Friday, April 07, 2006

ஓ போடு

"இந்து" பத்திரிகையில் வெளியான இது சம்பந்தப்பட்ட செய்தியை இதன் முக்கியத்துவம் கருதி ஒரு பதிவாக வெளியிடலாம் என்றிருந்த வேளையில் ஞாநியின் இந்த பதிவையே உபயோகப்படுத்தி கொள்கிறேன். திராவிட கட்சிகளின் மீது வெறுப்புற்றிருக்கும் பொதுமக்களில் சில பகுதியினர், வேறு எந்த மாற்றும் இல்லாததால் ஓட்டளிப்பதையே தவிர்த்து விடுகின்றனர். இது தவறானது. இதனால் கள்ள ஓட்டு போடுவோருக்கு இந்த விஷயம் சாதகமாக அமைந்து விடுகின்றது. இதை தவிர்க்க ஒவ்வொருவரும் தங்கள் மறுப்பையாவது பதிவு செய்வது ஜனநாயக கடமையாக கருத வேண்டும். இனி ஞாநியின் பதிவு.


ஓ போடு

ஓ போடு ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம்

ஓ போடு என்றால் என்ன? ஓட்டு போடு என்று அர்த்தம்.

ஓட்டு போடுவது மக்களின் உரிமையும் கடமையும் ஆகும். ஆனால் சராசரியாக எந்தத் தேர்தலிலும் வாக்காளர்களில் நூற்றுக்கு 45 பேர் ஓட்டு போடுவதில்லை. ஏன் ஓட்டு போடுவதில்லை என்று கேட்டால் பல பேர் சொல்லும் காரணம் இதுதான். "எந்த வேட்பாளரும் சரியில்லை; இருப்பதில் ஒருத்தருக்கு ஓட்டு போட எனக்கு பிடிக்கவில்லை," என்று சொல்லுகிறார்கள். அப்படி நினைப்பவர்களும் கூட போய் ஓட்டு போட முடியும். சட்டத்தில் அதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. அதுதான் 49 ஓ.

எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையை நமக்கு இந்தப் பிரிவு கொடுத்திருக்கிறது. வாக்குச் சாவடிக்கு சென்று ஓட்டு போடுவதற்காக விரலில் மை வைக்கபட்ட பிறகு, எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று நாம் தெரிவிக்கலாம். அதை ஓட்டுச் சாவடி அதிகாரி பதிவு செய்தாக வேண்டும். இதுதான் தேர்தல் விதிகள் (1961)ன் 49 (ஓ) பிரிவு. வாக்காளர் இதற்காக எந்த விண்ணப்பத்தையும் நிரப்பத் தேவையில்லை. ஓட்டுச் சாவடி அதிகாரியிடம் சொன்னால் போதும். அவர் தன்னிடம் உள்ள பாரம் 17 ஏ என்ற பதிவேட்டில் இதை எழுதிக் கொள்வார். அதில் நாம் கையெழுத்திட்டால் போதும்.

எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு நாம் உணர்த்தவேண்டும். அதற்கு சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும். அரசியலே சரியில்லை என்று அலுத்துக் கொண்டு நாம் ஓட்டு போடாமல் இருந்தால், அதனால் அரசியல் கட்சிகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஆனால் 49 ஓவின் கீழ் நம்முடைய ஓட்டைப் பதிவு செய்தால் நமது அதிருப்தியை அவர்களுக்குத் தெரியப்படுத்த முடிகிறது. ஒரு தொகுதியில் ஜெயிக்கிற வேட்பாளரை விட, 49 ஓவுக்கு அதிக ஓட்டு விழுந்தால், எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்போது 'இனி நேர்மையான அரசியல் செய்ய வேண்டும், நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால் மக்கள் ஆதரவு கிடைக்காது' என்பது அரசியலில் உள்ளவர்களுக்கு உறைக்கும். மக்களுடைய அதிருப்தியை அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்த சிறந்த வழி - 49 ஓ.

ஓட்டு போடாமல் இருப்பது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். 49 ஓ போடுவது, நம்மை இனி ஏமாற்ற முடியாது என்று அறிவிப்பதாகும். ஓட்டு போடுங்க. 49 ஓ போடுங்க.
------------------------------------------------------------------------------------------------

'ஓ போடு' சமூக விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பாக வெளியிடப்படுகிறது. தொடர்புக்கு : ஞாநி 09869046486 /9444024947. e mail: ohpodu@hotmail.com. இந்தப் பிரசுரத்தை இயன்ற அளவுக்கு பரப்புங்கள். இந்தக் கருத்தை நண்பர்களுடன் விவாதியுங்கள்.

3 comments:

இப்னு ஹம்துன் said...

நல்ல கருத்து!
விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை நடைமுறைக்கு வந்து உண்மையான ஜனநாயகம் வர இது வழி வகுக்கும். பதிவுக்கு நன்றி

மணியன் said...

பரப்ப வேண்டிய விழிப்புணர்ச்சி கருத்து. நானும் 'ஓ' போடுகிறேன்.

Anonymous said...

Website is created for 'Oh podu' movement. Please visit www.ohpodu.org