Saturday, May 09, 2020

Mucize (2015) - துருக்கியில் ஒரு சப்பாணி






கிராமப்புற மக்கள், பழங்குடியினர் போன்றோர்களின் மீது நகர்ப்புற மக்களுக்கு 'படிக்காதவர்கள்' 'முரட்டுத்தனமானவர்கள்' 'நாகரிகமில்லாதவர்கள்' என்பது போன்ற முன்தீர்மான எண்ணமும் ஒவ்வாமையும் உள்ளது. ஆனால் அவற்றை விலக்கி அவர்களிடம் நெருங்கிப் பழகினால் அவர்கள் நகரத்து மனிதர்களை விடவும் எத்தனை உணர்வுபூர்வமானவர்கள் என்பது புரியும். அந்த வகையில் உருவான மிக அற்புதமான துருக்கி நாட்டுத் திரைப்படம் இது. நம்ம ஊர் '16 வயதினிலே' சப்பாணி கமல் மாதிரி இதில்  ஒரு காரெக்டர்.

1960-ம் வருடம். நகரத்திலிருந்து ஒரு சிறிய கிராமத்திற்கு மாற்றலாகிறார் ஓர் ஆசிரியர். 'தண்ணியில்லா காட்டுக்கெல்லாம் வந்து என் புள்ளைங்களோட நான் அவதிப்பட முடியாது. அங்க வேற கொள்ளைக்காரங்கல்லாம் இருக்காங்களாம்' என்று மனைவி கடுப்புடன் புலம்ப தான் மட்டும் கிளம்புகிறார். மலையையும் ஆற்றையும் சிரமத்துடன் தாண்டி அந்தக் கிராமத்தை அடைந்தால் நீட்டிய துப்பாக்கியுடன் சிலர் வரவேற்கின்றனர். ஊர்ப்பெரியவர் அவர்களை விலக்கி விட்டு 'யாரப்பா நீ?" என்று விசாரிக்கிறார். வந்தவர் ஆசிரியா் என்பதை அறிந்தவுடன் அனைவரும் ஆச்சரியம் அடைகின்றனர். ஏனெனில் அங்கு பள்ளிக்கூடம் என்பதே கிடையாது. 'என்னப்பா இது?' என்று அதிகாரியிடம் விசாரித்தால் 'இப்ப ஏற்கெனவே நிறைய பிரச்சினை இருக்கு. இப்பத்திக்கு ஸ்கூல்லாம் கட்ட முடியாது' என்று கைவிரித்து விடுகிறார்.

வேறு வழியின்றி ஊர் திரும்ப முடிவெடுக்கும் ஆசிரியருக்கு, கிராமத்தில் தன்னை நோக்கி மகிழ்ச்சியாக வந்த பிள்ளைகளை நினைத்து வருத்தமாக இருக்கிறது. அவர் திரும்பிப் போவதை எண்ணி ஊர்ப்பெரியவரும் கண்ணீர் வடிக்கிறார். எனவே உணர்வுபூர்வமாக ஒரு முடிவெடுக்கும் ஆசிரியர் கூடவே ஒரு சதித்திட்டத்தையும் நிகழ்த்துகிறார். "என்னைக் கொள்ளைக்காரங்க கடத்தி வெச்சிருக்காங்க. உடனே பணம் அனுப்பினாதான் நான் பிழைப்பேன்' என்று மனைவிக்கு உரத்த குரலில் ஒரு ட்ரெங்க்கால். வந்த பணத்தில் பள்ளிக்கூட கட்டிடம் கட்ட முடிவு செய்கிறார். 'இப்படியும் ஒரு வெள்ளந்தியான ஆளா?" என்று ஊர்க்காரர்கள் கண்ணீர் மல்குகிறார்கள். கட்டிடம்  கட்ட ஊரே ஒன்று  திரள்கிறது. கொள்ளைக்காரர்கள் என்று அறியப்பட்டவர்களும் வந்து உதவி செய்கின்றனர். பள்ளிக்கூடம் தயாராகி விடுகிறது.

***

அந்தக் கிராமத்தில் கை,கால்கள் முடங்கிய வாய் இழுத்து கோணியிருக்கும் உடற்குறைபாட்டுடன் ஓர் இளைஞன் இருக்கிறான். பெயர் ஆஸிஜ்.  ஊர்ப்பெரியவரின் கடைசி மகன் அவன். அவன் கூடவே ஒரு குதிரையும் இணைபிரியாமல் சுற்றுகிறது. பார்க்க பைத்தியம் போல் இருக்கும் அவனை ஊரிலுள்ள சிறுவர்கள் அடித்து விளையாடுகிறார்கள். ஆசிரியர் அவன் மீது  அனுதாபம் கொள்கிறார். அவனையும் பள்ளிக்குள் அழைத்து எழுதக் கற்றுத்தருகிறார். அவரைக் கண்டு முதலில் மிரளும் அவன் பின்பு மெல்ல அவருடன் பழகத் துவங்குகிறான். மெல்ல மெல்ல வரையக் கற்றுக் கொள்கிறான். ஆசிரியரின் பண்பை நினைத்து எல்லோருமே நெகிழ்கிறார்கள்.

கொலை முயற்சியிலிருந்து ஒருவரை ஊர்ப்பெரியவர் காப்பாற்றுகிறார். 'என் மகளை உங்கள் பையனுக்கு திருமணம் செய்து வைக்கிறேன்' என்று வாக்குறுதி தருகிறார் அந்தப் பெரியவர். 'என் பையன் உடற்குறையுள்ளவன், யோசித்துச் சொல்லுங்கள்' என்கிறார் பெரியவர். 'நான் வாக்கு தந்து விட்டேன்' என்கிறார் அவர். ஆஸிஜ்-க்கு திருமணம் நடைபெறுகிறது. கை, கால் முடங்கியிருக்கும் மாப்பிள்ளையைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறாள் மணப்பெண். இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஆஸிஜ்ஜின் இரண்டு மூத்த சகோதரர்களுமே அழகான பெண்தான் மனைவியாக வர வேண்டும் என கனவு காண்கிறார்கள். ஆனால்  அது நிகழ்வதில்லை. ஆனால் ஆஸிஜ்-க்கு வரும் மணப்பெண் மிகுந்த அழகுள்ளவளாக இருக்கிறாள். 'பாருய்யா.. இந்த லூஸூக்கு போய் அடிச்சது லாட்டரி' என்று ஊர் ஆண்கள் ரகசியமாக புழுங்குகின்றனர். 'என்னப்பா ...கல்யாணம் செஞ்சப்புறம் என்னதான் செய்வே?' என்று கிண்டலடிக்கின்றனர்.

புதுப்பெண்ணுக்கு முதலில் வருத்தமாய் இருந்தாலும் மெல்ல அந்த சூழலை ஏற்றுக் கொள்கிறாள். கணவனுக்கு ஆதரவாய் இருக்கிறாள். என்றாலும் ஊர்ப்பெண்கள் செய்யும் கிண்டலை தாங்க முடியாமல் அழுகிறாள். அதைக் கண்டு தானும் துயரம் கொள்ளும் ஆஸிஜ்  தற்கொலை செய்ய முயல்கிறான். ஆசிரியர் அவனை தடுத்து நிறுத்துகிறார். ஒரு நள்ளிரவில் எல்லோருக்குமான ஒரு கடிதத்தை எழுதி வைத்து விட்டு ஆஸிஜ் தன் மனைவியுடன் எங்கோ மறைந்து விடுகிறான். எல்லோருமே அதற்காக வருந்துகின்றனர். இதற்கிடையில்  ஆசிரியரும் அந்தக் கிராமத்தை விட்டு கிளம்புகிறார்.  ஊரே கண் கலங்க அவருக்கு விடை தருகிறது.

ஏழு வருடங்கள் ஓடுகின்றன.

புழுதியைக் கிளப்பிக் கொண்டு ஒரு கார் அந்தக் கிராமத்தில் நுழைகிறது. 'யாருப்பா... மேயர் வர்றாரா?" என்று ஊரே ஆச்சரியத்துடன் பார்க்கிறது. காரிலிருந்து இறங்குபவர் ஆசிரியர். எல்லோரும் மகிழ்கின்றனர். ஆனால் அவருக்குப் பின்னால் காரிலிருந்து இறங்கும் நபரைப் பார்த்து எல்லோரும் வாய் பிளக்கின்றனர். ஆம். ஆஸிஜ்தான். திருத்தமாக முடிவெட்டிக் கொண்டு கோட்,சூட் போட்டுக் கொண்டு கம்பீரமாக வருகிறான். கை,கால் முடக்கமெல்லாம் பெருமளவு குறைந்திருக்கிறது. பேசவும் வருகிறது. அவன் பின்னே அவனுடைய மனைவியும் இரு குழந்தைகளும்.

அவனுடைய பெற்றோர்கள் கண்ணீர்க்கடலில் மிதக்கிறார்கள். "என்னப்பா.. ஏதாச்சும் அறுவை சிகிச்சை செய்துக்கிட்டியா?" என்கிறார் அவனுடைய தந்தை. அதற்கு ஆஸிஜ் மிகுந்த உணர்ச்சிகரமாக சொல்லும் வசனத்துடன் படம் முடிகிறது. "இல்லை. நான் என் மனைவியை காதலித்தேன்".

***

உடற்குறைபாடுள்ள பாத்திரத்தில் Mert Turak என்கிற இளைஞர் மிக அற்புதமாக நடித்துள்ளார். ஆசிரியர், ஊர்ப்பெரியவர் என்று எல்லா கதாபாத்திரங்களுமே மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.

அந்தப் பிரதேசத்தின் கலாச்சாரம், பெண் பார்க்கிற சடங்குகள், திருமணம் முடிந்தவுடன்தான் மனைவியை பார்க்க முடியும் என்பதால் அவளின் தோற்றம் குறித்து கனவு காணும் மணமகன்கள், அவர்களின் ஏமாற்றம் போன்றவை மெல்லிய நகைச்சுவையுடன் பதிவாகியிருக்கின்றது. இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு அபாரம். அந்தக் மலைக் கிராமத்தின் நிலவெளிப்பதிவுகள் மிகுந்த அழகியலுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. படத்தை அற்புதமாக இயக்கியுள்ளவர் Mahsun Kırmızıgül.



(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

No comments: