Thursday, July 02, 2020

Toni Erdmann (2016) - ‘இரு தந்தைகள்'




தந்தை - மகளைப் பற்றிய திரைப்படம். விநோதமான திரைக்கதையைக் கொண்டது. ஜெர்மனி-ஆஸ்ட்ரியா தயாரிப்பு. ஆஸ்கர் விருதிற்காக நாமினேஷன் ஆனது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளையும் விமர்சகர்களின் பாராட்டுக்களையும் பெற்றது  நம்முடைய இயந்திர வாழ்வின் பரபரப்பிற்கு இடையில்  நெருங்கிய உறவுகளை மட்டுமல்லாது  நகைச்சுவை உணர்வையும் கூட தொலைத்து விடுகிறோம் என்பதை அழுத்தமாக சுட்டிக்காட்டும் திரைப்படம்.


***

Winfried Conradi ஓய்வு பெற்ற இசை ஆசிரியர். விவாகரத்து ஆனவர். தன் வயதான தாயுடன் தனிமையில் வாழ்பவர். விநோதமான குணாதிசயத்தைக் கொண்டவர். பொய்ப்பல் மாட்டிக் கொண்டு, விசித்திரமான ஒப்பனை அணிந்து கொண்டு மற்றவர்களை விளையாட்டாக பயமுறுத்துவது வழக்கம். நல்லவர்தான். ஆனால் சமயம் சந்தர்ப்பமில்லாமல் வெள்ளந்தியாக இவர் சொல்லும் 'ஜோக்'  விவஸ்தையற்று இருக்கும். மற்றவர்கள் அதை தவறாக எடுத்துக் கொள்ளவே வாய்ப்பு அதிகம்.

ஊரில் இருந்து வந்திருக்கும் தன் மகள் இனஸை காணச் செல்கிறார் கிழவர். அவளோ மொபைல் போனில் பேசிக் கொண்டே இருக்கிறாள். 'அடுத்த வாரம் உன் ஊருக்கு வருகிறேன். அங்கு சந்திக்கிறேன்' என்று கிளம்பி விடுகிறார். இனஸ் ஓர் ஆலோசனை நிறுவனத்தில் பணிபுரியும் பொறுப்பான அதிகாரி. எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவள். அவளுடைய அலுவகத்தின் வாசலிலேயே காத்திருக்கிறார் கிழவர். சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகே மகள் வருகிறாள். அவள் பார்வையில் படுவது போல செல்கிறார். கோக்குமாக்கான கோலத்தில் நின்று கொண்டிருக்கும் இவரை அவள்  பாராதது போல் சென்று விடுகிறாள்.

ஏமாற்றமடையும் கிழவர்  வெளியே போகும் போது மகளுடைய உதவியாளினி ஓடி வருகிறாள். மகள் செய்திருக்கும் ஏற்பாட்டின் படி ஹோட்டலில் தங்குகிறார். மாலையில் மகள் வந்து  கேட்கிறாள். "காலைல ரொம்ப நேரம் காத்திருந்தீங்களா?". கிழவர் தன் வழக்கப்படி 'நீ ஒரு  மனுஷிதானா?" என்று கேட்க மகளுக்கு முகம் சுருங்கிப் போகிறது. 'சும்மா தமாசுக்கு சொன்னேன்' என்று அவர் சொன்னாலும் அந்த உறவிற்குள் சிறிய நெருடல் நுழைகிறது.

'இப்ப நான் ஒரு முக்கியமான மீட்டிங்கிற்கு போறேன். என் வாழ்க்கையோட எதிர்காலமே இதுல இருக்கு. தயவு செய்து அங்க வந்து எதையும் சொல்லித் தொலைக்காதீங்க" என்கிறாள் இனஸ். மண்டையை ஆட்டிய படி வரும் கிழவர், அந்த முக்கியமான அதிகாரியிடம் வழக்கம் போல் எதையோ சொல்லி விட்டு பின்பு விழிக்கிறார். ஆனால் அந்த அதிகாரிக்கு கிழவரை பிடித்துப் போகிறது என்பது ஆச்சரியம்.  'கிழவர் எப்போது ஊருக்கு கிளம்புவார்' என்று மகளுக்கு எரிச்சலாகிறது.

மறுநாள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் மகளை எழுப்புகிறார் தந்தை. பதறிப் போய் எழுந்திருக்கும் அவள் 'ஏன் முன்னமே எழுப்பவில்லை' என்று கத்துகிறாள். அன்று அவளுக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கிறது. அவள் கத்துவதை திகைப்புடன் பார்க்கும் கிழவர் அன்றே ஊருக்கு கிளம்புகிறார். உள்ளூற எழும் நிம்மதியுடன் தந்தையை அனுப்பி வைத்தாலும் குற்றவுணர்வினால் அழுகிறாள் மகள்.

***

ஹோட்டலில் தன் தோழிகளுடன் இனஸ் சுவாரசியமாக பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு நபர் அந்த உரையாடலில் குறுக்கிடுகிறார். அவரைப் பார்த்து இனஸ் திகைத்துப் போகிறாள். அது அவளது தந்தையேதான். ஊருக்கு அனுப்பி வைத்த ஆசாமி, கோட், சூட் போட்டுக் கொண்டு தலையில் கருப்பு விக்கை மாட்டிக் கொண்டு விநோதமான தோற்றத்தில் இருக்கிறார். இருவரும் ஒருவரையொருவர் காட்டிக் கொள்வதில்லை. 'ஏன் இப்படிச் செய்கிறார்' என்று இனஸூக்கு குழப்பமாகவும் எரிச்சலாகவும் இருக்கிறது.

இனஸின் பணியில் சில சிக்கல்கள் நேர்கின்றன. அதையெல்லாம் அவள் சமாளித்தாக வேண்டும். இதற்கு நடுவில் கிழவர் வேறு இவள் எங்கெல்லாம் செல்கிறாளோ தானும் அங்கெல்லாம் வருகிறார். இவளுடைய தோழிகளிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு ஏதேதோ பேசுகிறார். அவரை தனிமையில் மடக்கும் இனஸ் "அப்பா.. ஏன் இப்படிச் செய்யறீங்க?' என்று கேட்க 'ஸாரி.. நீங்க யாருன்னு தெரியல' என்று நழுவுகிறார். அவருடைய வழியிலேயே சென்று தானும் அந்த ஆட்டத்தை ஆடிப் பார்ப்பது என்று இனஸ் தீர்மானிக்கிறாள்.

தன்னுடைய அலுவலக பணிக்காக செல்லும் போது கிழவரையும் அழைத்துக் கொண்டு போய் நாடகமாடுகிறாள். பிறகு அவளுக்கே அது குறித்து சிரிப்பு வருகிறது. அந்த இடத்தில் கிழவர் ஜபர்தஸ்தாக ஒருவரை விசாரிக்க அவருடைய பணியே பறிபோகும் ஆபத்து ஏற்படுகிறது. மகளை திடீரென்று அழைத்துக் கொண்டு ஒரு வீட்டிற்கு செல்லும் கிழவர் அவளை 'தன்னுடைய உதவியாளினி' என்று சொல்கிறார்.  இப்படியொரு இருவருக்குள்ளும்  பரஸ்பர கண்ணாமூச்சி விளையாட்டு நடக்கிறது.


***

இனஸின் அலுவலக விஷயமாக அவளுக்கு சிக்கல்களும் மனஉளைச்சல்களும் ஏற்படுகின்றன. தன்னுடைய பிறந்த நாள் பார்ட்டியில் அவள் விநோதமாக நடந்து கொள்கிறாள். பிரம்மாண்டமான விசித்திர உருவம்  ஒன்று வீட்டுக்குள்  நுழைவதைக் கண்டு இனஸ் முதலில் பயந்தாலும் அது தன் தந்தையின் விளையாட்டுத்தனம் என்று பிறகு தெரிகிறது. அந்த நேரத்தில் அந்தக் குறும்பு அவளுக்கு தேவையாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது. கண்ணீருடன் தன் தந்தையைக் கட்டியணைத்துக் கொள்கிறாள்.

சில நாட்கள் கழித்து தன்னுடைய பாட்டியின் மரணத்தின் போது தந்தையை சந்திக்க நேர்கிறது. 'வாழ்வின் ஒவ்வொரு சாத்தியமான நொடியையும் நகைச்சுவையுடன் கழிக்க முயல்வதுதான் இந்த பரபரப்பான உலகத்தை எதிர்கொள்வதற்கு அவசியமானது' என்கிற படிப்பினை அவளுக்கு கிடைக்கிறது. தனது தந்தையைப் போல தானும் ஒரு குறும்பை இனஸ் செய்வதுடன் படம் நிறைகிறது.
 

ஜெர்மனியைச் சேர்ந்த பெண் இயக்குநரான Maren Ade உருவாக்கிய இந்த திரைப்படத்தில் கிழவராக Peter Simonischek மற்றும் மகளாக Sandra Hüller அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

No comments: