Monday, May 18, 2020

The Kid with a Bike (2011) - 'சிறுவனும் சைக்கிளும்'






அன்பிற்காக ஏங்கும் ஒரு முரட்டுத்தனமான சிறுவனின் மன மாற்றத்தை அழகாக விவரிக்கிறது இந்த பிரெஞ்சு திரைப்படம். சிறுவனின் அற்புதமான நடிப்பு. படம் முழுவதும் நிறைந்திருக்கிறது.

**

சிறுவர்களுக்கான அடைக்கல வசிப்பிடத்தில் இருப்பவன், 12 வயது சிறில். தனது தந்தையைக் காண வேண்டும் என்று பாதுகாவலர்களிடம் அடம் பிடிக்கிறான். முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறான். சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.

எவரும் கவனிக்காத ஒரு சமயத்தில் அங்கிருந்து தப்பி தன்னுடைய வீட்டிற்கு வருகிறான். அங்கு எவரும் இருப்பதில்லை. அவனுக்குப் பிரியமான சைக்கிளும் இருப்பதில்லை. அவனைத் தேடி வரும் பாதுகாவலர்கள், ‘அவனது தந்தை எங்கேயோ சென்று விட்டார்’ என்று புரிய வைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அவன் நம்புவதாயில்லை.

இவனைக் கவனித்துக் கொண்டிருக்கும் சமந்தா என்கிற பெண்மணி அவனுடைய சைக்கிளை திரும்பத் தருகிறாள். சிறிலின் அப்பா அதை விற்றிருக்கிறார். ‘என் அப்பா அப்படிச் செய்ய மாட்டார். எவரோ திருடி விற்றிருக்க வேண்டும்’ என்று அப்போதும் தன் தந்தையை விட்டுத் தராமல் பேசுகிறான். திரும்பக் கிடைத்த சைக்கிளை மகிழ்ச்சியுடன் ஓட்டுகிறான். அவனுடைய உறுப்புகளில் ஒன்று போவே இணைந்திருக்கிறது சைக்கிள்.

**

மற்றவர்களுக்கு அடங்காத சிறில், சமந்தாவின் அன்பிற்கு இணங்குகிறான். “வார இறுதி நாட்களில் உங்கள் வீட்டிற்கு வந்து தங்கிக் கொள்ளட்டுமா?’ என கேட்கிறான். சமந்தா சம்மதிக்கிறாள். அங்கும் சிறிலின் பிடிவாதக் குணங்கள் தலைதூக்குகின்றன. தந்தையைக் காண வேண்டுமென்கிற ஏக்கம்தான் பிரச்சினைக்கு காரணம் என்று உணர்கிற சமந்தா, அவனுடைய தந்தையின் புதிய முகவரியைக் கண்டுபிடித்து அழைத்துச் செல்கிறார்.

ஆனால் மகனைக் காணும் தந்தை பிடிப்பில்லாமல் விலகலாகவே பேசுகிறார். ‘எப்ப என்னை வந்து கூட்டிட்டுப் போவீங்க?’ என்று சிறில் கேட்பதற்கு நேரிடையாக பதில் சொல்வதில்லை. “இயன்றால் போன் செய்கிறேன். இங்கு நானே சிரமத்தில் இருக்கிறேன். இப்ப கிளம்பு’ என்று துரத்துகிறார். பின்பு சமந்தாவை தனியாக அழைத்து ‘அவனை இனி என்னால் பார்த்துக் கொள்ள முடியாது. அவன் ஹோமிலேயே இருக்கட்டும். இதை அவனிடம் சொல்லி விடுங்கள்’ என்கிறார்.

இந்த கசப்பான உண்மையை சிறிலே நேரிடையாக தெரிந்து கொள்வதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கும் சமந்தா, ‘நீங்களே அவனிடம் சொல்லுங்கள்’ என்கிறார். ‘நீ இனிமேல் என்னைத் தேடி வராதே” என்று தந்தை சொல்ல, சிறில் மனம் உடைந்து போய் அழுகிறான்.

**

தந்தையின் நிராகரிப்பின் வேதனையில் இருக்கும் சிறிலை மகிழ்ச்சிப்படுத்த தன்னால் ஆன முயற்சிகளை செய்கிறார் சமந்தா. ஆனால் இன்னமும் மூர்க்கமானவனாக மாறுகிறான் அவன்.

நிழலான காரியங்களைச் செய்யும் ஓர் இளைஞனுடன் சிறிலுக்கு பழக்கம் ஏற்படுகிறது. அவனுடைய நடவடிக்கைகள் சிறிலுக்குப் பிடித்துப் போகிறது. ‘அவனுடன் சேராதே’ என்று தடுக்கிறாள் சமந்தா. இவன் கேட்பதாயில்லை.

அந்த இளைஞன், வழிப்பறிக் கொள்ளை செய்வது தொடர்பாக சிறிலுக்கு பயிற்சி தருகிறான். சம்பவத்தை நிகழ்த்தும் நாள் வருகிறது. ஏதோ விபரீதம் என்பதை உள்ளுணர்வால் உணரும் சமந்தா, அந்த நாளின் இரவில் சிறில் வீட்டை விட்டுப் போகாமல் தடுக்க முயல, அவளை கத்தியால் காயப்படுத்தி விட்டு சிறில் ஓடிப் போகிறான்.

**

பயிற்சி பெற்றபடி மறைந்திருந்து வரும் ஆளை தலையில் தாக்க அவர் மயங்கி விழுகிறார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவரின் மகன் அங்கு வர, அவன் தலையிலும் ஒரு போடு போடுகிறான் சிறில். அவனும் மயக்கமாக, பணத்தை எடுத்துக் கொண்டு அந்த இளைஞனிடம் கொண்டு போய் தருகிறான்.

தாக்கப்பட்டவரின் மகன், சிறிலின் முகத்தைப் பார்த்து விட்டதால் அச்சமடையும் இளைஞன் பணத்தின் ஒரு பகுதியை இவனிடம் தந்து விட்டு ‘இதற்கு நீதான் பொறுப்பு. எவரிடமும் என் பெயரை சொல்லாதே’ என்று மிரட்டி விட்டு சென்று விடுகிறான்.

சிறில் பணத்திற்காக இந்தச் சம்பவத்தை செய்யவில்லை என்றாலும் அதை எடுத்துக் கொண்டு போய், தன் தந்தையிடம் தருகிறான். ‘என்னை ஜெயிலுக்கு அனுப்பப் பார்க்கிறாயா?” என்று பணத்தை விட்டெறிகிறார் அவர்.

**

நிலைகுலைந்து போகும் சிறில், திரும்பவும் சமந்தாவின் வீட்டிற்கு வருகிறான். அவளிடம் மனதார மன்னிப்பு கேட்கிறான். ஆனால் காவல்துறை அவனைத் தேடுவதாய் சொல்லி சமந்தா அழைத்துப் போகிறாள்.

தாக்கப்பட்ட நபருக்கும் சிறில் தரப்பிற்கும் இடையே ஓர் அதிகாரியின் முன்னால் பேச்சுவார்த்தை நடக்கிறது. கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை  தவணை முறையில் தந்து விடுவதாக சமந்தா சொல்கிறார். ‘தாக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேள்’ என்று அதிகாரி சொல்ல சிறில் மன்னிப்பு கேட்கிறான். ‘உங்கள் மகனிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும், அவன் வரவில்லையா” என கேட்க ‘அவன் உன்னை மன்னிக்கத் தயாராக இல்லை’ என்கிறார்.

**

மறுநாள் சைக்களில் செல்லும் சிறிலை, தாக்கப்பட்டவரின் மகன் பார்த்து விட்டு துரத்துகிறான். சிறில் பயந்து போய் ஒரு மரத்தில் ஏறிக் கொள்ள, கல்லைத் தூக்கி அடிக்கிறான். சிறில் மரத்தில் இருந்து கீழே விழுந்து விட அவன் இறந்து விட்டானோ என்று பயப்படுகிறான். ஆனால் மயக்கம் கலைந்து சிறில் அமைதியாக எழுந்து செல்வதோடு படம் நிறைகிறது.

அவன் பழைய முரட்டுத்தனமான சிறில் இல்லை என்பதை இறுதிக் காட்சி உணர்த்துகிறது. சம்பந்தமில்லாத சிறுவனுக்கு சமந்தா தரும் நிபந்தனையில்லாத அன்பு நெகிழ வைக்கிறது.

பெற்றோர்களின் பிரிவால் உரிய வயதில் அன்பும் ஆதரவும் கிடைக்காத, சிறார்கள், வன்முறையாளர்களாக பாதிப்பு அடைவதை இத்திரைப்படம் சொல்கிறது. ஆதரவற்ற சிறுவர்களை, நல்ல குடிமகன்களாக ஆக்க மேற்கத்திய நாடுகள் உருவாக்கும் சமூக ஏற்பாடுகள், நமக்கு முன்மாதிரியாக இருக்கின்றன.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

Sunday, May 17, 2020

The Pope's Toilet (2007) - 'கடவுளின் தூதரும் கழிப்பறையும்'







அண்மையில் வெளியான 'ஜோக்கர்'  திரைப்படத்தில், ஜனாதிபதி வருகையின் மூலம் ஒரு கிராமத்துப் பெண்ணின் கழிப்பறை கனவு  எவ்வாறு கலைந்து போகிறது என்பதை அரசியல் கலந்த உருக்கமாகச் சொல்லியிருந்தார்கள். இதுவும் அதைப் போன்றதொரு திரைப்படமே. 'கடவுள், மதம்' போன்ற விஷயங்கள், அன்றாட ஜீவனத்திற்கே சிரமப்படும் எளிய மக்களுக்கு என்னவாகப் பொருள் தருகிறது என்பதை உரையாடுகிறது, இந்த உருகுவே நாட்டுத் திரைப்படம். 1998-ல் நிகழ்ந்த உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவான திரைப்படம் இது.

**

பிரேசில் எல்லையில் உள்ள  சிறிய நகரம் மெலோ. பெரும்பாலும் வறியவர்கள் உள்ள பகுதி. அங்கு சில ஆண்கள் கடத்தல் தொழில் செய்கிறார்கள். பிரேசில் நகரின் சந்தைக்குச் சென்று அன்றாட உபயோகப் பொருட்களை வாங்கி காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் கடத்தி வந்து உள்ளூர் வியாபாரிகளிடம் தந்து பணம் சம்பாதிக்கிறார்கள். சில சமயங்களில் கண்காணிப்பு அதிகாரிகளிடம் சிக்கி தங்களின் பொருட்களையும் மரியாதையையும் இழப்பதுண்டு.

இவ்வாறான கடத்தல் தொழிலுக்குச் செல்பவர்களில் ஒருவன் பெட்டோ.  போலீஸ்காரர்களின் கண்களில் தென்படாமல் காடு, மேடெல்லாம் ஒளிந்து ஒளிந்து  லொங்கு லொங்கென்று சைக்கிள்  ஓட்டி தப்புவதற்குள் அவனுக்கு முட்டி கழன்று விடுகிறது. ஒரு பைக் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறான். மனைவியிடம் காசு கேட்டுப் பார்க்கிறான்.

மகளின் படிப்புச் செலவிற்கென்று சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருக்கும் பணத்தை அவள் தர மறுக்கிறாள். வறுமையான குடும்பம். அடிக்கடி சில்லறை தகராறுகள் நடக்கின்றன. வானொலி அறிவிப்பாளராக ஆகும் கனவுடன் இருக்கும் அவர்களது மகள், இவர்களது சண்டைகளை வெறுப்புடன் பார்க்கிறாள்.

**

இந்த நிலையில் அந்தச் சிறிய நகரத்திற்கு போப் வரவிருப்பதாக தகவல் பரவுகிறது. அவர் சுற்றுப் பயணத்தின் போது இந்த சிறுநகரத்திற்கும் வந்து உரையாற்றப் போகிறார். இந்தச் செய்தி  பெரிய பரபரப்பைக் கிளப்பி விடுகிறது. போப்பைக் காண்பதற்காக சுமார் அறுபதாயிரம் நபர்கள் வரவிருப்பதாக ஊடகங்கள் இந்த பரபரப்பை மேலும் கூட்டுகின்றன.

அந்த நகரத்தின் எளிய மக்கள், போப்பின் வருகையை முன்னிட்டு பணம் சம்பாதிக்க முடியுமா என யோசிக்கிறார்கள். இது அவர்களின் மத நம்பிக்கைக்கு எதிரானதுதான். ஆனால் வறுமையின் முன் என்ன செய்ய முடியும்? விதம் விதமான உணவுக்கடைகளும், கேளிக்கை விஷயங்களும் தயாராகின்றன. போப்பின் வருகை லாட்டரியில் அடித்த பம்பர் பரிசு மாதிரி அவர்களுக்கு இருக்கிறது.

***

பைக் வாங்க முடியாத எரிச்சலில் இருக்கும் பெட்டோ, மனைவியிடம் சண்டை போடுவதும், மதுவருந்துவதும் அல்லாத ஒரு நேரத்தில் சிந்தித்துப் பார்க்கிறான். 'தானும் இது போல் ஏதாவது செய்து சம்பாதித்தால் என்ன?' மெல்ல மெல்ல ஒரு யோசனை அவனுக்குள் தோன்றுகிறது. மற்றவர்கள் மாதிரி உணவுக்கடைகள் போடாமல் வருகிற கனவான்களுக்காக ஒரு கழிப்பறையைக் கட்டினால் என்ன?'

இந்த யோசனையை மனைவி, மகளிடம் பகிர்கிறான். இதற்காக கடத்தல் தொழிலுக்கு அதிக டிரிப் போக வேண்டியிருக்கிறது. போலீ்ஸ்காரர்களின் தொல்லையைத் தடுக்க, தன் கூட்டாளிகளுக்குத் தெரியாமல், தலைமை காவல் அதிகாரியிடம் ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறான். அவர் மேற்பார்வையில் பொருட்களை எடுத்து வந்தால் அவர் கமிஷன் தருவார்.  மெல்ல மெல்ல பணம் சேர்கிறது. கழிவறை உருவாக ஆரம்பிக்கிறது.

***

கழிவறைக்கு வரும் நபர்களை எப்படி வரவேற்பது, எப்படி கட்டணம் வாங்குவது, அதிக நேரத்தை எடுத்துக் கொள்பவர்களை எப்படி நாசூக்காக வெளியே வரச் சொல்வது என்று மனைவிக்கும், மகளுக்கும் பயிற்சி தருகிறான். சிரித்தபடியே கற்றுக் கொள்கிறார்கள். வரப்போகும் பணத்தை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்று குடும்பமே இன்பக் கனவில் மூழ்குகிறது.


கழிவறைக் கட்டிடம் பெரும்பாலும் உருவாகி விட்டாலும் நபர்கள் அமரும் பீங்கான் தொட்டி இன்னமும் வாங்கப்படவில்லை. இதற்கிடையில் போலீஸ்காரருடன் பெட்டோ போட்டுள்ள கள்ள ஒப்பந்தம், மனைவிக்குத் தெரிய வருகிறது. 'அவன் மூலம் சம்பாதித்த பணமா இது?' என்று திட்டுகிறாள்.

போப் வரும் கடைசி நாள். அதற்குள் எப்படியாவது தொட்டியை வாங்கி விட வேண்டும். பெட்டோ இடிந்து போய் அமர்ந்திருக்கிறான்.

***

பெட்டோவின் மனைவி, மகளின் படிப்புச் செலவிற்காக வைத்திருந்த சேமிப்பு பணத்தை தருகிறாள். சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓடுகிறான்.  விடிவதற்குள் ஊர் திரும்ப வேண்டும். தொட்டியை வாங்கிக் கொண்டு சைக்கிளில் வேகமாக வரும் போது செயின் கழன்று விழுகிறது. அதையும் சமாளித்துக் கொண்டு வரும் போது தலைமை போலீஸ்காரன் வழிமறிக்கிறான். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படுகிறது. போலீஸ்காரன் ஆத்திரத்தில் சைக்கிளை பிடுங்கிக் கொள்கிறான்.

பெட்டோ தொட்டியை தோளில் ஏற்றிக் கொண்டு வேகவேகமாக ஓடி வருகிறான். போப் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். இவனுடைய மனைவியும் மகளும் தவிப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பெட்டோ கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஓடிவருவது தொலைக்காட்சியில் தெரிகிறது. ஒருவழியாக தொட்டியை இறக்கி பொருத்தி வைக்கிறார்கள்.

ஆனால் அதற்குள் போப்பின் உரை முடிந்து மக்கள் கலைய ஆரம்பிக்கிறார்கள். பெட்டோ ஒவ்வொருவரிடமும் சென்று 'கழிவறையை உபயோகப்படுத்த வேண்டுமா' என்று கெஞ்சுகிறான். எவரும் அதற்குத் தயாராக இல்லை. மகள் அதைப் பார்த்து அழுகிறாள்.

***

ஊடகங்கள் சொன்னபடி அதிக கூட்டம் வருவதில்லை.  உள்ளுர் மக்கள் தவிர வெளியில் இருந்து மொத்தமே நானுாறு நபர்கள்தான் வந்திருந்தார்கள். மக்கள் தயார் செய்திருந்த உணவுப் பொருட்கள் அதிகம் விற்காமல் வீணாக,  ஊரே சோகத்தில் ஆழ்கிறது. ஆனால் போப் உரையைக் கேட்க அதிக நபர்கள் வந்ததாக செய்தித்தாள்கள் சொல்கின்றன.

பெட்டோ மறுநாள் சைக்கிள் இல்லாமல் நடந்து  பணிக்குச் செல்லும் போது, அதுவரை அவனுடன் வர மறுத்திருந்த மகளும் கூட  நடந்து செல்வதோடு படம் நிறைவுறுகிறது.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan