Monday, April 25, 2016

'பிலிம்நியூஸ்' ஆனந்தன்: தமிழ் சினிமாவின் ஆவண முன்னோடி

தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு என்றெழுதினார் நாமக்கல் கவிஞர். அது தமிழர்களின் நேர்மறையான அம்சங்களைப் பற்றி அவர் எழுதினது என்றாலும் பதிவாகாத எதிர்மறை அம்சங்களும் நிறைய உண்டு.  தமிழர்களின் அந்த அருந்தவ குணங்களுள் ஒன்று தம்முடைய சமகால வரலாற்றை  முறையாக ஆவணப்படுத்தி வைப்பதில் எவ்வித அக்கறையும் காட்டாதது.  இன்னொன்று, தனியார்வலர்கள் தங்களின்  சுயாதீன ஆர்வத்துடனும் முயற்சியுடனும் சிரமப்பட்டு தொகுத்த கடந்த கால வரலாற்றின் ஆவணங்களைக்கூட பாதுகாக்காமல் மெத்தனத்துடனும் அலட்சியத்துடனும் கையாள்வதும் ஆகும். உ. வே. சாமிநாதையர் என்ற தழிழ் அறிஞர்  ஊர் ஊராக அலைந்து திரிந்து அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பிக்காமலிருந்தால் இன்றைக்கு நாம் பெருமையடித்துக் கொண்டிருக்கும் தமிழ் அடையாளத்தின் முக்கியமான பகுதிகள் காலவெள்ளத்தில் புதைந்து போயிருக்கும். இது போல் மீட்டெடுக்கப்படாமல் புதைந்து  போன இலக்கியச் செல்வங்கள் எத்தனை இருந்ததோ?

ஆனால் இந்த வரலாறுகளின் மூலமாக நாம் எவ்வித பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டமான உண்மை. நம் கண்முன்னேயே இலக்கியம், வரலாறு, கலாசாரம் உள்ளிட்ட பல சமகால பதிவுகளும் ஆவணப்படுத்தப்படாமல் அழிந்து போய்க் கொண்டிருக்கின்றன. அவற்றில் தமிழ் திரை சார்ந்த பதிவுகளும் ஒன்று.

1917-ல் நடராஜ முதலியாரால் உருவாக்கப்பட்ட தமிழின் முதல் மெளனத் திரைப்படமான ‘கீசகவதம்’ முதல் அந்தக் காலக்கட்டத்தில் உருவான மெளனப்படங்களின் பிரதி ஒன்று கூட நம்மிடையே இல்லை என்பது கசப்பான உண்மை.  ‘கோகிலா’, ‘அழியாத கோலங்கள்’ போன்ற திரைப்படங்களின் மறைந்து போன நெகட்டிவ்கள் கண்டுபிடிக்கப்படவேயில்லை என்பது இயக்குநர் பாலுமகேந்திராவின் மனக்குறைகளுள் ஒன்று. தமிழின் உன்னத இயக்குநருக்கே இதுதான் நிலைமை.  ஜெயகாந்தன் இயக்கிய திரைப்படங்களுள் ஒன்றான ‘புதுச்செருப்பு கடிக்கும்’ திரைப்படத்தை அதுவெளி வந்த போது பார்த்த சொற்பமான நபர்களைத் தவிர தமிழகத்தில் வேறு எவருக்குமே அத்திரைப்படத்தைப் பற்றி தெரியாது. அதனுடைய பிரதியும் இல்லை. இது போல பல அரிய திரைப்பட பிரதிகள் ஆவணப்படுத்தப்படாமலேயே மறைந்து போயிருக்கின்றன.

இந்த சூழலில்தான் ‘நடமாடும் சினிமா என்சைக்ளோபீடியா’ என்றழைக்கப்பட்ட பிலிம்நியூஸ் ஆனந்தன் எனும் தனி நபர், தன்னுடைய சுய ஆர்வத்தினால் தன் வாழ்நாளின் பெரும்பான்மையைச் செலவழித்து பல்வேறு தென்னிந்திய சினிமாக்களின் ஆவணங்களை தேடித் தேடி பதிவு செய்த சேவையை மிக மிக அரிய பணியாக, சேவையாக நாம் கொண்டாட வேண்டியிருக்கிறது. அந்தக் காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பெரும்பான்மையான தென்னிந்திய திரைப்படங்கள் மெட்ராஸில்தான் உருவாக்கப்பட்டன. அதற்கான நுட்ப வசதிகள் இங்குதான் அமைந்திருந்தன.

இது போல் உருவாகிய தென்னிந்திய மொழிகளைச் சார்ந்த சுமார் 18000 திரைப்படங்களைப் பற்றிய அடிப்படையான தகவல்கள், புகைப்படங்கள் போன்றவற்றை ஒரு தனிநபர் இயக்கமாக ஆனந்தன் செய்து வந்திருக்கிறார் என்பதை அறிய பிரமிப்பாக இருக்கிறது. பிஆர்ஓ என்கிற துறையே தென்னிந்திய சினிமாவில் இல்லாத சூழலில் அதை தன்னிச்சையாக உருவாக்கிய முதல் ‘மக்கள் தொடர்பு அதிகாரி’ ஆனந்தன்தான். பழைய தமிழ் சினிமாக்களைப் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் தேவைப்படும் போது பத்திரிகைகள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், ஆய்வு மாணவர்கள், உதவி இயக்குநர்கள் என்று பலரும் முதலில் அணுகுவது ஆனந்தனைத்தான். புகழ்பெற்ற திரைப்படம், நன்றாக ஓடிய திரைப்படம் என்ற பாகுபாடெல்லாம் அல்லாமல் ஒவ்வொரு கடந்தகால திரைப்படத்தையும் பற்றிய தகவல்களை முறையாக தொகுத்து வைத்திருந்தார்.  இப்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் புகைப்படங்களை, தாள்களை அழிந்து போகாமல் பாதுகாப்பது எத்தனை சிரமமானது என்பதை மலைப்புடன் யூகிக்கத்தான் முடிகிறது.

**

1921-ல் பிறந்த ஆனந்தனுக்கு அவரது தந்தையாரால் சூட்டப்பட்ட இயற்பெயர் மணி. ஆனந்தனின் தந்தை தன்னுடைய மூத்த மகன்களுக்கு ஜாதக ராசிப்படி ‘கிருஷ்ணன்’ என்று முடியும் வகையில் பெயர் வைத்தார். ஆனால் அதில் இரண்டு பேர் அம்மை நோயால் இறந்து போய் விட ஜாதகத்தின் மீதான நம்பிக்கையின் மீது வெறுப்புற்று பிறகு பிறந்த மகனுக்கு ‘மணி’ என்ற பெயர் சூட்டினார். ஆனால் பள்ளியில் சேர்க்க அழைத்துச் சென்ற போது தலைமையாசிரியர் அந்தச் சிறுவனிடம் ‘உன் பெயர் என்ன?” என்று கேட்கும் போது அவன் தன்னிச்சையாக ‘ஆனந்த கிருஷ்ணன்’ என்று கூறியிருக்கிறான். தன்னுடைய அண்ணன்களைப் போல ஏன் தனக்கும் கிருஷ்ணன் என்ற பெயர் இல்லை என்று உள்ளூற உறைந்திருந்த கேள்வியும் ஏக்கமும் அந்தச் சமயத்தில் வெளிப்பட்டிருக்கலாம் என்பதை ஒரு நேர்காணலில் சொல்கிறார் ஆனந்தன். பின்பு புகைப்படம் எடுத்துப் பழகிய காலத்தில் அவர் எடுத்த சினிமாப் புகைப்படங்கள், அவருடைய கல்லூரித் தோழரான தேவராஜன் என்பவர் நடத்திக் கொண்டிருந்த ‘பிலிம்நியூஸ்’ என்கிற சினிமாப் பத்திரிகையில் வெளிவந்தன.

மணி என்கிற ஆனந்தக் கிருஷ்ணன் ‘பிலிம்நியூஸ் ஆனந்தனாக’ பரிணாம வளர்ச்சி பெற்றதின் பின்னணி இது.

இளம் வயதில், தந்தையின் நண்பரான ஒய்.ஜி. பார்த்தசாரதியின் ‘யுனைடெட் ஆர்டிஸ்ட்’ நாடகக்குழு நடத்திய  நாடகங்களை வேடிக்கை பார்க்கச் சென்றதால் நாடகம் எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய ஒரு நாடகத்திலுள்ள தூய இலக்கியச் சொற்களை மாற்றி தன்னுடைய கல்லூரி நாடகத்தில் உபயோகப்படுத்தினார். எதிர்பராதவிதமாக இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்த சம்பந்த முதலியார், ஜனரஞ்சமாக மாற்றப்பட்டிருந்த வசனங்களை பெருந்தன்மையுடன் பாராட்டியிருக்கிறார். நாடகக்குழுவில் அரங்கப் பொருட்களை நிர்வகிக்கும் பழக்கம் அதுவரை இருந்ததில்லை. ஒய்.ஜி.பியின் குழுவில் இதை மேற்பார்வை செய்து ‘ஸ்டேஜ் இன்சார்ஜ்’ என்கிற புதிய பிரிவும் ஆனந்தனின் மூலமாகவே உண்டாயிற்று.

சிறுவயது முதலே புகைப்படம் எடுப்பதில் ஆனந்தனுக்கு அலாதியான பிரியம் இருந்தது. ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த தனியார் அமைப்பு ஒன்று நடிகர்களுக்கு விருது தரும் விழா ஒன்றை ஏற்பாடு செய்ய அங்கு தன்னிச்சையாக சென்ற ஆனந்தன், நாகைய்யா மற்றும் பத்மினியை புகைப்படம் எடுத்திருக்கிறார். இவர் எடுத்த புகைப்படமே மறுநாளில் பத்திரிகைகளில் வெளிவந்தது.

சினிமாவில் இரட்டை வேட நடிகர்களை சினிமா கேமிரா கொண்டு ஒரே பிரேமில் படமெடுக்கும் உத்தியை தன்னுடைய சாதாரண ஸ்டில் கேமராவில் புகைப்படமாக எடுக்க முயன்று சாதித்திருக்கிறார் ஆனந்தன். பெரிய புகைப்பட நிபுணர்கள் எவரும் இந்த முயற்சியை நம்பவேயில்லை. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தயாரிக்கும் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்த சி.ஜே.மோகன் இந்த விஷயத்தை நம்பாமல் போக அவருக்கு தான் செய்த உத்தியை விளக்கியிருக்கிறார். இதன் மூலம் அவருடைய உதவியாளராகி புகைப்படங்கள் தொடர்பான மேலதிக நுட்பங்களை ஆனந்தனால் அறிந்து கொள்ள முடிந்தது. கலைவாணருடனான அறிமுகமும் நேர்ந்தது.

குரூப் போட்டோவில் நடிகர்கள் வரிசையாக செயற்கைத்தனமான ஒழுங்குடன் நிற்பதையே புகைப்படம் எடுக்கும் வழக்கம் அன்றிருந்தது. ஆனந்தன் இதை மாற்றி நடிகர்கள் மட்டுமல்லாமல் இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் படப்பிடிப்புத் தளங்களில் இயங்கும் போது உள்ள இயல்பான காட்சிகளை படம்பிடித்திருக்கிறார். எல்.வி. பிரசாத் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் இவரது இந்த திறமையை அப்போது பாராட்டியிருக்கிறார்கள்.

செளத் இந்தியன் பிலிம் சேம்பரில் ஆனந்தன் உறுப்பினரானவுடன். அப்போது அங்கு தலைவராக இருந்த சத்யமூர்த்தி, தென்னிந்திய திரைப்படங்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய மலரை வெளிக் கொணர விரும்பி, அதற்கான பணியை ஆனந்தனிடம் ஒப்படைத்திருக்கிறார். காமிராவும் காரும் இருந்த காரணத்தினால் ஆனந்தனும் மிக ஆர்வமாக முன்வந்து இந்தப் பணியை ஏற்றிருக்கிறார். ‘பிலிமோகிராஃபி’ எனப்படும் ஒரு திரைப்படத்தைப் பற்றிய பல்வேறு தகவல்கள்  தொகுக்குப்படத் துவங்கியது அப்போதுதான். தமிழின் வெளியான முதல் பேசும் படமான காளிதாஸ், 1931-ல் வெளியானது என்கிற தகவல் பெரும்பாலோனோர்க்கு தெரியும். ஆனால் அது எந்த தேதியில் வெளியானது என்பதைக் கண்டுபிடிப்பதற்காக பழைய சுதேசமித்திரன் இதழ்களைப் புரட்டி அக்டோபர் 31ந்தேதி என்பதை பதிவு செய்திருக்கிறார் ஆனந்தன். இவ்வாறு ஒரு திரைப்படத்தைப் பற்றிய நுண்மையான தகவல்களை தேடி தொகுத்தது ஆனந்தனின் தீவிரமான உழைப்பிற்கும் ஆர்வத்திற்கும் அடையாளம்.

தம்முடைய சுய ஆர்வத்தில் இவ்வாறு புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்த ஆனந்தன், எதிர்பாராதவிதமாக இவருடைய கல்லூரித் தோழர் தேவராஜனை சந்தித்த போது அவர் நடத்திக் கொண்டிருந்த ‘பிலிம்நியூஸ் பத்திரிகையில் இவர் எடுத்த சினிமா புகைப்படங்கள் வெளிவரத் துவங்கின. அதுவரை பிஆர்ஓ என்கிற பிரிவே சினிமாவில் இல்லாத நிலையில் அதிகாரபூர்வமற்ற முறையில் இயங்கிக் கொண்டிருந்த ஆனந்தனுக்கு முதல் அங்கீகாரம் எம்.ஜி.ஆரின் மூலமாக கிடைத்தது. நாடோடி மன்னன் திரைப்படம் உருவாகிக் கொண்டிருந்த போது அது பற்றிய புகைப்படங்களை பத்திரிகைகளில் வெளிவரச் செய்து அதன் எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாகக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர் ஆனந்தன். அத்திரைப்படத்தின் வெற்றி விழாவிற்கான ஏற்பாடுகளையும் பதக்கங்களையும் சாத்தியமாக்குவதில் மும்முரமாக இருந்தார். விழா முடிந்த பிறகுதான் ‘ஆனந்தனுக்கு எந்தப் பதக்கமும் தரவில்லையே’ என்று  எம்.ஜி.ஆருக்கு தோன்றியிருக்கிறது. ‘எந்த பிரிவில் எனக்கு பதக்கம் தருவீர்கள்?’ என்று கேட்டிருக்கிறார் ஆனந்தன். இருந்தாலும் அவருக்காக ஒரு பிரத்யேக பதக்கத்தை உருவாக்கி தன்னுடைய அலுவலகத்தில் தந்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

அங்கீகாரம் பெற்ற பி.ஆர்,ஓ-வாக ஆனந்தனின் பெயர்  திரைப்பட டைட்டிலில் இடம் பெற்றது, 1959-ல்  வெளியான 'நாட்டுக்கொரு நல்லவள்'. எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரி நடித்தது. பத்திரிகையுலகினரும் தங்களின் பிரதிநிதியின் பெயர் திரையில் ஒளிர்வதைக் கண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். இவர் இறுதியாக பணிபுரிந்த திரைப்படம் சாரதா ராமநாதன் இயக்கிய 'சிருங்காரம்', 2001-ல் வெளியானது.

சிவாஜி கணேசன் நுறு படங்களில்  நடித்து நிறைவு செய்த சமயத்தில் அது குறித்தான சிறப்பு மலர் ஒன்றை அரிய புகைப்படங்களுடனும் தகவல்களுடனும் உருவாக்கியிருக்கிறார். சிவகுமார், கமல்ஹாசன், ஜெயலலலிதா, கே.ஆர்.விஜயா என்று பல நடிகர்களின் திரைப்பயணத்தின் முக்கியமான காலக்கட்டங்களில் மலர்களை வெளியிட்டார். தென்னிந்திய சினிமாக்களின் புகைப்படங்களின் கண்காட்சியை பல முறை நடத்தியிருக்கிறார். கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியுள்ள ஆனந்தன், சில தமிழ் திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்தள்ளார்.

தன்னுடைய அரிய சேகரிப்புகளை அரசு ஏற்று ஆவணக் காப்பகத்தின் மூலமாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வைக்க  வேண்டும் என்பது இவருடைய நீண்ட கால கோரிக்கையாக இருந்தது. அதற்கு அரசிடமிருந்து எந்தப் பதிலும் இல்லாததால் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவிற்கே நேரடியாக கடிதம் எழுதுகிறார். அரசின் நிதியுதவியுடன் 1931 முதல் 2003 வரையான இவரது சேகரிப்புகளைக் கொண்டு 'சாதனை படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு' என்கிற நூல் 2004-ல் வெளியிடப்படுகிறது. ஆனால் இவருடைய சேகரிப்புகள் எல்லாம் அதற்குப் பிறகு எங்கே போனது என்றே தெரியவில்லை. பல முறை கடிதம் எழுதியும் எந்த பயனுமில்லை. நடிகர் சங்கம், பிலிம்சேம்பர் உள்ளிட்ட எந்த அமைப்புகளுமே இவருக்கு உதவவில்லை என்கிற வருத்தம் ஆனந்தனுக்கு இருந்திருக்கிறது. பலரும் இவரது சேவையைப் பாராட்டினாலும் சில  நடிகர்கள் இவரிடமிருந்து புகைப்படங்களை வாங்கி திரும்பத் தராமல் ஏமாற்றியிருக்கிறார்கள். சிலர் இவரது சேவையை உதாசீனத்துடன் அணுகியிருக்கிறார்கள். தனது சேகரிப்புகள் தன்னை விட்டுப் பிரிந்த துயரம் இருந்தாலும் 2005-ல் இருந்து மறுபடியும் தகவல்களைத் தொகுக்கத் துவங்கியது இவரது அயராத உழைப்பிற்கும் சினிமா மீதான இவரது தீராத ஆர்வத்திற்கும் உதாரணம்.


**

சினிமா தயாரிக்கப்படும் நாடுகளில்  எல்லாம் பழைய திரைப்படங்களை, அது சார்ந்த தகவல்களை முறைப்படி பராமரிக்கும் ஆவணக் காப்பகங்கள் உள்ளன. சர்வதேச திரைப்பட ஆவணக்காப்பகங்களின் கூட்டமைப்பு பிரான்சில் உள்ளது. திரைப்படம் என்பது பொழுதுபோக்கு சமாச்சாரம் மட்டும் அல்ல. அவை ஒரு காலக்கட்டத்தின் கலாசார, பண்பாட்டு சாட்சியங்கள், பதிவுகள். அவைகளின் முக்கியத்துவத்தை மேற்கத்திய நாடுகள் நன்கு உணர்ந்துள்ளன. திரைப்படங்களைப் பாதுகாப்பதற்கு அரசும் தனியார் அமைப்புகளும் நிதியுதவியைச் செய்கின்றன. சர்வதேச அளவில் திரைப்பட ஆவண முன்னோடிகளில் ஒருவரான, பிரான்சு நாட்டைச் சேர்ந்த Henri Langlois-ன் சேவையை உலகமே கொண்டாடுகிறது.

ஆனால் தமிழகத்தில் ஒரு தனிநபராக தன்னுடைய சுய ஆர்வத்தில் திரைப்படத் தகவல்களை பாதுகாத்த ஆனந்தனுடைய சேவையின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவோ கொண்டாடவோ அவருடைய கோரிக்கைகளை நிறைவேற்றவோ எவருமேயில்லை எ்னபது சோகமான  விஷயம். இத்தனைக்கும் தமிழ் சினிமாவிற்கும் அரசியலுக்கும் நெருக்கமான உறவுண்டு. சினிமாவிலிருந்து சென்றவர்கள் அந்தப் புகழின் மூலம் தமிழக அரசியலின் அதிகாரத்தை கைப்பற்றுபவர்களாக மாறியிருக்கிறார்கள். அவர்களுக்கு கூட தம்முடைய துறை சார்ந்த ஆவணங்களை பாதுகாப்பதின் அவசியம் உணர முடியாமல் போனது துரதிர்ஷ்டமானது.

ஏறத்தாழ ஆனந்தனுக்கு நிகரான இந்திய ஆளுமையாக பி.கே. நாயரைச் சொல்லலாம். புனேயில் உள்ள இந்திய சினிமா ஆவண காப்பகத்தின் நிறுவனராகவும் தலைவராகவும் இருந்தார். தாதாசாப் பால்கே உருவாக்கிய இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படமான 'ராஜா ஹரிச்சந்திரா' முதல் எஸ்.எஸ்.வாசனின் சந்திரலேகா உள்ளிட்ட பல முக்கியமான இந்தியத் திரைப்படங்களை பாதுகாக்கும் அயராத  பணியில் தன் வாழ்நாள் முழுதும் ஈடுபட்டார். 'செல்லுலாயிட் மேன்' என்று 2012-ல் அவரைக் குறித்த ஆவணப்படம் ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனந்தனுக்கு அது போன்ற அதிர்ஷ்டம் ஏதுமில்லை.

பி.கே.நாயருக்கும் ஆனந்தனுக்கும் தற்செயலானதொரு ஒற்றுமையுண்டு. இருவருமே 2016, மார்ச் மாதத்தில்தான் இறந்து போனார்கள்.
- உயிர்மை -ஏப்ரல் 2016-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)



suresh kannan

No comments: