Thursday, November 17, 2005

அது ஒரு கனாக்காலமும் தமிழ்ச் சினிமாவின் எதிர்காலமும்

தீபாவளி போன்ற பண்டிகையை, கட்டாயமாக புதுத் துணி எடுத்தோ, பட்டாசு வெடித்தோ, ஏதாவது ஒரு சினிமாவை பார்த்தோதான் கொண்டாட வேண்டும் என்கிற தமிழர்களின் சிந்தனை ஆழமாக வேறூன்றிவிட்ட நிலையில் தீபாவளிக்கு மறுநாள் அதிர்ஷ்டவசமாக விடுமுறையாக அமைந்துவிட்டபடியால் ஏதாவதொரு சினிமாவிற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென வேண்டுகோள் (அதாவது கட்டளை) என் குடும்பத்தினரால் என் முன்வைக்கப்பட்டது. சிவகாசி, மஜா போன்ற வெளிப்படையான வணிகப்படங்களை பார்ப்பதை விட கால் சராய்க்கு பட்டன் தைப்பதையே உன்னதமான காரியமாக நான் கருதியதால் இதற்கு மாற்றாக பாலுமகேந்திராவை நம்பி 'அது ஒரு கனாக்காலம்' என்கிற திரைக்காவியத்தை பார்க்க தீர்மானித்தேன்.

()

அப்பன் சொல் கேளாமை, பேருந்தில் பெண்களை கிண்டல் செய்து நடத்துனருடன் தகராறு, கவர்ச்சி நடிகையுடன் இரவு கனவுப்பாட்டு, கண்டவுடன் காதல் என்று இன்றைய இளைஞனின் எல்லாவித குணாதிசயங்களோடு இருக்கிற தனுஷ் சூழ்நிலை காரணமாக சிறைக்கு செல்ல நேருவதும் அதன் பின்நிகழ்வுகளும் கதை.

எந்தவித வணிக சமரசங்களுக்கும் இடம் தராமல் மிகச்சுவாரசியமாக சொல்லியிருக்க வேண்டிய இதை பாலுமகேந்திரா சொல்லியிருக்கிற விதம் எனக்கு மிகவும் ஏமாற்றமளித்தது. இந்த மாதிரியான சொதப்பலான, ஊர்கின்ற திரைக்கதையை தொகுக்க AVID எடிட்டிங் எழவு முறை எல்லாம் எதற்கு என்றே புரியவில்லை. (மிகுந்த அவசியமேற்படுகிற சமயங்களில் காட்சிகளின் நிகழ்வுகள் மற்றும் உணர்வுகளை நிதானமாக காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிற படங்களை இதனுடன் ஒப்பிடவில்லை). சன் டி.விக்கு டெலிபிலிமாக எடுக்க வேண்டியதை மனசு மாறி திரைப்படமாக எடுத்து விட்டாரோ என்று நினைக்குமளவிற்கு தூர்தர்ஷனின் 'செவ்வாய்க்கிழமை நாடக' வாடை படம் பூராவும் அடிக்கிறது. ·பிளாட் கதவை திறப்பதை அரை மணி நேரத்திற்கு ஒரு முறை காண்பிப்பதை வேறு வேறு மாதிரிகளில் சொல்ல முடியும் என்பதை புனே திரைப்படக் கல்லூரியில் படிக்கும் போது தங்கப்பதக்கம் வாங்கின பாலுமகேந்திராவிற்கு தெரியாமலா போயிருக்கும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சரி போகட்டும்! வயசாகி விட்டது போலிருக்கிறது. தனுஷ் சிறைப் பகுதியிலிருந்து தப்பிக்கும் அந்த ஆரம்பக் காட்சியை இதை விட சிறப்பாக 'நாய்புகழ்' இராமநாராயணணே எடுத்திருப்பார் போலிருக்கிறது.

என்றாலும் இதில் உபயோகப்படுத்தப் பட்டிருக்கிற நடிகர்கள் தங்கள் பங்கை திறம்பட செய்திருக்கிறார்கள் என்பது ஒரு ஆறுதல். 'காதல் கொண்டேனுக்கு' பிறகு தனுஷை யாரும் சரியாக உபயோகப்படுத்தின மாதிரி தெரியவில்லை. இந்தப் படத்தில் ஒரு விட்டேற்றியான இளைஞனை, காதல் என்றவுடன் மிகவும் சின்சியராகிவிடுகிற இளைஞனை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறார் தனுஷ். பல இடங்களில் அவருடைய முகபாவங்கள் எந்தவொரு சிறந்த நடிகருக்கும் சவால் விடுகிற படியிருக்கிறது. என்றாலும் அந்த பல்லி மாதிரியான உடம்பை வைத்துக் கொண்டு சிறைச்சாலை இன்ஸ்பெக்டரிடம் வலியப் போய் மறுபடியும் மறுபடியும் உதை வாங்கும் போது அனுதாபத்திற்கு பதில் எரிச்சலே வருகிறது. (இந்த மாதிரியான அபத்தமான காட்சியை சித்தரித்தற்கு இயக்குநர்தான் காரணம் என்றாலும் .... சரி சரி விடுங்க..)

ப்ரியா மணி மேக்கப் இல்லாமல் வந்து சற்றே பயமுறுத்தினாலும் எல்லா பாவங்களையும் எளிதாக சொல்லிவிடும் தன் கண்களை வைத்து சமாளித்திருக்கிறார். டெல்லி கணேஷீம் உஷாவும் ஒரு கண்டிப்பான அப்பாவையும் பாசமான அம்மாவையும் முறையே கண்முன் கொண்டு நிறுத்தியிருக்கிறார். மற்ற படங்களில் ஒரு மூலையில் வந்து விட்டு போகும் இவர்கள் பிரதான பாத்திரங்கள் தரப்படும் போது பின்னியெடுப்பதைப் பார்க்கும் போது நம் வணிக இயக்குநர்களை நினைத்தால் எரிச்சலாக இருக்கிறது. கலைராணி ... பாவம்... மனோரமாவின் இடத்தைப் பிடிக்க நாடக உலகிலிருந்து வந்திருக்க வேண்டியதில்லை.

இந்தப் படத்தின் ஒரே ஆறுதலான சிறப்பம்சமாக இளையராஜாவைச் சொல்வேன். சில குறிப்பிட்ட இயக்குநர்கள் படங்களுக்கு மட்டும் தன் ராஜதூக்கத்திலிருந்து விழித்தெழுந்து இசைக்கின்ற ராஜா இதில் நிறையவே ஓவர் டைம் பார்த்திருக்கிறார். 'அந்த நாள் ஞாபகம்' என்கிற (பாலுமகேந்திரா படங்களில் தவறாமல் இடம் பெறுகிற) Montage பாட்டும் 'காட்டு வழி போற தம்பி' என்கிற டைட்டில் பாட்டும், தனுஷின் அம்மா இறந்த பின் ஒலிக்கின்ற ராஜாவின் பேவரைட் அம்மா பாட்டும் சிறப்பாக வந்திருக்கிறது. பின்னணி இசையில், குறிப்பாக காவல் துறை சம்பந்தப்பட்ட காட்சிகளில் கலக்கியிருக்கின்ற ராஜாவின் இசைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பரிதாபமான காட்சியமைப்புகள் ஜீவனற்று தோன்றுகின்றன.

இயக்குநர் பாலுமகேந்திரா தோற்றுப் போயிருந்தாலும் நல்ல வேளையாக ஒளிப்பதிவாளர் பாலு இன்னும் உயிர்ப்போடிருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் பெரும்பாலான காட்சிகள் நிகழும் நாயகனின் வீட்டின் ஒளியமைப்பு மிக சிறப்பாக இருக்கிறது.

()

இத்துணை திறமையான கலைஞர்களின் துணையோடு மிகச் சிறப்பாக வந்திருக்க வேண்டிய படத்தை இத்தனை சொதப்பலாக்கினதற்கு முழுக்க காரணமாக பாலுமகேந்திராவைச் சொல்வேன். வணிக அம்சத்திற்காக செருகப்பட்ட தேஜாஸ்ரீயின் கனவு கவர்ச்சிப் பாட்டும் யதார்த்தமேயில்லாத சிறைக்கூடக் காட்சிகளும் (இத்தனை வசதியான சிறையை இதுவரை நான் பார்த்ததேயில்லை. தமிழ்ப்படங்களிலேயே சிறை சம்பந்தப்பட்ட காட்சிகளை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றது 'மகாநதி' மட்டுமே) அபத்தமான கிளைமாக்சும் இதை இயக்கியது பாலுமகேந்திராதானா என்று சந்தேகப்படும் நிலைக்கு நம்மை தள்ளுகிறது.

பாலுமகேந்திரா, பாரதிராஜா, பாலச்சந்தர் போன்ற சிறந்த திரைப்பட இயக்குநர்களுக்கு ஒரு நிலைக்கு பிறகு ஏன் சிறப்பாக இயங்க முடிவதில்லை? (இந்தக் கேள்வியை பொதுவாகவே அனைத்துத் துறையிலும் பெரும்பாலான கலைஞர்களின் மீது பொருத்திப் பார்க்கலாம்) சமீபத்திய அமுதசுரபியில் ஓவியர் தேனுகா பயன்படுத்தியிருக்கிற 'Intellectual Menopause' என்கிற வார்த்தைதான் நினைவுக்கு வருகிறது. தமிழ்ச்சினிமாவின் யதார்த்தப் படங்களின் பொற்காலமாக விளங்கிய 1980-க்களை கலைத்துக் கொண்டு வந்த 'சகலகலா வல்லவன்' போன்ற வணிக வெடிகுண்டுப் படங்களின் புகையிலிருந்து வெளிவர இயலாமல் இன்னமும் தமிழ்ச் சினிமா மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் பாலுவைப் போன்ற இயக்குநர்களும் ஏமாற்றமளிப்பதைப் பார்க்கும் போது இந்த சக்தி மிகுந்த ஊடகத்தின் எதிர்காலத்தை நினைத்து எனக்கு கவலையாக இருக்கிறது. இன்றைய தலைமுறையினருக்கு இப்போது ஓடிக் கொண்டிருக்கும் வணிகப்படங்கள்தான் சினிமா என்று அழுத்தமாக நம்பும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்களோ என்றும் தோன்றுகிறது.

அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம்பிறை, ரெட்டைவால் குருவி, வீடு, சந்தியாராகம், சதிலீலாவதி என்று எத்தனை சிறப்பான படங்கள்.

ஹீம்........... அது ஒரு கனாக்காலம்.

6 comments:

Muthu said...

நல்ல ரிவ்யூ, படமே பார்த்த மாதிரி இருந்தது. நீங்கள் சொன்ன பெரிய தலைகள் எல்லாம் past their prime...

ஒரு ஹாலிவுட் இயக்குநர் தன் கேரியர் முழுதும் முப்பது படம் எடுப்பாரா? சரக்கு அவ்ளோ தான் இருக்கும் ஒரு நார்மல் மூளைக்கு.

.நம்ப ஆளுங்க பாருங்க .நூறு படம் நூத்தம்பது படம்..எப்படிங்க சரக்கு இருக்கும்?
பாலச்சந்தர்லாம் பாருங்க இன்னும் இருக்கார் அநியாயம்

வசந்தன்(Vasanthan) said...

நல்ல பதிவு சுரேஸ்.

தனுஸ் சிறையில் அடிவாங்கும் காட்சியில், எனக்குப் பயமே வந்துவிட்டது.
ஒவ்வொரு முறையும் தனுஸ் எழும்பும்போது எங்கே வழமையான தமிழ்ச்சினிமாவைப்போல நாயகன் பறந்துபறந்து காவல்துறையைத் துவம்சம் செய்யப்போகிறானோ என்ற பயம்தான் அது. நல்லவேளை பாலு காப்பாற்றிவிட்டார். தனது உடம்புக்குரிய பாத்திரத்தை தனுஸ் செய்தது இப்படத்தில்தான். அட இந்த உடம்பை வைத்துக்கொண்டு மற்றப்படங்களில் அவராடிய ஆட்டங்களை நினைத்துப் பார்த்ததாலேயே பாலு ஒருபடி மேலே சென்றுவிட்டார்.

படத்தில் அம்மா அப்பா எல்லாரும் யதார்த்தம். வழமையாக வீட்டிற்கூட பட்டுப்புடவை கட்டி நகைக்கடையாக 'மகாலட்சுமியாக" மினுக்கிக்கொண்டு வரும் அம்மா இல்லை. எங்களின் வழமையான, கறுத்த அம்மா.
உங்களுக்கு மேக்கப் இல்லாத பிரியாமணி ஏமாற்றமென்றது எனக்கு ஏமாற்றமே.
நீங்கள் வழமையான நாயகியைத்தான் எதிர்பார்த்திருக்கிறீர்கள் போல.

கதையை, முடிவை விட்டுவிட்டுப்பார்த்தால் படத்தில் ரசிப்பதற்கு எனக்கு நிறைய இருந்தன.

பினாத்தல் சுரேஷ் said...

தமிழ் சினிமாவை பாதுகாக்க ஏன் சில இயக்குநர்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டும்? பெயர்களை விடுத்தும் எதிர்பாராத சில ஆச்சரியங்கள் (காதல் போல) காப்பாற்றும் -- கவலைப்படாதீர்கள்.

எப்படிப்பட்ட கலைஞனுக்கும், முதலில் கிடைக்கும் வரவேற்பு, சில நாட்களுக்குப் பிறகு அவன் படைப்பதுதான் கலை என்ற ஆணவத்துக்கு காரணமாகிவிடுகிறது. பாலுவும் இதற்குத்தான் பலியாகிவிட்டார்.

Anonymous said...

dear sir seekiram varuven
M.S.Boobathi

Anonymous said...

சுரேஷ் கண்ணன்,

நல்ல அலசல்.

ராஜதூக்கம், Intellectual Menopause போன்ற வார்த்தைகளைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்திய விதம் குறித்து அசந்து போனேன். மிக்க அருமை.

படத்தைப் பார்த்தபோது சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது.

வசந்தனின் கருத்துக்களுடன் முழுமையாக ஒத்துப்போகிறேன்.

டெல்லிகணேஷின் 'ஆ சொல்லு!!' போன்ற கிண்டல்கள் ரசிக்கத்தகுந்தவை.

நன்றி
கமல்
www.varalaaru.com

தருமி said...

இதுபோன்ற நல்ல திரைப்பட விமர்சனங்களை எப்படி இதுவரை பார்க்கத் தவறினேன்..?