Wednesday, June 24, 2020

Lion (2016) - ‘தாய் அறியாத தாமரை'




நாடு விட்டு நாடு தாண்டியிருந்தாலும், பிரிந்திருந்த பெற்றோரை பல வருடங்கள் கழித்து  எப்படியோ தேடிக் கண்டுபிடித்து கண்ணீர் சிந்திய நபர்களைப் பற்றிய நெகிழ்வான  செய்திகளை பத்திரிகைகளில் படித்திருப்போம். அப்படியொரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் இது. இந்த விஷயத்தை அல்வா மாதிரி பல தமிழ் சினிமாக்களில் கதறக் கதற உபயோகப்படுத்தியிருப்பார்கள். ஆனால் அழுகாச்சி சீன்கள் எல்லாம் இல்லாமல் அந்த துயரத்தை இயல்பான தொனியில் விவரிக்கிறது இந்த திரைப்படம்,

ஆஸ்கர் விருதிற்காக ஆறு நாமினேஷன்களில் இடம்  பெற்றிருந்தது. படத்தின் பாதி சம்பவங்கள் இந்தியாவில் நடப்பதால் இதை ஏறத்தாழ நம்மூர் படம் என்றே சொல்லி விடலாம். போதாக்குறைக்கு ரஹ்மானின் 'டேக் ஈஸி ஊர்வசி' பாட்டு வேறு ஓரிடத்தில் திடீரென வந்து பரவசப்படுத்துகிறது.

***

வருடம் 1986. மத்திய பிரதேசத்திலுள்ள காந்த்வா எனும் பழமையான  நகரம். சரூ என்னும் சிறுவனின்  வறுமையான குடும்பம். தந்தை இல்லை. தாய், தங்கை, அண்ணன் உண்டு. 'காக்கா முட்டை' திரைப்படத்தில் வருவதைப் போல தன் அண்ணன் குட்டுவுடன் சேர்ந்து ஓடும் ரயிலில் இருந்து நிலக்கரி திருடக் கற்றுக் கொள்கிறான் சரூ. அண்ணன் எங்கேயோ வேலைக்குச் செல்லும் போது 'தானும் வருகிறேன்' என அடம்பிடிக்கிறான். 'அது கஷ்டமான வேலைடா, உன்னால முடியாது' என்று அண்ணன் தடுத்தாலும் மறுத்து அடம்பிடிக்கிறான். தாய் பணிக்குச் சென்றிருக்க, தங்கையை வீட்டில் விட்டு இருவரும் கிளம்புகிறார்கள்.

ஒரு ரயில்நிலையத்தை அடைந்தவுடன் 'இங்கேயே பத்திரமாக இரு' என்று  சொல்லி விட்டு அண்ணன் எங்கோ இருளில் மறைகிறான்.  தூங்கியெழும் சிறுவன் அண்ணனைக் காணாமல் ரயிலுக்குள் ஏறி தேட சில நிமிடங்களில் ரயில் புறப்பட்டு விடுகிறது. ஓடும் ரயிலின் சத்தத்தில் சிறுவன் கத்துவது எவருக்கும் கேட்பதில்லை. இரு நாட்கள் கழித்து கல்கத்தா ரயில் நிலையத்தில் இறங்குகிறான். 'வீட்டுக்குப் போகணும்' என அங்குள்ள பலரிடம் கெஞ்சியும் பலனில்லை. மொழிப் பிரச்சினை வேறு.

சாலையோரச் சிறுவர்களுடன் இணைந்து தூங்க முயல்கிறான். அவர்களை சிலர் தூக்க முயல அங்கிருந்து தப்பி ஓடுகிறான். ஒரு பெண் அடைக்கலம் அளித்து உணவளிக்கிறாள். ஆனால் அங்கும் ஏதோ பிரச்சினை  என்பதை உணர்ந்து தப்பியோடுகிறான். சாலையில் திரிந்து கொண்டிருக்கும் இவனை ஓர் இளைஞன் கவனித்து காவல்நிலையத்தில் ஒப்படைக்கிறான். அங்கிருந்து சிறுவர் முகாமிற்கு செல்கிறான் சரூ. சற்று பாதுகாப்பான இடம் கிடைத்தாலும் அங்கும் சில அநியாயங்கள் நடைபெறுகின்றன.

வெளிநாட்டுத் தம்பதியொருவர் சரூவை தத்தெடுக்க முடிவு செய்கின்றனர். அதன்படி ஆஸ்திரேலியாவிற்கு செல்கிறான் சரூ. அவனுடன் இன்னொரு சிறுவனையும் தத்தெடுக்கின்றனர். அவன்  தன்னையே தண்டித்துக் கொள்ளும் உளப்பிரச்சினை உள்ளவனாக இருக்கிறான். இரு சிறுவர்களும்  மெல்ல புதிய சூழலுக்கு பழகுகிறார்கள். தத்தெடுத்தவர்கள் தங்களின் பிள்ளைகளைப் போலவே இவர்கள் மீது அன்பு செலுத்துகிறார்கள்.


ஆயினும் சரூவிற்கு உள்ளூற நிம்மதியோ சந்தோஷமோ இல்லை.



***


புதிய இடத்தில் செளகரியமான வசதிகளும் வாய்ப்பும் இருந்தாலும் சரூவின் மனது முழுக்க தன் இந்தியக் குடும்பத்தைப் பற்றிய நினைவுகளே ஓடுகின்றன. தாயைப் பற்றிய கனவுகள். தன் அண்ணன் எங்கிருந்தோ நின்று அழைத்துக் கொண்டிருப்பதைப் போன்ற பிரமைகள்.

தன் வளர்ப்புத் தாய் இதையெல்லாம் அறிந்தால் வருத்தப்படுவாளே என்று தன் உணர்வுகளை மறைத்துக் கொள்கிறான். தன் குடும்ப வாழ்க்கையில் கூட அவனால் ஒன்ற முடியவில்லை. நண்பர்களின் தரும் யோசனையின் பெயரில் இந்தியாவிலுள்ள தன் ஊரைப்  பற்றி கூகுள் எர்த் வழியாக தேடிப் பார்க்கிறான். விவரங்கள் சரியாக நினைவில்  இல்லாததால் தேடுவது சிரமமாக இருக்கிறது.

பல மாதங்களுக்குப் பிறகான தொடர் முயற்சியில் தன் ஊரின் சரியான பெயரை கண்டுபிடிக்கிறான். மெல்ல மெல்ல  அவனது ஊர் தொடர்பான விவரங்கள், சந்து பொந்துகள், வீடு அமைந்திருக்கும் இடம் போன்றவை நினைவிற்கு வருகின்றன. தன் வளர்ப்புத் தாயிடம் தெரிவித்து விட்டு ஆவலுடன் ஊருக்கு வருகிறான்.

'சரூ உயிருடன்தான் இருப்பான், என்றைக்காவது வருவான்' என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கும் தாயைக் கண்டுபிடித்து கட்டிப்பிடித்து அழுகிறான். அண்ணன் இறந்து விட்டாலும் தங்கையைக் கண்டு மகிழ்கிறான்.

உண்மையில் அவன் பெயர் 'சரூ' அல்ல, 'ஷெரூ'. சிங்கம் என்று அர்த்தம்.


***

சரூவாக நடித்த சிறுவன் சன்னி பவார் தன் அற்புதமான நடிப்பால் கலக்கியிருக்கிறான். இந்தச் சிறுவன் ஆஸ்கர் விருது விழாவிலும் கலந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தான். பெரிய சரூவாக  நடித்த இளைஞர் தேவ் பட்டேல். 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் வந்த சிறுவன். வளர்ப்புத் தாயாக நிக்கோல் கிட்மேன் அபாரமான நடிப்பைத் தந்திருந்தார். தங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றாலும் தத்தெடுத்தற்கான காரணத்தை அவர் சொல்லுமிடம் நெகிழ்வான காட்சி.

இந்திய ரயில் நிலையக் காட்சிகள் சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. பின்னணி இசையும் சிறப்பு. Saroo Brierley என்பவரின் வாழ்வில் நடந்த உண்மையான சம்பவங்களை அவர் புத்தகமாக எழுத, அதிலிருந்து இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. தனது முதல் திரைப்படத்தையே ஆஸ்கர் செல்லும் அளவிற்கு சிறப்பாக இயக்கியுள்ளார் Garth Davis.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

No comments: