Monday, December 01, 2014

காவியத்தலைவன் - ஒற்றை வரி நிராகரிப்புகள்

காவியத்தலைவன் திரைப்படம் அல்லது அது போன்ற முயற்சிகள் வெளியாகும் போது அவை குறித்து இணையத்தில் வரும் ஒருவரி விமர்சனங்களையும் எள்ளல்களையும் இடக்கை புறந்தள்ளல்களையும் பார்க்கிறேன். இயல்புதான். முன்பு திரையரங்கு வாசல்களில் பாமர ரசிகர்களிடையே ஒலித்த அசல் நிர்வாணமான உண்மையான விமர்சனங்கள் இவை. இப்போது இணையத்தில் ஒலிக்கின்றன. தமிழ் திரைப் படைப்பாளிகள் இவற்றைக் குறித்து எரிச்சல் கொள்வதோ புறக்கணிப்பதோ, குறை சொல்வதோ கூடாது. மாறாக இவ்வகையான உண்மை விமர்சனங்களை அவர்கள் கருத்தில் கொள்வதே அவர்களின் வளர்ச்சிக்கு நல்லது. (மிஷ்கின் இந்த விஷயத்தில்தான் தவறு செய்கிறாார்). ஏனெனில் தமிழ் சினிமாவின் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் இவர்களே. இவர்களை பெரும்பாலும் மனதில் இருத்தித்தான் இயக்குநர்களும் படைப்புகளை அதற்கேற்ற சமரசங்களுடனும் உருவாக்குகிறார்கள் என்பது வெளிப்படை.

ஆனால் பாருங்கள், திரையரங்கின் வாசல்களில் பாமர ரசிகர்களிடையே ஒலிக்கின்ற குரல்களை அவர்களின் பின்புலத்தில் வைத்து ஒருவாறு யோசிக்க முடிகிறது. ஆனால் ஏறத்தாழ அதே மாதிரியான குரல்கள் கல்வியறிவு பெற்ற ஓரவிற்கான சமூக உணர்வு கொண்ட இணைய கனவான்களிடையேயும் ஒலிக்கிற போதுதான் நெருடுகிறது. இன்று தமிழ் சினிமா பெரும்பாலும் பஞ்ச் வசன நாயகர்களிடம் சிக்கி மசாலா சகதியில் மூழ்கியிருக்கிறது என்பதை நாம் உணர்ந்தே இருக்கிறோம். இதிலிருந்து விலகி நல்ல சினிமாக்கள் வந்து விடக்கூடாதா என்று நாம்தான் ஏங்குகிறோம். ஆனால் காவியத்தலைவன் போன்ற மாற்று முயற்சிகள் வரும் போது அவற்றிலுள்ள குறைகளை ஊதிப்பெருக்கி  கருணையேயில்லாமல் ஏளனம் செய்கிறோம். இதன் மூலம் அவ்வாறான படங்கள் மேலும் வரவிடாமல் செய்யும் சூழலுக்கு நாமே ஒருவகையில் காரணமாய் இருக்கிறோம். (இவ்வகையான விமர்சனங்கள் ஒரு திரைப்படத்தின் வணிகவெற்றியை பாதிக்குமளவிற்கு இருக்குமா என்பது இன்னொரு கேள்வி. ஏனெனில் அஞ்சான் போன்ற திரைப்படங்களைப் பற்றி என்னதான எதிர்விமர்சனங்கள் எழுந்தாலும் அவைகளை உருவாக்கியவர்கள் பேராசையுடன் எதிர்பார்த்த லாபத்தை சற்று குறைக்கலாம் என்றாலும் நிச்சயம் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்காது).

இவ்வாறான முயற்சிகள் மிகுந்த சிரமங்களுக்குப் பின் உருவாகும் விதங்களைப் புரிந்து கொண்டு அவற்றைப் பற்றிய நிறைகளை பாராட்டியும் குறைகள் எனக் கருதுபவைகளை மென்கண்டிப்புடன் எழுதப்படும் விமர்சனங்களைக் குறித்து ஆட்சேபம் ஏதுமில்லை. ஆனால் விடலைத்தனங்களுடன் போகிற போக்கில் குரலெழுப்பிச் செல்லும் ஒற்றை வரி அபத்தங்கள் நீங்கி அவைகளுக்கான பொறுப்புணர்வுடன் வெளிப்பட வேண்டும் என்பதுதான் நம் ஆதங்கம். 

குறைந்த பட்ஜெட்டில் என்றால் கூட ஒரு சினிமாவை உருவாக்குவதற்கு எத்தனை பொருளியல் தேவையும் மனித உழைப்புகளின் தேவையும் இருக்கின்றன என்பதை நாம் சரியாக அறியத் தேவையில்லையென்றாலும் ஓரளவிற்காவது அதை யூகிக்க முடியும். இன்று சினிமா எடுப்பதற்கு ஈடான உழைப்பை அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் செய்ய வேண்டியிருக்கிறது. நல்ல முயற்சியாக இருந்தாலும் அதைச் சரியாக சந்தைப்படுத்தா விட்டால் மக்களிடம் சென்று சேராததோடு பொருளிழப்பும் ஏற்படும் அபாயமுண்டு. இந்திய சர்வதேச திரைவிழாவில் திரையிடலுக்கு தேர்வு செய்யப்பட்ட படமான 'குற்றம் கடிதல்' என்கிற திரைப்படத்தைப் பற்றி இந்த விழாவிற்கு முன் எத்தனை பேருக்கு தெரியும்? இன்றும் கூட எத்தனை பேர் அதைப் பார்த்திருப்பார்கள்?

தெளிவான வணிக நோக்குடன் ' தோராயமாக இத்தனை கோடி லாபம் சம்பாதிக்கப் போகிறோம்' என்று தெரிந்து கொண்டு அதற்கேற்ப திரைப்படம் உருவாக்குபவர்கள் ஒருவகை. ஆனால் இதிலிருந்து சலித்து விலகி தம்முடைய மனச்சாட்சியின் குரலுக்கேற்ப அதை ஒரளவிற்காவது திருப்திப்படுத்தும் வகையில் நல்லதொரு படைப்பை தந்து விட வேண்டும் என்கிற உந்துதலுடன் செயல்படுபவர்கள் ஒருவகை. காவியத்தலைவன் போன்ற முயற்சிகள் இவ்வகையான உந்துதல்களின் மூலம் சாத்தியப்படுபவையே. இவைகள் தொடர்ந்து வெற்றி பெறுவதன் மூலம் சூழல் மாற்றடைந்து, சில உலக சினிமாக்களைப் பார்த்து 'ஏன் தமிழில் இவ்வாறெல்லாம் உருவாக்கப்படவில்லை?" என்று நாம் ஆதங்கம் கொள்கிறோமே,   அந்த மாதிரியான படங்கள் உருவாகும் சூழல் இங்கும் ஏற்படக்கூடும்.

ஆனால் இவை குறித்து ஒரளவிற்காவது புரிதல் உள்ள நாம் இம்மாதிரியான முயற்சிகள் வளர்வதற்கு நாமே தடைக்கற்களாக இருக்கிறோம். இம்மாதிரியான இணைய விமர்சனங்கள் பெருமுதலீட்டுப்படங்களை ஒன்றும் செய்யவியலாது என்பது  நிதர்சனம் எனினும் சிறு முதலீட்டுப்படங்களை படகில் விழுந்த ஓட்டை போன்று ஒருவேளை மூழ்கடித்து விடலாம். இவ்வகையான அசட்டு விமர்சனங்களை நம்பி வாசிக்கும் ஒருபகுதியினராவது இவ்வாறான திரைப்படங்களை புறக்கணிக்க முடிவு செய்தால் ஒருவகையில் அது இழப்பே. 

தமிழிலும் நல்ல சினிமாக்கள் வெளிவரவேண்டும் என்று உண்மையாகவே ஆர்வமும் ஆதங்கமும் கொள்ளும் நாம், அந்த நிலைக்கு நகர்ந்து செல்லும் அடையாளங்களைக் கொண்ட முயற்சிகளை, அவற்றில் உள்ள குறைகளை பெரிதுபடுத்தாமல், ஆதரிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இத்தனை காலமாக பெரும்பாலும் மசாலா குட்டையில் ஊறிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவிற்கு ஒரே நாளில் விடிவு வந்து விடாது. மெல்ல மெல்லத்தான் மாற முடியும். வணிக சினிமாவின் பெரும்பான்மையான சம்பிதாயங்களை கைவிட முடியாமல்தான் இந்த மாற்றங்கள் நிகழ முடியும். வங்காளத்திலும் கேரளத்திலும் இதை விட தீவிரமான இடைநிலை சினிமாக்கள் உருவாகி அவை வெற்றியும் பெறுகிறதென்றால் அங்குள்ள பார்வையாளர்களும் இணைந்து இந்த இணக்கமான சூழலை சாத்தியப்படுத்துகிறார்கள் என்பதை நாம் நினைவில் வைப்பது நல்லது. 

காவியத்தலைவன் போன்ற மாற்று முயற்சிகளை ஒற்றைவரியில் 'மொக்கைடா மச்சான்' நிராகரிக்கும் கும்பல், ஒருவேளை இதை விடவும் சிறந்த சினிமாக்களை ஆதரிக்கிறார்களோ என்று பார்த்தால், லிங்கா போன்றவைகளுக்கு  'வீ ஆர் வெயிட்டிங் தலைவா' என்று உற்சாக கூக்குரலிடுகிறார்கள். உண்மையில் நாம் நிராகரிக்கவும் புறக்கணிக்கவும் செய்ய வேண்டியவை, தமிழ் சினிமாவை தின்று கொழுக்கும் அவ்வாறான வணிகத் திமிங்கலங்களையே. மிகத் தெளிவாக திட்டமிட்டு, புழுத்துப் போன ஒரே மசாலாவை வெவ்வேறு பாக்கிங்கிலும் பிராண்ட்டிலும் சந்தைப்படுத்தி மயக்கத்திலிருக்கும் பார்வையாளர்களின் பாக்கெட்டுகளில் கையை விட்டு பணத்தைக் கொள்ளையடிக்கும் வணிக நோக்குத் திரைப்படங்களே நம் கடுமையான விமர்சனத்திற்கும் புறக்கணிப்பிற்கும் ஆளாக வேண்டியவை. இடைநிலை சினிமாக்கள் அல்ல.

suresh kannan

5 comments:

shunmugam123 said...

Very neutral view https://www.facebook.com/haranprasanna/posts/822420354446002

shunmugam123 said...

ப்ருத்விராஜ் எவ்ளோ கத்தி பேசினாலும் மலையாளம் வாடை தான் அடிக்குது. அதுவும் தமிழ் நாடகத்தில் #கொடுமை

Anonymous said...

Does this not occur in reality??Did we not have MG Sakrapani and MGR whose mother tongue was Malayalam acting in Tamil plays. MG Sakrapani has even played poet in films. Did we not accept Prakashraj's accent with Chellam as that of Madurai don??

Singaravelan said...

Good View. ஆனால் மக்கள் மீது தவறு இல்லை. ஈசன், பரதேசி, வ. எ.18/9 கல்லூரி, அரவான் போன்ற படங்களுக்கு நல்ல ஓப்பனிங்கை மக்கள் கொடுத்தார்கள். ஆனால் படத்தை சுவாரஸ்யமாக தராமல் போனது யார்?

சுரேஷ் said...

வெறுப்பின் வழியாகவே அனைத்தையும் விளக்கும் கட்டுரை. காவியத்தலைவன் மற்றும் லிங்கா இரண்டையுமே ஒன்றால் மற்றொன்றை வெறுக்காமல் ரசிக்கும் மக்களும் இருக்கிறார்கள் என்பதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.