Monday, June 01, 2009

என்னைப் பின்பற்றுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை

என்னுடைய வலைப்பதிவை பின்பற்றும் 92 ·பாலோயர்களுக்கும் google reader-ல் உள்ள முந்றூற்றுச் சொச்சம் நபர்களாகிய அனைத்து புண்ணியாத்மாக்களுக்கும் நான் தெரிவிக்க நினைப்பது என்னவென்றால்...

பாடப்பாடத்தான் ரோகம்.. ச்சீ.. ராகம் என்கிறார்கள் பெரியவர்கள். எழுத எழுதத்தான் வேகம் என்கிறார்கள் நண்பர்கள். இதனால் எழுத்தின் தரம் கூடுகிறதோ இல்லையோ, தளத்தின் ஹிட் கூடுமல்லவா? இன்றைய அவசர யுகத்தில் 'ஷிட்டுக்களை' தந்துதான் 'ஹிட்டுக்களை' பெறமுடியும் என்று ஆலோசனை சொல்கிறார் நண்பர். எனவே இன்றிலிருந்து 'கச்சா முச்சா அல்லது மூச்சா'வென்று எதையாவது எழுதி மொக்கை பதிவுகளாக எழுதி எழுதி போட்டுக் கொண்டே இருக்கப் போகிறேன். 'அப்ப இது வரை எழுதியதையெல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பது?' என்று முணுமுணுப்பவர்கள் சாருவின் சாபத்திற்கு ஆளாகக் கடவது. (பயப்படாதீர்கள்! அது சும்மா.. லுலுவாய்க்கு என்கிறார் சாரு. அவரைப் பற்றி எழுதினால்தான் அதிக ஹிட் கிடைக்கிறதாமே. எனவே அவரையும் அவ்வப்போது தடவிக் கொள்ளப் போகிறேன். ஆஹா! அவரைப் பற்றி எழுதும் போதே எப்படியெல்லாம் வார்த்தைகள் வந்து விழுகிறது!).

சரி. மொக்கையை ஆரம்பிப்போமா?

()


கடந்த ஏதோ ஒரு நாளில் கந்தசாமியின் ஆடியோ ரிலீஸ் விழாவை நேரடி ஒளிபரப்பாக தொலைக்காட்சியில் பார்த்தேன். மகா மகா எரிச்சல். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த அந்த இளைஞனை அறையலாம் போலிருந்தது. அவ்வளவு சொதப்பல். ஏதோ குரங்காட்டி போல பார்வையாளர்களை "ஆட்றா ராமா" என்று ஒன்றுமில்லாததற்கெல்லாம் கைதட்டச் சொல்லி கேட்டுக் கொண்டேயிருந்தார். நிகழ்ச்சியை மிக சுவாரசியமாக தொகுத்தளிப்பதற்கு மிகுந்த சமயோசித புத்தியும் நகைச்சுவை உணர்வும் மேலாக சின்சியரான ஹோம் ஒர்க்கும் வேண்டும். இந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்தவர் நடிகர் விவேக். ஏதோ ஒரு பாலச்சந்தர் பட விழாவில் பாலச்சந்தரை டிராகுலாவுடன் ஒப்பிட்டு ரஜினி, கமல் என்று ஒருவரையும் விடாமல் மிக சுவாரசியமாக அதே சமயம் யாரையும் காயப்படுத்தாமல் கலாய்த்தார். மற்றவர்களை விட இவர் அதிகம் பேசமாட்டாரா என்றிருந்தது.

'கந்தசாமி' படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், ஒரே மாதிரியான டெம்ப்ளேட்டில் இசையமைக்கிறார் என்று தோன்றுகிறது. இதனால்தான் தெலுங்கில் அவரைக் கொண்டாடுகிறார்களோ என்னமோ? கந்தசாமியின் பாடல்கள் மகா கேவலமாக இருந்தன. இந்த லட்சணத்தில் 'நீண்ட வருடங்களுக்குப் பிறகு கதாநாயகனே அனைத்துப் பாடல்களையும் பாடியது இந்த படமாகத்தான் இருக்கும்' என்று பில்டப் கொடுத்ததில் என்னடா இது விக்ரமையும் தியாகராஜ பாகவதர் வகையறாக்களையும் ஒரே தராசில் அமர்த்திவிட்டார்களா என்று ஆச்சரியமாக பாடல்களை செவிமடுத்தால் ஒரு பாடல் முழுக்க "போடி.. போடி.." என்று நாயகியை அடித்தொண்டையில் கத்தி விரட்டிக் கொண்டேயிருக்கிறார் விக்ரம். இதையெல்லாம் பாடுவது என்று லிஸ்டில் சேர்த்தால் கழிவறையில் முக்குகிறவர்களைக்கூட பாடகர்கள் லிஸ்டில் சேர்த்துவிடலாம். இந்த நிகழ்ச்சியில் 30 கிராமங்களை தத்தெடுக்கிறேன் என்று 30 கிராமத்தைச் சேர்ந்தவர்களையும் மேடையில் ஏற்றிவிட்டதில் .. எப்படியும் குறைந்தபட்சம் இவர்களாவது படம் பார்த்துவிடுவார்கள் என்று தோன்றுகிறது. மிகுந்த அட்டகாசத்துடன் தொடங்கப்பட்டிருக்கிற இந்ததிட்டம் எப்படி நடைமுறையில் செயல்படுத்தபடப்போகிறது என்று தெரியவில்லை. ஏ.ஆர்.ரஹ்மானை தத்தெடுக்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கச் சொல்லி அழைத்திருந்தனர். பாவம் அவர். ஆப்ரிக்க பழங்குடி மக்களின் இடையில் மாட்டிக் கொண்ட சாப்ட்வேர் ஆசாமி போல் விழித்துக் கொண்டிருந்தார்.

()

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்திருக்கிறது என்று பா.ம.கவும் அதிகமுவும் புலம்பியிருக்கிறது. பழைய படி வாக்குச் சீட்டில் முத்திரை குத்தி ஓட்டளிக்கும் முறையையே திரும்பவும் அமைக்கச் சொல்லுகிறது. தே.தி.மு.க., ஒருபடி மேலேயே போய் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கும் போட்டிருக்கிறது. நல்ல வேளையாக இன்னும் பின்னால் போய்... யாருக்கு யானை மாலை அணிவிக்கிறதோ அவரே முதலமைச்சர் என்று அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு குறித்து ஏற்கெனவே ஜெயலலிதா புலம்பிய போது அந்த இயந்திரத்தை உருவாக்கிய குழுவில் இருந்த எழுத்தாளர் சுஜாதா நடைமுறையில் அது சாத்தியமேயில்லை என்று தெளிவாகவே எழுதியிருந்தார். இருந்தாலும் இந்த அரசியல்வாதிகள் ....

()

இளையராஜாவின் 'வால்மீகி' பாடல்களைக் கேட்டேன். மனிதர் மறுபடியும் ஒரு ரவுண்டு வர தயாராகிவிட்டார் என்று தெரிகிறது. 'Bela Shinde' பாடிய 'என் கூட வருவியா'... அசத்தலாக இருக்கிறது. ஷ்ரேயா கோஷலின் பாடலும். தாய்ப்பாலுக்கு ஈடாக ராஜாவின் பாட்டுக்களை கேட்டே வளர்ந்த எனக்கு ராஜாவின் இந்த மீள்வருகை மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் வம்படியாக தன்னுடைய குரலிலேயே சில பாடல்களை பாடியே தீருவதை அவர் நிச்சயம் தவிர்க்க வேண்டும். இசையை உருவாக்குபவராக அவரை உயரத்தில் வைத்துப் பார்த்தாலும் அவரின் சில தனிமனிதக் குணங்களுக்காக வருத்தமே பட நேர்கிறது.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் ராஜா இயக்குநர் மிஷ்கினின் மீது பாய்ந்துவிட்டார். 'ஒவ்வொரு இயக்குநரும் ஒருபடமாவது ராஜாவுடன் பணியாற்ற வேண்டும்' என்று மிஷ்கின் ராஜாவை பெருமையாக பேசுவதாக நினைத்து பேசப்போக, பின்னால் பேசிய ராஜா, 'எனக்கு யாரும் சிபாரிசு செய்யத் தேவையில்லை. யாரும் எனக்குத் தேவையில்லை. மிஷ்கின் ஏதோ என்னுடைய மீடியேட்டர் போல செயல்படுகிறார்' என்கிற ரேஞ்சில் பேசியிருக்கிறார். இதனுடைய பின்னணிக் காரணங்கள் எதுவாக இருந்தாலும் ஒரு மூத்த படைப்பாளி தன்னுடைய மன மாச்சரியங்களை இப்படி பொது மேடையில் வாந்தியெடுப்பது எரிச்சலாக இருக்கிறது. இப்படி சகபடைப்பாளிகளுடன் மோதிக் கொள்வது ராஜாவிற்கு புதிதல்ல. புதிய இயக்குநர்களை எதையும் பேச விடாமல் 'தான் போட்டுக் கொடுத்ததுதான் பாட்டு, சரியா இருக்கும் போ உனக்கு எதுவும் தெரியாது..' என்று விரட்டி விடுவார்' என்று திரையுலகைச் சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். அஜீத் நடித்த 'முகவரி' படத்தில் கூட இப்படியொரு காட்சியமைப்பு வைக்கப்பட்டது, ராஜாவை குறித்தே என்கிறார்கள்.

மேலும் ரஹ்மானுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிற சர்வதேச அங்கீகாரம் குறித்து ராஜாவிற்கு நீண்டநாட்களாகவே ஒரு பொச்சரிப்பு இருக்கிறது என்பது இலைமறை காயாக தெரிகிறது. ரஹ்மானின் இசை பற்றி அவர் மிக அரிதாகவே பாராட்டிப் பேசியிருக்கிறார். ராஜாவின் இசையில் வெளிவந்திருக்கிற 'அழகர் மலை'யில் ஒரு பாட்டு கேட்டேன். .
.உலகம் இப்போ எங்கோ போகுது.. எனக்கிந்த அன்னை பூமி போதும்... இங்கு பிறந்தவரும் எங்கோ போகிறார். எனக்கிந்த சொந்த நாடு போதும்....
என்று போகிறது அந்தப் பாட்டு.

இளையராஜாவை விமர்சித்து எழுதியதால் பின்னூட்டங்கள் எப்படி வரப்போகின்றன என்பதை இப்போதே யூகிக்க முடிகிறது. தீராநதி பேட்டியில் எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் 'இளையராஜா இசை பற்றிய விமர்சனத்துக்கு மிக ஆபாசமான கடிதங்களும் கொலை மிரட்டல்களும் வந்தன' என்கிறார். சாருநிவேதிதாவும் இதே போன்றதொரு கசப்பான அனுபவத்திற்கு ஆளாகியிருக்கிறார் என்பது தெரிகிறது.நமக்குப்பிடித்த கலைஞனை இன்னொருவருனுக்கும் பிடித்தேயாக வேண்டும் என்று ஏன் அவ்வளவு தீவிரமாக எதிர்பார்க்கிறோம் என்று தெரியவில்லை. இன்னொருவரின் மாற்றுக் கருத்தையும் ஏற்றுக் கொள்கிற சகிப்புத் தன்மை எப்போது நமக்கு வரும் என்றும் தெரியவில்லை.

(மொக்கை தொடரும்)

suresh kannan

20 comments:

லக்கிலுக் said...

ம்ஹூம். தலைப்பு வைப்பதில் உங்களுக்கு சாமர்த்தியம் போதவில்லை :-)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அந்த முன்னூத்தி சொச்சப் பேர்களில் நானும் ஒருவன். முழுதாக feed கொடுத்தால்தான் என்ன? ஒரு பத்தி மட்டுமே தெரிகிறது ரீடரில்.

கிரி said...

//எனவே இன்றிலிருந்து 'கச்சா முச்சா அல்லது மூச்சா'வென்று எதையாவது எழுதி மொக்கை பதிவுகளாக எழுதி எழுதி போட்டுக் கொண்டே இருக்கப் போகிறேன்//

ஏன் இந்த கொலை வெறி

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
அந்த முன்னூத்தி சொச்சப் பேர்களில் நானும் ஒருவன். முழுதாக feed கொடுத்தால்தான் என்ன? ஒரு பத்தி மட்டுமே தெரிகிறது ரீடரில்//

அதற்க்கு காரணம் வேறு..சுரேஷ் க்கு தெரியும் ;-)

Anonymous said...

உங்களுக்கு ஏன் இந்த வேலை...

கந்தசாமி நிகழச்சி எனக்கும் எரிச்சல்தான் ஏற்படுத்தியது.

கையேடு said...

எச்சரிக்கை உங்களைப் பின்பற்றுபவர்களுக்கா இல்லை பின் தொடர்பவர்களுக்கா..

Anonymous said...

//சர்வதேச அங்கீகாரம் குறித்து ராஜாவிற்கு நீண்டநாட்களாகவே ஒரு பொச்சரிப்பு இருக்கிறது//

அய்யொ..அய்யோ.. இது உங்களின் கற்பனைதான். ரகுமானை பாராட்ட வேண்டுமென்றால் எதற்கு இளையராஜாவை விமர்சிக்க வேண்டும்?

பிச்சைப்பாத்திரம் said...

//உங்களைப் பின்பற்றுபவர்களுக்கா இல்லை பின் தொடர்பவர்களுக்கா..//

கையேடு: பின்தொடர்பவர்கள்.. என்றுதான் இருந்திருக்க வேண்டும். தவறுதான்.

பிச்சைப்பாத்திரம் said...

லக்கி, :-)

சுந்தர்: தளத்திற்கு உள்ளே வரவைப்பதற்காக முழுப்பதிவையும் தருவதில்லை. சில நண்பர்கள் அந்த செட்டிங்கை மாற்றச் சொல்லி கேட்டிருக்கிறார்கள். பார்க்கிறேன்.

கிரி: :-)

அனானி'ஸ்: நன்றி. :-)

Anonymous said...

யூ டு சுரேஷ்?

பிச்சைப்பாத்திரம் said...

//யூ டு சுரேஷ்?//

வடகரைவேலன்: நோ டென்ஷன். சும்மா கொஞ்ச நாளைக்கு இந்த விளையாட்டை விளையாடிப் பாக்கலாம்னு.

தமிழ்நதி said...

"ஆனால் வம்படியாக தன்னுடைய குரலிலேயே சில பாடல்களை பாடியே தீருவதை அவர் நிச்சயம் தவிர்க்க வேண்டும். "

அந்த எரிச்சல் எனக்கும் உண்டு.

Unknown said...

//நமக்குப்பிடித்த கலைஞனை இன்னொருவருனுக்கும் பிடித்தேயாக வேண்டும் என்று ஏன் அவ்வளவு தீவிரமாக எதிர்பார்க்கிறோம் என்று தெரியவில்லை//

எதிர்ப்பவர்கள் மக்குத்தனமான மற்றும் அபத்தமான வாதங்களை
வைக்கிறார்கள்.

(அவர் காருக்கு லைசென்ஸ் ரெனியூ பண்ல அதனால அவர பிடிக்கல என்கிற ரீதியில்)

தமிழ் திரை இசையின் சகல பரிமாணத்தையும் காட்டியவரை எப்படி மக்குத்தனமாக வாதங்களை வைத்து விமர்சிக்க முடியும்?

அவர் பாடல்களில் மிருதங்கத்தை எப்படி உபயோகப்படுத்துகிறார் என்று
ஒரு brain storming எப்பவோ படித்தேன்.

ஆடிப் போய்விட்டேன்.

மிருதங்கத்தின் ஒரம்/கருப்பு பகுதி/நடு என்று ஒலி stylish ஆக ஒலிக்க.அதாவது மிருதங்கத்தின் கர்நாடக ஒலி வரக் கூடாது என்பதாக.

உதாரணம்: புதிய பூவிது பூத்தது/அந்தி மழை/

சுந்தரி நீயும் பாட்டில் கேரளா மேளம்
சிக்கனமாக ரேஷனில் வரும்.

(மற்ற இசையாளர்கள் அதில் எகிறி குதிப்பார்கள்.)

இப்படி professtional ஆக வேலை செய்யும் ஒருவரை மக்குத்தனமாக
விமர்சித்தால்?

நீங்கள் உயிர்மையில் ராஜாவைப் பற்றி எழுதியிருந்தீர்கள்.பாட்டில் ராகங்களை எப்படி பயன்படுத்தி இருக்கிறார் என்று.

விமர்சிப்பவர்களுக்கு ஏதாவது ஸ்நானப் ப்ராப்தி இருக்கா இதைப் பற்றி.

பிச்சைப்பாத்திரம் said...

//நீங்கள் உயிர்மையில் ராஜாவைப் பற்றி //

ரவிஷங்கர்: அதை எழுதியது நானல்ல. சுகா என்கிற இன்னொரு சுரேஷ் கண்ணன். பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணனின் மகன்.

Unknown said...

சுரேஷ் ரொம்ப நல்ல எழுதி இருக்கிறீர்கள். கந்தசாமி பாடல நிகழ்ச்சி கழுத்தறுப்பு தான். பத்து நிமிஷம் கூட பார்க்க முடியவில்லை.
இளையராஜா ஓர் அற்புதக் கலைஞர். ஆனால் யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்ப் பட்டவர்கள் இல்லை. அதே நேரத்தில் கோபப் படுவது அவர் உரிமை. அதை ஒரு செய்தியாக எடுத்துக் கொண்டு, அவர் இசையை ரசிக்க வேண்டியது தான்.

கலையரசன் said...

3 பார்ட் நொங்களும் = சும்மா... ஃபயர்ரு!
(மொக்கை தொடரும்) = இந்த ஒரு வரிதான் டெரரு!

butterfly Surya said...

இந்த மொக்கை போதுமா..??

இன்னும் கொஞ்சம் வேணுமா..??

போதும்....

ஹரன்பிரசன்னா said...

இளையராஜா தன் குரலில் பாடுவதை முதலில் நிறுத்தவேண்டும்.

நந்தநாலாவில் இரண்டு பாடல்கள், வால்மீகியில் சில பாடல்கள் - சந்தேகமேயில்லாமல் இளையராஜாவின் எழுச்சிதான் இது. ‘என்னடா பாண்டி’ பாடல் மிக வித்தியாசமாக இருந்தது, அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே மாதிரி! கூட வருவியா அசத்தலான பாடல்.

Unknown said...

//ரவிஷங்கர்: அதை எழுதியது நானல்ல. சுகா என்கிற இன்னொரு சுரேஷ் கண்ணன். பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணனின் மகன்//

தவறுக்கு வருந்துகிறேன்.

Anonymous said...

சுரேஷ் கண்ணன்,
//மனிதர் மறுபடியும் ஒரு ரவுண்டு வர தயாராகிவிட்டார் என்று தெரிகிறது//
இது நான் கடவுள், நந்தலாலாவிலேயே அவர் உறுதி செய்துவிட்டார். இப்போது மீண்டும் அழகர்மலை, வால்மிகி இல் தொடர்கிறார்.

//ஒரு மூத்த படைப்பாளி தன்னுடைய மன மாச்சரியங்களை இப்படி பொது மேடையில் வாந்தியெடுப்பது எரிச்சலாக இருக்கிறது//

நானும் அந்த பேச்சை கேட்டேன்...
www.youtube.com/watch?v=It98FMhweUg
www.youtube.com/watch?v=0vJJ-cEwKoM
"மேடையில் பேசவேண்டுமென்றால் ஒன்று தன்னை பற்றி உயர்வாக பேசவேண்டும், இல்லையென்றால் மற்றவை மட்டம் தட்டி பேசவேண்டும்.அதனால் தான் நான் அதிகம் விழகளுக்கு வருவதில்லை"என்றவர்...மேற்சொன்ன இரண்டையுமே செய்ததாகவே எனக்கு படுகிறது...

//உலகம் இப்போ எங்கோ போகுது.. எனக்கிந்த அன்னை பூமி போதும்... இங்கு பிறந்தவரும் எங்கோ போகிறார். எனக்கிந்த சொந்த நாடு போதும்..//
பட்டவர்த்தனமான வரிகள்...முதல்முறை இந்த பாடலை கேட்டபோதே கருக்கென்று இருந்தது., திடீரென்று ஏன் நம் இசைச்சாமிக்கு என்னவாயிற்று என்றுஎண்ணிக்கொண்டேன்...

//மேலும் ரஹ்மானுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிற சர்வதேச அங்கீகாரம் குறித்து ராஜாவிற்கு நீண்டநாட்களாகவே ஒரு பொச்சரிப்பு இருக்கிறது//
சார் உங்களுடைய நடுநிலையான எழுத்துக்களுக்கு பெண் வாசகர்களும் நிறைய பேர் இருப்பார்கள்., ஆகையால் தயை கூர்ந்து "பொச்சரிப்பு" போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை நீங்கள் தவிர்க்க வேண்டுமென பணிவுடன் கோரும்...

அன்பு வாசகன்,
பாலா.

சாணக்கியன் said...

/*மேலும் ரஹ்மானுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிற சர்வதேச அங்கீகாரம் குறித்து ராஜாவிற்கு நீண்டநாட்களாகவே ஒரு பொச்சரிப்பு இருக்கிறது என்பது இலைமறை காயாக தெரிகிறது. */

//ஒரு மூத்த படைப்பாளி தன்னுடைய மன மாச்சரியங்களை இப்படி பொது மேடையில் வாந்தியெடுப்பது எரிச்சலாக இருக்கிறது// என்று சொல்லிவிட்டு நீங்கள் இப்படி வாந்தியெடுத்திவிட்டீர்களே சுரேஷ்? மாற்றுக் கருத்துக்களை நாகரிகமாகவும் சொல்லத்தெரியவேண்டாமா? இதனால்தான் மாற்றுக் கருத்துகளை சகித்துக்கொள்ளும் தன்மை குறைந்துவருகிறதோ என நினைக்கவைத்துவிட்டது உங்கள் பதிவு...