Tuesday, October 09, 2012

பக்கிராம் ஸ்பீக்கிங்.....


மேற்கண்ட வசனத்தை கேட்டவுடன் உங்கள் மூளைக்குள் உடனே மணியடித்தால் உங்களின் நினைவுத் திறன் நன்றாக இருக்கிறதென்று பொருள். :)

இயக்குநர் ஃபாசில் இயக்கிய 'அரங்கேற்ற வேளை' திரைப்படத்தில்தான் இந்த வசனம் வரும். ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங் என்கிற மலையாளத் திரைப்படத்தின் மறுஉருவாக்கமிது. மலையாளத்தில் சித்திக்-லால் இயக்கம். கதையை அப்படியே வைத்துக் கொண்டு பாத்திரங்களை மாற்றி வைத்து தமிழில் உருவாக்கியிருந்தார் ஃபாசில்.

இந்தப்படம் வெளியான புதிதில் (1990) ஏனென்று சொல்ல முடியாத காரணத்திற்காக, அந்த சந்தோஷத்திற்காக, நான்கைந்து முறை பார்த்தேன். திரையரங்கமே உருண்டு புரண்டு சிரித்து சற்று கலங்கி நிறைவடையும் ஃபீல் குட் திரைப்படம். தமிழில் அதுவரை பெரும்பாலும் முயற்சி செய்யப்படாத மென் நகைச்சுவையை முதன் முதலில் இத்திரைப்படத்தில் கண்டிருந்ததால் மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றியதோ என்று இப்போது தோன்றுகிறது. 
 
பிறகு பல முறை இத்திரைப்படத்தை நினைத்துக் கொள்வேன். ஆனால் பார்க்க வாய்க்கவில்லை. இணையத்திலும் டிவிடி கடைகளிலும் பல வருடங்களாக இத்திரைப்படத்தை தேடிக் கொண்டேயிருந்தேன். சமீபத்தில் மின்னணு சாதனங்களின் மெக்காவான, அண்ணாசாலை ரிச்சி தெருவிற்கு சென்றிருந்த போது இதன் குறுந்தகடைக் கண்டேன். 'கண்டேன் சீதையை' என்கிற பரவசத்தோடு நெருங்கினால் கூடவே சிறிய நெருடலும் இருந்தது. இதன் கூடவே 'தாலாட்டு கேட்குதம்மா, என் தங்கச்சி படிச்சவ' போன்ற மொக்கைகளும் ஒட்டிக் கொண்டிருந்தன. தனிப்படமாக கிடைக்கவில்லை. இவ்வாறான காம்பினேஷன் தகடுகளில் வீடியோ கம்ப்ரஸ்ஸன் காரணமாக படத்தின் தரம் குறைவாகவே இருக்கும். வேறு வழியில்லை.

மூன்று வெவ்வேறு நபர்கள். அவர்களின் தனித்தனியான அறிமுகம். நகைச்சுவையான ஆரம்பம். செல்லச் சண்டைகள். அவர்களின் இன்னொரு சோகமான பக்கம். நிதித் தேவைகள். சிக்கல்களாக விரிகிறது. போன் மாறாட்டக் குழப்பம் காரணமாக பணத் தேவைகள் பூர்த்தியாககக்கூடிய சந்தர்ப்பம். தொடரும் நகைச்சுவையான சாகசங்கள், குழப்பம், மீண்டும் சிக்கல். பிறகு வழக்கம் போல் சுபம். ஒரு வணிகத் திரைப்படத்திற்கு தேவையான கச்சிதமான திரைக்கதை. ஃபாசில் இதை மிகச் சிறப்பாக கையாண்டிருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாக ஃபாசிலின் படங்களில் அகம் சார்ந்த உணர்வுகள் சிறப்பாக கையாளப்பட்டிருக்கும். அவரின் 'பொம்முக்குட்டி அம்மாவிற்கு' எனக்கு பிடித்த ஒன்று. மலையாளத்தில் முகேஷின் பாத்திரத்தை தமிழில் ரேவதிக்கு பொருத்தமாக மாற்றியமைத்ததில் அவரின் திரைக்கதை மேதமை பளிச்சிடுகிறது.

பிரபுவிற்கு மிகப் பொருத்தமான பாத்திரம். அப்பாவியான ஆனால் செயற்கையான வீராப்பை காட்டும் 'சிவராக கிருஷ்ணணை' நன்றாக வெளிப்படுத்தியிருந்தார். ரேவதிக்கு இம்மாதிரியான குறும்புத்தனமான பாத்திரமெல்லாம் 'மெளனராகம்' சமயத்திலிருந்தே அத்துப்படியென்பதால் அனாயசமாக நடித்திரு்நதார். 
 
தமிழ் நகைச்சுவையின் மீது ஜெ வைத்திருக்கும் புகாருக்கு சிறந்த உதாரணம் விகே ராமசாமி. எதையும் வாயை நன்றாக திறந்து உரத்த குரலி்ல் உரத்த சிரிப்பில் நடிப்பது இவரது பாணி. சமயங்களில் முகஞ்சுளிக்கும் ஆபாசங்களை நகைச்சுவையில் ஒளித்துக் காட்டுவதும். 'இன்று என் மனைவியுடன் சந்தோஷமாக இருந்தேன்' என்பதைக் கூட நாலு தெருவிற்கு கேட்கும்படிதான் இவர்களால் வசனம் பேச முடியும்.  நாடகத்திலிருந்து திரைக்கு வந்தவர்கள் பெரும்பாலும் இவ்வகையான புகாரிலிருந்து தப்பிக்க முடியாது. கவுண்டமணி, சந்தானம் போன்றவர்கள் விகே ராசாமியின் ஒரு வகையான நீட்சி எனலாம். தமிழ் ரசிகர்களுக்கு இவ்வாறான உரத்த நகைச்சுவை பழக்கப்பட்டு விட்டதால் இதிலிருந்து மீள்வது கடினம். 
 
என்றாலும் ஒரு காட்சியில் விகே ராமசாமியின் சிறந்த நடிப்பைக் கண்டேன். போன் மாறாட்டக் குழப்பங்கள், சண்டைகளெல்லாம் முடிந்து பிரபுவும் ராமசாமியும் வீட்டிற்கு வருவார்கள். ராமசாமி இன்னும் அதே பயத்தோடே இருப்பார். 'நம்பினார், இனி பயமில்லை.பணம் கைக்கு வந்தாச்சு. நாம லட்சாதிபதிகளாயிட்டோம்' என்று பிரபு சந்தோஷமாக சொல்லும் போது கூட அதை முழுவதும் ஏற்றுக் கொள்ள முடியாத பயத்தோடேயே அசட்டுத்தனமாக சிரிப்பார். ஜெய்கணேஷின் மகளாக நடித்திருப்பவர் முன்னர் பேபி அஞ்சு'வாக இருந்தவர் என்பதை சில பல முறைக்குப் பிறகுதான் கண்டுகொள்ள முடிந்தது.

படத்தின் இசை இளையராஜா. 'ஆகாய வெண்ணிலாவே' என்கிற பாடல் எப்போதுமே எனக்குப் பிடித்தமானது. இந்தப்பாடலில் இறுதியாக வரும் பல்லவியில் பிரபுவின் நடன உடலசைவு விநோதமாகவும் பிடித்தமானதாகவும் இருக்கும். 'தாயறியாத தாமரையோ' என்கிற இன்னொரு பாடலும் சிறப்பானது. ராஜாவின் சோதனை முயற்சியின் அடையாளங்களுள் ஒன்று. இதைப் பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். மனோவின் குரலில் ஆரம்பிக்கும் 'மெலடியான' பல்லவிக்கு முரணாக சரணம் வேகமான தாள அசைவில் இருக்கும். பல்லவியும் சரணங்களும் வேறு வேறு பாணியில் இருக்கும் பிரத்யேகமான பாடலிது. ஃபாசில் இந்தப் பாடலை சூழலுக்கேற்றவாறு சிறப்பாக பயன்படுத்தியிருப்பார்.

சில பல வருடங்கள் கழித்து இத்திரைப்படத்தை சமீபத்தில் காணும் போதும் ஏறத்தாழ பதின்மங்களில் அடைந்த அதே மனஉற்சாகத்தை அடைந்தேன்.

suresh kannan

Monday, September 10, 2012

நான் - விஜய் ஆண்டனி


 ஒரு துறையில் பிரபலமாகி விட்டவர்கள் அந்த காரணத்தினாலேயே தமக்கு சம்பந்தமில்லாத துறையிலேயும் திறமை காண்பிக்க முயல்வது பெருகி விட்டது. அதனால்தான் பிரபலமான நடன இயக்குநர்கள் திரைப்படங்களை இயக்கி நம்மைக் கொல்வதும் ரிடையர்டு ஆன நடிக,நடிகைகள் ரியாலிட்டி ஷோ தீர்ப்புகள் முதல் கூடங்குளம் அணுஆலை வரை தம்முடைய 'கமெண்ட்டுகளை' ஊடகங்களில் வாரி வழங்கும் அபத்தங்களும் நிகழ்கின்றன.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி்  நாயகனாக நடிக்கும் 'நான்' போஸ்டர்களை பார்த்த போது, சாம் ஆண்டர்சன், பவர் ஸ்டார் சீனிவாசன் போன்ற இன்னொருவர் தமிழ்த்திரைக்கு கிடைத்து விடுவார் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக (துரதிர்ஷ்டவசமாக) விஜய் ஆண்டனி ஏதோ ஒரு இடைவெளியில் தப்பிப் பிழைத்திருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.

பதின்ம வயது சிறுவனொருவன் தன் தாய் பிறன்மனை நோக்கும் காரணத்திற்காக கோபம் கொண்டு அவர்களை கொல்வதான கிளிஷேத்தனமாக காட்சிகளோடு படம் துவங்குகிறது. தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் காலம் காலமாக கற்பு எனும் கற்பிதத்தை திரையில் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கும் அபத்தத்தைப் பற்றி பேசியாக வேண்டும். ஏதோ ஒரு காரணத்தினால் தம்பதியினருக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. மனைவியோ அல்லது கணவனோ இன்னொரு தொடர்பில் ஈடுபடுகிறான். இப்போது என்ன செய்ய வேண்டும். இருவரும் தத்தம் உறவுகளைப் பற்றி நிதானமாக உரையாடி சட்டப்பூர்வமாக பிரிவதற்கான வழிமுறையில் ஈடுபடுவதே ஆரோக்கியமான நாகரிகமான சமூகம் செய்ய வேண்டிய வழி.

மாறாக நம் தமிழ்த் திரைப்படங்கள் என்ன சொல்லித் தருகின்றன? திருமணமான ஒரு பெண் இன்னொரு ஆணோடு கூடி so called கற்பை இழந்து விட்டாளா? உடனே கண்கள் சிவக்க..... தூக்கு அருவாளை......  இந்தச் செய்தி கணவன்மார்களுக்கு மட்டுமல்ல, பதின்ம வயது இளம் நெஞ்சங்களுக்கும் திணிக்கப்படுகிறது. இந்த இடத்தில் ஜெயகாந்தனின் 'அந்தரங்கம் புதினமானது' என்கிற சிறுகதை நினைவுக்கு வருகிறது. தன்னுடைய தந்தை இன்னொரு பெண்ணுடன் கொண்டிருக்கிற தொடர்பு குறித்து அறிகிற இளைஞனொருவன் அது குறித்து திகைப்பும் கோபமும் கொள்கிறான். தாயிடம் இது பற்றி உரையாடுகிறான். இந்தத் தொடர்பைப் பற்றி ஏற்கெனவே அறிந்திருக்கிற தாய் அது பற்றி கோபம் கொள்ளாதிருப்பதற்காக அவளிடம் சண்டையிடுகிறான். அவனை அமர வைத்து அந்த தாய் உரையாடுவதுதான் அந்தச் சிறுகதையின் மையம். இம்மாதிரியான முதிர்ச்சியான சிந்தனைகளை நோக்கித்தான் ஒரு நாகரிகமாக சமூகம் நகர்ந்தாக வேண்டும். இன்னமும் நிலவுடைமைச் சிந்தனைகளுடன் அரிவாளைத் தூக்கும் காண்டுமிராண்டித்தனத்தை கற்றுத் தரும் தமிழ் சினிமாக்களும் முதிர்ச்சியை நோக்கி நகர வேண்டிய தருணமிது.

'நான்' திரைப்படத்தை பற்றி பேச வந்து திசை மாறி விட்டது.

விஜய் ஆண்டனி தம்முடைய பலவீனங்களை தெளிவாக உணர்ந்து அதற்கேற்றவாறான திரைக்கதையை தேர்ந்தெடுந்திருப்பது நன்று. அபத்தமான பாடல் காட்சிகளோ, சண்டைக்காட்சிகளோ இல்லை. இயக்குநரின் சுவாரசியமான கதை சொல்லும் திறமையால் படம் சுவாரசியமாகவே துவங்குகிறது. ஆனால் ஒரு நிலையில் படம் அப்படியே அமர்ந்து விடுகிறது. சூழ்நிலை காரணமாக நண்பனைக் கொல்பவன், அங்கேயே தம்மைத் தொடர்வானா என்கிற கேள்வி இடையறாது நம்மைத் தொல்லை செய்கிறது. அது மாத்திரமல்ல. விஜய் ஆண்டனி தன்னை ஆள்மாறாட்டம் செய்து கொள்வதான காட்சிகள் அதீத முஸ்தீபுகளுடன்.. ஏதோ ஒரு சர்வதேச தீவிரவாத செயலை செய்யப் போகும் பில்டப்புகளுடன் தொடர்கின்றன. ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்று முடியும் போது ஏமாற்றமாக இருக்கிறது. 'தொடரும்' என்று வேறு போட்டு பயமுறுத்தியிருக்கிறார்கள்.

விஜய் ஆண்டனி நன்றாகவே முயற்சித்திருக்கிறார். ஆனால் பெருச்சாளியை விழுங்கின பூனை மாதிரி அவ்வப்போது விழிப்பது ஏன் என்று தெரியவில்லை. மற்றபடி இயக்குநர் ஒரு திறமையான கதை சொல்லியாக வரக்கூடிய தடயங்கள் படத்தில் இருக்கின்றன.திரைக்கதைக்காக இன்னும் உழைத்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்.
 
suresh kannan