Thursday, June 11, 2020

North Country (2005) - ‘வேட்டையாடும் மான்'




ஒட்டுமொத்த ஆண் இனமே குற்றவுணர்வும் வெட்கமும் அடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம். பெண்கள் மீது பாலியல் வன்முறைகளையும் சீண்டல்களையும் நிகழ்த்தும் ஆணாதிக்கப் பேர்வழிகள் வெட்கி கூசும்படியாக முகத்தில் அறையும் காட்சிகள் உள்ளன. பெரும்பாலும் ஆண்கள் பணிபுரியும்  ஒரு நிலக்கரி சுரங்கத்தில் தங்களுக்கு நிகழும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக ஒரு பெண் போராடி உரிமையை நிலைநாட்டும் உணர்வுபூர்மான திரைப்படம்.

***


கணவனின் கொடுமையை  பொறுக்க முடியாமல் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு பிறந்த வீட்டிற்கு செல்கிறாள்  ஜோஸி.  தகப்பன் இவளை வெறுப்புடன் பார்க்கிறார். "நீ வேற எவன் கூடயாவது தப்பு செஞ்சிருப்பே, அதான்" என்று இவளையே குற்றம் சாட்டுகிறார். மாணவப் பருவத்திலேயே ஜோஸி கர்ப்பமுற்றதால் அவருக்கு அப்போதிலிருந்தே ஜோஸியின் மீது வெறுப்பு. அவளுடைய சக மாணவன் பாபி என்பவன்தான் ஜோஸியின் முதல் குழந்தைக்கு தகப்பன் என்று நம்பப்படுகிறது.

தகப்பனுக்கு சுமையாக இல்லாமல் வெளியேறி விட வேண்டும் என்று ஜோஸிக்கு தோன்றுகிறது. அது மட்டுமல்லாமல் தன் இரண்டு குழந்தைகளையும் நல்லபடியாக வளர்க்க வேண்டும்.  அதற்கு பணம் வேண்டும், நல்ல வேலை வேண்டும். தன்னுடைய பழைய தோழியான குளோரியைச் சந்திக்கிறாள் ஜோஸி. "நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிய சம்மதமா, நல்ல சம்பளம் கிடைக்கும். நானும் அங்கு யூனியனில் இருக்கிறேன்" என்று குளோரி கேட்க உற்சாகத்துடன் உடனே சம்மதிக்கிறாள் ஜோஸி.


***

சுரங்கத்தில் பணிபுரிவது பெரும்பாலும் ஆண்கள். சேவல் பண்ணை. எனவே அவர்களின் ராஜ்ஜியமாக இருக்கிறது. சில பெண்கள் மட்டுமே அங்கு பணிபுரிகிறார்கள். பாலியல் ரீதியிலான சீண்டல்களும் கிண்டல்களும் அத்துமீறல்களும் சகஜமாக இருக்கின்றன. பெண்களால் எதையும் தட்டிக் கேட்க  முடியாது. கேட்டால் இன்னமும் அவமானப்படுத்துவார்கள். ஜோஸிற்கு முதலில் திகைப்பும் கோபமும் வந்தாலும் தன் குழந்தைகளுக்காக சகித்துக் கொள்கிறாள்.

ஜோஸியுடன் பள்ளியில் படித்த பாபியும் அங்குதான் பணிபுரிகிறான். பழைய உறவை புதுப்பித்துக் கொள்ளும் நோக்கத்தில் இவளிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறான். கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறாள் ஜோஸி. எனவே இவளை பயமுறுத்தும் வகையில் சுரங்க வேலையின் ஆபத்தொன்றில் சிக்க வைத்து பழிவாங்குகிறான். ஜோஸிக்கு மட்டுமல்லாமல் இதர பெண்களுக்கும் நிறைய அவமானங்கள் நிகழ்கின்றன.

ஒருநிலையில் பொறுக்க முடியாமல் நிர்வாகத்திடம்  புகார் செய்கிறாள் ஜோஸி. அவர்கள் இதைக் காதிலேயே வாங்கிக் கொள்வதில்லை. "இது ஆண்களின் பணி. இஷ்டமில்லாவிட்டால் வேலையில் இருந்து கிளம்பு" என்று அலட்சியமாக சொல்கிறார்கள்.

***

ஒரு நாள் பாபி ஜோஸியிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ள முயல்கிறான். அவள் எதிர்ப்பு தெரிவிக்க கடுமையாகத் தாக்குகிறான். கோபத்துடனும் அழுகையுடனும் சக ஊழியர்களிடம் இதைப் பற்றி சொல்கிறாள் ஜோஸி. ஆண் ஊழியர்கள் கண்டு கொள்வதி்ல்லை. பெண்கள் பயப்படுகிறார்கள். ஜோஸியின் தகப்பனும் அந்தச் சுரங்கத்தில்தான் பணிபுரிகிறார்.

கோபத்தின் எல்லைக்கே செல்லும் ஜோஸி வேலையை ராஜினாமா செய்து விட்டு தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நிறுவனத்தின் மீது வழக்கு போடுகிறாள். நிர்வாகம் தனது செல்வாக்கை உபயோகப்படுத்தி நீதிமன்றத்தில் சாமர்த்தியமாக நடக்கிறது. ஜோஸியின் பழைய ரெக்கார்டுகள் கிளறப்படுகின்றன. "நீ ஸ்கூல் படிக்கும் போதே கர்ப்பமாயிட்டியாமே?" என்று கேட்பதின் மூலம் இப்போதையை பிரச்சினையை அவளுக்கு எதிராக திருப்பப் பார்க்கிறார்கள்.


ஜோஸியின் மீது நம்பிக்கை ஏற்படாத சூழலில் நீதிபதி  ஒரு நிபந்தனையை  விதிக்கிறார். 'சுரங்கத்தில் பணிபுரியும் வேறு சில பெண்கள் நீதிமன்றத்தில் புகார் செய்தால் இந்த வழக்கை விசாரிப்பேன்'

***

நிர்வாகத்திற்கு எதிராக புகார் செய்ய ஒவ்வொரு பெண்ணும் தயங்குகிறார்கள். வேலை போய் விடும். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கஷ்டங்கள். ஜோஸி நீதிமன்றத்தில் தன்னந்தனியாக போராடுகிறாள். அவளை மேலும் சங்கடப்படுத்துவதற்காக பழைய பள்ளி ஆசிரியரை வரவழைக்கிறார்கள். 'படிக்கும் போதே இந்தப்  பெண் இப்படியாமே' என்று நிரூபிக்க.

ஜோஸியின் வழக்கறிஞர் மிகத் திறமையாக இந்த திருப்பத்தை எதிர்கொள்கிறார். பழைய உண்மைகள் வெளிப்படுகின்றன. அதன்படி ஜோஸியின் ஆசிரியர்தான் அவளை மிரட்டி உறவு கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த பாபி பயந்து ஓடி விடுகிறான். இந்த உண்மையை பாபியின் வாயாலேயே வரவைக்கிறார். நீதிமன்றமே அதிர்ச்சியில் உறைகிறது.

நீதிமன்றத்தில் அமர்ந்திருக்கும் இதர பெண் பணியாளர்கள் ஒவ்வொருவராக ஜோஸிக்கு ஆதரவாக எழுந்து நிற்கிறார்கள். மனச்சாட்சி உறுத்தலுடன் சில ஆண்களும் இணைகிறார்கள். நீதி நிலைநாட்டப்பட்ட மகிழ்ச்சியில் ஜோஸி அழுகிறாள்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிர்வாகம் நஷ்டஈடு தருகிறது. அது மட்டுமல்லாமல் பெண் பணியாளர்களின் மீது பாலியல் அத்துமீறல்கள் நடைபெறாதவாறு விதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. அதற்கு 1984-ல் நடந்த இந்த வழக்குதான் அடிப்படையான காரணமாக இருக்கிறது.


***


ஜோஸியாக Charlize Theron அற்புதமாக நடித்திருக்கிறார். யூனியன் கூட்டத்தில் பேசும் ஜோஸியை ஆண்கள் அவமானப்படுத்தும் போது அவளது தந்தை திடீரென்று ஜோஸிக்கு ஆதரவு தருவது நெகிழ்வான காட்சி. இதைப் போலவே நீதிமன்றக் காட்சிகளும். படத்தை சிறப்பாக இயக்கிருப்பவரும் ஒரு பெண்தான். Niki Caro.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)




suresh kannan

1 comment:

enRenRum-anbudan.BALA said...

Very good review, Suresh.
I dont know how I missed this great movie. Charlise Theron is a natural actor
-
anbudan BALA