Wednesday, July 01, 2020

I Dont Feel at Home in This World Anymore (2017) - ‘புலியாகும் பூனை'





ஓர் அற்புதமான திரைக்கதை என்பது நாம் வழி தவறி காட்டுக்குள் சென்று விட்டதைப் போன்று எதிர்பாராத ஆச்சரியங்களையும் திருப்பங்களையும் இயல்பாக கொண்டிருக்க வேண்டும். அவ்வாறான வசீகரத்தைக் கொண்டிருக்கிறது இந்த அமெரிக்கத்  திரைப்படம். தனது முதல் படைப்பையே அபாரமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் Macon Blair.

**

நடுத்தர வயது பெண்மணியான ரூத் மருத்துவமனையில் பணிபுரிகிறவர். வாழ்க்கையின் மீது சலிப்பும் பதட்டமும் கொண்டிருக்கிறவர். க்யூவில் தன்னை எளிதாக முந்திச் செல்லும் நபரை ஏதும் செய்ய இயலாத சராசரி கோழை. தனது வீட்டின் முன்னால் தினமும் நாயின் மலம் இருப்பதைக் கண்டு எரிச்சலுடன் துடைத்துப் போடுகிறார். நாயோடு தன் வீட்டை கடந்து செல்லும் ஓர் இளைஞனை கூப்பிட்டு சண்டை போடுகிறார்.

ஒரு நாள் ... தனது வீட்டிற்குள் திருடன் வந்து சென்றிருப்பதை ரூத் உணர்கிறார். லேப்டாப், பாட்டியின் வெள்ளி பொருட்கள், மருந்துகள் காணவில்லை. போலீஸ் வந்து ஆராய்ந்து விட்டு 'கதவை சரியா பூட்டினீங்களா?" என்று இவரையே கேள்வி கேட்டு விட்டு கிளம்பி விடுகிறார்கள். எரிச்சலாகும் ரூத் அக்கம் பக்கத்தில் விசாரிக்கிறாள். உபயோகமான தகவல் கிடைப்பதில்லை. திருடனின் காலடித் தடம் கிடைக்கிறது.

தனது லேப்டாபை எவரோ உபயோகித்துக் கொண்டிருப்பதை அதனுடன் இணைத்திருக்கும் தன் செல்போனின் மூலம் உணர்கிறார் ரூத். காவல்துறையில் சொன்னால் வழக்கம் போல் ஏதோ சாக்கு சொல்கிறார்கள். செல்போன் சுட்டிக் காட்டும் இடத்திற்கு சென்று பார்க்கிறார். தடிப்பசங்களாக நாலைந்து பேர் இருக்கிறார்கள். தயக்கத்துடன் திரும்பி வந்து  நாய்ச் சண்டையின் மூலம் நண்பனாகி விட்ட இளைஞனை உதவிக்கு அழைக்கிறார். உண்மையில் அவனும் ஒரு பயந்தாங்கொள்ளிதான். ஆனால் தனக்குத் தெரியும் அரைகுறை கராத்தேவை ஃபிலிம் காட்டிக் கொண்டு வருகிறான். ஆனால் இன்னொரு புறம் சாமி கும்பிடுகிறான்.

உள்ளூற பயத்துடன்தான் அங்கே செல்கிறார்கள். ஆனால் தடியர்கள் லேப்டாப்பை எதிர்ப்பேயின்றி தந்து விடுகிறார்கள். விசாரித்ததில் கள்ள மார்க்கெட்டில் ஒரு கிழவரிடம் வாங்கியது என்கிற தகவல் வருகிறது. மறுநாள் இளைஞனையும் கூட்டிக் கொண்டு அங்கு செல்கிறார் ரூத். பாட்டியின் வெள்ளிப் பொருட்கள் இருக்கின்றன. ரகசியமாக எடுத்துக் கொண்டு வரும் போது கடைக்கார கிழவனுடன் சண்டை நடக்கிறது. தன் வீட்டிற்கு வந்த திருடனை அங்கு பார்க்கிறாள். இந்தக் களேபரத்தில் அவனைப் பின்தொடர முடியவில்லை. ஆனால் கூட இருந்த இளைஞன் திருடனின் வண்டி எண்ணை குறித்து வைத்திருக்கிறான்.

**

விலாசத்தை விசாரித்து அங்கு செல்கிறார்கள். பணக்காரத்தனமான வீடு. தங்களை போலீஸ் என்று பொய்யாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள்.  திருடனின் தாய் விநோதமாக சிரித்துக் கொண்டே வரவேற்கிறார்; சிரித்துக் கொண்டே பேசுகிறார். 'அவன் என் கணவனின் பையன். தறுதலையா சுத்திட்டிருக்கான். போதைப் பழக்கமும் உண்டு. இப்ப திருடக் கத்துக்கிட்டான் போல". அப்போது திருடனின் தந்தை வருகிறார். முதல் பார்வையிலேயே இவர்கள் டுபாக்கூர் போலீஸ் என்பதை கண்டுபிடித்து விட்டு முரட்டுத்தனமாக விசாரிக்கிறார். ரூத் நடந்தையெல்லாம் சொல்கிறாள். 'சரி. எவ்ள பணம் வேணும்" என்று அவர் கேட்க 'பணமெல்லாம் வேணாம். இப்படிச் செய்யறது தப்பு ன்னு உங்க பையனுக்கு புரியணும். அது போதும்" என்று ரூத் சொல்ல குழப்பமாகும் அவர் 'சரி கிளம்புங்க' என்கிறார்.

வெளியே செல்லும் அவர்களை திருடன் தனது கூட்டாளிகளுடன் பார்த்துக் கொண்டிருக்கிறான். மறுநாள் .. அந்த திருடன் மறுபடி ரூத் வீட்டிற்கு வருகிறான். 'எதுக்கு எங்க அப்பாவை வந்து பார்த்தே" என்று அவன் கேட்கும் போது பதட்டத்தில்  ரூத் அவனைத் தாக்கி விடுகிறார். அவன் திகைப்புடன் வீட்டிற்கு வெளியே ஓடி செல்ல ஒரு வாகனம் அவன் மீது மோதிச் சிதறடிக்கிறது. இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் கூட்டாளிகள் ரூத்தை தாக்கி அழைத்துச் செல்கிறார்கள்.

பணக்கார வீட்டிற்கு ரூத்தை அழைத்துச் சென்று அவள் பின்னால் நின்று கொள்ளையடிப்பது அவர்களின் நோக்கம். ஒரு நிலையில் திருடனின் தந்தையை அவர்கள் கொல்ல முயல, ரூத் இதைத் தடுக்கிறார். சிக்கலாக சில பல மரணங்கள் நிகழ்கின்றன. ரூத்தின் நண்பனுக்கும் பயங்கர காயம் ஏற்படுகிறது. இருவரும் எப்படியோ தப்பிக்கிறார்கள். பிரதான வில்லன் இவர்களை கொலைவெறியுடன் துரத்துகிறான். சில பல சாகசங்களுக்குப் பிறகு இருவரும் தப்பிக்கிறார்கள். இயற்கையால் கிடைத்த தண்டனையில் வில்லன் இறக்கிறான்.

**

'அடுத்த காட்சியில் என்ன நிகழும்' என்று யூகிக்கவே முடியாமல் நகரும் திரைக்கதையே இந்த திரைப்படத்தின் பெரிய பலம். நடுத்தர வயது பெண்மணி ரூத்தாக Melanie Lynskey அற்புதமாக நடித்திருக்கிறார். தெனாலி கமல் போல எல்லாவற்றிற்கும் பயந்த பெண்மணி தனக்கு ஏற்படும் அனுபவங்கள் காரணமாக எப்படி அந்த தடைகளைத் தாண்டி வருகிறாள் என்கிற மாற்றம் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.  இனி அவரால் எந்தச் சிக்கலையும் எதிர்கொள்ள இயலும்.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

No comments: