Saturday, January 12, 2013

ஆரோகணம்

ஆரோகணம் பார்த்தேன். லக்ஷ்மி ராமகிருஷ்ணன் என்கிற பெண் இயக்குநரின் முதல் படம். சிறுமுதலீட்டுப் படம்.  40 லட்சத்திற்குள் முடித்திருப்பதாகச் சொன்னார்கள். அதற்காகவே பாராட்டலாம். ஆனால் படம், குறும்படமாகவும் அல்லாமல் முழு நீளத் திரைப்படமாகவும் அல்லாமல் சொதப்பியிருக்கிறது. ஒரு திரைப்படமாக கூடி வரவில்லை. Bipolar disorder -ஐ பற்றிப் படம் பேசுகிறது என்றார்கள். படத்தில் அதற்கான தடயங்கள் பெரிதாக இல்லை. ஊறுகாய் மாதிரி, இறுதிக் காட்சியில் டான்ஸ் ஆடி முடித்த ஒரு உளவியல் மருத்துவர் தஸ்புஸ்ஸென்று இந்த குறைபாட்டைப் பற்றி பேசி படத்தை முடித்து விடுகிறார். இந்தக் குறைபாட்டுடனேயே சாதனை புரிந்த உலகப் புகழ்பெற்ற சாதனையாளர்களின் பெயர்களோடு படம் முடிந்து விடுகிறது.

பைபோலார் அஒழுங்கில் இருப்பவர்கள், உணர்ச்சிகளின் ஊசலாட்டத்தில் உயர்வும் தாழ்வுமான மனநிலைகளில் இருப்பார்கள் என்ற சொல்லப்படுகிறது. படத்தின் தலைப்பு அதற்கு மிகப் பொருத்தமாக வைக்கப்பட்டிருக்கிறது. (சிந்து பைரவி படம் பார்க்கவில்லையெனில் இந்த ஆரோகண அவரோகண விஷயம் எனக்குத் தெரிந்திருக்காது).

நிர்மலா என்கிற நடுத்தரவயது குடும்பத்தலைவி காணாமற் போன செய்தியோடு படம் துவங்குகிறது. இடையில் ஒரு விபத்தும் காண்பிக்கப்படுகிறது. இந்த சமகால நிகழ்வுகளும் நிர்மலாவின் கடந்த கால நிகழ்வுகளும் நான் லீனியர் முறையில் சொல்லப்படுகிறது. (எடிட்டரின் பங்கு அபாரம்). பக்தியில் அதிக ஈடுபாடு கொண்டிருக்கிற நிர்மலாவிற்கு அடிக்கடி சாமி வருவதால் பாலுறவு தொடர்பான சங்கடங்களை சந்திக்கும் கணவன், இன்னொரு குடும்பத்தை அமைத்துக் கொள்கிறான். நிர்மலா தனது இரண்டு பிள்ளைகளோடு தனியாக வாழ்கிறாள். காய்கறி விற்கிறாள். திடீரென ஆவேசம் கொள்கிறார். அன்பாக இருக்கிறார். அடிக்கடி காணாமற் போகிறார். பிள்ளைகள் தேடி கூட்டிக் கொண்டு வருகிறார்கள்.

இப்படியாக காணாமற் போன ஒருமுறைதான் விபத்தில் சிக்குகிறார். இதுவரை டிவி சீரியல் போல மெலோடிராமாவாக சென்று கொண்டிருக்கும் திரைப்படம் பிறகு கேலிக்கூத்தாக ஆகி விடுகிறது. அகரீதியான குறைபாடு உள்ளவர்கள் உடல்ரீதியாக வலிமையாக, முரட்டுத்தனமாக இருப்பார்கள் என்பது தமிழ் சினிமா கட்டமைத்திருக்கும் பல பொய்யான க்ளிஷேக்களில் ஒன்று. (குணா படத்தை நினைவுகூரலாம்). பயங்கர வேகத்தில் வரும் கார் நிர்மலா மீது மோதுகிறது. ஆனால் அவரோ ஒன்றுமே நிகழாதது போல் எழுகிறார். நட்சத்திர ஹோட்டலில் டான்ஸ் ஆடுகிறார். மையததிற்கு தேவையேயில்லாத கிளைகள் விரிகின்றன. (அரசியல்வாதி பாத்திரம் எதற்கு?).

நிர்மலாவாக விஜி. சரிதாவின் நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை. இயக்குநர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நிர்மலாவின் பெண், பையன் .. என்று யதார்த்தமாக வரும் தமிழ் சினிமாவின் புதிய முகங்கள் ஆறுதலாக இருக்கிறது. கணவராக நடித்திருப்பவர் (அட்டகத்தியில் நாயகனுக்கு தந்தையாக வரும் நபர் - மாரிமுத்து) குறிப்பிடத்தகுந்த அளவிற்கு நடித்திருக்கிறார். சண்முகசுந்தரத்தின் அற்புதமான ஒளிப்பதிவு (வைட்-ஆங்கிள் காட்சிகள்) சிறப்பாக இருந்தாலும் வீண்.

இயக்குநர் பாலச்சந்தர் இந்தப் படத்தைப் பார்த்து விட்டு பாராட்டினதாக கேள்விப்பட்டேன். அவரின் 'அக்னிசாட்சி' நாடகத்தனங்களுடான திரைப்படம் என்றாலும் அதுவே ஒரு நல்ல முயற்சி. ஆரோகணம் அதில் நூறில் ஒரு பங்கைக் கூட எட்டவில்லை. ரொம்பவும் சுமாரான முயற்சி.

suresh kannan

3 comments:

ezhil said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்

குரங்குபெடல் said...

கணவராக நடித்திருப்பவர் (அட்டகத்தியில் நாயகனுக்கு தந்தையாக வரும் நபர் - மாரிமுத்து) குறிப்பிடத்தகுந்த அளவிற்கு நடித்திருக்கிறார்.


தவறு . .

அட்டகத்தி நடிகர் வேலு என்பவர் . . .


இவர் கண்ணும் கண்ணும் இயக்குனர் g.marimuthu

Anonymous said...

sir, u have been using a same photo in your blog's sidebar for many years....y don't u change it and put a new one?