Thursday, June 04, 2009

விஜய் டிவி சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்றவர்


முந்தைய போட்டிளைப் போல் அல்லாமல் சமீபத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ஒவ்வொரு வாரமும் என்னால் தொடர்ந்து பார்க்க இயலவில்லை. இம்மாதிரியான ரியாலிட்டி ஷோக்களின் மீது சற்று ஒவ்வாமையே ஏற்பட்டுவிட்டது. நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் மிகையான அலட்டலும் நிகழ்ச்சிகளில் தென்படும் அப்பட்டமான நாடகத்தன்மையும் தோற்றுப் போகிற போட்டியாளர்களின் கண்ணீரை வைத்து நிகழ்ச்சியமைப்பாளர்கள் நடத்துகிற உணர்ச்சிமிகு நாடகங்களும், இந்த நிகழ்ச்சிகள் நடத்தப் பெறும் ஆதாரமான நோக்கு அடிபட்டுப் போவதையும் இதற்கு காரணமாய் சொல்லலாம். முந்தைய சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்ற நிகில் மேத்யூ, ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் 'பீமா' திரைப்படத்தில் 'எனதுயிரே' என்ற பாடலை பாடினதோடு சரி. அதற்கப்புறம் என்ன செய்கிறார் என்கிற தகவலே இல்லை. ஜூனியர் சிங்கரில் வெற்றி பெற்ற கிருஷ்ணமூர்த்தியும் என்ன ஆனார் என்று தெரியவில்லை. ஆனால் வடக்கில் பார்க்கும் போது ஜீ டிவி நிகழ்ச்சியான sa re ga ma pa போட்டியில் வெற்றி பெற்ற shreya ghosal, bela shindey போன்றவர்கள் இந்தியிலும் சமீபத்தில் தமிழிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

()

இன்று சூப்பர் சிங்கர் போட்டியின் இறுதி எபிசோட் என்பதால் சற்று சீக்கிரமாக இரவு 09.00 மணிக்கெல்லாம் வீடு வந்து சேர்ந்தேன். குளித்துவிட்டு வரும்வரை விளம்பரமாக போட்டுக் கொண்டிருந்தார்கள். இந்தக் கொடுமையை 07.00 மணியிலிருந்தே பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மகா பொறுமைசாலிகள்தான். இறுதிப் போட்டியாளர்கள் ஒவ்வொரு பாடலாய் பாட இன்னும் வாக்களிக்கும் வாய்ப்பை திறந்தே வைத்திருந்தார்கள். நல்லவேளையாக நிகழ்ச்சியை தொகுத்தவர்களில் மாலினி யுகேந்திரன் இல்லை என்பதை கவனித்து நிம்மதிப் பெருமுச்சுவிடுவதற்குள் பின்னர் வாயெல்லாம் பல்லாக வந்து இணைந்துவிட்டார். இந்த முறை சூப்பர் சிங்கரை நான் அதிகம் பார்க்காமல் தவிர்த்ததற்கு இவர் ஒரு பிரதான காரணம். அந்தளவிற்கு கொடுமையான நிகழ்ச்சி தொகுப்பு பணி.

இன்னும் சில கலை நிகழ்ச்சிகள்... என்று இழுத்துக் கொண்டே அதற்கிணையாக விளம்பரமும் போட்டுக் கொண்டே இருந்ததில் எரிச்சல் அதிகமானது. இது live ஆகத்தான் ஒளிபரப்பாகிறதா என்ற சந்தேகமும் ஆரம்பத்திலிருந்தே எழுந்தது. நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்து சற்று தாமதமாக எடிட் செய்து ஒளிபரப்பினார்களா என்று தெரியவில்லை. நேரில் கலந்து கொண்ட புண்ணியாத்மாக்கள் தெரிவிக்க வேண்டும். பிறகு ஒருவழியாக வெற்றி பெற்றவரை அறிவித்து விட்டார்கள். இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்கு பெற்று வென்றவர் அஜீஷ். இரண்டாவது பரிசை ரவியும் மூன்றாவது பரிசை ரேணுவும் பெற்றார்கள். இருவரது முகத்திலும் தோல்வியின் வலி அப்பட்டமாய் தெரிந்தது.

()

பொதுவாக விஜய் டிவி போட்டிகளுக்கும் எனக்கும் ஒரு ராசியுண்டு. யார் வெற்றி பெறுவார்கள் என்பதை நான் முன்னமே சரியாக யூகித்துவிடுவேன். அது மிக அதிர்ஷ்டவசமாக பெரும்பான்மையான சமயங்களில் சரியாக ஒத்துப் போய்விடும். சுசிகணேசனின் திரைப்படத்திற்காக நடந்த நடிகர் தேர்வில் பிரசன்னாவை பார்த்தவுடனே சொன்னேன். இவர் நிச்சயம் தேர்வு பெறுவார் என்று. பின்பு நடந்த அழகிப் போட்டியிலும் நான் யூகித்த மாதிரியே ஷீபா என்கிற பல் டாக்டர் அழகியாக தேர்வு செய்யப்பட்டார். நிகில் மேத்யூவும், கிருஷ்ணமுர்த்தியும் அவ்வாறே. முன்னரே சொன்னது போல் இந்த முறை சூப்பர் சிங்கரை தொடர்ந்து பார்க்கவில்லையெனினும் அஜீஷ் பாடுவதை கவனிக்கும் போது அவர் குரலிலும் பாடும் முறையிலும் ஒரு முதிர்ச்சி இருந்தது தெரிந்தது. எனவே அவர் வெற்றி பெறலாம் என்று யூகித்திருந்தேன். எங்கள் அலுவலகத்தில் நடந்த வாக்கெடுப்பிலும் அஜீஷே முதல் இடத்தில் நின்றார். பெண்களின் வாக்கு அதிகம்.

விஜய் டிவி லைவ்வாக ஒரு நிகழ்ச்சியை நடத்துவது இதுதான் முதன்முறை என்று நினைக்கிறேன். ரொம்பவே பொறுமையை சோதித்து விட்டார்கள். இரவு 11.45 வரை நிகழ்ச்சியை பொறுமையாக பார்த்ததற்கு ஒரே ஒரு பலன்தான் கிட்டியது. நேகா பேஷின் அருமையானதொரு பாட்டைப் பாடினார். அவர் பாட்டு ஒருபுறமிருக்கட்டும். அவரின் சிக்கனமான உடையும், நிகழ்ச்சியை கவர் செய்த ஒளிப்பதிவாளின் கலைமிகு கோணமும். அதனால் மனம் கொஞ்சம் சமாதானமடைந்தது.

வாழ்த்துகள் அஜீஷ்.

ரியாலிட்டி ஷோக்கள் குறித்து ஷாஜி எழுதின கட்டாயமாக வாசிக்க வேண்டிய பதிவு

(பின்குறிப்பு: விஜய்டிவியின் இன்னொரு ரியாலிட்டி நிகழ்ச்சியான 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா'வையும் தொடர்ந்து பார்க்க இயலவில்லை என்றாலும் பார்த்தவரை என்னை மிகவும் கவாந்தவர் மனோஜ் குமார். அவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கிறேன்; விரும்புகிறேன். பார்க்கலாம்.)


suresh kannan

9 comments:

வந்தியத்தேவன் said...

அஜீஸ் தான் சூப்பர் சிங்கர் என்ற முடிவு செமி பைனல் நேரமே எடுக்கப்பட்டுவிட்டது, நிறைய கல்லூரி மாணவ மாணவிகளிடம் அஜீஸ் கிரேஸ் இருந்தாலும் நிஜமான பாடகர் என்றால் அது ரவியும் ரஞ்சனியும் தான் ரஞ்சனியை முதலாவது இறுதிப்போட்டியிலும் (இறுதிப்போட்டி என்றால் ஒன்றுதான் என்பது சம்பிரதாயம்) ரவியை மெஹா பைனலிலும் தோற்கடித்தார்கள். நடுவர்கள் அனைவரும் அஜிஸின் ரசிகர்கள்.

இன்றைக்குகூட ரவி சவாலான பாடல்களையே பாடினார்.

டிடியைக் கண்டதும் அப்பாடா என இருந்தது ஆணால் ஹேமாமாலினி இடையில் வந்து தன் வளவளா கொளகொளா வர்ணனைகளால் பார்த்தவர்களை கொல்லாமல் கொன்றார்.

இந்த நிகழ்ச்சி அமைப்பாளர்களுடன் நடந்த சச்சரவில் தான் சின்மயி இடையில் வெளியேறினார்.

மயிலாடுதுறை சிவா said...

வணக்கம் சுரேஷ்

நானும் அஜீஷ் ஜெயிப்பார் என்று நினைத்தேன், சூப்பர்.

ரஞ்சனி குறைந்த வாக்குகள் வாங்கியதில் வருத்த பட்டேன்...

உங்களில் யார் அந்த பிரபு தேவாவில் தொகுப்பாளினி ரம்யாவிற்கு மாலனி கொஞ்சம் தேவலாம் அல்லவா?

சின்மயி நன்கு தொகுத்தார், பிறகு ஏன் வரவில்லை என்று தெரியவில்லை!

மனோஜ் நிச்சயம் வர வேண்டியர் ஆனால் வாய்பு ஈழ தமிழர் ப்ரேமுக்கு உள்ளது. எனக்கு பிடித்த இன்னோரு நபர் நந்தா...

மயிலாடுதுறை சிவா...

nila said...

நிச்சயமாக நீங்கள் கூறியது போல் லைவாக நடந்த நிகழ்ச்சிக்கும் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வித்தியாசம் இருந்தது...
அஜீஸ் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம்....
நீங்கள் மாலினியைப் பற்றி கூறி இருப்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன்... சகிக்க முடியாத தொகுப்பாளினி... தமிழ் ஆங்கிலம் இரண்டையும் மென்று துப்புவார்... அவருக்கு தமிங்லிஸ் பேசும் தொகுப்பாளினிகள் மேல்.............
இந்த நிகழ்ச்சியில் உறுத்திய இன்னொரு விஷயம் பாடகி நேகாவின் உடை... மிகவும் கேவலமாக இருந்தது... பாடிய பாடலுக்கும் உடுத்தி இருந்த ஆடைக்கும் சம்பந்தமே இல்லை... அது மிக பிரம்மாண்டமான நேரடி நிகழ்ச்சி என்பதால் கொஞ்சமேனும் கட்டுப்பாடோடு ஆடை அணிந்திருக்கலாம்.............

வாழ்த்துக்கள் அஜீஸ்

nila said...

நிச்சயமாக நீங்கள் கூறியது போல் லைவாக நடந்த நிகழ்ச்சிக்கும் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வித்தியாசம் இருந்தது...
அஜீஸ் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம்....
நீங்கள் மாலினியைப் பற்றி கூறி இருப்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன்... சகிக்க முடியாத தொகுப்பாளினி... தமிழ் ஆங்கிலம் இரண்டையும் மென்று துப்புவார்... அவருக்கு தமிங்லிஸ் பேசும் தொகுப்பாளினிகள் மேல்.............
இந்த நிகழ்ச்சியில் உறுத்திய இன்னொரு விஷயம் பாடகி நேகாவின் உடை... மிகவும் கேவலமாக இருந்தது... பாடிய பாடலுக்கும் உடுத்தி இருந்த ஆடைக்கும் சம்பந்தமே இல்லை... அது மிக பிரம்மாண்டமான நேரடி நிகழ்ச்சி என்பதால் கொஞ்சமேனும் கட்டுப்பாடோடு ஆடை அணிந்திருக்கலாம்.............

வாழ்த்துக்கள் அஜீஸ்

Suresh said...

வாழ்த்துகள் என் மனைவி சரியாக சொன்னாங்க அஜீஸ் தான் என்று..

ஆனாலும் அந்த ஆட்டம் பத்தி ஒரு பதிவு போடலாம் என்று இருக்கேன்

தீப்பெட்டி said...

அஜீஸ்க்கு வாழ்த்துகள்.. அவரோட வாய்ஸ் சான்ஸே இல்ல.. அருமையா இருந்துச்சு..

Unknown said...

நானும் நிகழ்ச்சியைப் பார்ப்பேன்
அவ்வப்போது.

நேரலைப் பார்க்கவில்லை.ரவிஷ் ஒரு எபிசோடில் பாடிய “சம்சாரம் என்பது வீணை”(இதுதான் என்று
நினைக்கிறேன்).அட்டகாசம்.

அருமையான கம்போசிங்.

இவர்தான் வருவார் என்று மனதில் நினைத்தேன்.

உங்களை மாதிரி எனக்கு ஒரு கொடுமையான விஷயம்...இந்த
மால்குடி சுபாவின் பேச்சு.

இவர் ஆங்கிலேத்திலேயே தமிழைப் பேசுவார். இதற்கு தனித் திறமை வேண்டும்.

கடைசியாக...

விஜய் டிவி கோபி கல்லூரி ஆசிரியர்களுக்கு ஜெய்மோகன் யார் என்று தெரியாவில்லை.சொந்த அறிவு தவிர மற்ற அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

மாலினி யுகேக்கு சொந்தத் தொழிலே
சரியாக தெரியவில்லை.

Dr.Sintok said...

//மாலினி யுகேக்கு சொந்தத் தொழிலே
சரியாக தெரியவில்லை.//

malini is de best DJ in oli.sg...she also can speak very well in tamil...'pandiyuden serntha kantrun mallam thinnum'...after she join de tamilnadu tv only ...........

Anonymous said...

'விஜய் டிவி கோபி கல்லூரி ஆசிரியர்களுக்கு ஜெய்மோகன் யார் என்று தெரியாவில்லை.சொந்த அறிவு தவிர மற்ற அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

why should they know about him?. is he such an important person.
there are any number of writers and poets in tamil.why should anyone bother to know about them
unless (s)he is interested in literature.The general knowledge
of jeyamohan and charu nivedita is
laughable.you better ask them to improve their knowledge first.