Thursday, May 21, 2020

The Fencer (2015) - 'வாள் முனையில் நிற்கும் அன்பு'





மாணவர்களுக்காக தன் உயிரையே பணயம் வைக்கத் துணியும் ஓர் ஆசிரியரைப் பற்றிய உணர்வுபூர்வமான, பின்லாந்து திரைப்படம் இது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

**

ரஷ்ய நகரான லெனின்கிராடிலிருந்து எஸ்தோனியாவிலுள்ள ஒரு சிறிய நகரத்திற்கு தனது பெயர் அடையாளத்தை மாற்றிக் கொண்டு செல்கிறான் Endel Nelis, அதற்குப் பின் துயரமான வரலாற்றுக் காரணம் இருக்கிறது.

இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்து கொண்டிருந்த சமயம். எஸ்தோனியா, ஜெர்மனியின் ஆக்ரமிப்பில் இருந்த போது நாஜி படையால் அங்கிருந்த இளைஞர்கள் கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டார்கள். அதன் பிறகு எஸ்தோனியாவை ரஷ்யா கைப்பற்றிய பிறகு ஜெர்மானிய ராணுவத்தில் இணைந்தவர்களையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து கைது செய்து சைபீரிய சிறைக்கு அனுப்பினார்கள். அவர்களின் கதி என்னவானது என்பது அதன் பிறகு எவருக்கும் தெரியாது. கட்டாயமாக ராணுவத்தில் இணைக்கப்பட்ட அப்பாவிகள் பழிவாங்கப்பட்டது வரலாற்றுக் கொடுமை.

**

Endel Nelis அவ்வாறான ஒரு ராணுவ வீரன். எனவே ரகசிய போலீஸ் கண்களில் படாமல் மறைந்து வாழ்வதற்காக இந்த ஊருக்கு வந்திருக்கிறான். அங்குள்ள பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிக்குச் சேருகிறான். அங்கு போதிய அளவில் விளையாட்டு உபகரணங்கள் இருப்பதில்லை. சிடுமூஞ்சி தலைமையாசிரியர் ‘இருப்பதை வைத்து ஏதாவது செய்’ என்று கூறி விடுகிறார்.

வாள் சண்டையில் திறமையுள்ள Endel Nelis தனிமையில் பயிற்சி செய்து கொண்டிருப்பதை ஓர் இளம் மாணவி பார்த்து விட்டு, ‘எங்களுக்கும் கற்றுத் தருவீர்களா?” என்று கேட்கிறாள். முதலில் மறுக்கும் அவன் பிறகு ஒப்புக் கொள்கிறான். அங்குள்ள பெரும்பாலான மாணவர்கள் இதைக் கற்க ஆர்வமாக முன்வருகிறார்கள்.

மெல்ல மெல்ல அவர்களுக்கு விளையாட்டு நுணுக்கங்களை பயிற்சியளிக்கிறான். அங்கு பணிபுரியும் ஓர் இளம் ஆசிரியை இந்த விஷயத்தைப் பாராட்டுகிறாள். ஆனால் தலைமையாசிரியருக்கு இது பிடிப்பதில்லை. பெற்றோர்களின் மூலமாக தடை செய்ய நினைக்கிறார். அதற்கான கூட்டத்தில் சில தயக்கங்களுக்குப் பின் பெற்றோர்களின் ஆதரவு கூடவே அவரால் எதுவும் செய்ய முடிவதில்லை.

**

இவனுடைய பின்னணி பற்றி சந்தேகம் வரும் தலைமையாசிரியர், தன்னுடைய உதவியாளரை நகரத்திற்கு அனுப்பி விசாரிக்கச் சொல்கிறார். இதற்கிடையில் அந்த ஊருக்கு Endel Nelis-ன் நண்பன் வருகிறான். “நீ முதலில் இங்கிருந்து கிளம்பு. ரகசிய போலீஸ் உன்னை தீவிரமாக தேடுகிறது. இனியும் ஒரே இடத்தில் தங்கினால் ஆபத்து” என்று எச்சரிக்கிறான்.

அவனுடன் கிளம்பி விடும் Endel Nelis ரயில் நிலையத்தில் தயங்கி, மாணவர்களைப் பற்றி யோசித்துப் பார்க்கிறான். மிக ஆர்வத்துடன் வாள் சண்டை கற்றுக் கொள்ளும் அவர்களின் முகங்கள் அவனுக்குள் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ‘ஆனது ஆகட்டும்’ என்று செல்லாமல் திரும்பி விடுகிறான்.

**

ஒரு நாள் மாணவர்கள் பத்திரிகை விளம்பரத்தைக் கொண்டு வருகிறார்கள். தலைநகர் லெனின்கிராடில் ‘வாள் சண்டை போட்டி’ நடப்பது குறித்தான விளம்பரம். மாணவர்கள் ஆர்வமாக ‘போகலாம்’ என்கிறார்கள். Endel Nelis தயங்குகிறான். நகரத்திற்கு சென்றால் மாட்டிக் கொள்வான். எனவே ‘நீங்கள் இன்னமும் போதிய பயிற்சி பெறவில்லை. அங்கு போட்டி கடுமையாக இருக்கும். எனவே அடுத்த வருடம் பார்க்கலாம்’ என்கிறான். மாணவர்கள் கடுமையான ஏமாற்றத்திற்கு உள்ளாகிறார்கள்.

அவர்களின் ஏமாற்ற முகங்களை சகித்துக் கொள்ள முடியாத Endel Nelis, தனக்கு என்ன வேண்டுமானாலும் ஆகட்டும் என்று நினைத்து ‘போகலாம்’ என்கிறான்.. மாணவர்கள் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். சிறந்த நான்கு மாணவர்களை தேர்வு செய்து நகரத்திற்கு அழைத்துச் செல்கிறான்.

**

போட்டி நடக்குமிடத்திற்கு சென்ற பிறகுதான் ‘நவீன தடுப்பு உடை’ கட்டாயம் என்று தெரியவருகிறது. இவர்களிடம் அது இல்லை. அங்கிருக்கும் இதர குழுக்களிடம் கேட்டுப் பார்க்கிறான். எவரும் தருவதாய் இல்லை. இவனின் வேண்டுகோளைப் பார்த்து விட்டு ஒரு குழுவின் கோச், தாமாக முன்வந்து அந்த உடைகளை தருகிறாள்.

போட்டி ஆரம்பமாகிறது. பார்வையாளர்களின் கூட்டத்தில் ராணுவ வீரர்களும் நின்றிருக்கிறார்கள். Endel Nelis-க்கு சந்தேகம் வருகிறது.  தலைமையாசிரியர் இவனைக் காட்டிக் கொடுத்து விடுகிறார். எனவே அவனை கைது செய்து அழைத்துச் செல்ல போலீஸ் காத்துக் கொண்டிருக்கிறது. இவனுடைய மாணவர்கள் புதிய சூழலில் முதலில் தடுமாறினாலும் இவன் தரும் ஊக்கத்தினால் மெல்ல மெல்ல வெற்றியை நோக்கி நகர்கிறார்கள்.

போட்டியின் இடையில் அங்கிருந்து தப்பிச் சென்று விடலாமா என்று Endel Nelis யோசிக்கிறான். அதற்காக முயன்று மறுபடியும் மாணவர்களை நினைத்து தன் எண்ணத்தை மாற்றிக் கொள்கிறான். வெற்றிப் புள்ளிகளை நோக்கி நகரும் மாணவர்கள், இவனைக் காணாமல் தடுமாறுகிறார்கள். திரும்பி வரும் இவனை, ஒரு சிறுமி ‘இங்கிருந்து நகரக் கூடாது’ என்று வாக்கு தரச் சொல்கிறாள்.

**

இவனுடைய குழு இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுகிறது. பரபரப்பாக நிகழும் போட்டியில் பெற்றி பெறுகிறது. மாணவர்கள் வெற்றி மகிழ்ச்சியில் இருக்கும் போது, அவர்களின் ஆசிரியரை ராணுவம் கைது செய்து கொண்டு போவதை திகைப்புடன் பார்க்கிறார்கள்.

1953-ல் ரஷ்ய அதிபர் ஸ்டாலின் மறைவதையொட்டி நிறைய சிறைக் கைதிகள் விடுவிக்கப்படுகிறார்கள். Endel Nelis விடுதலையாகிறான். மறுபடியும் அந்த ஊருக்கு திரும்பி வருகிறான். தன் காதலியுடன் அவன் இணைந்து செல்வதை மாணவர்கள் மகிழ்ச்சியும் பரவசமுமாக பார்க்கிறார்கள். Endel Nelis துவக்கிய வாள் சண்டை பயிற்சி நிலையம் இன்னமும் இயங்கும் தகவலுடன் படம் நிறைகிறது.

அற்புதமான ஒளிப்பதிவும் பின்னணி இசையும் கொண்ட திரைப்படம்.  Klaus Härö இயக்கியிருக்கிறார். சிறுமியின் அபாரமான நடிப்பிற்காகவே இந்தப் படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும்.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

No comments: