Sunday, December 22, 2019

Spider-Man: Into the Spider-Verse (2018)






சிலந்தி மனிதர்களின் பிரபஞ்ச சாகசங்கள்


‘ஸ்பைடர் மேன்’ என்கிற சிலந்தி மனிதனைப் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். காமிக்ஸ் உலகின் சூப்பர் ஹீரோக்களில் ஒருவர். ஸ்டேன் லீ மற்றும் ஸ்டீவ் டிட்கோ ஆகியோர் இந்தப் பாத்திரத்தை உருவாக்கினர். காலத்திற்கேற்ப ஸ்பைடர் மேனின் தோற்றமும் மாறிக் கொண்டே வருகிறது.

அவ்வாறான நவீன ஸ்பைடர் மேனைப் பற்றிய திரைப்படம்தான் Spider-Man: Into the Spider-Verse. இதில் ஒன்றல்ல,  குட்டி உருவம் முதற்கொண்டு பல ஸ்பைடர் மேன்கள் வந்து சாகசம் புரிகிறார்கள் என்பதுதான் ஆச்சரியமும் சுவாரசியமும்.

**

Miles Morales பதின்ம வயதில் உள்ள பள்ளி மாணவன். சராசரித்தனமான பள்ளி மற்றும் மாணவர்களோடு பழக விரும்புகிறவன். ஆனால் காவல்அதிகாரியான அவனது தந்தைக்கு ஸ்பைடர்மேன் என்றாலே பிடிக்காது. அவர் மைல்ஸை உயர்தர பள்ளியில் சேர்க்கிறார். வேண்டாவெறுப்பாக செல்கிறான் மைல்ஸ்.

தனது குறைகளை, தனது மாமாவான ஆரோனிடம் சென்று புலம்புகிறான் மைல்ஸ். அவர் ரயில் சுரங்கப்பாதையின் பின்னால் இருக்கும் ரகசிய கட்டிடத்திற்கு அழைத்துச் செல்கிறார். அங்கு இருவரும் சுவர் ஓவியம் தீட்டி மகிழ்கிறார்கள். அப்போது இயந்திர சிலந்திப்பூச்சி ஒன்று மைல்ஸை கடித்து விடுகிறது. அப்போதைக்கு அலட்சியப்படுத்திச் சென்றாலும் தன் உடம்பில் ஸ்பைடர்மேனின் தன்மைகளைப் போன்று உருவாகும் மாற்றங்களைக் கண்டு திகைக்கிறான் மைல்ஸ்.

தன்னை எது கடித்தது என்று அறிவதற்காக மறுபடியும் அங்கு செல்கிறான். ஆனால் அவன் அங்கு காண்பது ஆபத்தான விஷயம். ஸ்பைடர்மேனின் பிரதான வில்லன்களில் ஒருவனான கிங்பின், விபரீதமானதொரு ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான். ஒரு விபத்தில் இறந்து போன தன் மனைவி மற்றும் மகனைப் போன்றவர்கள் வேறு இணை பிரபஞ்சங்களில் (parallel universes) இருக்கிறார்களா என்பதை துகள் முடுக்கியின் மூலம் (Particle accelerator) தேடுகிறான். அப்போது சீனியர் ஸ்பைடர்மேனுக்கும் கிங்பின்னின் அடியாட்களுக்கும் உக்கிரமான சண்டை நடக்கிறது. இந்த சாகசத்தில் இயந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுவதோடு சீனியர் ஸ்பைடர்மேனும் இறந்து போகிறார்.

அவர் இறப்பதற்கு முன் மைல்ஸிடம் பென்டிரைவ் ஒன்றைத் தந்து அதன் மூலம் இயந்திரத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அது மீண்டும் செயல்பட்டால் நகரமே அழிந்து விடும் என்றும் கோரிக்கை விடுக்கிறார்.

தன்னால் இதைச் சாதிக்க முடியுமா என்று பெரிதும் தயங்குகிறான் மைல்ஸ். இணைப்பிரபஞ்சங்களில் உள்ள வெவ்வேறு ஸ்பைடர்மேன்கள் இவனுடைய உதவிக்கு வருகிறார்கள். பிறகு என்ன ஆனது என்பதை பிரமிக்கத்தக்க வரைகலை உத்தி, அட்டகாசமான பின்னணி இசை மற்றும் சாகசங்களின் மூலம் விவரித்திருக்கிறார்கள்.

**

ஒரு கருப்பின சிறுவனை ஸ்பைடர்மேன் பாத்திரத்தில் சித்தரித்திருப்பது இந்த திரைப்படத்தின் விசேஷமான அம்சங்களில் ஒன்று. காமிக்ஸ் புத்தகங்களில் வருவதைப் போன்றே பல காட்சிகளின் பின்னணியில் வார்த்தைகள் தோன்றுவது சுவாரசியமானது. அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கும் இந்தப் படைப்பை சிறார்கள் நிச்சயம் கண்டுகளிக்க வேண்டும்.


(SRV டைம்ஸில் பிரசுரமானது)

suresh kannan

No comments: