Monday, January 06, 2020

டிசம்பர் பூக்கள் (தமிழ் திரைப்படம்) 1986





1986-ல் வெளியான இந்தத் திரைப்படத்தை  2020-ல் நான் பார்த்ததற்கு காரணம் இளையராஜாவின் இரண்டு பாடல்கள்தான். வேறு விசேஷமான காரணம் ஒன்றுமில்லை. மற்றபடி இதுவொரு சாதாரண வணிகப்படம்.

மொக்கையான திரைப்படங்கள் என்றாலும், இளையராஜா தன் வழக்கமான பாணியில் சிறந்த பாடல்களையும் பின்னணி இசையையும் தருவார் என்பது நமக்குத் தெரியும். ‘அழகாக சிரித்தது இந்த நிலவு’ ‘மாலைகள் இடம் மாறுது.. மாறுது’ ஆகிய இரண்டு பாடல்களை கேட்கும் போதெல்லாம் இந்தத் திரைப்படத்தை என்றாவது பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். அது நேற்றுதான் வாய்த்தது. எனவே அந்த மகத்தான (?!) அனுபவத்தைப் பற்றி பதிவு செய்து விடலாம் என்பதற்காகத்தான் இந்தக் குறிப்பு.

ராஜாவின் அட்டகாசமான டைட்டில் இசையோடு படம் துவங்குகிறது. ஆர்.பூபதி என்கிற இயக்குநரின் பெயரை இப்போதுதான் பார்க்கிறேன். இவர் வேறு எதுவும் திரைப்படம் இயக்கியிருக்கிறாரா என்று கூட எனக்குத் தெரியாது. இப்படி மின்மினிப்பூச்சிகள் போல ஏராளமான இயக்குநர்கள் சொற்ப படங்களோடு மறைந்திருக்கிறார்கள்.

போலவே ஒவ்வொரு திரைப்படத்தின் டைட்டில் கார்டிலும் ‘உதவி இயக்குநர்கள்’ என்கிற பெயர் வரிசையைக் காணும் போதெல்லாம் ‘அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்’ என்று யோசிப்பேன். மிக அபூர்வமாகவே (பின்னாளில்) பிரபலமான பெயரை அந்த வரிசையில் காண முடியும். (பொதுவாக பாரதிராஜா போன்றவர்களின் படங்களில் இது நடக்கும்).

**

இதன் நாயகன் மோகன். இரண்டு நாயகிகள். ரேவதி மற்றும் நளினி. வழக்கம் போலவே மோகனுக்கு அதிக வேலையில்லை. அவருண்டு, அவர் அணியும் அழகான ஜிப்பாக்கள் உண்டு என்று வந்து போகிறார். பாடல் காட்சிகளில் தலையை அசைத்து, தெற்றுப் பல் தெரிய சிரிக்கும் தனது பிரத்யேக மேனரிஸத்தை சரியாக செய்து விடுகிறார். இவர் சட்டை அணியாத காட்சிகளில் இத்தனை பூஞ்சையான உடம்பா என்று பரிதாபமாக இருக்கிறது. மற்றபடி சூப்பர் ஹீரோக்களைத் தாண்டி சாமானிய நாயகர்களின் வரிசையில் ஒரு சிறந்த நடிகர் மோகன்.

ரேவதி துறுதுறுவென்று வந்து போகிறார். கைக்கு அடக்கமான சின்னப் பொம்மை போல அழகாக இருக்கிறார். இவருக்கும் நடிக்க அதிக வாய்ப்பில்லை. குதிரையை நினைவுப்படுத்தும் முகத்தோற்றத்தைக் கொண்ட நளினியை எப்போதுமே எனக்குப் பிடிக்காது. அதிலும் இப்போது மிகவும் புஷ்டியாக ‘நநளிளினினி’யாக மாறி சீரியல்களிலும் காமெடி காட்சிகளிலும் வந்து  பயமுறுத்துகிறார்.

**

இதுவொரு சாதாரண வணிகத் திரைப்படம் என்றாலும் ஒரு சம்பிரதாயமான திரைக்கதையின் ஒழுங்கையும் சுவாரசியத்தையும் சரியாகக் கொண்டிருக்கிறது. எனவே முழு திரைப்படத்தையும் எப்படியோ சகித்து பார்த்து விட முடிந்தது.

ஒரு கொலையுடன் ‘மங்கலகரமாக’ இந்தத் திரைப்படம் துவங்குகிறது. ‘கொலைகாரன் யார்?” என்று அறியும் சுவாரசியத்தில் சில காட்சிகள் அப்படியே நகர்ந்து விடுகின்றன. வரிசையாக கொலைகள் நிகழ்கின்றன. காவல்துறை ‘துப்பு’ துலக்கிக் கொண்டேயிருக்கிறது.

யார் மீது சந்தேகம் வரும்படி காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறதோ, அவன் ‘கொலைகாரன்’ இல்லை என்று எப்படியோ நமக்குத் தோன்றி விடுகிறது. (எத்தனை படங்களில் பார்த்திருப்போம்?!). அதன்படி சிலரை இயக்குநர் காட்டினாலும் அவர்கள் கொலைகாரர்கள் இல்லை என்று தெரிந்து விடுகிறது. என்றாலும் இதற்கான விடை இறுதியில் அறியப்படும் போது சிறிய ஆச்சரியம் வரத்தான் செய்கிறது.

**


மோகன் ஓர் ஓவியர். அதற்கு சாட்சியாக, ஆர்ட் டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்தவர்கள். அவரது வீடெங்கும் திராபையான ஓவியங்களை சுவரெங்கும் மாட்டி வைத்திருக்கிறார்கள், இவருக்கும், பத்திரிகையாளரான ரேவதிக்கும் ஒரு கலாட்டாவான அறிமுகம் நிகழ்ந்து பிறகு நண்பர்களாகிறார்கள். மோகனின் நல்லியல்பை உணரும் ரேவதி அவரால் வசீகரிக்கப்பட்டு தன் காதலைச் சொல்கிறார். ஆனால் மோகனால் அதை ஏற்க முடியாத சூழல்.

ஏறத்தாழ மணிரத்னத்தின் ‘மெளனராகம்’ போன்ற கதைச் சூழல் இங்கு நிகழ்கிறது. இதிலும் மோகன், ரேவதி என்பது தற்செயல் ஆச்சரியம். (தமிழ் சினிமாவின் கதைகளை தொடர்ந்து ஆராய்ந்தால் இப்படி பல ‘தற்செயலான’ ஆச்சரியங்களைக் கண்டு பிடிக்க முடியும்)

ரேவதியின் காதலை மோகனால் ஏன் ஏற்க முடியவில்லை? இங்கு ஒரு பிளாஷ்பேக்.  மோகனின் மனைவியாக நளினி இருந்திருக்கிறார். அவருடைய பிரிவு காரணமாக துயரத்தில் இருக்கிறார் மோகன்.

மோகன் ஓவியர் என்பதால் ஒரு நிர்வாண மாடலாக நளினி நமக்கு அறிமுகமாகிறார். வறுமை காரணமாக இப்படி இருக்க நேர்கிறதே என்று நளினி கலங்குகிறார். இந்த இடத்தில் ஜெயகாந்தனின் சிறுகதை ஒன்று நினைவிற்கு வருகிறது. ஒரு நிர்வாண மாடலுக்கும் பாலியல் தொழிலாளிக்கும் உள்ள தொழில் முரணை, அவற்றின் தரப்பு நியாயங்களை அந்தச் சிறுகதையில் அற்புதமாக சித்தரித்திருப்பார்.

நளினியின் பரிதாப சூழல் காரணமாக அவரைத் திருமணம் செய்து கொள்கிறார் மோகன். (‘உன் மீதுள்ள அனுதாபத்தினால் இது அல்ல’ என்கிற டெம்ப்ளேட் வசனமும் வருகிறது). இன்பமாகச் சென்று கொண்டிருக்கிற அவர்களின்  திருமண வாழ்க்கையில் மோகனுக்குள்ள குடிப்பழக்கம் பெரிய இடையூறாக வருகிறது. நளினியை இழக்க நேர்கிறது.

இதுதான் ரேவதியின் காதல் மறுக்கப்பட்டதற்கான பின்னணிக் காரணம்.

கவர்ச்சிக்காக பபிதா.. ஒய்.விஜயா போன்றவர்கள் வந்து போகிறார்கள். மாறாத விளக்கெண்ணைய் முகபாவத்துடன் இன்ஸ்பெக்டராக ‘நிழல்கள்’ ரவி நடித்திருக்கிறார். (?!). ‘ஆம்பிளை’ நாட்டுக்கட்டையாக சிவச்சந்திரன் (இவருக்கு யாரோ நாராசமாக டப்பிங் குரல் தந்திருக்கிறார்கள்) அவருடைய மனைவியாக ‘குயிலி’, சிறு வில்லனாக இளவரசன் போன்றோர் வந்து போகிறார்கள். ‘ஜெய்ராம்’ என்று ஒவ்வொரு காட்சியிலும் பக்தியுடன் முணுமுணுத்தபடியே வந்து போகும், காவல்துறை உயரதிகாரி டெல்லி கணேஷ், சமகால வலதுசாரிகளை நினைவுப்படுத்துகிறார்.

வி.கோபாலகிருஷ்ணன் எனக்கு பிடித்தமான நடிகர்களில் ஒருவர். இவரைச் சரியாக கையாண்டால் நன்றாக நடிப்பார். ஆனால் ஏவிஎம் ராஜனைப் போலவே இவரை ‘மினி சிவாஜியாக’ கண்ணீர் பிழிய வைத்து பாழ்படுத்தி விட்டார்கள். இதில் நாயகியின் தந்தையாக ‘செட்’ பிராப்பர்ட்டி போல் வந்து போகிறார்.

இவரும் ரேவதியும் உணவருந்தும் ஒரு காட்சியில் திருமணப் பேச்சு தொடர்பாக நிகழும் உரையாடல்  'விசுத்தனமான' காமெடி. 

**

தமிழ் சினிமாவில் கதை இல்லாமல் படம் எடுத்து விடுவார்கள். அப்போதைக்கு ராசியான, அவசியம் தேவைப்படும் வணிகச் சமாச்சாரங்கள் இல்லாமல் படம் எடுக்க மாட்டார்கள். கவுண்டமணி – செந்தில் ஜோடியின் புகழ் உச்சத்தில் பறந்து கொண்டிருந்த காலக்கட்டம் இது. எனவே அவர்களும் இருக்கிறார்கள். செந்தில் அவ்வப்போது வந்து போகிறார் என்றாலும் கவுண்டமணி தொடர்பான காட்சிகள் அதிகம்.

பொதுவாக தமிழ் சினிமாவில் மையக்கதை ஒரு பக்கமாகவும் அதற்குச் சம்பந்தமேயில்லாமல் ‘காமெடி டிராக்’ இன்னொரு பக்கமாகவும் போய்க் கொண்டிருக்கும். ஆனால் ‘கொலைகாரன் யார்?’ என்கிற இதன் மையக்கதைக்கு தொடர்பாகவே காமெடி டிராக் அமைக்கப்பட்டிருப்பது ஒரு சிறிய ஆச்சரியம். கவுண்டமணியின் ‘ஆஸ்தான காமெடி டிராக்’ எழுத்தாளர், ஏ. வீரப்பன்தான் இதை எழுதியிருக்க வேண்டும்.

நாயகனான மோகன் ஓவியர் என்பதால் கவுண்டமணியை கட்டிடங்களுக்கு வெள்ளையடிக்கும் ஆசாமி பாத்திரம் தந்திருக்கிறார்கள். இவரை ‘பெயிண்டர்’ என்று எண்ணி ஒரு பெண் மயங்கும் ‘ஆள்மாறாட்டக்’ காமெடிகளும் உண்டு.

“உசுரைக் கொடுத்து இவங்க பில்டிங்க்க்கு நாம பெயிண்ட் பண்ணிக் குடுக்கிறோம். கட்டிடம் திறந்தப்பறம் நம்மளை உள்ளே அனுமதிப்பாங்களா? மாட்டானுங்க” என்று எம்.ஆர்.ராதா பாணியில் கலக காமெடி செய்யும் காட்சியுடன் கவுண்டமணியின் அறிமுகம் நிகழ்ந்தாலும் போகப் போக இவை சாதாரணக் காட்சிகளாகி விடுகின்றன. ‘நான் பத்தாங்கிளாஸ் பாஸ். அவரு படிக்காதவரு’ என்று கவுண்டமணியை செந்தில் நக்கல் அடிக்கும் வசனம் அப்போதே வந்து விட்டது.

**

ஒரு கட்டத்தில் கொலைகாரன் யார் என்பது ஏறத்தாழ இறுதிப்பகுதிக்கு முன்னால் நமக்குத் தெரிந்து விடுகிறது. அவர் ஏன் வரிசையாக பெண்களைக் கொலை செய்தார் என்பதை விளக்குவதற்காக இன்னொரு பிளாஷ்பேக் வருகிறது. கிளைமாக்ஸூக்கு முன்பு ஒரு ‘பிளாஷ்பேக்’ வைப்பது ஷங்கரின் பாணி என்று நினைத்துக் கொண்டிருந்தால் முன்பே இப்படிச் செய்திருக்கிறார்கள்.

ஆனால் தான் செய்த கொலைகளுக்காக ‘கொலைகாரன்’ சொல்லும் காரணத்திலுள்ள லாஜிக் மிக அபத்தமாக இருக்கிறது. அதிலும் கொலையாவது அனைத்துமே பெண்கள் என்பது ‘கிளுகிளுப்பிற்காக’ போல. இந்தப் பட்டியலில் ‘நிழல்கள்’ ரவியும் ஏன் சேர்க்கப்பட்டார் என்பதற்கான காரணம் படத்தில் சொல்லப்படவில்லை.

ஒரு காவியச் சோகக் காட்சியுடன் படம் நிறைவுறுகிறது. படத்தின் தலைப்பை ஏன் ‘டிசம்பர் பூக்கள்’ என்று இயக்குநர் வைத்தார் என்று தெரியவில்லை. டிசம்பர் பூ பார்ப்பதற்கு வண்ணமயமானது, ஆனால் வாசனையில்லாதது என்று  அசட்டுத்தனமான லாஜிக் ஏதாவது இருக்கலாம். (நல்லவேளை, இறுதி டைட்டில் கார்டில் இதற்கான விளக்கத்தை இயக்குநர் தராதது பெரிய ஆறுதல்). ‘புவனா ஒரு கேள்விக்குறி’ கிளைமாக்ஸ் பாணியில், ரேவதி இறுதியில் வெள்ளைப் புடவையுடன் தோன்றுகிறார்.

**

ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி இளையராஜாவின் இரண்டு பாடல்களும், சில காட்சிகளில் பின்னணி இசையும் நன்றாக அமைந்திருந்தது. கொலைகாரன் தொடர்பான காட்சிகளுக்கெல்லாம் திகிலை உண்டாக்கும் வகையில் பிரத்யேகமான இசையைத் தந்திருந்தார்.

இதன் ஒளிப்பதிவு ராஜராஜன். பொதுவாக இவரின் ஒளிப்பதிவு பாணி எனக்குப் பிடிக்கும். மிக குறிப்பாக அவுட்டோர் காட்சிகள் என்றால் இயற்கையின் பின்னணிகளையும் அதன் அழகியலையும் சிறப்பாக கொண்டு வந்து விடுவார். இதிலும் பாடல் காட்சிகளில் இவர் வைத்திருக்கும் கோணங்களும் அதிலிருந்த வசீகரமும் கவர்ந்தன. ‘இன்டோர்’ காட்சிகள் மிகச் சாதாரணமானவை.

தனியார் தொலைக்காட்சிகள் பெருகாத காலத்தில் தூர்தர்ஷன்தான் கதி. அதில் திரையிடுவதற்கென்றே சிலர் திரைப்படங்களை இயக்குகிறார்களோ என்று சந்தேகம் வரும் வகையில் பல அசட்டுத்தனமான, சலிப்பான திரைப்படங்கள் அதில் ஒளிபரப்பாகும். சிவகுமார் நடித்த பல திரைப்படங்கள் இப்படித்தான் தோன்ற வைக்கும்.

டிசம்பர் பூக்களும் இப்படித்தான். 'டிசம்பர் மாதம் நிறைவுற்றதைக் கொண்டாட இந்தத் திரைப்படத்தைப் பார்த்தேன்' என்று நானும் ஓர் அசட்டுத்தனமான லாஜிக்கை சொல்லி கட்டுரையை நிறைவு செய்கிறேன். 





suresh kannan

2 comments:

Sundar said...

டிசம்பர் பூக்கள் என்பது பாலு மகேந்திரா தனது படம் ஒன்றிற்குச் சூட்டுவதற்காகத் தேர்ந்தெடுத்து வைத்திருந்த தலைப்பு. என்ன காரணத்தாலோ தலைப்பை மாற்றிவிட்டார். பிறகு அவரது அஸிஸ்டண்ட் ஒருவர் தனது படத்திற்கு அந்தத் தலைப்பைச் சூட்டினார் என்று படித்திருக்கிறேன்.

ஹரி நிவாஸ் said...

ennathu gandi settuthaara moment