Monday, January 16, 2017

2016-ல் தமிழ்த் திரையிசை எப்படியிருந்தது? - ஒரு பார்வை



தமிழ் திரையிசையின் எல்லா காலக்கட்டத்திலும் பல இசையமைப்பாளர்கள் இயங்கி வந்தாலும்  பொதுவாக அதில் ஒருவர் மட்டுமே முன்னணியில் இருப்பார். கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்கள் அவரவர்களின் காலக்கட்டத்தில் வெற்றிகரமானவர்களாக இருந்தனர். தோராயமாக இந்த நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து இந்த நிலை மெல்ல மாறத் துவங்கியது. ஒரு குறிப்பிட்ட சமயத்தில் எவருடைய இசை வெற்றியடைகிறதோ அந்தச் சமயத்தில் அவருடைய மதிப்பு உயரும். ஆனால் அது தற்காலிகம்தான். பின்பு இன்னொருவர் அந்த இடத்தைக் கைப்பற்றுவார். தட்பவெப்பம் மாதிரி இந்த நிலை மாறிக் கொண்டேயிருப்பதுதான் இப்போதைய சூழல்.

டிஜிட்டல் நுட்பம் அறிமுகமான பிறகு சினிமாவின் உருவாக்கம் எளிதானது.  நிறைய புது இயக்குநர்கள் வந்தார்கள். கூடவே நிறைய புது இசையமைப்பாளர்களும். நுட்பத்தின் வளர்ச்சி இசையமைப்பை மிக எளிதாக்கியது. எனவே புற்றீசல் போல நிறைய பாடல்கள் உருவாகின. தோன்றிய வேகத்தில் மறையத் துவங்கின. இன்னும் பல பாடல்கள் ரசிகர்களின் கவனத்திற்கு வராமலேயே மறைந்தன. ஒழுங்குபடுத்தப்பட்ட சப்தங்களின் தொகுப்பு மட்டுமே இசையல்ல, உருவாக்குபவரின் கலைத்திறமையும் ஆன்மாவும் அந்த இசை உருவாக்கத்தில் கலந்திருக்க வேண்டும். அத்தகைய படைப்புகளே காலத்தைக் கடந்தும் ரசிகர்களின் நெஞ்சில் நிற்கும் என்பதை நுண்ணுணர்வுள்ள சில இசையமைப்பாளர்களே புரிந்து வைத்திருக்கிறார்கள்.


இந்தச் சூழலில் 2016-ல் வெளிவந்த சில முக்கியமான திரையிசைப்பாடல்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். இது முழுமையான பட்டியல் அல்ல.

***

வருடத்தின் துவக்கத்திலேயே இளையராஜாவின் 'தாரை தப்பட்டை' ஆல்பம் வெளிவந்து மகிழ்ச்சியை அளித்தது. ராஜாவின் ஆயிரமாவது திரைப்படம் என்கிற பெருமையையும் பெற்றது.  இதில் அனைத்துமே ராஜாவின் பிரத்யேகமான முத்திரையுடன் கூடிய பாடல்கள் என்றாலும், திருவாசக வரிகளை அடிப்படையாகக் கொண்டு உருவான 'பாருருவாயா' என்ற பாடலை குறிப்பாகச் சொல்ல வேண்டும். கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டு உருவான அற்புதமான பக்திப்பாடலை சத்யபிரகாஷூம் சுர்முகியும் அபாரமாகப் பாடியிருந்தார்கள். விமானம் ஒன்று மெல்ல டேக் ஆஃப் ஆகி சட்டென்று அபாயகரமாக கர்ணம் அடித்து உயரே எழும்பிப் பறப்பது போன்று சுர்முகி தன் குரலால் மாயாஜாலம் புரிந்திருந்தார். ஆனால் பாலாவின் காட்சியாக்கம் ஏமாற்றமளித்தது.

ஏ.ஆர். ரஹ்மானுக்குப் பிறகு பல புதிய இசையமைப்பாளர்கள் தோன்றினாலும் சந்தோஷ் நாராயணன்  மட்டுமே கவனத்துக்குரியவராக இருக்கிறார். இந்த வருடம் அவர் உருவாக்கியதில் பெரிய ஹிட் என்று 'இறுதிச்சுற்று' மற்றும் 'கபாலியை' குறிப்பிடலாம். அதிக எண்ணிக்கையிலான வாத்தியங்களை வைத்து ஆர்ப்பாட்டம் செய்யாமல் குறைவான ஒலிகளின் பின்னணியில் வித்தியாசமான பாடல்களைத் தரும் திறமையுள்ளவராக விளங்குகிறார். இறுதிச்சுற்றில் 'ஏ சண்டைக்காரா' மற்றும் 'உசுரு நரம்பிலே' ஆகிய பாடல்கள் கவனிக்க வைத்தன. 'கபாலி'யில் 'மாயநதியென' பாடல் தரும் விசித்திரமான உணர்வு மயங்கவும் நெகிழவும் வைத்தது. 'இறைவி'யில் 'துஷ்டா' பாடல் psychedelic  உணர்வைத் தந்தது. ஆனால் அதிக எண்ணிக்கையிலான படங்களை ஒப்புக் கொள்வதினாலோ என்னவோ,  சந்தோஷின் தரம் மெல்ல வீழ்ந்து கொண்டு வருவது கவலையளிக்கிறது.

***

இடையில் காணாமற் போயிருந்த யுவன்சங்கர் ராஜாவின் மீள்வருகை இந்த ஆண்டு 'தர்மதுரை'யின் மூலமாக அழுத்தமாக அமைந்தது. 'ஆண்டிப்பட்டி கணவாய் காத்து'  இந்த வருடத்தின் முக்கியமான மெலடி எனலாம். கேட்க, கேட்க இதன் இனிமை குறையவேயில்லை. 'வெள்ளக்காரி காசு தீந்தா வெறுத்து ஓடி போவா, இவ வெள்ளரிக்கா வித்து கூட, வீடு காத்து வாழ்வா' என்கிற வைரமுத்துவின் பாடல் வரி சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது. நாட்டார் இசையின் சாயலில் அமைந்த 'மக்கா கலங்குதப்பா' பாடல் ரகளையானதாக இருந்தது. 'மதிசியம் பாலா' என்கிற கிராமத்துப் பாடகரின் அறிமுகம் இந்தப் பாடலின் மூலம் கிடைத்தது. இவரே பாடலையும் எழுதியிருந்தார். முதல் பாகத்தைப் போல, சென்னை-28-ன் இரண்டாம் பாகத்தில் யுவனின் இசை குறிப்பிடத்தகுந்ததாக அமையவில்லை என்பது ஏமாற்றமே.

குறைந்த எண்ணிக்கையிலான திரைப்படங்களில் இயங்கினாலும் 'ஜஸ்டின் பிரபாகரன்' குறிப்பிடத்தகுந்த இசையமைப்பாளராக உருவாகி வருகிறார். மறைந்த எம்.எஸ்.விஸ்வநாதனின் அபாரமான மெல்லிசை பாணியை இவரது இசையில் அழுத்தமாக உணர முடிகிறது. 'ஒருநாள் கூத்து' திரைப்படத்தில் உள்ள 'அடியே அழகே' இந்த வருடத்தின் சிறந்த பாடலில் ஒன்று. காதல் பிரிவின் ஏக்கத்தையும் நிராசையையும் பாடகர் ஷான் ரோல்டன் அற்புதமாக பிரதிபலித்திருந்தார்.

சேதுபதி திரைப்படத்தில் வரும் 'கொஞ்சிப் பேசிட வேணாம்' என்கிற மெல்லிசைப் பாடல் பலரை கவர்ந்ததாக அமைந்தது. சித்ராவும் ஸ்ரீராமும் பார்த்தசாரதியும் அருமையாகப் பாடியிருந்தார்கள். நிவாஸ் கே பிரசன்னாவிடமிருந்து இன்னமும் பல தரமான படைப்புகளை எதிர்பார்க்கலாம் என்கிற நம்பிக்கையை இந்தப் பாடல் ஏற்படுத்தியிருக்கிறது.

***

2016-ல் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களுக்கு இசையமைத்தவராக டி.இமான் இருக்கக்கூடும். 2002-ல் இருந்து இயங்குபவராக இருந்தாலும் 'மைனா' மற்றும் 'கும்கி' திரைப்படங்களின் அபாரமான இசைக்குப் பிறகு இமானின் வேறு பரிமாணம் வெளிப்பட்டது. இவருடைய திரைப்படத்தில் ஒரு நல்ல மெல்லிசைப் பாடல் கட்டாயம் இருக்கும் என ரசிகர்கள் நம்பினார்கள். ஆனால் பெரும்பாலான பாடல்களின் சாயல் 'கும்கி'யின் சாயலிலேயே இருப்பது இமானுக்கு ஒரு பின்னடைவு.

2016-ல் வெளிவந்த இமானின் இசையில் 'றெக்க' திரைப்படத்தில் உள்ள 'கண்ணம்மா' பாடல் பலரால் ரசிக்கப்பட்டது. மனதை உருக்கும் இசையுடன் அமைந்த இந்தப் பாடலை நந்தினி சிறப்பாகப் பாடியிருந்தார். இதே திரைப்படத்தில் ஸ்ரேயா கோஷல் பாடிய 'கண்ணைக் காட்டு போதும்' பாடலும் பரவலாக ரசிக்கப்பட்டது. 'மிருதன்', 'தொடரி' 'மாவீரன் கிட்டு' ஆகிய திரைப்படங்களில் உள்ள சில மெல்லிசைப் பாடல்களையும் ரசிகர்கள் வரவேற்றார்கள். ஆனால் தனது தேய்வழக்கு பாணியிலிருந்து இமான் விடுபடுவது அவரது வளர்ச்சிக்கு நல்லது.

'ஜோக்கர்' திரைப்படத்தின் 'செல்லம்மா' பாடல் 'கண்ணம்மா'விற்கு நிகரான வரவேற்பினைப் பெற்றது. ஷான் ரோல்டனின் இசையில் வந்தது. 'கிடாரி'யின் மூலம் தமிழ்த்திரையிசைக்கு அறிமுகமான இயக்குநர் தர்புகா சிவா. நகைச்சுவை  நடிகராக இருந்து உயர்வு. 'பலே வெள்ளையத் தேவா'விலும் இவரது இசை. நல்வரவு. ஆனால் கவனத்திற்குரியவராக  இவர் இனிதான் மாற வேண்டும்.

இசையமைப்பாளர்கள் நாயகர்களாக உருமாறி விடுவதால் அவர்களின் ஆதாரமான துறையை நழுவ விட்டு விடுகிறார்கள் என்று தோன்றுகிறது. ஜி.வி.பிரகாஷூம் விஜய் ஆண்டனியும் இந்த உருவாக்கிய சில பாடல்கள் குறிப்பிடத்தகுந்தவையாக இருந்தாலும் அவர்களின் அதிசிறப்பான இசை உருவாக்கம் இந்த வருடத்தில் வெளியாகவில்லை என்று தோன்றுகிறது. (ஜி.வி. பிரகாஷின் 'உருகுதே, மருகுதே'வை இன்னமும் மறக்கமுடியவில்லை).

குறுகிய காலத்திலேயே  சமகால இளைஞர்களைக் கவர்ந்த இசையமைப்பாளராக வளர்ந்தவர் அனிருத். இந்த வருடத்தில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரே ஆல்பம் 'ரெமோ', முந்தைய திரைப்படங்களின்  நகலாக மட்டுமே இருந்தது. புதுமையானதாக எதுவும் அமையவில்லை. அடுத்த வருடமாவது இவருக்கு நல்ல ஆண்டாக அமையட்டும்.

ரஹ்மானுக்குப் பிறகு தொடர்ச்சியான தரத்தில்  பாடல்களை அமைப்பவர்் ஹாரிஸ் ஜெயராஜ். இவராலும் தன்னுடைய இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியவில்லையோ  என்று தோன்றுகிறது. இருமுகனில் 'ஹெலனா' என்கிற ரகளையான இசையுடன் கூடிய பாடலை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்ல முடிகிறது.


***

ஏ.ஆர்.ரஹ்மானை மிக அரிதாகவே தமிழ் திரையின் பக்கம் காண முடிகிறது. அத்தனை பிஸி. '24' திரைப்படத்தில் அவரின் இசையில் உருவான 'மெய்நிகர' பாடல் அருமையானதொன்று. 'பட்டாம் புலியே, கிட்டார் ஒலியே, மிட்டாய் குயிலே, ரெக்கை முயலே என்று பல வசீகரமான படிமங்களை இந்தப் பாடலின் மூலம் உருவாக்கியிருந்தார் மதன் கார்க்கி. சித் ஸ்ரீராம் அருமையாகப் பாடியிருந்தார்.


2016-ன் சிறந்த ஆல்பங்கள் என்று இரண்டைச் சொல்லலாம். 'கபாலி' மற்றும் 'அச்சம் என்பது மடமையடா'.

'வானம் பார்த்தேன்' 'மாயநதியென' ஆகிய இரு பாடல்களை 'கபாலி'யில் குறிப்பிட்டுச் சொல்லலாம். தொலைந்து போன தன் துணைவியை ஏக்கத்துடன் நாயகன் தேடும் ஏக்கமும் அவனுடைய அகம் சார்ந்த தத்தளிப்பும் மெலிதான பிறழ்வும் இந்தப் பாடல்களில் சிறப்பாக வெளிப்பட்டன. இரு பாடல்களையும் பிரதீப் குமார் அற்புதமாகப் பாடியிருந்தார். 'நான் உனை காணும் வரையில் தாபத நிலையில்' என சங்ககாலத்து சொற்களைக் கூட அருமையாக பயன்படுத்தியிருந்தார் பாடலாசிரியர் உமா தேவி.

***

சரணம், பல்லவி என்று இந்தியத் திரையிசையில் பல காலமாக இருந்த மரபை தன் புதுமையால் பெரிதும் மாற்றியமைத்தவர் என்று ஏ.ஆர்.ரஹ்மானைச் சொல்லலாம். இந்த அம்சம்  'அச்சம் என்பது மடமையடா' இசையமைப்பிலும் அழுத்தமாக பதிந்திருந்தது.

குறிப்பாக 'தள்ளிப் போகாதே' பாடலில் மரபில் அடங்காத மிக நீளமான பல்லவியொன்று அமைந்திருந்தது. அதன் தொடர்ச்சியாக 'ராப்' இசையோடு பாடல் நிறைவுறுகிறது. இத்தனை நீளமான மெட்டிற்கு வரிகள் எழுதுவது சவாலானதொன்று. 'கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றேனே' என்பது போன்ற கவித்துவமான வரிகளால் இந்த சவாலை திறமையாக எதிர்கொண்டிருந்தார் தாமரை. முதல் பகுதியின் மெல்லிசையொடு அதன் எதிர்முரணில் அமைந்த  அதிரடிப் பாணியை உறுத்தாமல் இணைத்தது ரஹ்மானின் மேதமையைக் காட்டுகிறது. சித் ஸ்ரீராமின் இன்னொரு அட்டகாசம் இது.


'ராசாளி' பாடலில் திருப்புகழின் 'முத்தைத் தரு பத்தித் திருநகை' பாடலிசைப் பாணியை முதல் பகுதியிலும்  'நின்னுக்கோரி வர்ணம்' இசையை இரண்டாம் பகுதியிலும் இணைத்தது அபாரம். எம்.எஸ்.வி காலத்தை நினைவுப்படுத்தும் 'அவளும் நானும்' ஓர் அட்டகாசமான மெல்லிசைப்பாடல். பாரதிதாசனின் பாடல் வரிகளை உபயோகித்தது சிறப்பு. அதிரடியான 'சோக்காலி' பாடலிலும் ரஹ்மானின் பிரத்யேகமான முத்திரை இருந்தது. 'இதுநாள் வரை'யும் சிறந்த பாடலே.

2016-ன் அதிசிறந்த பாடல் என 'தள்ளிப் போகாதே'வை சொல்லலாம். பல லட்சம் ரசிகர்கள் யூட்யூப் தளத்தில் இந்தப் பாடலைக் கேட்டு கொண்டாடியிருக்கிறார்கள்.

**

பாலமுரளி கிருஷ்ணா, நா.முத்துக்குமார்,  போன்ற அதி உன்னதமான கலைஞர்களின் இழப்பை 2016-ம் ஆண்டு எதிர்கொண்டிருப்பது துரதிர்ஷ்டமானது.

2016-ல் பல புதிய இசையமைப்பாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். ஏற்கெனவே துறையில் இருப்பவர்கள் அவர்களுடன் போட்டி போட வேண்டிய ஆரோக்கியமான சூழல் உருவாக்கியிருக்கிறது. ஆனால் நுட்பம் தரும் வசதியில் பல அவசரக் கோலங்களும் இறைபடுகின்றன. தகுதியுள்ளது தப்பிப்பிழைக்கும் என்பது காலத்தின் தீர்ப்பு. 

(கொழும்புவிலிருந்து வெளியாகும் 'தினகரன் – வாரமஞ்சரி’ பிரதிபிம்பத்தில் வெளியானது)


suresh kannan

No comments: