Thursday, January 31, 2019

இயக்குநர் கெளதம் வாசுதேவ்- பகற்கனவுகளின் நாயகன்





'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தை பற்றி பிரத்யேகமானதாக இல்லாமல் அந்தப் படத்தை முன்னிட்டு இயக்குநர் கெளதமின் படைப்புலகைப் பற்றி சிறிது ஆராயலாம் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

பொதுவாக தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் உருவாக்கும் திரைக்கதைகள் எதன் மீது அமைந்திருக்கும்? அவர்கள் சினிமாவிற்காக பிரத்யேகமாக உருவாக்கிய கதைகள், எழுத்தாளர்களால் முன்பே எழுதப்பட்ட புனைவுகள்,  கேள்விப்பட்ட அனுபவங்கள், பத்திரிகை செய்திகள்  போன்றவை அடிப்படையாக, கலவையாக இருக்கும். இந்த கச்சாப் பொருளை ஆதாரமாக வைத்துக் கொண்டு சினிமாவிற்கேற்ற பண்டமாக உருமாற்றுவது வழக்கம். இந்த உருமாற்றத்தில் இயக்குநரின் தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள அந்தரங்கமான அடையாளங்கள், சாயல்கள், ஆழ்மன இச்சைகள் போன்றவைகள் தன்னிச்சையாக வெளிப்படக்கூடும். இது அந்தளவிற்கு அந்த திரைக்கதையுடன் அவரது அகம் நெருக்கமாக இருக்கிறது என்பதைச் சுட்டுகிறது.

உதாரணத்திற்கு, ஓர் ஆணின் வாழ்வில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களின் காதல் குறுக்கிட்டால்  என்னென்ன சிக்கல்கள் உருவாகலாம் என்பதை  தமிழ் சினிமாவின் சில இயக்குநர்கள் தொடர்ச்சியான இடைவெளியில் படமாக உருவாக்கியுள்ளனர். அதில் ஒரு குறிப்பிட்ட இயக்குநரின்  தனிப்பட்ட வாழ்க்கையை கவனித்தால் நிறைய பெண்கள் இருந்திருக்கின்றனர் என்பதை அறிய முடிகிறது. இதைப் பற்றிய வம்புகளை உரையாடுவது இந்தக் கட்டுரையின் நோக்கமில்லை என்பதால் அவர்களின் பெயர்கள் தேவையற்றது.

இந்தப் பாணிக்கு  எதிர்முனையொன்றும் இருக்கிறது. வணிக நோக்கு சினிமாவிற்கென்றே செயற்கையான கதைகளை அடிப்படையாக  கொண்டு உருவாக்கப்படும் திரைக்கதைகள் அதற்கான மசாலாக்களுடன் யதார்த்த உலகத்துடன் தொடர்பேயில்லாமல் மிகையான நாடகமாக, அந்தரத்தில்  தொங்குபவையாக இருக்கும். அதிலுள்ள செயற்கைத்தனம் காரணமாகவே அது போன்ற திரைப்படங்கள்  நுட்பமான பார்வையாளர்களின் மனதில் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தாது. படம் முடிந்ததும் அந்த சுவாரசியத்தை அரங்கிலேயே கழற்றி வைத்து விட்டு  மறந்து விடும் தன்மையைக் கொண்டதாக இருக்கும்.

இதற்கு மாறாக தாம் உருவாக்கும் திரைக்கதைகளை தம்முடைய மனதுடன், அந்தரங்கமான அனுபவங்களுடன், கற்பனைகளுடன் இணைத்து   உருவாக்கும் இயக்குநர்களின் படைப்புகள் யதார்த்தத்திற்கு நெருக்கமாக இருக்கும். நுண்ணுணர்வுகள் நிரம்பியதாக இருக்கும். அது போன்ற திரைப்படங்களை பார்வையாளன் தன் வாழ்நாள் முழுக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அசை போடுவான்.

இந்த நோக்கில் கெளதமின் திரைப்படங்களைப் பற்றி பார்க்கலாம்.


***


கெளதமைப் பற்றிய தனிப்பட்ட, உபத்திரவமில்லாத விவரங்கள் ஒருவகையில் அவரது திரைப்படங்களைப் புரிந்து கொள்ள உதவக்கூடும்.

அவருடைய தந்தை மலையாளி, தாய் தமிழர். இந்தக் கலப்புக் கலாச்சார பின்னணியோடு பிறந்தவராக இருந்தாலும் கெளதம்  வளர்ந்ததெல்லாம் தமிழ் நாடுதான். திருச்சியில் பொறியியல் படிப்பு. என்றாலும் சினிமா மீதான ஆசை அவருக்குள் ஒரு தீயாக கனன்று கொண்டேயிருந்தது. அதை ஊதிப் பெருக்கியதில் 'நாயகன்' திரைப்படத்திற்கு பெரிய பங்குண்டு. தமிழ் சினிமாவின் திரைமொழியை, கதைகூறலை, பார்வையாளர் ரசனையை பெரிதும் பாதித்த அந்த திரைப்படம் இளைஞரான கெளதமையும் பாதித்ததில் ஆச்சரியமில்லை. அத்திரைப்படம் தமக்குள் ஏற்படுத்திய செல்வாக்கைப் பற்றி பல நேர்காணல்களில் குறிப்பிடுகிறார். (காட்பாதர் திரைப்படத்தின் ஒரு தருணம், அச்சம்  என்பது மடமையடா-வை உருவாக்க காரணமாக இருந்தது என்கிற குறிப்பு அதன் டைட்டில் கார்டில் வருவதை இங்கு நினைவுகூரலாம்). விளம்பரப் படங்களில் இருந்து ராஜீவ் மேனன் வழியாக திரைத்துறையின் நுழைவு அமைகிறது.

கெளதம் என்கிற தனிநபரின் ஆளுமை சார்ந்த விஷயங்கள் அவரது திரைக்கதைகளிலும் நாயகப் பாத்திரங்களின் வடிவமைப்புகளிலும் புறத் தோற்றங்களிலும் கூட வெளிப்படுவதை கவனிக்கலாம். உயர்நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பொறியியல் படித்த மாணவன், திரைத்துறையில் நுழைவதற்கான  கனவுகளுடன் இருக்கும் இளைஞன், முதற்பார்வையிலேயே காதல் பித்தில் விழுபவன், காதலுக்காக உருகி உருகி வழிபவன், தந்தை மீது அதிக பாசமுள்ளவன், நாணயமான  காவல்துறை அதிகாரி, கண்ணியமான காதலன் போன்ற சித்திரங்கள் தொடர்ந்து அவரது திரைப்படங்களில் வந்து கொண்டேயிருக்கின்றன. போலவே கெளதமின் தனிப்பட்ட விருப்பத் தேர்வான நீலச்சட்டை, கைவளையம் போன்ற விஷயங்கள் அவருடைய திரைப்படங்களின் நாயகர்களிடமும் இருப்பதை கவனிக்கலாம்.

கெளதம் அடிப்படையில் காதல் உணர்வுகள்  பொங்கி வழியும் மனம் கொண்டவராக இருக்கக்கூடும். எனவே அவரது திரைப்படங்களின் நாயகர்கள் உருகி உருகி காதலிக்கிறார்கள். கண்ணியமாக நடந்து கொள்கிறார்கள்.  கெளதம் இது சார்ந்த நிறைய பகற்கனவுகளை தம்முடைய திரைப்படங்களில் உருவாக்குகிறார். தம்மைக் காதலிக்காத பெண்களை வெறுப்பும் வன்முறையுமாக எதிர்கொள்ளும் இளைஞர்கள் நடைமுறையில் நிறைந்திருக்கும் தமிழ் சமூகத்தில் அதற்கு மாறாக கண்ணியமான காதலன்களை அவர் சித்தரிப்பது ஒருவகையில் வரவேற்புக்குரியது.

'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தில் நாயகிக்கு நாயகன் மீது எந்த தருணத்தில் நட்பு, காதலாக மாறியது என்பது குறித்தான உரையாடல் அவர்களுக்குள் பிற்பாடு நடக்கும். அவர்கள் மேற்கொள்ளும் சாலைத் தொடர் பயணத்தில் கண்ணியமாக நடந்து கொள்வான் நாயகன். ஒரே அறையில் தங்குவார்கள். அவள் உடைமாற்றுவதற்கான சூழல் வரும் போது தாமாகப் புரிந்து கொண்டு வெளியேறுவான். 'அந்தக் கணம்தானே"? என்று கேட்பான் நாயகன். அதை ஆமோதிப்பாள் நாயகி.

ஒரு நேர்காணலில் கெளதம் பகிர்ந்த விஷயம் இது. "என்னைச் சந்திக்கும் சில இளம் பெண்கள் கேட்கிறார்கள். உங்கள் திரைப்படங்களில் கண்ணியமான காதலனை தொடர்ந்து சித்தரிக்கிறீர்கள். ஆனால் நடைமுறையில் அது போன்ற ஆண்கள் எங்கேயிருக்கிறார்கள்?". அந்த வகையில் தாம் உருவாக்கும் ஆண் சித்திரங்கள் ஃபேண்டசி தன்மை கொண்டவை என்பது ஒருவகையில் நிரூபணமாகிறது என்று ஒப்புக் கொள்கிறார் கெளதம்.

ஆனால் அவ்வாறான கண்ணியமான காதலன்கள் சமூகத்தில் இல்லவே இல்லை என்றும் சொல்லி விட முடியாது. ஆண்மைய சிந்தனையுடன் இயங்கும் சமூகமாகவே இது பெரும்பாலும்  இருந்தாலும் ஒருதலையான, நிறைவேறாத காதல் உணர்வோடு தோன்றும் வெறுப்பில் பெண்களின் மீது வன்முறைகளை நிகழ்த்தும் சம்பவங்களின் சதவீதத்தையும், காதலின் மூலம் நிறைவேறிய திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியோடு தங்களின் வாழ்வின் இனிமையைத் தொடரும்  நபர்களின் சதவீதத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். 'உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க இருந்தாலும் நான் ஏன் ஜெஸ்ஸியை லவ் பண்ணணும்' என்று தம்முடைய அகக்குரல்களின் வழியாக காதலை, பெண்மையை ஆராதிக்கும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

***

ஒரு நல்ல காதலனின் சித்திரத்தைப் போலவே நாணயமான காவல்துறை அதிகாரிகளையும் தம் திரைப்படங்களில் தொடர்ந்து உருவாக்குகிறார் கெளதம். இதுவும் பகற்கனவின் கூறுதான். தேசியம் எனும் அமைப்பு உருவானது பாரபட்சமில்லாத சமூகம் அமைவதற்கான ஓர் ஏற்பாடு. அரசு, சட்டம், நீதி, காவல் போன்ற துணை நிறுவனங்களின் அத்தியாவசியமான பணி என்பது இந்த சமத்துவத்தை சமூகத்தில் நிறுவுவதும், பேணுவதும், கண்காணிப்பதும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு இருக்கிறதா? சமூகத்தில் நிகழும் பல முறைகேடுகளுக்கு இந்த நிறுவனங்களின் பொறுப்பில் இருப்பவர்கள் உடந்தையாக இருக்கிறார்கள், தங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.

தீயவர்களை அழித்து நல்லவர்களை காக்கும் அவதாரங்களைப் போன்ற காவல்துறை அதிகாரிகளை தம் திரைப்படங்களில் உருவாக்குகிறார் கெளதம். அவர் அடிப்படையில் காதலுணர்வு மேலோங்கிய ஒரு நபராக இருக்கக்கூடிய சாத்தியத்தைப் போலவே காவல்துறை அதிகாரியாக ஆக விரும்பி அந்த நிறைவேறாத ஏக்கம்தான் பலவிதங்களில் அவரது திரைப்படங்களில் எதிரொலிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அது சார்ந்த பகற்கனவுகள் காவல் அதிகாரியின் சாகசங்களாக அவரது திரைப்படங்களில் வெளிப்படுகின்றன. தங்களை எந்த அவதார புருஷராவது வந்து காப்பாற்ற மாட்டாரா என்று ஏங்குவது எளிய சமூகத்தின் பல காலமாகத் தொடரும் ஏக்கம். எனவே அது சார்ந்த பகற்கனவுகளை உருவாக்கும் திரைப்படங்களை அவர்களும் விரும்புவார்கள். இது போன்ற எம்.ஜி.ஆர் ஃபார்முலா படங்கள் வெற்றி பெறுவதன் அடிப்படையான உத்தி இதுவே.

எனவே கெளதம் உருவாக்கும் 'நல்ல' காவல்துறை அதிகாரிகள் பொதுச்சமூகத்திடம் வெற்றி பெறுவதில் ஆச்சரியமில்லை. இயக்குநர் ஹரி உருவாக்கும் திரைப்படங்களின் காவலர்களும் இதைப் போன்றவர்கள்தான் என்றாலும் அவர்கள் மிகையான ஆவேசத்துடன் இயங்கும் போது கெளதமின் நாயகர்கள் ஆங்கிலப் படங்களின் நகல் போல நளினமாக இருக்கிறார்கள். இந்த ஒப்பீட்டைப் போலவே கெளதமின் காதல் திரைப்பட பாணியையும் செல்வராகவனின் பாணியையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். கெளதமின் பாத்திரங்களின் காதலை கண்ணாடி பூ போல பத்திரமாக கையாண்டு ஆராதிக்கும் போது அதை உடைத்துக் காட்டுவது போல அதன் இருண்மையையும் செல்வராகன் சித்தரிக்கிறார். காமமும் காதலின் ஒரு பகுதி என்று நிறுவுவதில் செல்வராகவனுக்கு ஆர்வம் அதிகம்.

கெளதமின் திரைப்படங்கள் ஒன்று, காதல், அன்பு, பாசம் போன்ற மெல்லுணர்வுகளைக் குறித்த பிரத்யேகமான திரைப்படமாக இருக்கும். விண்ணைத் தாண்டி வருவாயா, நீதானே என் பொன் வசந்தம், வாரணம் ஆயிரம் போன்றவை இந்த வகையைச் சார்ந்தவை. இன்னொரு வகை, காதலும் ஆக்ஷனும் கலந்து இயங்கும் திரைப்படங்களாக இருக்கும். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் போன்றவை.

'அச்சம் என்பது மடமையடா' இந்த தொடர்ச்சியான வகைமையில் உருவானதுதான் என்றாலும் இதில் தம்முடைய வழக்கத்தை மாற்ற முயல்கிறார் கெளதம். 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படத்தின் பல கூறுகளை நினைவுப்படுத்துவது போன்ற காட்சிகளோடு முதற்பாதி திரைப்படம் காதலுணர்வோடு இயங்கும் போது பிற்பாதி காட்சிகள் அதன் எதிர்முனையில் ஆக்ஷன் காட்சிகளோடு இயங்குகிறது. சரிபாதியாக கிழிக்கப்பட்ட காகிதம் போல இதன் திரைக்கதையை இரண்டு வகைமையாக பிரித்திருக்கிறார். இதன் மூலம் தனது ரசிகர்களுக்கு ஒரு புதுமையான சுவையைத் தர வேண்டும்  என்பது அவருடைய திட்டமாக இருக்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த விஷயம் சரியாக உருவாகி வரவில்லை. முதற்பாதி கெளதமின் பாணியில் அற்புதமானதாக இருக்கும் போது பிற்பாதியின் ஆக்ஷன் காட்சிகளில் நம்பகத்தன்மை என்பதேயில்லை. போதாக்குறைக்கு மிக அபத்தமான கிளைமாக்ஸ் வேறு.

அதுவரை நல்ல காவல்துறை அதிகாரிகளையே சித்தரித்துக் கொண்டிருந்த கெளதமின் திரைப்படங்களில் முதன்முறையாக வில்லனாக ஒரு கெட்ட போலீஸ் அதிகாரி வருகிறார். அதை சமன் செய்வதற்காகவோ அல்லது கெளதமின் வழக்கமான பாணியை கைவிடக்கூடாது என்பதற்காகவோ நாயகனும் ஐபிஎஸ் படித்து நல்ல காவல்துறை அதிகாரியாக வந்து தம் பழிவாங்கலை நிகழ்த்துகிறான். இதுதான் அந்த அபத்தமான கிளைமாக்ஸ்.  நல்லவேளை, பழிவாங்கப்பட வேண்டியது நீதிபதியின் பாத்திரமாக இருந்திருந்தால், திரைப்படம் இயங்கும் காலம் இன்னமும் கூடி நம்மை வேதனைக்குள்ளாகியிருக்கும்.

***

'உங்களின் திரைப்படங்கள் ஏன் ஒரே பாணியில் சுற்றிக் கொண்டிருக்கின்றன?' என்று சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர் கெளதமிடம் கேட்கிறார். 'எனக்கு வசதியான விஷயங்களைப் பற்றிய படங்களையே நான் உருவாக்க விரும்புகிறேன்' என்று பதில் சொல்கிறார் கெளதம். மேலே குறிப்பிட்ட இரண்டாவது வகை இயக்குநர்களைப் போல சினிமாவிற்காக வெளியிலிருந்து எடுக்கப்பட்ட கதைகளை திரைப்படமாக்க கெளதம் விரும்பவில்லை. மாறாக தன்னுடைய தனிப்பட்ட, அந்தரங்கமான, ஆழ்மன விருப்பங்களை உணர்வுகளைச் சுற்றியே தன் படைப்புலகத்தை உருவாக்க விரும்புகிறார். இது ஒருவகையில் புரிந்து கொள்ளக்கூடியது. இயக்குநரின் தனிப்பட்டயுலகையும் அவரது திரைப்படங்களையும் பிரித்து நோக்க முடியாது எனும் பொருள் கொண்டது. ஆனால் மேற்குறிப்பிட்ட பத்திரிகையாளரின் கேள்வியைப் போல இந்த தேய்வழக்கு வரிசையை சலிப்பாக உணரும் பார்வையாளர்களும் இருப்பார்கள்.

கெளதமின் திரைப்படங்களில், இவ்வாறாக புரிந்து கொள்ளப்படாமல் தோல்வியடைந்த திரைப்படமாக 'நீதானே என் பொன் வசந்தம்' திரைப்படத்தைக் குறிப்பிடுவேன். பொதுவான தமிழ்  சினிமாவின் கதைகூறல் முறையிலிருந்து  பெரிதும் விலகியிருந்த திரைப்படம் அது. சம்பவங்களின் தொகுப்பு மட்டுமே அதில் இருக்கும். டைட்டில் கார்டிலேயே இதை தெளிவாக சொல்லி விடுவார் இயக்குநர். எனவே  காதல் ஜோடியின் ஊடல் மற்றும் கூடல் தொடர்பான சம்பவங்களே தொகுப்பாக திரும்பத் திரும்ப  வந்ததை பலரால் புரிந்து கொள்ள முடியவில்லை. 'என்னய்யா. இது படம் இது' என்று சலித்துக் கொண்டார்கள். மாறாக அந்த உணர்வுகளை நடைமுறையில் அனுபவித்த காதலர்களால் அது சரியாக புரிந்து கொள்ளப்பட்டது. இன்றும் கூட அத்திரைப்படத்தைக் கொண்டாடும் காதலர்கள் இருக்கிறார்கள்.

இது போல 'நடுநிசி நாய்கள்' என்கிற திரைப்படமும் தோற்றது. அந்த மாதிரியான psychological thriller வகைமையை கெளதமிடம் இருந்து பார்வையாளர்கள் எதிர்பார்க்கவில்லை என யூகிக்கிறேன். ஒரு கலாசார அதிர்ச்சியுடன் அதைப் புறக்கணித்தார்கள். இந்த நிலையில் 'கிராமப்புறப் பின்னணியை வைத்து ஒரு திரைப்படம் உருவாக்குவதற்கான ஆர்வம் இருக்கிறது' என்று கெளதம் நேர்காணல்களில் சொல்லி வருவது எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது.

**

காதலும் வீரமும் தமிழர் பெருமை என்கிற மரபையொட்டி, அந்த இரண்டு விஷயங்களை பிரத்யேகமாகவும் கலந்தும் தம் திரைப்படங்களை இதுவரை உருவாக்கிய கெளதம், அதை முற்பாதி, பிற்பாதியாக இரண்டாகப் பிரித்து உருவாக்கிய 'அச்சம் என்பது மடமையடா'வின் கலவை சரியாக உருவாகி வரவில்லை. முதற்பாதி 'விதாவி'ன் முன்தீர்மானிக்கப்பட்ட சாயல்களோடு அற்புதமாக உருவாகியிருந்தாலும், அதன் எதிர்முரணாக பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி தர வேண்டும் என்று திட்டமிடப்பட்ட இரண்டாம் பாதி சொதப்பலாக அமைந்து விட்டதே இத்திரைப்படத்தின் தோல்விக்கு காரணம்.

இரண்டாம் பகுதியின் இறுதிக்காட்சி வரையில் அதுவரை சிக்கல்களுக்கான காரணத்தை பார்வையாளர்களுக்கு தெரிவிக்காமல் படம் நிறைவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஓர் அவசர இணைப்பாக அதை விளக்கியது ஒரு புதுமையான உத்தி. ஆனால் மற்ற சொதப்பல்களில் இந்தப் புதுமை அமுங்கிப் போனது. 'Big Bad Wolves' என்கிற இஸ்ரேல் திரைப்படத்தில் படத்தின் கட்டக் கடேசி ஷாட்டில்தான்  அதுவரையான சிக்கலுக்கான விடையிருக்கும். பார்வையாளர்களுக்கு ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சியது.  அதுவரைக்கும் பார்வையாளர்களை வேறு ஒரு திசையை நோக்கி போக்கு காட்டிக் கொண்டிருப்பார் இயக்குநர்.

கெளதம் தனது செளகரியமான அச்சில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தாலும் நுட்பத்தை நவீன தோரணையில் அமைந்த உருவாக்கத்துடன் திறமையான கதைசொல்லியாக இருப்பதால் அவருக்கான சந்தைக்கும் பார்வையாளர்களுக்கும் அடுத்த சில வருடங்களுக்காவது இழப்பிருக்காது என்று தோன்றுகிறது.

(காட்சிப்பிழை -டிசம்பர் 2016 இதழில் பிரசுரமானது)


suresh kannan

Wednesday, January 30, 2019

'மகேஷிண்டே பிரதிகாரம்' - அவல நகைச்சுவையின் அழகியல்






இந்தியாவில் மையநீரோட்ட சினிமாக்கள் மரபான கதைகூறல் முறையிலிருந்து பொதுவாக மெல்ல விலகி வருகின்றன. ஒரு புள்ளியிலிருந்து துவங்கி ஒரு முழு வட்டமாக மறுபடியும் அதில் இணையும் தேய்வழக்கு திரைக்கதைகள் மறைந்து வருகின்றன. வழக்கமான பாணியில் அல்லாமல் அநேர்க்கோட்டு வரிசையில் சம்பவங்களின் தொகுப்பாக உயிர் கொள்கின்றன. பின்நவீனத்துவத்தின் காலக்கட்டத்தில் இருக்கிறோம் என்பதை அழுத்தமாக நினைவுப்படுத்தும் படைப்புகள் உருவாகி வருகின்றன. பழைய கால சிவாஜி படங்கள் மாதிரி கதாபாத்திரங்களின் மிகையான புறச்செய்கைகளின்  மூலம் உணர்ச்சிகள் வெளிப்படுத்தப்படுவதில்லை. ஐரோப்பிய சினிமாக்கள் போல கலையமைதியுடன் கூடிய காட்சிகளின் மூலம் பாத்திரங்களின் அகச்சிக்கல்கள் பார்வையாளர்களுக்கு நுட்பமாக கடத்தப்படுகின்றன.

உலகமயமாதல், மல்ட்டிபெக்ஸ் அரங்கங்களுக்கென்று உருவாகும் பிரத்யேகமான பார்வையாளர் சதவீதம் ஆகியவை திரைக்கதை உருவாக்கங்களில் பாதிப்பை செலுத்துகின்றன. உலக சினிமாவின் பரிச்சயமும் செல்வாக்கும் கொண்ட இளைய தலைமுறை இயக்குநர்கள் தங்களுக்கான சாத்திய எல்லையில் மரபை மீற நினைக்கிறார்கள். இவ்வாறான மாற்று முயற்சிகள் இந்தி திரைப்படங்களில்  எப்போதோ துவங்கி விட்டன. இவ்வாறான போக்கை மலையாள சினிமாக்களில் தற்போது காண முடிகிறது. இந்தப் போக்கின்  சாயல் அழுத்தமாக படிந்துள்ள திரைப்படம் 'மகேஷிண்டே பிரதிகாரம்'. (மகேஷின் பழிவாங்கல்).


***


மகேஷ் என்கிற இளைஞன் அவனுக்கு சம்பந்தமில்லாத ஒரு தெருச்சண்டையில் வீழ்ந்து அவமானப்படுகிறான். ஊரே  அவனை வேடிக்கை பார்க்கிறது. உள்ளுக்குள் உடைந்து போகும் அவன், தன்னை அடித்தவனை திரும்ப அடித்து வீழ்த்தாமல் இனி காலில் செருப்பு அணிவதில்லை என சபதம் கொள்கிறான். இதுதான் இந்த திரைப்படத்தின் ஒருவரிக் கதை. வாசிப்பதற்கு சாதாரணமாகத் தெரிந்தாலும் அபாரமான திரைக்கதையின் மூலம் சுவாரசியப்படுத்தியிருக்கிறார்கள். ஒருவரால் ஏற்பட்ட பாதிப்பிற்கு பழிவாங்காமல் சில விஷயங்களின் மீதான தியாகமும் வைராக்கியமும் நிகழ்வது என்பது இதிகாச காலத்திலிருந்தே ஒரு மரபாக நம்மிடம் உள்ளது.

ஆலப்புழாவில் தம்பன் புருஷன் என்கிற நபர் தெருச்சண்டை ஒன்றை விலக்கப் போய் தாக்கப்பட்டு வீழ்ந்திருக்கிறார். பழிவாங்காமல் இனி  காலில் செருப்பு அணிவதில்லை என்கிற  வீராப்புடன் மூன்று வருடங்களுக்கும் மேலாக காத்துக் கொண்டிருந்தார்.  இந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

குளத்தின் கரையில் ஹவாய் செருப்புகள் சுத்தப்படுத்தப்படும் அண்மைக் கோணத்தில் அமைந்த காட்சியோடு படம் துவங்குகிறது. அந்தச் செருப்பு  படத்தின் மையத்திற்கு முக்கியமான குறியீடாக இருக்கப் போகிறது என்பதை முன்னொட்டாக உணர்த்தும் காட்சியது. குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் மகேஷ் (ஃபகத் பாஸில்) ஒரு சராசரி மலையாளியின் சித்திரத்தை சில நொடிகளில் நமக்குத் தந்து விடுகிறார்.

மகேஷ் குளித்து விட்டு கரையேறும் போது பின்னணியில் அபாரமான பாட்டொன்று ஒலிக்கிறது. அவன் வாழும் இடுக்கி எனும் பிரதேசத்தைப் பற்றிய பாடல். மாண்டேஜ் காட்சிகளாக விரியும் இந்தப் பாடலின் மூலமாக அந்த மண்ணின் மணத்தையும் கலாசாரத்தையும், அந்த மண்ணைச் சாராத பார்வையாளர்கள் கூட நெருக்கமாக உணரும் படி அந்தப் பாடல் சிறப்பாக அமைந்துள்ளது. மோனநிலையில் உறைந்திருக்கும் மகேஷின் தந்தை, மகேஷ் சமையல் செய்யும் காட்சி, அவனுடைய அன்றாட நடைமுறைச் செயல்கள் என மாறி மாறி வரும் காட்சிகள்  ஒரு சிறப்பான அறிமுகத்தையும் புத்துணர்ச்சியையும் இந்தப் பாடல் காட்சிகளின் மூலமாக நமக்குத் தருகின்றன.

***


தன் நண்பருக்காக மகேஷ் தெருச்சண்டையில் ஈடுபடும் சம்பவமானது  மிக தற்செயலாக நிகழ்கிறது. ஆனால் அதற்கு முன் சங்கிலித்தொடர் போல சில பல சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதன் எதிர்வினையாகத்தான் இந்தச் சண்டை நடக்கிறது. பல்வேறு சம்பவங்களை ஒன்றிணைத்து இந்தப் புள்ளியில் வந்து நிறுத்தும் திரைக்கதையின் வசீகரம் இயல்பானதாகவும் அற்புதமானதாகவும் இருக்கிறது.

இதைப் போலவே மகேஷின் காதல் தொடர்பான காட்சிகளும். அவனுடைய பள்ளித் தோழிதான் அவள். இளம் பருவத்திலேயே துவங்கும் காதல் நெருக்கமாக வளர்கிறது. அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை என்றாலும் மனதளவில் தம்பதிகளைப் போலவே உணர்கிறார்கள். ஆனால் இந்தக் காதல் நிறைவேறுவதில்லை. வழக்கமான சினிமா வில்லன்களோ, பெற்றோர்களின் கடுமையான எதிர்ப்போ என்று எதுவுமேயில்லை. அவளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். அவன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறவன்.

பெண் பார்க்கும் போது அவன் வந்து பேசும் தருணத்தில் அவளுடைய மனதில் சலனம் வந்திருக்கலாம். ஏனெனில் மகேஷ் உள்ளூரில் ஒரு சாதாரண ஃபோட்டோ கிராஃபர். அவள் தன் பெற்றோர்களிடம் பிடிவாதம் பிடித்தோ அல்லது மகேஷிடம் வந்து இணைந்தோ கூட தன் திருமணத்தை முடித்திருக்க முடியும். சூழல் அவ்வாறான இணக்கத்தோடுதான் இருக்கிறது. அவளது பெற்றோர்களுக்கு கூட இவர்களின் காதல் தெரியும். அவளின் சம்மதமில்லாமல் திருமணத்தை நடத்த மாட்டார்கள் என்பது போல் காட்சிகள் நகர்கின்றன. 'அவனைக் கட்டிக்கிட்டா வெளிநாட்டுக்குப் போகலாம்' என்கிற ஒரே வரியின் மூலம் ஆசையை விதைக்கிறார் அவளின் தந்தை. அவ்வளவுதான், காதல் 'டமால்' ஆகிறது.

இயல்பு வாழ்க்கையில் இப்படித்தான் பல காதல்கள் முறிகின்றன. காதலை விடவும் தங்களின் வாழ்க்கை குறித்த பாதுகாப்பு உணர்வே பெண்களுக்கு அதிகமாயிருக்கும். அதுதான் யதார்த்தமான விஷயம். ஆனால் சினிமாவானது காதல் என்பதை  இதுவரை மிகையான புனிதத்துடன், போலித்தனமாக சித்தரிப்பதுதான் வழக்கம். இத்திரைப்படம் அந்த நாடகத்தன்மையிலிருந்து  விலகி இயல்பாக சித்தரிப்பது சிறப்பு. மகேஷின் காதலி தன் காதலைத் துறக்கும் காட்சிக் கோர்வைகள் மிக மிக இயல்பாக நகர்ந்து செல்கின்றன.

***


இத்திரைப்படத்தின் பல காட்சிகள் Black comedy எனப்படும் அவல நகைச்சுவையின் பாணியில் சுவாரசியமாக உருவாகியிருக்கின்றன. உதாரணத்திற்கு இதைச் சொல்லலாம். மகேஷின் வயதான தந்தை 'எல்லாம் மாயை' எனும் தத்துவார்த்தமான மனநிலைக்கு நகர்ந்து விடுகிறார். இவரின் தொடர்பற்ற செயல்கள் மற்றவர்களுக்கு குழப்பத்தை தருகின்றன. இவர் வீட்டை விட்டு காணாமற் போய் விட்டதாக நினைத்து காவல் நிலையத்திற்கு புகார் தரும் காட்சியில் இவருடைய நண்பர்கள் ஆளுக்கொரு யூகங்களைச் சொல்வார்கள். "அவர் கொஞ்ச நாளாவே ஆளு சரியில்லை சார்"  இங்கே ஒரு சிறிய பிளாஷ்பேக்.

மகேஷின் தந்தையும் நண்பர்களும் சீட்டாடிக் கொண்டிருக்கும் போது அவர் எங்கோ வெறித்து பார்த்துக்  கொண்டிருப்பார். 'இந்த உலகம்தான் எத்தனை அழகானது' என்பார். நண்பர்களும்  அவர் பார்வையின் திசையில் கவனிப்பார்கள். ஒருவன் சாலையில் மூக்கைச் சிந்திக் கொண்டிருப்பான். மாட்டுச்சாணி படிந்த கறை சாலையில் உறைந்திருக்கும்.

இன்னொரு காட்சி இன்னமும் ரகளையானது. மகேஷின் தந்தையும் அவருடைய சகவயது நண்பரும் அமர்ந்திருக்கும் போது அவர் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் இயேசுவின் படத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார். 'என்னவோய்.. அங்கயே பார்க்கறீரு?' என்று நண்பர் கேட்கும் போது 'நாம ஒரு  திருவிழாவில காபரே டான்ஸ் பார்த்தமே, ஞாபகம் இருக்கா?" என்பார் மகேஷின் தந்தை. நண்பரும் அந்தப் படத்தை உற்றுப் பார்ப்பார். அவருடைய முகம் பரவசத்தில் மலரும். 'மறக்க முடியுமா" என்பார்  இளிப்புடன். பின்னணியில் அவர்கள் பார்த்திருந்த டான்ஸில் கேட்டிருந்த பாட்டு பின்னணியில் ஒலிக்கும். இவ்வளவு உரையாடலும் இயேசு படத்தின் பின்னணியில் நிகழ்வதுதான் இதிலுள்ள அபாரமான நகைச்சுவை.

படம் முழுக்க இது போன்ற அவல நகைச்சுவையில் நனைந்த காட்சிகள்  மிக மிக இயல்பானதாக வருவது அத்தனை சுவாரசியம். தம்மால் பழிவாங்கப்பட வேண்டிய ஆசாமியின் பணியிடம் பற்றிய தகவல் தெரிந்து, சட்டென்று தீர்மானித்து மகேஷ் ஆவேசமாக கிளம்புவான். அவனின் நண்பர்களும் ஊர்க்காரர்களில் சிலரும் வேடிக்கை பார்க்க உற்சாகமாக பின்னால் வருவார்கள். ஆனால் அங்கு சேர்ந்ததும்தான் தெரியும், 'அந்த ஆசாமி நேற்றுதான் துபாய் சென்று விட்டான்' என்ற செய்தி. பொங்கிய ஆவேசத்தையும் பழிவாங்கும் உணர்ச்சியையும் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் அசட்டுத்தனமாக நிற்பான் நாயகன். சுற்றிலும் வேடிக்கை பார்க்க காத்திருந்த பார்வையாளர்கள் வேறு. என்னவொரு அவலமான சூழல்?

***

இத்திரைப்படத்தின் நாயகனான ஃபகத் பாஸிலின் தந்தை நீண்டகாலமாக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்பது நமக்குத் தெரியும். இந்தப் பின்னணியில் இருந்து  நேரடியாக திரைக்கு வரும் அதிர்ஷ்ட வாரிசுகள் தங்களின் பிம்பத்தை வளர்த்துக் கொள்ள என்னென்ன அட்டூழியங்களைச் செய்வார்கள் என்பதை தமிழ் சினிமாவில் நாம் பார்க்கிறோம். ஆனால் ஃபகத் பாஸில், ஒரு சராசரியான மலையாளியின் சித்திரத்திற்கு மேலான எந்த விஷயத்தையும் இத்திரைப்படத்தில் செய்வதில்லை. காதலில் அபத்தமாக தோற்றுப் போகிறார். எதிர்பாராத அந்நியனிடம் அடிவாங்கி அலங்கோலமாக சாலையில் விழுகிறார். ஊரே வேடிக்கை பார்க்கிறது.  அவர் செருப்பணியாதது குறித்த கிண்டல்கள் வருகின்றன. எதிராளியைத் தாக்குவதற்காக கராத்தே கற்றுக் கொள்ளும் சுயபகடி சார்ந்த காட்சிகளும் வருகின்றன. இறுதிக் காட்சியில் எதிராளியை வீழ்த்துவது சினிமாவுக்கேயுரிய உச்சக்காட்சி என்றாலும் இயல்பானதாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படியொரு பாத்திரத்தில் தமிழில் உள்ள எந்தவோரு முன்னணி நடிகராவது ஒப்புக் கொள்வாரா என்று சந்தேகமாக  இருக்கிறது.

இதில் வரும் நகைச்சுவைக்காட்சிகளும் அபாரம். மலையாளத் திரைப்படங்களுக்கேயுரிய அழுங்கிய ஆனால் அற்புதமான நகைச்சுவை. மகேஷின் போட்டோக் கடையின் பக்கத்தில் ஃபிளெக்ஸ் போர்டு அச்சடிக்கும் கடை வைத்திருக்கும் குடும்ப நண்பராக Alencier Ley Lopez அட்டகாசமாக நடித்திருக்கிறார்.  எவனோ மூக்கைச் சிந்துவதை வெறித்துப் பார்த்து 'உலகம் அழகானது' என்று தன் நண்பரும் மகேஷின் தந்தையும் ஆனவர் உளறும் போது திகைப்புடன் பார்க்கும் இவர், பிறகு 'பேபி, நீ கூட அழகானவன்தான்' என்று அவர் சொன்னவுடன் முகச்சுளிப்பை மாற்றிக் கொண்டு பெருமையான முகபாவத்தை தரும் அந்த சிறுஅசைவு அத்தனை அழகானது.

மகேஷின் காதலி அவனைத் தேடிச் செல்வதற்கு ஏதுவாக, அவளுடைய குடும்ப உறுப்பினர்களை திசை திருப்புவதற்காக இவர் செய்யும் நாடகமும் அதனால் இவர் படும் பாடும் நல்ல நகைச்சுவைக் காட்சி. நாடகக்குழு அனுபவமும் உள்ள இவர் 1998-ல் இருந்தே மலையாளத் திரையுலகில் நடித்து வந்தாலும் சமீபத்தில்தான் பரவலான கவனத்திற்கு உள்ளாகியிருக்கிறார் என்கிற தகவலை பார்த்த போது ஆயாசமாக இருந்தது. மலையாளத்திலுமா அப்படி?

இதைப் போலவே Soubin Shahir-ன்  நகைச்சுவை பங்களிப்பும். இவர் காட்டும் எளிய முகபாவங்களுக்கு கூட சிரிப்பு வருகிறது. 'மம்மூக்காவா, லாலேட்டனா, யார் பெருமையான பாத்திரங்களில் நடிப்பதில் சிறந்தவர்' என்று உற்சாகமாக பேசி  அப்போதுதான் அறிமுகமான ஓர் இளம் பெண்ணை உடனேயே இவர் நட்பாக்கிக் கொள்வது சிறந்த காட்சி. 'தன்னுடைய பெண்ணின் பின்னால் இவன் சுற்றுகிறானோ' என்று அவரது தந்தை இவரிடம் கண்டிப்புடன் பேசும் போது அதை நிராகரித்து இவர் காட்டும் தீவிரமான முகபாவம் நகைச்சுவையின் இன்னொரு பக்கம். அபாரமான நடிகர்.


***

இதில் வரும் பெரும்பாலான முகங்களும் அவர்களது அசைவுகளும் சினிமாத்தனமானதாக இல்லாமல் இயல்பானதாக இருக்கின்றன. மகேஷின் முதல் காதலியும், மகேஷ் இரண்டாவதாக  தன் காதலை எதிர்கொள்ளும் பெண்ணும் கூட அத்தனை இயல்பாக நடித்திருக்கிறார்கள். மகேஷின் தந்தையாக நடித்த,  அந்தோனி கொச்சி, சில காட்சிகளில் வந்தாலும் முதிர்ச்சியான நடிப்பை தந்திருக்கிறார். தாம் எடுத்த புகைப்படத்தை ஓர் இளம் பெண் நிராகரித்த அவமானத்தை மகேஷால் தாங்க முடியாத போதுதான் அந்த துறையில்  தம் தந்தைக்கு உள்ள திறமையை கண்டறிகிறான். அவர் வீட்டை விட்டு காணாமற் போவதில்லை. பின்புறமுள்ள தோட்டத்தில் வரும் பறவையை புகைப்படம் எடுப்பதற்காக இரவில் காத்திருக்கிறார்.

பொருத்தமான தருணங்களில் ஒலிக்கும் பாடல்களும் இனிமையானதாக உள்ளன. கேரள மண்ணின் மணம் கமழும் இசை. இயல்பான, நேர்த்தியான ஒளிப்பதிவு. சமையல் செய்வதின்் இடையில் மகேஷ் அறையின் வாசலில் நிற்கும் காட்சி ஒன்று, தன்னந்தனியான ஓர் ஆணின் சித்திரத்தை அவனின் மனநிலையை ஒரு நொடியில் நமக்கு கடத்தி விடுகிறது. இப்படியாக பல காட்சிகள் நுண்ணுணர்வுடனும் ரசனையுடனும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இயக்குநர் திலீஷ் போத்தனுக்கு இது முதல் திரைப்படம் என்பதை நம்ப முடியவில்லை. மலையாளத் திரைக்கு புதிய அலை இயக்குநர்களின் மத்தியில் ஒரு திறமையான புதுவரவு.

(அம்ருதா - டிசம்பர் 2016 இதழில் பிரசுரமானது)

suresh kannan