Sunday, May 24, 2020

My Little Bride (2004) -'சின்னஞ்சிறு மணமகள்'




இந்த தென்கொரிய நகைச்சுவை திரைப்படத்தில் கதை என்று பெரிதாக ஏதுமில்லை.   'குஷி' திரைப்படத்தின் துவக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா அசரிரீயாக வந்து 'இதுதான் கதை' என்று ஒன்லைன் சொல்லி விட்டுப் போவார் அல்லவா, அது மாதிரியான சிக்கனமான கதை. ஆனால் குஷியைப் போலவே  ட்ரீட்மெண்ட்டில் அட்டகாசப்படுத்தியிருக்கிறார்கள். தென்கொரிய திரைவரலாற்றில் அதிகம் வசூலாகி சாதனை படைத்த திரைப்படங்களில் இதுவுமொன்று.

***

Sang-min இருபதுகளில் இருக்கும் இளைஞன். பார்க்கும் பெண்களையெல்லாம் 'ஜொள்'வது அவனுடைய முக்கியமான பொழுதுபோக்கு. உடம்பு சரியில்லாத தாத்தாவை பார்ப்பதற்காக ஊருக்குத் திரும்பும் அவனுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது. அவனை உட்காரவைத்து சாவகாசமாக தலையில் குண்டு போடும் தாத்தா சொல்வது இதுதான். "நீ Bo-eun-ஐ திருமணம் செய்து கொள்ள வேண்டும். கொரியப் போர் நடந்த போது இரண்டு குடும்பத்திற்குள்ளும் திருமண சம்பந்தம் நடக்கும் என்று நான் வாக்கு தந்திருக்கிறேன்"


Bo-eun-ம் இதைக் கேட்டு பயங்கர அதிர்ச்சியடைகிறாள்.  "தாத்தா, என்ன விளையாடுகிறீர்களா?  எனக்கு 16 வயதுதான் ஆகிறது. நான் படிக்க வேண்டியிருக்கிறது. அதிலும் போயும் போயும்...இவனைப் போய் திருமணமா?.. போ.. தாத்தா" என்று கோபத்துடன் கிளம்பி விடுகிறாள். இருவரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாக விளையாடி வளர்ந்தவர்கள் என்பதால் அவர்களிடம் அண்ணன்-தங்கை என்பதான மனோபாவமே படிந்திருக்கிறது. இருவருக்குமே இந்த திருமணத்தில் விருப்பமில்லை.

ஆனால் தாத்தா விடுவதாயில்லை. உயிருக்கு ஆபத்தாக மருத்துவமனையில் இருக்கிறேன் என்று நாடகமெல்லாம் ஆடி திருமணத்தை கட்டாயப்படுத்துகிறார். Bo-eun வேறுவழியின்றி கண்ணீருடன் திருமணத்திற்கு சம்மதிக்கிறாள்.

***


Sang-min-க்கும் இந்த திருமணத்தில் விருப்பமேயில்லைதான் என்றாலும் வேறு வழியில்லாத சூழலில் Bo-eun மீது மெலிதான காதல் கிளம்புகிறது. ஆவலுடன் தேன்நிலவுப் பயணத்திற்கு கிளம்புகிறான். ஆனால் விமானநிலையத்தில் அவனை ஏமாற்றி விட்டு Bo-eun துயரத்துடன் தன் சொந்த ஊரில் சுற்றிக் கொண்டிருக்கிறாள். இரண்டு பேரும் ஊருக்குச் சென்றிருக்கிறார்கள் என்றே எல்லோரும் நினைக்கிறார்கள்.

Bo-eun எங்கெங்கோ சுற்றி விட்டு நடுஇரவில் வீட்டின் முன் நின்று கொண்டிருக்கிறாள். உலக வரலாற்றிலேயே தனியாக ஹனிமூன் கொண்டாடிய Sang-min சரியாக அந்த நேரத்தில் வீடு திரும்புகிறான். சட்டென்று அவளுடைய உடையை மாற்றி விட்டு உள்ளே நுழைகிறார்கள்.  இரண்டு பேர்களின் பெற்றோர்களும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள்.

தனிக்குடித்தனம் துவங்குகிறது.  வெளிப்பார்வைக்கு அவர்கள் தம்பதியர்களாக இருந்தாலும் வீட்டினுள் எலியும் பூனையுமாக இருக்கிறார்கள். தனக்கு திருமணம் ஆன செய்தி தெரிந்தால் பள்ளியில் கிண்டலடித்து தீர்த்து விடுவார்களே என்று தன் திருமண விவரத்தை எவருக்கும் தெரியாமல் ரகசியம் காக்கிறாள் Bo-eun.


***

ஃபேஸ்பால் விளையாட்டு வீரனாக இருக்கும் சக மாணவன் ஒருவன் மீது நேசம் கொள்கிறாள் Bo-eun.  உண்மையில் அவளுக்கு தனக்கு நடந்த திருமணம் என்பது ஒரு விளையாட்டு போலவே தோன்றுகிறது. Sang-min தன் கணவன் என்றே அவளுக்குத் தோன்றுவதில்லை. எனவே தன் வயதிற்கு இணையான மாணவன் அருகில் வருவதே அவளுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கிறது. ஃபேஸ்பாலுக்காக ஏங்கும் மாணவிகள் Bo-eun-ஐ பொறாமையுடன் பார்க்கிறாள். "ஏய் உனக்கென்னடி.. ஹஸ்பண்டும் இருக்காரு.. பாய் பிரண்டும் இருக்காரு. எனக்கு யாருமே இல்லை" என்று நொந்து போகிறாள் இவளுடைய தோழி.


Bo-eun-ன்  அன்பைப் பெறுவதற்காக என்னென்னவோ முயற்சிகளில் ஈடுபடுகிறான் Sang-min. எல்லாமே தோல்வியில் முடிகிறது. இதற்கிடையில் பயிற்சியொன்றிற்காக  Bo-eun பள்ளிக்கே ஆசியரராக வருகிறான் Sang-min. அவளுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.


Sang-min திருமணம் ஆகாதவன் என நினைத்துக் கொண்டு அங்குள்ள வயதான ஆசிரியை ஒருத்தி இவனை காதலுடன் துரத்துகிறாள். இது சார்ந்த குறும்பான நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


ஒரே வீட்டில் எலியும் பூனையுமாக இருந்தாலும் Sang-min-ன் நல்ல குணங்களையும் அன்பையும் மெல்ல மெல்ல புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறாள் Bo-eun.

***


வயதான ஆசிரியைக்கு உண்மை தெரிந்து போய் Bo-eu-ஐ மறைமுகமாக தண்டிப்பதற்காக, பள்ளி ஆண்டுவிழா ஏற்பாட்டை முன்னிட்டு ஒரு பெரிய சுவரை அழகுபடுத்தச் சொல்கிறாள்.  ஆனால் Bo-eun அதை தனியாளாகச் செய்து முடிக்க வேண்டும். இரவெல்லாம் உழைக்கிறாள் Bo-eun. அவளுடைய தோழியும் உதவுகிறாள். என்றாலும் அவர்கள் நினைத்தது போல் அழகாகவில்லை.


இந்த விஷயத்தை அறியும் Sang-min தன் நண்பர்களுடன் சென்று சுவரின் ஓவியத்தை ஒழுங்குபடுத்துகிறான். சிறுவயதில் தானும் Bo-eun-ம் விளையாடிய ஊஞ்சல் விளையாட்டை அழகான ஓவியமாக  வரைந்து வைக்கிறான். இதைப் பார்க்கும் Bo-eun நெகிழ்ந்து கண்ணீர் விடுகிறாள்.

ஆண்டு விழா கொண்டாட்ட நாளன்று Sang-min-ஐ உரையாடச் சொல்கிறார்கள். அப்போது குறுக்கிடும் மாணவி ஒருத்தி இவர்களின் திருமண விஷயத்தை பொது மேடையில் போட்டு உடைத்து வீடுகிறாள்.

"Bo-eun மீது எந்த தவறுமில்லை. பெரியவர்களின் கட்டாயத்தினால் அவள் என்னை திருமணம் செய்து கொண்டாள். அவளுக்குப் பிடித்தமானவர்கள் இந்தப் பள்ளியிலேயே கூட இருக்கலாம். தயவுசெய்து அவளைக் கிண்டல் செய்து அவள் படிப்பை பாழடிக்காதீர்கள்" என்று உருக்கமாக வேண்டுகிறான்.

இதைப் பார்த்து கண்ணீர் விடும் Bo-eun ஓடி வந்து அவனை அணைத்துக் கொள்ள ஒட்டுமொத்த பள்ளியே கைதட்டி மகிழ்கிறது.

***


Bo-eun -ஆக Moon Geun-young அற்புதமாக நடித்திருக்கிறார். இவருடைய குறும்பான முகபாவங்கள், உடல்மொழி அனைத்தும் நம்ம ஊர் 'ஜோதிகா'வை நினைவுப்படுத்துகிறது. Sang-min- ஆக நடித்திருக்கும் Kim Rae-won-ன் நடிப்பும் பிரமாதம். ஏற்கெனவே சொன்னபடி இதன் ரகளையான திரைக்கதைதான் இத்திரைப்படத்தின் பெரிய பலம். My Wife Is 18 என்கிற ஹாங்காங் படத்தின் ரீமேக் இது. இயக்கம் -  Kim Ho-jun.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

No comments: