Monday, June 22, 2020

Hacksaw Ridge (2016) - ‘போர்முனையில் ஒரு வெள்ளைப் புறா'






போர் வன்முறையின் கொடுமை பற்றி எத்தனையோ திரைப்படங்கள் வந்து விட்டாலும் இது வித்தியாசமானது. இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் சமயம். அமெரிக்காவும் ஜப்பானும் கடுமையாக மோதிக் கொள்கின்றன.

ஆபத்தான அந்தப் போர்முனையில் ஓர் இளைஞன் கையில் எவ்வித ஆயுதமும் இன்றி நிராயுதபாணியாக அங்குமிங்கும் ஓடி காயம்பட்டவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறான். யார் அவன்? துப்பாக்கி ஏதுமின்றி எப்படி அவனை அனுமதித்தார்கள்? அவனுக்கு அச்சம் என்பதேயில்லையா?


***

டெஸ்மாண்ட் டாஸ் ஓர் அமெரிக்கன். இரண்டாம் உலகப் போரின் போது  நாட்டுக்காக ராணுவ சேவை செய்ய விரும்புகிறான். உடலளவில் வலுவானவாக இல்லாவிட்டாலும் மனதளவில் உறுதியாக இருப்பவன்.  ராணுவப் பயிற்சியின்  போது மற்ற பயிற்சிகளை முடித்து விட்டாலும் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது கறாராக சொல்லுகிறான். 'இல்லை. நான் எக்காரணத்தைக் கொண்டும் ஆயுதத்தை தொட மாட்டேன்'. பயிற்சி தரும் அதிகாரிக்கும் சரி, சக வீரர்களுக்கும் சரி, இவன் முரண்டு பிடிப்பது எரிச்சலாக இருக்கிறது. 'அப்புறம் ஏன்யா ராணுவத்துல சேர்ந்து தொலைச்சே?' என்று கோபத்துடன் கேட்கிறார்கள்.

'நாட்டுக்காக சேவை செய்ய விருப்பம். சண்டையில் காயம் ஏற்படும் வீரர்களுக்கு மருத்துவ உதவி செய்வேன்" என்கிறான் டெஸ்மாண்ட். ''சரிப்பா. நல்ல விஷயம்தான். ஆனா துப்பாக்கி இல்லாம எப்படி,  ராணுவ விதிகள் அதற்கு அனுமதிக்காதே, உன்னையே நீ காப்பாத்திக்கணும்னா கூட என்ன செய்வே?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். இதர வீரர்கள் இவனை சமயம் கிடைக்கும் போதெல்லாம் அடித்து  அவமானப்படுத்துகிறார்கள். 'நீ இதுக்கு சரிப்பட்டு வரமாட்டே. ஒழுங்கா ஊரைப் பார்த்து கிளம்பு'.  ஆனால் தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறான் டெஸ்மாண்ட்.

துப்பாக்கி சுடும் பயிற்சியை முடிக்காமல் அவனுக்கு விடுமுறை தர மறுக்கிறார்கள். இதனால் அவனுடைய திருமணம் நின்று போகிறது. பிரியமான காதலி வேறு காத்திருக்கிறாள். 'சரி, ஒருமுறையாவது துப்பாக்கியைப் பிடித்து அதை உபயோகிக்கத் தெரியும் என்பதையாவது நிரூபித்து விடு. விடுமுறைக்கு அனுமதிக்கு அளிக்கிறேன்" என்கிறார் உயர் ராணுவ அதிகாரி. "ம்ஹூம். எக்காரணம் கொண்டும் துப்பாக்கியைத் தொட மாட்டேன்"

***

டெஸ்மாண்டின் இந்த முரட்டுப் பிடிவாதத்திற்கு என்ன காரணம்? அவனுடைய வாழ்வில் நிகழ்ந்த இரு சம்பவங்கள்தான் வன்முறையின் மீது பயங்கரமான கசப்பை ஏற்படுத்துகின்றன. இளம் வயதில் தன் சகோதரனோடு சண்டையிடும் போது ஏற்படும் விபத்தில் அண்ணன் ஏறத்தாழ செத்துப் போய் உயிர் பிழைக்கிறான். அவனுடைய தந்தை ஒருமுறை தாயுடன் சண்டை போடும் போது துப்பாக்கியை காட்டி மிரட்ட, அதைப் பிடுங்கி தந்தையை ஏறத்தாழ சுடப் போய் பிறகு கண்ணீர் விட்டு அழுகிறான். இனி தன் வாழ்வில் எக்காரணத்தைக் கொண்டும் வன்முறையில் ஈடுபடுவதில்லை என்று உறுதி எடுக்கிறான்.

கீழ்ப்படியாமை காரணமாக ராணுவ கோர்ட்டில் டெஸ்மாண்டின் மீது விசாரணை வருகிறது. அவன் சிறை செல்லவும் நேரலாம். அப்போது கூட ராணுவத்திலிருந்து விலகவோ அல்லது துப்பாக்கியைத் தொடவோ என இரண்டிற்குமே டெஸ்மாண்ட் சம்மதிப்பதில்லை.

விஷயத்தைக் கேள்விப்பட்டு அவனுடைய தந்தை வருகிறார்.. அவரும் ராணுவத்தில் முன்பு பணிபுரிந்தவர் என்பதால் தலைமை அதிகாரியிடம் எப்படியோ பேசி  டெஸ்மாண்டைக் காப்பாற்றுகிறார். அது மட்டுமல்ல, போரின் போது துப்பாக்கி இல்லாமல் அவன் வர சிறப்பு அனுமதி  கிடைக்கிறது. ஆனால் ஒன்று, அவன் உயிரை அவன்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.'

***

அதுவொரு மலை முகடு. மேலே ஜப்பான் ராணுவ வீரர்கள். கீழே அமெரிக்க ராணுவம். எதிரிகள் சுடுவதற்கு வாகான இடம் என்பதால் அவர்களின் கை ஓங்குகிறது. அமெரிக்கத் தரப்பில் ஏகப்பட்ட சேதம். அந்த மலைமுகட்டை கைப்பற்றினால்தான் ஜப்பானியர்களின் கொட்டத்தை அடக்க முடியும். டெஸ்மாண்டின் படைப்பிரிவு சிரமப்பட்டு ஏறுகிறது. இரண்டு பக்கமும் கடுமையான சண்டை. பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு  பாய்ந்து பாய்ந்து மருத்துவ உதவி செய்கிறான் டெஸ்மாண்ட். அவனுடைய நல்லெண்ணம்தான் அவனுடைய உயிரைக் காப்பாற்றுகிறதோ, என்னமோ.  உயிர் பயமே இல்லாமல் மருத்துவ சேவை செய்யும் இவனைக் கண்டு சக வீரர்கள் வியக்கிறார்கள். இவன் மீது அவர்களுக்கு மரியாதை வருகிறது.

மறுநாளும் பயங்கரமான சண்டை. ஜப்பானியர் ஆதிக்கம் செலுத்துவதால் அமெரிக்கப் படை பின்வாங்குகிறது. இன்னொரு பக்கம் அவர்களின் பீரங்கிப் படை தாக்குவதால் எல்லோரையும் பின்னுக்கு வரச்சொல்கிறார்கள். ஆனால் டெஸ்மாண்ட் மட்டும் வருவதில்லை. சண்டையில் காயம் பட்டு உயிருக்குப் போராடும் வீரர்களை தேடித் தேடி முதுலுதவி செய்கிறான். அந்த இடத்தை ஜப்பானியப் படை ஆக்ரமித்திருந்தாலும் ரகசியமாக ஒவ்வொரு வீரரின் உடலையும் மலை முகட்டிலிருந்து போராடி கீழே இறக்குகிறான். ஒன்றல்ல, இரண்டல்ல. இரவு முழுவதும் இப்படி தன்னந்தனியாக 75 வீரர்களைக் காப்பாற்றுகிறான். மறுநாள்தான் இந்த விஷயமே மற்றவர்களுக்குத் தெரிய வருகிறது. அவனுடைய வீரத்தைப் பாராட்டி பதக்கம் வழங்குகிறார்கள்.

**

'பயங்கரமான  சண்டைக்கு நடுவுல எப்படிய்யா ஒருத்தன் இப்படி, உட்டாலக்கடியா இருக்கே' என்று நாம் சந்தேகப்படவும் வழியில்லை. ஏனெனில் இது டெஸ்மாண்ட் என்கிற உண்மையான நபரையும் சம்பவங்களையும் வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். போர் சம்பந்தப்பட்ட காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டுள்ளன. டெஸ்மாண்ட் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளும் சுவாரஸ்யமானவை.

சிறந்த எடிட்டிங் மற்றும் ஒலிக்கலவை ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ள இந்த திரைப்படத்தை இயக்கியவர் பிரபல நடிகர் மெல் கிப்சன். அஹிம்சையே தீர்வு, போர் அல்ல என்கிற நீதியை வலுவாக பதிவு செய்திருக்கிற படைப்பு.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)



suresh kannan

No comments: