Thursday, May 14, 2020

Big Bad Wolves (2013) - 'அடிச்சுக் கூட கேப்பாங்க, சொல்லிடாதீங்க'





ஒரு திரைப்படத்தின் கடைசி ஷாட் வரை அதன் சஸ்பென்ஸை உடைக்காமல் காப்பாற்ற முடியுமா? 'ஆம்' என்கிறது இதன் அபாரமான திரைக்கதை.

**

ஒரு சிறுமி காணாமற் போனது தொடர்பாக நடுத்தர வயது ஆசாமி ஒருவரை காவல்துறை அதிகாரிகள் பயங்கரமாக அடித்து விசாரிக்கிறார்கள். அவர் பரிதாபமாக மறுக்கிறார். இந்தக் காட்சிகளை ஒரு சிறுவன்  இணையத்தில் போட்டு விட காவல்துறையின் மீது எதிர்ப்பு வருகிறது. அடித்த போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். சந்தேக ஆசாமி வெளியே விடப்படுகிறார். அவர் ஒரு பள்ளி ஆசிரியர். பார்க்க அப்பாவியாக இருக்கிறார்.

இதற்கிடையில் காணாமற் போன சிறுமியின் தலையில்லா சடலம் கொடூரமான நிலைமையில் கிடைக்கிறது. சிறுமியின் தந்தை கதறுகிறார். சந்தேக ஆசாமி எத்தனை அடி வாங்கியும் குற்றத்தை மறுத்தாலும் அவன்தான் குற்றவாளி என்று சஸ்பெண்ட் ஆன போலீஸ்காரருக்கு ஏனோ தோன்றுகிறது.  எனவே ரகசியமாக பின்தொடர்கிறார்.

இதற்கிடையில் இன்னொருவரும் சந்தேக ஆசாமியை பின்தொடர்கிறார். அவர் கொல்லப்பட்ட சிறுமியின் தந்தை. சந்தேக ஆசாமியை கடத்திச் சென்று பிணத்தின் தலை எங்கே  என்று  விசாரித்து  பின்பு அவனை பழி வாங்க வேண்டும் என்பது அவரின் நோக்கம். இதற்காக ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு பழைய வீட்டை விலைக்கு வாங்கி எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைக்கிறார்.


**

ஒரு நாள் சந்தேக ஆசாமியை போலீஸ்காரர் கடத்திக் கொண்டு போய் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில்  குழியை தோண்டச் சொல்கிறார். அவரை மிரட்டி உண்மையைக் கறப்பது அவருடைய நோக்கம். ஆனால் இவர்கள் இருவரையுமே பின்தொடரும் சிறுமியின் தந்தை, இருவரையும் தாக்கி  தன் ரகசிய இருப்பிடத்திற்கு கொண்டு செல்கிறார்.

அங்கு போலீஸ்காரரிடம் ஓர் ஒப்பந்தம் போடுகிறார். 'இவன் என் மகளைக் கடத்தி கற்பழித்துக் கொன்றவன். மனநோயாளி. அவனை எப்படியாவது உண்மையை ஒப்புக் கொள்ளச் செய்ய வேண்டும்.  அவனை குரூரமாக தண்டிக்கப் போகிறேன். என்னுடன் ஒத்துழைத்தால் உன்னை உயிரோடு விடுவேன். இல்லையென்றால் உனக்கும் சமாதிதான்".

சந்தேக ஆசாமியின் மீது ஏற்கெனவே கடுப்பில் இருக்கும் போலீஸ்காரர் இதற்கு ஒப்புக் கொள்கிறார்.

***

விசாரணை துவங்குகிறது. சித்திரவதைகள் அதிபயங்கரமாக இருக்கின்றன.'ஐயா.. நம்புங்கள் நான் செய்யவில்லை. எனக்கும் கூட ஒரு மகள் இருக்கிறாள்' என்று சந்தேக ஆசாமி கதறிக் கொண்டேயிருக்கிறார். ஒரு கட்டத்தில் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத போலீஸ்காரர் சிறுமியின் தந்தையை தடுக்க முயல அவரையுமம் கட்டிப் போட்டு  தன் குரூரமான விசாரிப்பு தொடர்கிறார் சிறுமியின் தந்தை.

பின்பு மயக்க மருந்து கலந்த ஒரு  கேக்கை ரசனையுடன் தயார் செய்கிறார். ஏனெனில் இதே போல கேக்குகளை சிறுமிகளுக்குத் தந்து அவர்கள் மயக்கமடைந்தவுடன் கடத்தி அவர்களைக் கொடூரமாக கொல்வது குற்றவாளியின் வழக்கம் என்பதால் அவனையும் இதே போல கொல்ல வேண்டும் என்பது  திட்டம்.

இதற்கிடையே சித்திரவதை செய்யும் ஆசாமியின் தந்தை அந்த இடத்திற்கு வரப்போவதாக தகவல். 'என்னடா ரோதனை' என்று நினைத்தாலும்  மரியாதையுடன் வரவேற்கிறார். கீழ்தளத்தில் முனகல் சத்தம் கேட்டு கிழவர் என்னவென்று விசாரித்தால் மகன் ஒரு மாதிரியாக முழிக்கிறான்.  "என்னடா இது.. ரெண்டு பேரை கொலை செய்யற அளவிற்கு போயிட்டியா?

கிழவரை அமர வைத்து மகன் விளக்கமாக சொல்கிறார். "இவன்தான் என் மகளை, அதாவது உங்கள் பேத்தியைக் குரூரமாக கொன்றவன்"

அந்த இடத்திற்கு கிழவர் வந்த பிறகாவது  அந்த அப்பாவிக்கு விடுதலை கிடைக்குமா என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கும் போதே சூடான ஆலோசனையை மகனுக்கு தருகிறார். "ஏண்டா.. இவ்ள ஆயுதம் உபயோகிச்சு விசாரிச்சியே.. அவனை நெருப்பு வெச்சு சுட்டுப் பார்த்தியா". மகன் விழிக்க 'என்னடா உனக்கு பயிற்சியே பத்தலையே.. இப்ப நான் விசாரிக்கிறேன் பாரு" என்று கீழே கிளம்புகிறார்.

***

இவர்கள் மேலே பேசிக் கொண்டிருக்கும் போது  போலீஸ்காரர் சித்திரவதையால் குதறப்பட்டிருக்கும் சந்தேக ஆசாமிக்கு ஒரு ஐடியா தருகிறார். "யோவ்.. நான் சொல்றத கேளு. உண்மையை ஒப்புக்கறா மாதிரி நடி. அப்பதான் கொஞ்சம் டைம் கிடைக்கும்"

கிழவர் நெருப்புடன் வந்து சந்தேக ஆசாமியின் மார்பில் பற்ற வைக்கிறார்.   "உண்மையைச் சொல்லிடறேன். உங்க பொண்ணு தலையை  இந்த இடத்துல புதைச்சு வெச்சிருக்கேன்" என்று அலறுகிறார் சந்தேக ஆசாமி.

 "அப்பா!..இவங்க ரெண்டு பேரையும் பார்த்துக்கங்க" என்று சிறுமியின் தந்தை கிளம்ப, பசியெடுத்த கிழவர் அங்கு ஏதாவது சாப்பிட இருக்கிறதா என்று பார்த்து மயக்கமருந்து கலந்த கேக்கை சாப்பிட்டு பெருச்சாளி மாதிரி பொத்தென்று விழுகிறார்.

இப்போது அங்கு போலீஸ்காரரும் சந்தேக ஆசாமியும் மட்டுமே. "கடைசியா கேட்கறேன். இப்பவாவது உண்மையை சொல்லு" என்று போலீஸ்காரர் கேட்க, சந்தேக ஆசாமி "நான் நிரபராதிங்க" என்று மறுக்கிறார்.

போலீஸ்காரர் மட்டும் கிளம்புகிறார். வழியில் தென்படும் ஒரு நபரிடம் மொபைல் போனை இரவல் வாங்கி பேச, வீட்டிலிருந்து மனைவி அலறல். "என்னங்க.. நம்ம பொண்ணை காணோம்"

**

போலீஸ்காரருக்கு சந்தேகம் வந்து  மறுபடியும் விசாரணைக் களத்திற்கு திரும்பி ஓட அங்கு சிறுமியின் தந்தை அப்போதுதான் சுடச்சுட சந்தேக ஆசாமியின் கழுத்தை அறுத்துக் கொண்டிருக்கிறார்.

படத்தின் இறுதிக் காட்சி.

சந்தேக ஆசாமியின் வீட்டை வேறு ஒரு போலீஸ்காரர் சோதனையிட்டு "இங்க சந்தேகப்படும் படி எதுவும் இல்லைங்க சார்" என்று மேலிடத்திற்கு சொல்லி விட்டு கிளம்புகிறார்.

காமிரா அடுத்திருக்கும் ஒரு ரகசிய அறைக்கு நகர ஒரு சிறுமியின் பிணம் தென்படுகிறது. அடப்பாவி, கல்லுளி மங்கா!


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

No comments: