Sunday, June 30, 2019

அசோகமித்திரன் -புலிக்கலைஞன் - குறும்படம்




‘புலிக்கலைஞன்’ – அசோகமித்திரன் எழுதிய உன்னதமான சிறுகதைகளுள் ஒன்று என்பது பெரும்பாலோனோர்க்கு தெரியும். இலக்கியப் பரிட்சயம் அல்லாதவர்கள் கூட வாசித்திருக்கக்கூடிய புகழ்பெற்ற சிறுகதை.

‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் இந்தச் சிறுகதையை குறும்படமாக்கியிருந்தார் ஓர் இளம் இயக்குநர். இந்தப் படைப்பை தேர்ந்தெடுத்தற்காகவே அவரை  முதலில் பாராட்டலாம்.

ஆனால் சிறப்பு விருந்தினரான விஜய் மில்டன், நடுவர்கள் வெற்றிமாறன், சேரன் ஆகியோர் குறிப்பிட்டதைப் போல இதன் எக்சிகியூஷன் சரியாக நடத்தப்படவில்லை. சிறுகதையின் ஆன்மா, காட்சிகளின் வழியாக கடத்தப்படவேயில்லை. நண்பர் கேபிள் சங்கர், தயாரிப்பாளராக வெற்றிலை வாயோடு நடித்திருந்தார்.

எளிமையாகத் தோற்றமளிக்கும் காதர், ஒரு கலைஞனாக விஸ்வரூபம் எடுப்பதுதான் இந்தச் சிறுகதையின் முக்கியமான அங்கம். இந்தப்பகுதி மிக மிக சுமாராக படமாக்கப்பட்டிருந்தது. அதில் நடித்தவரும் சுமாராகத்தான் செய்தார். நிற்க..

நம்முடைய பாரம்பரியக் கலைகளும் கலைஞர்களும் தேய்ந்து கொண்டே வருவதையும் மையக்கலைவெளியில் அவை நிராகரிக்கப்படுவதும்தான் அந்தச் சிறுகதை சொல்ல வரும் ஆதாரச் செய்தி.

எனில், அவ்வாறான கலைஞர் ஒருவரை படப்பிடிப்புக்குழுவால் தேடிப்பிடிக்க முடியவில்லை என்னும் நடைமுறை விஷயமே சிறுகதையின் அடிப்படையை நமக்கு சொல்லி விடுவது ஒரு சுவாரசியமான நகைமுரண்.

இந்தச் சிறுகதையின் கனம் என்னவென்பது இளம் இயக்குநருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. எனில் அதைப் படமாக்க எத்தனை சிரத்தையையும் மெனக்கெடலையும் வழங்கியிருக்க வேண்டும்?! அவர் புலிக்கலைஞனை ‘எலிக்கலைஞனாக்கி’ விட்டது துரதிர்ஷ்டம்.
suresh kannan

1 comment:

malar said...

இந்த குறும்படத்தின் லிங்க் கிடைக்குமா ? யூடியூபில் இருந்தா லிங்க் தரவும் .thanks.