Monday, April 06, 2009

திரைப்படத்தை பார்ப்பது எப்படி?

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் 'நான் கடவுள்' படத்தின் இயக்குநர் பாலாவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. "இந்தப் படத்தை ரசிகர்களுடன் திரையரங்கில் கண்டு ரசித்தீர்களா? அந்த அனுபவம் எப்படி இருந்தது?". அதற்கு அவர் அளித்த பதில் மிக முக்கியமானதாக எனக்குத் தோன்றுகிறது. "பொதுவாக திரையரங்கில் திரைப்படங்களை நான் காண்பதில்லை. ஏனெனில் மக்கள் மிக அலட்சியமாக திரைப்படத்தை அணுகும் போது அவர்களை அடிக்க நினைக்குமளவிற்கு எனக்கு மிகுந்த கோபம் வந்து விடும்". திரைப்படத்தை ஒரு பொழுதுபோக்காக கருதாமல் கலையின் உன்னத வடிவமாக நினைப்பவர்களின் உணர்வு இப்படியாகத்தான் இருக்க முடியும்.

Photobucket

சரி. ஒரு திரைப்படத்தை முறையாக ரசிப்பது எப்படி? மிக எளிமையாக தோன்றும் இந்தக் கேள்விக்குள் நமது சமூகத்தின் உள்ள விசித்திரமான முரண்கள் ஒளிந்திருக்கின்றன. சினிமாவிலிருந்து தம்முடைய வருங்கால முதல்வரை தேர்ந்தெடுக்கும் அளவிற்கு சக்தி வாய்ந்த ஊடகமாக விளங்கும் திரைப்படத்தையும் அதைச் சார்ந்த மனிதர்களையும் நாம் எவ்வாறு கையாள்கிறோம்? ஒரு புறம் உணர்ச்சி மிகுதியில் அவர்களை 'தலைவனாக' ஏற்றுக் கொள்ளும் மனம் இன்னொரு புறம் பிரச்சினையான சூழலில் அவர்களை 'கூத்தாடி'யாகவும் அணுகுகிறது. நம்மில் பெரும்பான்மையினருக்கு ஒரு திரைப்படத்தை எப்படி பார்ப்பது என்றே தெரியவில்லை என்றுதான் நான் சொல்வேன். பொழுதுபோக்கானதொரு அம்சத்தை இவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டுமா என்று கேட்கிறவர்களிடம் விவாதிக்க என்னிடம் ஒன்றுமில்லை.

ஒரு திரைப்படத்தை எவ்வாறு முறையாக அணுகுவது என்பதை என் அனுபவங்களிலிருந்து குறிப்புகளாக இங்கே தந்திருக்கிறேன். இவை தீர்மானமான முறையான விதிகளோ அல்லது நிபந்தனைகளோ அல்ல. தோழமையுடன் கூடிய தகவல் பரிமாற்றம் மாத்திரமே. இவை நீங்கள் ஏற்கெனவே அறிந்தவைதான் என்றாலும் இதை நினைவுப்படுத்துதலாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். வணிகத்திரைப்படங்கள், மாற்றுத் திரைப்படங்கள்... என்று அனைத்துவகை திரைப்படங்களுக்கும் கலந்து கட்டி இந்தக் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன.

()


நாம் பணம் கொடுத்துதான் திரையரங்கிற்குச் சென்று படம் பார்க்கிறோம் என்றாலும் நம்முடைய சக பார்வையாளர்களும் அவ்வாறுதான் பணத்தைச் செலுத்தி வந்திருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். ஏதோ திரையரங்கத்தையே நாம் விலைக்கு வாங்கி விட்டோம் என்கிற ரேஞ்சில் சந்திரமுகி அறிமுக ரஜினி மாதிரி ஷீக்காலை உயர்த்தி முன் பார்வையாளன் சீட்டில் வைப்பது, நாயகனின் தாய் உணர்ச்சிகரமாக சிரமப்பட்டு அழும் காட்சியில் எக்காளமாக கூக்குரலிடுவது, அறிமுக இயக்குநர் தயாரிப்பாளரிடம் சீன் பை சீனாக கதை சொல்வது போல் படத்தை முன்பே பார்த்துவிட்டு அதை இப்போது லைவ் கமெண்ட்ரியாக தருவது, திரைப்படத்தின் இடையில் குறுக்கே பிசாசு போல் நடமாடிக் கொண்டே இருப்பது போன்ற அட்டூழியங்களை அறவே தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுக்கு எந்தவிதத்திலும் தொந்தரவு தராமல் தமக்கான மகிழ்ச்சியை அமைத்துக் கொள்வதுதான் சிறந்ததாக இருக்கும். (இதில் சில விதிவிலக்குகளும் உள்ளன. 'அந்த வானத்தைப் போல' என்கிற விக்ரமனின் காவியம் ஒன்றை பார்க்கச் சென்ற போது தனது தம்பிகளை மழையிலிருந்து காக்க விடியும் வரை ஒரு அட்டையை தலைமேல் பிடித்திருந்த அண்ணன் விஜயகாந்த்தின் அசட்டுத்தனமான சென்டிமென்டை பொறுக்க முடியாமல் திரையரங்கமே வாய்விட்டுச் சிரித்தது.)

*

வணிக நோக்கில் எடுக்கப்படும் மசாலாப் படங்களுக்காக சிலர் வாதாடுவதைக் கவனித்திருக்கிறேன். நாளெல்லாம் உழைக்கும் மக்கள் தங்களுடைய மகிழ்ச்சிக்காக காணவிரும்பும் திரைப்படமும் பரிசோதனை முயற்சியாகவோ மூளையைச் சிரமப்படுத்தும் திரைப்படமாகவோ இருப்பதை இவர்கள் விரும்புவதில்லை. இது ஒரு முதிரா மனநிலை. நம்மில் எத்தனை பேர் சிறுவயதில் படித்த வாய்ப்பாடு புத்தகத்தை இன்னமும் படித்துக் கொண்டிருக்கிறோம்? பெரும்பாலும் யாருமே இருக்க முடியாது என்றுதான் கருதுகிறேன். ஆனால் திரைப்படங்களைப் பொறுத்த மட்டில் ஏன் இன்னமும் சிறுவயதில் கண்டு மகிழ்ந்த அதே வகைமாதிரி படங்களை திரும்பத் திரும்பப் பார்த்து அம்மாதிரியான பட இயக்குநர்களை ஊக்குவிக்கிறோம்?

*

சிலர் திரையரங்கை உணவகம் போன்ற சூழலாக அமைக்கும் பெருமுயற்சியோடு மசால் தோசை, சோலாபூரி போன்ற அயிட்டங்களைத் தவிர இன்னபிறவற்றை உள்ளே கொண்டு வந்து கடுக்மொடுக்கென்ற சத்தத்தோடும், பிளாஸ்டிக் பேப்பர்களின் சலசலப்போடும் கலோரிகளை நிரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். சினிமா முடிந்த பிறகும் இவர்கள் அடித்து பிடித்து விரைந்தோடும் இடம் 'சரவண பவனாகவோ' 'அஞ்சப்பர் செட்டி நாடாகவோ'த்தான் இருக்கும். புத்தகக் கண்காட்சியில் கூட கூட்டம் நிறைய இருக்கும் இடம் தின்பண்டங்கள் விற்கும் இடமாகவும் உணவகமாகவும் இருக்கும் தமிழர் கலாசாரத்தின் மர்மம் விளங்கவில்லை. இது கூட பரவாயில்லை. முதலிரவு அறையில் கூட ஜாங்கிரியும் மைசூர்பாக்கும் அடுக்கிவைக்கும் இந்த 'தின்னிப்பண்டாரங்களின்' சமூக நியதிகளை என்னவென்று அழைப்பது? செவிக்கு உணவு இல்லாத போதுதான் சிறிது வயிற்றுக்கு ஈயச் சொல்லியிருக்கிறார் தாடிவாலா.

*

அனல்பறக்க பஞ்ச் டயலாக் பேசும் 'புல்தடுக்கி பயில்வான்களின்' வணிகத்திரைப்படங்களை முற்றிலும் புறக்கணிப்பது சிறந்தது என்றாலும் அவ்வாறு தவிர்க்க இயலாதவர்கள் அவற்றை முதல் நாளே காணச் செல்வதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அந்தச் சமூகக் காவலர்களை தெயவங்களாகப் போற்றும் அப்பாவி விசிலடிச்சான் குஞ்சுகளின் தொந்தரவில் எந்த வசனத்தையும் கேட்க முடியாது. நாயகன் கக்கூசுக்குச் செல்வதைக் கூட ஸ்லோ மோஷனில் காட்டும் இயக்குநர்கள் அவன் கழுவுவதற்காகச் கையை உயர்த்துவதைக் கூட 'விஷ்க்' என்று வைக்கும் சத்ததிற்குக் கூட உணர்ச்சி மிகையுடன் கைதட்டி பேப்பர் துண்டுகளை பறக்கவிடும் தொண்டர்களின் அட்டகாசத்தை தாங்கவே இயலாது. இந்த மாதிரிப் படங்களை மாத்திரம் திருட்டி டிவிடியில் வீட்டில் அமர்ந்தவாறே பார்ப்பது உங்கள் பர்ஸிற்கும் நல்ல திரைப்படங்களின் வளர்ச்சிக்கும் நல்லது.

*

ஒரு திரைப்படத்தை முதல் நாள், முதல் காட்சியிலேயே பார்த்துவிடுவதில் நம்மில் பலருக்கு அசட்டுத்தனமான பெருமையுண்டு. இது நண்பர்களிடம் உரையாடும் போது "இந்தப் படத்தை நான் பார்த்துவிட்டேன்" என்று ஜம்பமாக பெருமையடித்துக் கொள்வதற்குத்தான் உதவுமே ஒழிய, வேறெதற்கும் உதவாது. அது எந்த திரைப்படமாக இருந்தாலும் சரி, ஊடகங்களின் விமர்சனங்களுக்காகவும், நண்பர்களின் வாய்மொழியான சிபாரிசுக்காகவும் காத்திருங்கள்.

*


மிகவும் வயதானவர்கள், நிறைமாத கர்ப்பிணிப் பெண்கள் போன்றோர்கள்....திரையரங்கத்திற்கு வருவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. சினிமா சம்பவத்தின் சஸ்பென்ஸை விட இவர்களுக்கு ஏதாவது நிகழ்ந்து விடுமோ என்று சக பார்வையாளர்களுக்கு ஏற்படும் சஸ்பென்ஸை தடுக்கலாம். மேலும் பிறக்கப் போகும் குழந்தைக்கு அது பிறக்கப் போவதற்கு முன்பாகவாவது நல்ல சூழலை அமைத்துக் கொடுத்தல் உங்கள் கடமை. மேலும் கைக்குழந்தைகள் வைத்திருப்பவர்களும் சினிமாவை அறவே தவிர்ப்பது நல்லது. சூழ்நிலையின் அபத்தத்தை தாங்காமல் குழந்தை வீறிட்டு அலற அதை சமாதானப்படுத்த முடியாமலும் மற்றவர்களின் எரிச்சலான பார்வைகளை சந்திக்க முடியாமலும் நேர்கிற சங்கடத்தை தவிர்த்து விடலாம். குழந்தை பிறந்து மூன்று வருடங்கள் வரை தாய்ப்பால் மாத்திரமே போதும். அதில் சினிமாவை கலக்க வேண்டாம்.

*

விருதுப் படங்களை அதிலுள்ள பாலுறவுக் காட்சிகளுக்காக மாத்திரம் பார்க்க வருவது முதிர்ச்சியற்ற முட்டாள்தனம். பாலுறவும் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதிதான், அது ஊடகத்தில் வெளிப்படுவதில் எவ்வித தவறுமில்லை என்கிற புரிதல் இல்லாதவரை இவை நமக்கு 'அம்மணக்குண்டி' படங்களாகத்தான் தெரியும். அதை விட தமிழ்ச்சினிமாவின் ஒரு காதல் பாடலை பார்த்தால் அதிக நிறைவு ஏற்படக்கூடும். சுஜாதா சொல்வது போல் ஒரு ஆணும் பெண்ணும் முத்தமிட்டுக் கொள்வதை இரண்டு பூக்களை வைத்து மறைப்பதுதான் அதிக ஆபாசமாய் தெரிகிறது. திரைப்படச் சங்க திரையிடலின் போது திரையில் தோன்றிய தொடர்ச்சியான நிர்வாணக் காட்சிகளைக் கண்டவுடன் இரண்டு பெண்கள் விருட்டென்று எழுந்து போனதைக் கண்டிருக்கிறேன். தங்களின் பதிவிரதைத் தன்மையை பறைசாற்ற இதை விடவும் சிறந்த சந்தர்ப்பங்கள் இவர்களுக்கு உள்ளன. இவர்கள் ஏன் இந்த மாதிரிப் படங்களுக்கு முட்டாள்தனமாய் வருகிறார்கள் என்பது தெரியவில்லை. சுஜாதாவின் 'பிலிமோத்ஸவ்' சிறுகதைதான் நினைவுக்கு வருகிறது.

*

ஒரு மாற்றுத் திரைப்படத்தை காண்பதற்கு முன் அந்தப் படத்தைப் பற்றிய கூடுமானவரையான தகவல்களையும் கதைச்சுருக்கத்தையும் இயக்குநரைப் பற்றியும் அறிந்து கொள்வது நல்லது. படத்தின் முடிவை முன்பே அறிந்து கொள்வது திரைப்படத்தை சுவாரசியமாக பார்ப்பதற்கு தடையாக அமையும் என்பது எல்லாம் வணிக நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படங்களுக்கும் சஸ்பென்ஸ் திரைப்படங்களுக்கும் வேண்டுமானால் ஒருவேளை பொருந்தலாம். ஒரு முதிர்ச்சியுள்ள திரைப்படப் பார்வையாளன் கதையின் போக்கை முழுவதும் அறிந்து கொண்டு அதை எவ்வாறு இயக்குநர் தன்னுடைய நுண்ணுணர்வுகளால் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதில்தான் கவனம் செலுத்துவான். மேலும் அயல்நாட்டுத் திரைப்படம் என்றால் அந்த நாட்டின் கலாசாரத்தையும் கொஞ்சம் அறிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது. இல்லையென்றால் இரண்டு ஆண்கள் முத்தமிட்டுக் கொள்கிற அவர்களின் இயல்பான கலாசாரம் நம்முடைய ஆச்சாரமான கண்களுக்கு அவர்கள் 'ஹோமோக்களாக' தெரியும் விபரீதம் ஏற்படலாம்.

*

மாற்றுத் திரைப்படங்களை ஒத்த அலைவரிசை கொண்டவர்கள்வுடனோ அல்லது தனியாக பார்ப்பதோ உத்தமம். இல்லாவிடில் அவர்கள் உங்களை குறுக்கீடு செய்து கொண்டே உங்களின் அனுபவத்தையும் பாழ்படுத்துவார்கள். ஒரு திரைப்படத்தை மிக மெளனமாக கூர்மையாக உள்வாங்கிக் கொள்வதே சிறந்த முறை. இடையிடையே உரையாடுவது, எழுந்து செல்வது போன்றவற்றைச் செய்து சம்பந்தப்பட்ட திரைப்பட இயக்குநரை அவமானப்படுத்தக்கூடாது. உங்களுக்கு குறிப்பிட்ட படம் பிடிக்கவில்லையெனில் அங்கிருந்து கிளம்பி விடுவது நல்லது. மாறாக மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யும் காரியங்களில் ஈடுபடக்கூடாது.

*

ஒரு திரைப்படத்தின் அனுமதிச்சீட்டைப் பெறவும் திரையரங்கத்தினுள் நுழையவும் மணிக்கணக்கில் காத்திருக்கும் நாம் திரைப்படம் முடிவதற்குக் கூட காத்திராமல் ஏன் அப்படி வெடிகுண்டிற்கு பயந்து ஓடுகிறாற் போல் அவசரமாக வெளியே விரைகிறோம் என்பது எனக்குப் புரியவில்லை. உங்களுக்காக மாய்ந்து மாய்ந்து அந்த திரைப்படத்தை இயக்கியிருக்கும் நபருக்காக எழுந்து நின்று கைத்தட்டலை எழுப்புவதின் மூலம் சிறிய மரியாதையை செலுத்தி விட்டு பின்னர் அமைதியாக வெளியேறுவது சிறந்ததாக இருக்கும். மேலும் திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் வெளியிடப்படும் தொழில்நுட்ப நபர்களையும் பொறுமையாக அமர்ந்து பார்ப்பது, ஒரு திரைப்படத்தை உருவாக்குவதன் பின்னணியில் எத்தனை திறமையான தனிநபர்கள் செயல்படுகிறார்கள் என்பதோடு அவர்களைப் பற்றியும் நாம் அறிவதற்கு ஏதுவாக இருக்கும்.

*

ஏதாவது ஒரு திரைப்படத்தை பார்க்கச் செல்வதை விட மிகுந்த திட்டமிட்டு ஒரு நல்ல திரைப்படத்தை தேர்வு செய்து அதற்கான முன்திட்டங்களுடன் செல்வது நல்லது. திரைப்படம் காண்பதென்று புறப்பட்டுவிட்டால் ஏதாவது ஒரு திரைப்படத்தையாவது கண்டு திரும்புவதுதான் தமிழர்களின் வீரம் சார்ந்த மரபு. அது ஏற்கத்தக்கதல்ல. நீங்கள் காணச் சென்ற திரைப்படத்திற்கு அனுமதிச் சீட்டு கிடைக்காத சூழலில் தோல்வியை ஒப்புக் கொள்ளாத மனத்தோடு வேறு ஒரு குப்பையான திரைப்படத்திற்குச் சென்று பணத்தையும் மனதையும் பாழ்படுத்திக் கொள்வதை விட கடற்கரைக்கோ அல்லது வேறு பயனுள்ள நிகழ்ச்சிக்குச் செல்வதோ நல்லதாக தோன்றுகிறது.

*

சிலருக்கு தங்களின் புரிதலின் எல்லையைத் தாண்டிய சமாச்சாரங்களை கேலியாகவோ குழப்பமாகவோ எதிர்கொள்ளுவதான் வழக்கமாக இருக்கிறது. மிஸிஷோ பிக்காசோ என்ற இயக்குநரின் .... என்றுதான் கிண்டலாக எழுதுவார்கள். தவறில்லை. நானும் அப்படித்தான் இருந்தேன். தங்களின் உயரங்களைத் தாண்டின திரைப்படங்களையோ புத்தகங்களையோ எழுத்தாளர்களையோ பற்றியோ எவராவது பேசும் போது அதை தாம் சந்தித்தில்லையே என்கிற தாழ்வுணர்வு ஏற்படுத்தும் குற்றவுணர்ச்சியில் அவற்றை கிண்டலடித்துப் பேசுவது எனக்கும் வழக்கமாகத்தான் இருந்தது. பிறகுதான் மெல்ல அதை அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட போது எத்தனை சிறந்த விஷயங்களை இதுநாள் வரை தவற விட்டிருக்கிறோம் என்கிற உணர்வு ஏற்பட்டது. எனவே யாராவது உங்களுக்கு சிறந்த திரைப்படத்தையோ இயக்குநரையோ அறிமுகப்படுத்தும் போது 'நமக்கெங்கே அவையெல்லாம் புரியப்போகிறது' என்கிற அலட்சிய மனப்பான்மையோடு அல்லாமல் சிறுமுயற்சியாவது செய்யுங்கள்.

*

உங்கள் குழந்தைகளுக்கு உலக சினிமா குறித்தான பரிச்சயத்தை ஏற்படுத்துங்கள். அவர்களுக்குப் புரியுமா என்ற கேள்வி அநாவசியம். உங்களை வைத்து உங்கள் குழந்தைகளை எடை போடக்கூடாது. சில மாதங்களுக்கு முன் என் மகளை அமர வைத்து சத்யஜித்ரேயின் 'பதேர் பாஞ்சாலி'யை திரையிட்டுக் காண்பித்தேன். துர்கா, அப்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை அவள் விரும்பிப் பார்த்தாள். துர்காவின் மரணத்தின் போது அவள் முகம் வெளிறிப் போயிருந்தது. இந்தியக் கிராமங்களின் இன்றைக்கும் மாறாத வறுமையை அவள் திரையில் எதிர்கொண்டது அதுதான் முதலாதவதாக இருக்கும். இதன் மூலம் வணிகச் சினிமாக்களின் மேல் உள்ள ஈர்ப்பு மாறக்கூடும்.

*

உலக சினிமா பற்றி ஆர்வமுள்ள ஆனால் காண வசதியில்லாதவர்களுக்கு அதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள். என்னுடைய பதின்ம வயதில் சுஜாதாவின் கட்டுரையொன்றின் மூலம் சத்யஜித்ரேவைப் பற்றி அறிந்து அவரின் திரைப்படமொன்று (அகாந்துக்) தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்ப இருப்பதை அறிந்து உறவினர் ஒருவரின் வீட்டிற்கு காணச் சென்றிருந்தேன். என்னுடைய வற்புறுத்தலால் தொலைக்காட்சியை இயக்கியவர் சற்று நேரமே பார்த்துவிட்டு "என்னப்பா.. ஆஷான்.. பூஷான்..ன்னு" பேசிண்டே இருக்காங்க:" என்று என்னைக் கேட்காமலேயே தொலைக்காட்சியை அணைத்துவிட்டுச் சென்று விட்டார். அந்தத் திரைப்படத்தின் குறுந்தகட்டை தேடிப் பார்ப்பதற்குள் பத்து வருடங்கள் கடந்து விட்டது. நீங்கள் அறிந்த சினிமாக்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதைப் பற்றி ஆரோக்கியமாக உரையாடுங்கள். சினிமா உருவாவதான தொழில் நுட்பத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். சினிமாவில் உள்ளவர்களே இதில் சம்பந்தப்படாதவர்கள் அதைப் பற்றி அறிந்து கொள்ளத் தேவையில்லை என நினைக்கிறார்கள். கேமராவின் கோணங்கள், பின்னணி இசை, லைட்டிங் பற்றியும் அதை இயக்குநர்கள் எப்படி கலாபூர்வ பிரக்ஞையுடன் கையாண்டு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றியும் அறியும் போது இன்னமும் அந்தத் திரைப்படத்துடன் ஆழமாக நீங்கள் ஒன்ற முடியும்.

()

இப்போதைக்கு இவற்றோடு முடித்துக் கொள்கிறேன். நிச்சயம் இவை யாருக்கான அறிவுரைகளோ இடித்துரைக்கும் முயற்சியோ அல்ல. தோழமையான நினைவூட்டல் மாத்திரமே. சிறந்த திரைப்பட காண்பனுவங்களைப் பெற என்னுடைய வாழ்த்துகள்.

suresh kannan

43 comments:

butterfly Surya said...

நல்ல பதிவிற்கு நன்றி.

சினிமா வாழ்வைப் பிரதிபலிக்கவில்லை. மாறாக வாழ்வை பற்றிய உண்மையை வெளிப்படுத்துகிறது. காட்சிகளின் வழியாக அந்த உண்மை நம்மை நெருங்கும் போது நாம் அதன் முன் செயலற்றவர்களாகின்றோம் என்கிறார் மறைந்த இத்தாலிய இயக்குநர்
Federico Fellini.

Indian said...

Very nice post SK.
I agree with almost all of the points that you've mentioned, with the guilty feeling of being a practioner of few of these bad habits.

Ramesh said...

Nice and very good post. I rarely go to movie theaters... but go to certain movies recommended by friends, that has to be watched there only. Nothing can replace a good reco.

I think most of the points you quoted are happening bcoz, people think any theater is like their TV room....

Venkatesh subramanian said...

முதலில் திரைப்படத்துறையில் பணிபுரியும் என்னை போன்றவர்கள் சார்பில் ஒரு பலமான கைகுலுக்கல். திரைப்படத்துறை மிதான உங்களின் பார்வையும் அக்கரையும் பிரம்மிக்கவைக்கிறது. நிங்கள் குறிப்பிட்டுள்ள விசயங்களை பற்றி எழுத ஆரம்பித்தால் ஒரு தனி பதிவு போல் அகிவிடும் என்பதால் ஒரே ஒரு விசயத்தை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அது உங்கள் குழந்தைக்கு நிங்கள் 'பதேர் பாஞ்சாலி'யை திரையிட்டுக் காண்பித்தேன் என்று சொல்லியிருப்பது தான் மிக மிக முக்கியமாக அனைவரும் கடைபிடிக்க வேண்டிய விசயமாக கருதுகிறேன். இதை நம் அடுத்த தலைமுறைக்கு செய்யவேண்டியது நம் கடமை. கண்டிப்பாக நிங்கள் குறிப்பிட்டுள்ள விசயம் அனைத்தும் அனைவரும் பின்பற்ற அரம்பித்தால் சந்தோசம் தான்.

Anonymous said...

//சில மாதங்களுக்கு முன் என் மகளை அமர வைத்து சத்யஜித்ரேயின் 'பதேர் பாஞ்சாலி'யை திரையிட்டுக் காண்பித்தேன்.//

குழந்தைகளுக்கெதிரான இந்த வன்முறையை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

குழந்தைகளுக்கு நல்ல படங்களைப் பரிச்சயம் செய்யலாமே தவிர நான் பார்த்தேன் என்பதற்காக குழந்தையையும் பார்க்க வைப்பதும் கூட நம் கருத்தை அவர்கள் மேல் திணிப்பதாகாதா?

திரைப்படத்தை ரசிக்கும் மனோபாவம் வளர்வதற்கு நண்பர்கள் வட்டம், வாசிப்பனுபவம், வித்தியாசமான தேடல் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. சிலருக்கு எல்லாம் இருந்தும் சூழல் வாய்ப்பதில்லை.

பதேர் பாஞ்சாலி உலக மகா திரைப்படமாக கொண்டாடப்பட்டாலும் அந்தப்படத்தின் அருகதையை விட அது அதிகமாகத் துக்கிப் பிடிக்கப்படுகிறதென்பதுதான் எனது கருத்து

கொண்டாடப்படும் அடூரின் பல படங்கள் குப்பை என்றால் உங்களால் ஒப்புக் கொள்ள முடியாது. ஆனால் அதுதான் யதார்த்தமென்பதை என்னளவில் நான் பார்த்த உலக்ப் படங்கள் அப்படித்தான் சொல்கின்றன

குசும்பன் said...

//திரைப்படத்தை ரசிக்கும் மனோபாவம் வளர்வதற்கு நண்பர்கள் வட்டம், வாசிப்பனுபவம், வித்தியாசமான தேடல் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. சிலருக்கு எல்லாம் இருந்தும் சூழல் வாய்ப்பதில்லை.
//

கரெக்ட் அண்ணாச்சி அதுக்குதான் உங்க கூட வந்து தங்கிக்கிறேன் என்றால் கேட்குறீங்களா?:)

Anonymous said...

//எழுந்து நின்று கைத்தட்டலை எழுப்புவதின் மூலம் சிறிய மரியாதையை செலுத்தி விட்டு பின்னர் அமைதியாக வெளியேறுவது சிறந்ததாக இருக்கும்.//

I did like that when Horton said "A person is a person no matter how small" in "Horton hears the who" movie.

Also for "cars" when the rocky gave a lift to the king.

Um a UG 3rd yr student yet I am a cartoon freak. I usually prefer to watch other movies at home.

I have not watched "'பதேர் பாஞ்சாலி" so no idea abt it. I prefer cartoons so rarely watch other movies. however, I agree with you. Awesome article...

எழுந்து நின்று கைத்தட்டுகின்றேன்...


//கொண்டாடப்படும் அடூரின் பல படங்கள் குப்பை என்றால் உங்களால் ஒப்புக் கொள்ள முடியாது. ஆனால் அதுதான் யதார்த்தமென்பதை என்னளவில் நான் பார்த்த உலக்ப் படங்கள் அப்படித்தான் சொல்கின்றன//

Will check and see later abt those movies. My life is with cartoons and I cant believe i have not watched many other movies.. :-|

rajkumar said...

அடுத்த பதிவு- தோசையை எப்படி சாப்பிட வேண்டும்- எனது கருத்துக்கள்.

இதை இவ்வாறுதான் செய்ய வேண்டும் என்று கட்டளையிடுவது மற்றவரது சுதந்திரத்தை மறுப்பதாகவே கருதப்படும்.

திரைப்படத்தை தவிர உலகில் கவலைப்பட பல சங்கதிகள் உள்ளன.

anujanya said...

சுரேஷ்,

நிறைய ஒப்புக் கொள்கிறேன். பெருநகர, படித்தவர்கள் கூட மற்றவர்களுக்குத் தாங்கள் ஏற்படுத்தும் சிரமம் பற்றி அக்கறை இல்லாமல் நடப்பது நெருடல்தான். ஆனால், சில படங்கள் இளைஞர்களை முன்வைத்து, கேளிக்கை, கொண்டாட்டங்கள் என்பதற்காகவே இருக்கும். அங்கு நல்ல சினிமா ஆர்வலர்கள் போகாமல் இருப்பது சிறந்தது. அங்கு இளைஞர்கள் ஆட்டம் போடத்தான் செய்வார்கள்.

போலவே, உடல் உழைப்பில் களைத்து, சிறிது மகிழ வந்தவர்கள், திரை நுட்பங்களைக் கூர்ந்து கவனித்து மெல்ல, ஓசைப்படாமல் கை தட்ட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. மசாலாப் படங்களின் target audience அவர்கள் தானே.

நீங்கள் மொபைல் போன்களின் தொந்தரவு பற்றியும் சொல்லியிருக்கலாம்.

இவை தவிர்த்து, மிக நல்ல பதிவு. படித்த, சினிமாவில் ஆர்வமுள்ளவர்கள் அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளவேண்டிய கட்டுரை.

அனுஜன்யா

பரிசல்காரன் said...

நான் பல நண்பர்களுக்கு பலமுறை சொன்ன அறிவுரைகளும், ஒவ்வொரு திரைப்படம் பார்க்கச் செல்லும்போதும் உணர்வதையும் எழுதியிருக்கிறீர்கள். அதற்கும் மேலாகவே.

பாலா ஜெயா டி வியில் பேசியதில் நீங்கள் குறிப்பிட்ட பாலாவின் பதிலுக்கு அவ்வளவு சந்தோஷமடைந்தேன். அதை கவனித்து அதற்காக பதிவும் எழுதிய உங்களுக்கு வந்தனங்கள்.

இதை ஃப்ரேம் செய்து ஒவ்வொரு தியேட்டரிலும் மாட்டலாம்!

Anonymous said...

rajkumar said...
//அடுத்த பதிவு- தோசையை எப்படி சாப்பிட வேண்டும்- எனது கருத்துக்கள்.

இதை இவ்வாறுதான் செய்ய வேண்டும் என்று கட்டளையிடுவது மற்றவரது சுதந்திரத்தை மறுப்பதாகவே கருதப்படும்.

திரைப்படத்தை தவிர உலகில் கவலைப்பட பல சங்கதிகள் உள்ளன.//

Why you have to take it as order... Dont be radical pls..

Suresh said...

Very good post machan
Your post is in youthful vikatan Good blogs machan unagalukku theriyauma nu theriyala villai athan intha comment

http://youthful.vikatan.com/youth/index.asp

Anonymous said...

ஒவ்வொரு சினிமா ஆர்வலனும் படிக்க வேண்டிய பதிவு.

Think Why Not said...

nice article...

rajkumar said...
//அடுத்த பதிவு- தோசையை எப்படி சாப்பிட வேண்டும்- எனது கருத்துக்கள்.

இதை இவ்வாறுதான் செய்ய வேண்டும் என்று கட்டளையிடுவது மற்றவரது சுதந்திரத்தை மறுப்பதாகவே கருதப்படும்.

திரைப்படத்தை தவிர உலகில் கவலைப்பட பல சங்கதிகள் உள்ளன.//

உங்க காமெடி நல்லா இருக்கு.. but author has never told this as order, but some ideas he shared....

I also accept that there are many other things in world to take care in world other than cinema....

மஞ்சூர் ராசா said...

உங்களின் பல கருத்துகளுடன் உடன்படுகிறேன்.

Cable சங்கர் said...

நல்ல பதிவு.. உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள்.

ஷண்முகப்ரியன் said...

பரிசல்காரன் said இதை ஃப்ரேம் செய்து ஒவ்வொரு தியேட்டரிலும் மாட்டலாம்!//

உஙகள் கருத்துக்களில் சிலவற்றிற்கு எனக்கு மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் மேலே சொன்னதற்கு நான் உடன்படுகிறேன்

Athisha said...

இந்த பதிவோடு ஏனோ உடன்பாடில்லை. எப்படி புத்தகத்தை இப்படித்தான் வாசிக்கவேண்டும் என நம்மால் சொல்ல முடியாதோ !அதுபோல்தான் திரைப்படம் பார்ப்பதும்..

உங்கள் பதிவு ஒரு சாமியார் - எப்படி சாமி கும்பிடவேண்டும் என பக்தர்களுக்கு சொல்லித்தருவதைப்போல இருக்கிறது.

திரைப்படம் பார்ப்பது ஒரு சுயஅனுபவம்,கனவு காண்பதைப்போல அது ஒருவருக்கொருவர் வேறுபடும். இப்படித்தான் இருக்க வேண்டும் என சொல்லவே இயலாது.

உங்களுக்கு அசிங்கமாய் இருப்பது பிறருக்கு அழகாய் தெரியலாம்.

எதிர்சீட்டில் கால்வைக்காதீர்கள்,எச்சில்துப்பாதீர்கள்,போன்றவை ஏற்கனவே இடைவேளைகளில் எல்லா திரையரங்குகளிலும் காட்டப்படுபவையே!

சினிமா பார்ப்பது சிலருக்கு கொண்டாட்டம்,சிலருக்கு பொழுதுபோக்கு,சிலருக்கு வாசிப்பைப்போல..

நாம் பிறரை இன்ன சினிமாவை சட்டையில்லாமல் பார்க்கவேண்டும், இன்ன சினிமாவை பேண்ட் இல்லாமல் பார்க்க வேண்டும் என சொல்லிதரக்கூடாது. அது அவனவன் இஷ்டம்.


********************
@பரிசல்காரன்

\\
இதை ஃப்ரேம் செய்து ஒவ்வொரு தியேட்டரிலும் மாட்டலாம்!\\

அதைவிட தஞ்சாவூர் கல்வெட்டில் வெட்டிவைத்துவிட்டால் நன்றாக இருக்குமே! ;-))

சென்ஷி said...

@பரிசல்காரன்

\\
இதை ஃப்ரேம் செய்து ஒவ்வொரு தியேட்டரிலும் மாட்டலாம்!\\

அதைவிட தஞ்சாவூர் கல்வெட்டில் வெட்டிவைத்துவிட்டால் நன்றாக இருக்குமே! ;-))//


ரிப்பீட்டே :-)

உண்மைத்தமிழன் said...

சுரேஷ் ஸார்..

தேவையான அறிவுரைகள்தான்..

ஆனால் என்னைப் போன்று, உங்களைப் போன்றவர்களால்தான் இதனை உணர்ந்து அனுபவிக்க முடியும்..

கொண்டாட்டமே வாழ்க்கை என்று நினைக்கும் பலருக்கும் இது வேப்பங்காய்தான்..

ஆனாலும் ஒரு ஆய்வுக்கட்டுரை போல் தெளிவுரை எழுதியமைக்கு எனது நன்றிகள்..!

பழனி பாலதண்டாயுதபாணி said...

என் பக்தன் புனிதப்போர் என்கிற உலகசினிமாவை எடுத்த இயக்குனர் உண்மைதமிழனின் கருத்தையே நானும் ரிப்பீட்டுகிறேன்.

\\
ஆனால் என்னைப் போன்று, உங்களைப் போன்றவர்களால்தான் இதனை உணர்ந்து அனுபவிக்க முடியும்..\\

உணர்ந்து அனுபவிக்க சினிமா என்ன சிற்றின்பமா?

anujanya said...

சுரேஷ்,

நான் குறிப்பிட்ட இளைஞர் வகையில் தான் தோழர் அதிஷா. நீங்க சினிமா போகும் முன்பு, சிரமத்தைப் பார்க்காமல் அதீஷவுக்கு ஒரு போன் பண்ணி, அவருக்கு அந்தப் படம் பிடித்திருக்கிறதா என்று கேட்டுக் கொள்ளுங்கள். ஆம் என்று பதில் வந்தால், நிச்சயம் அது நீங்கள் தவிர்க்க வேண்டிய அனுபவமாகவே இருக்கும் :)

அனுஜன்யா

பழூர் கார்த்தி said...

:-)

அருமையான பதிவு.

சரவணகுமரன் said...

சூப்பர்...

Anonymous said...

A:நல்லாதானயிருந்தாரு, எப்பருந்துண்ணே?
B: கிழக்க போயி நிழலுழக ஆளோட சேர்ந்ததிலிருந்தே இப்படிஆயிட்டாரு

மாடர்ன் ஆட்டை வெறித்து புரிவதெப்படி
மாடு மேய்பதெப்படி
டீ குடிக்க தீயான வழிகள்
இப்படி நிறய வச்சுருக்காரு

வெராசா பாருங்கண்ணே, இதெல்லாஆம் முத்தவிடப்புடாது...

டேய் என்ன அழிக்க சதியா,, வலைப்பதிவுகளை ஆழமாக மேய அகலமான அறுவது வழிகள்

மயிலாடுதுறை சிவா said...

வழக்கம் போல் அருமையான பதிவு! கலக்கல்!

இவையெல்லாம் யார் பின்பற்ற போகிறார்கள் என்று நினைக்காமல் பொறுமையாக தொகுத்தமைக்கு பாராட்டுகள் பல...

மயிலாடுதுறை சிவா..

ரவி said...

இவர் பிரபல பதிவர் என்பதால் இங்கே பதில் எதுவும் கிடைக்காது. நீங்கள் மாற்றுக்கருத்து வைத்தாலும். இந்தாங்க என்னுடைய அஞ்சி பைசா.

நீ இப்படித்தான் படத்தை ரசிக்கனும் என்று கட்டளையிடுவது கடுமையான பாசிசம். எனக்கு பிடித்த நடிகர் ஆய் துடைத்தாலும் நான் கை தட்டுவேன். காசு கொடுத்து படம் பார்க்கும் என்னுடைய உரிமை அது. திருட்டு டிவிடியிலேயே அறிவு சீவிகள் குந்தி பார்த்துக்கொள்ளுங்கள்.

குழ்ந்தைக்கு புரியாத படம் ஒன்னை காமிச்சு கொடுமைப்படுத்தியதுக்கு உங்க மேல கேசு தான் போடனும்.

பரிசல் : குப்பைமாதிரி நிறைய எளுதியிருந்தா அதை பிரேம் போட்டு மாட்டலாம்னா கனேசு பின்னூட்டத்த கூடத்தான் பிரேம் போட்டு மாட்டலாம்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

Red படம் பார்த்து விட்டு அதன் உள்ளார்ந்த பொருளை உணர The Alternative Film Guide கட்டுரை உதவியது. இதே போல் The Pan's Labyrinth படத்தின் குறியீடுகளைப் புரிந்து கொள்ள 2,3 நாட்கள் பல்வேறு கட்டுரைகளைப் படிக்க வேண்டி இருந்தது. ஒரு படம் கலைப்படைப்பாக இருக்கையில் அதை எப்படி புரிந்து கொள்வது என்று விளக்கும் கட்டுரைகள் வரவேற்க வேண்டியவை.

அதைப் போல ஒரு திரைப்படத்தை கலை, நுட்ப அடிப்படையில் எப்படி அணுகுவது என்று சொல்வீர்கள் என்று எதிர்ப்பார்த்துப் படித்தால் ஏமாற்றம் தான். நீங்கள் சொல்வதில் பலவற்றை பள்ளிக்கூட நன்னெறி வகுப்புகளிலேயே சொல்லித் தந்து விட்டார்கள்.

sakthi said...

arumayana pathivu

tholare

IDEAL said...

கலக்கல் பதிவு நண்பரே...
நன்றிகள் பல.

Sridhar V said...

நீங்கள் சொல்வதை ஓரளவிற்கு ஒத்துக் கொள்ள வேண்டியதுதான். பொதுவாக இந்திய சூழலில் திரைப்படங்களின் genre-களை புரிந்து கொண்டோ அல்லது அதனுடைய ஏனைய அம்சங்களைப் புரிந்து கொண்டோ பார்ப்பவர்கள் மிகவும் குறைவு.

இந்தப் பதிவே சிலருக்கு எரிச்சல் உண்டு பண்ணியிருப்பது தெரிகிறது. என்ன செய்வது... கினற்று தவளை கேட்டதாம் ‘கடல்-னா எவ்வளவு பெரியது? இந்த கினற்றைவிடப் பெரியதாக்கும்?’ :)

ச.பிரேம்குமார் said...

//பொதுவாக திரையரங்கில் திரைப்படங்களை நான் காண்பதில்லை. ஏனெனில் மக்கள் மிக அலட்சியமாக திரைப்படத்தை அணுகும் போது அவர்களை அடிக்க நினைக்குமளவிற்கு எனக்கு மிகுந்த கோபம் வந்து விடும்//

இந்த Statement கொஞ்சம் ஓவராத்தான் இருக்குன்னு நினைக்கிறேன் :(

எல்லாரும் தங்கள் நிலையிலேயே யோசிக்க வேண்டும் என்று நினைப்பதை விட பெரிய முட்டாள் தனம் வேறெதுவும் இருக்க முடியாது

அர டிக்கெட்டு ! said...

அறிவு சீவிகள் வாளுக... அள்ளக்கைகள் வாளுக வாளுக...

Anonymous said...

'திரைப்படத்தை ஒரு பொழுதுபோக்காக கருதாமல் கலையின் உன்னத வடிவமாக நினைப்பவர்களின் உணர்வு இப்படியாகத்தான் இருக்க முடியும். '

ஒழுங்காக திரைக்கதை அமைக்கத் தெரியாமல் 3 வருடம் ஒரு படத்தைச்
எடுத்த இயக்குனருக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்.பாலாவால் ஒரே மாதிரி கதாபாத்திரங்களை வைத்து
படம் எடுக்க முடிகிறது. ஏகப்பட்ட பில்டப்புகளுடன் வெளியான படம் நான் கடவுள். அது கலைரீதியாக தேறாது, வணிக ரீதியாகவும் தேறாது. இந்த இடுகை சிறு பத்திரிமை மேட்டிமைத்தனம் உங்களிடம் நிறையவே இருக்கிறது
என்பதை நிரூபிக்கிறது.

Anonymous said...

ஒரு திரைப்படத்தின் அனுமதிச்சீட்டைப் பெறவும் திரையரங்கத்தினுள் நுழையவும் மணிக்கணக்கில் காத்திருக்கும் நாம் திரைப்படம் முடிவதற்குக் கூட காத்திராமல் ஏன் அப்படி வெடிகுண்டிற்கு பயந்து ஓடுகிறாற் போல் அவசரமாக வெளியே விரைகிறோம்?
திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் வெளியிடப்படும் தொழில்நுட்ப நபர்களையும் பொறுமையாக அமர்ந்து பார்ப்பது, ஒரு திரைப்படத்தை உருவாக்குவதன் பின்னணியில் எத்தனை தனிநபர்கள் செயல்படுகிறார்கள் என்பதோடு அவர்களைப் பற்றியும் நாம் அறிவதற்கு ஏதுவாக இருக்கும். மேலும் அயல்நாட்டுத் திரைப்படம் என்றால் அந்த நாட்டின் கலாசாரத்தையும் கொஞ்சம் அறிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது.
ஏதாவது ஒரு திரைப்படத்தை பார்க்கச் செல்வதை விட மிகுந்த திட்டமிட்டு ஒரு நல்ல திரைப்படத்தை தேர்வு செய்து அதற்கான முன்திட்டங்களுடன் செல்வது நல்லது.
Enayavatrai kAttilum merkadavaiye podhumanavaigalagum.

Anonymous said...

ஆஹா, ரொம்ப தேவையான படைப்பு, பதிப்பும் கூட. ஒவ்வொரு குடும்பமும் அல்லது தனி மனிதனும் தவறாமல் திரைப்படம் பார்ப்பதை கடமையாக வைத்திருக்கும்போது இது ரொம்ப அவசியம் தான்.

ஆனால் எல்லாவற்றையும் எப்படி செய்வது என்று சொல்லிகொடுக்க போகிறீர்களா என்ன?

எனக்கு என்னவோ மொக்கை பதிவு போடாமல் இருப்பது எப்படி என்று யாராவது எழுதினால் ரொம்ப புண்ணியமாக போகும்.

Anonymous said...

இதையெல்லாம் கூடவா சொல்லித் தர்றது???

என்று தனக்கு தான் எல்லாம் தெரியும்.... என்று சுரேஷ் கண்ணன் பதிவிற்கு பதில் பதிவளித்த லக்குலுக் அவர்கட்கு நான் அளித்த பின்னூட்டம்.

மூன்று முறை இட்டும் அவர் வெளியிடவில்லை. அதனால் இங்கே:

===================================

டியர் லக்கி,

அவர் கருத்தை அவர் சொல்லியிருக்கிறார். உங்க கருத்தை நீங்க சொல்லுங்க உங்களுக்கு பிடித்த திரைப்பட ரசனையை கருத்துகளை சொல்லி என்கரேஜ் பண்ணுங்க..


அதை விடுத்து குஞ்சு, மயிறு என்றெல்லாம் கேவலமாக பதிவிட வேண்டுமா.??


பத்து லட்சம் பேர் மேய்ந்த ( நாங்க எல்லாம் எருமைகளா) வலை பதிவர், எழுத்தாளர் எழுத்தின் இலட்சணமா இது...


வெட்கப்படுகிறேன் லக்கி.

சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும்.

So Finally the Cat is out of the basker.


Very pity on you... Very very shame on you...

Sorry lucky... Bye....


============================

இதை பதிவிட லக்கி மறுத்துள்ளது அவரது கோழைத்தனத்தையும் தனது கருத்துகள் தவிர வேற எவனும் எதுவும் சொல்ல கூடாது என்ற குறுகிய கண்ணோட்டமும் தான்.


Really I pity on him....

Anonymous said...

ஒரு மூன்று மணி நேரம் எனது நேரத்தை செலவு செய்ய இந்தப் படம் தகுதியானது தானா என்று ஒவ்வொருவரும் தீர்மானித்த பின் படம் பார்ப்பார்களேயானால் மிகவும் நல்லது. இந்தப் படம் நல்ல படம் கெட்ட படம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. படம் பார்த்தபின் என்ன மாதிரியான உணர்வுகள் மிச்சமிருக்கின்றன. என்னமாதிரியான எண்ணங்கள் எச்சமாயிருக்கின்றன என்பததான் படத்தின் வெற்றி.

Unknown said...

You are trying to preach.What is needed is a dialog, not sermons.
That sermonising irritates readers.Film appreciation courses can be helpful to understand a film. But your approach is different. You want to rever some films, not just appreciate. Films are for entertainment too and there is nothing wrong in that.

பிச்சைப்பாத்திரம் said...

ஒரு அனானி நண்பரின் பின்னூட்டம் ஆட்சேபகரமான வார்த்தைகளை உள்ளடக்கி இருந்ததால் மறுக்கப்படுகிறது. மன்னிக்கவும்.

நண்பர்களுக்கு:

நான் எழுதிய பதிவின் ஆதாரமான தொனிக்கு நேரெதிரான நிகழ்வுகளையும் பின்னூட்டங்களையும் எதிர்கொள்ள நேர்வதற்கு வருத்தமாயிருக்கிறது. மற்ற பதிவர்களை ஆட்சேபகரமான வார்த்தைகளினால் விமர்சித்து இங்கு வரும் பின்னூட்டங்கள் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் கருத்து எதுவாயிருந்தாலும் அதை காது கொடுத்து கேட்கும் ஆரோக்கியம் எனக்குண்டு. எனவே ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் ஏதாவது இருந்தால் தெரிவியுங்கள்.

Prasanna Rajan said...

சில காலம் ப்லோக் எழுதி விட்டாலே தானாக வந்து விடுகிறது அறிவுஜீவித்தனம். அதிலும் அடுத்தவருக்கு அறிவுரை சொல்வதில் தான் எத்தனை ஆனந்தம். ஒரு திரைப்படத்தை பார்ப்பது ஒருவரின் சொந்த விருப்பு வெறுப்பை பொருத்தது. அதை விடுத்தது இதை இப்படி தான் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துவது, மேதாவித்தனம் மட்டுமே. வணிக சினிமாவை பற்றி புரியாதவர்கள் என்னத்துக்கு இப்படி எழுத வேண்டும் என்று புரியவில்லை...

ரவி said...

//மற்ற பதிவர்களை ஆட்சேபகரமான வார்த்தைகளினால் விமர்சித்து இங்கு வரும் பின்னூட்டங்கள் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். //

அப்புறம் ஏன் லக்கிலூக் பற்றிய பின்னூட்டம் பதிவை அலங்கரிக்கிறது ? சுய சொறிதல் ?

கண்ணா.. said...

லக்கி லுக் தொடர்ந்து நடத்தி வரும் தனிநபர் தாக்குதல் தொனி குறித்த எனது பதிவு..

http://venkatesh-kanna.blogspot.com/2009/04/blog-post_23.html


உங்கள் கருத்துக்கள் தேவை...

நன்றி