுமார்தான்.

குறிப்பாக எடிட்டர் ஆண்டனியின் பங்களிப்பை சொல்லியேயாக வேண்டும். போட்டி தொடர்பான பரபரப்பான காட்சிகளில் இவரது உழைப்பை அறிய முடிகிறது. நல்ல பில்டப்பைத் தந்துள்ளார்.

தனது பின்னடைவுகளைத் தாண்டி சுசீந்திரன் மேலும் அழுத்தமாக வெளிப்படுவார் என்பதை ‘கென்னடி கிளப்’ நிரூபித்திருக்கிறது. (இதற்குப் பிறகு வெளியான ‘சாம்பியன்’  திரைப்படத்தை நான் இன்னமும் பார்க்கவில்லை).


suresh kannan

No comments: