Thursday, July 23, 2020

Jackals (2017) - ‘குள்ளநரி மனிதர்கள்'





‘இருக்கை நுனியில் அமர வைத்த கிளைமாக்ஸ்’ என்று சில திரைப்படங்களைப் பற்றி எழுதுவார்கள்.. ஆனால் படம் முழுவதுமே அப்படியான காட்சிகளால் நிறைந்திருக்கும் ஹாரர் –திரில்லர்தான் Jackals. 1980-ல் நிகழ்வதாக சித்தரிக்கப்படுகிறது. கொலைவெறியுடன் திரியும் ரகசியக்குழுவில் சிக்கும் இளைஞனை அவனது குடும்பமே இணைந்து மீட்க முயல்வதுதான் கதை. மகனை மீட்டார்களா அல்லது அவர்களே மாட்டிக் கொண்டார்களா?

**

பல்வேறு காரணங்களால் சக மனிதர்களை வெறுக்கும், அவர்களை சாகடிக்க முயலும் ரகசியவாத குழுக்கள் உலகம் முழுவதும் உள்ளன. சமீபத்திய பயங்கரமான ‘ப்ளூவேல்’ விளையாட்டுக் குழுவும் அப்படித்தான். தற்கொலை எண்ணமுள்ளவர்கள், இந்த பூமிக்கு பாரம், சாகட்டுமே என்று நினைக்கும் குருரமானவர்கள். உலகம் முழுவதும் பரவியுள்ளதாக சொல்லப்படும் ‘இலுமினாட்டி’யும் அப்படியொரு ரகசியக் குழு என்கிறார்கள்.

ஓர் இளைஞன் தன்னுடைய குடும்பத்திற்குள் சென்று பெற்றோரையும் தங்கையையும் சாவகாசமாக கொல்லும் காட்சியோடு திரைப்படம் துவங்கிறது. அவர்கள் யார் என்றெல்லாம் சொல்லப்படுவதில்லை. இந்தக் குழுவின் பயங்கரத்தை உணர்த்த. அவ்வளவே.

இரு இளைஞர்கள் காரில் வேகமாக பயணிக்கும் போது கார் டயர் பஞ்சர் ஆகிறது. அதை அவர்கள் சரிசெய்து கொண்டிருக்கும் போது இன்னொரு வாகனத்தில் வரும் இருவர், இவர்களை தாக்கி விட்டு ஒரு இளைஞனை மட்டும் மயக்கப்படுத்தி கொண்டு செல்கிறார்கள். தாக்கியவர்களில் ஒருவர் இளைஞனின் தந்தை.

அவர் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? ஜஸ்டின் அவர்களின் மகன். கொலைவெறி ரகசியக்குழுவிடம் இணைந்து அவனும் கொடூரனாகி விட்டான். அவனுடைய மனதை மாற்றுவதற்காக ஒதுக்குப்புறமாகவுள்ள தன் வீட்டிற்கு வலுக்கட்டயமாக அழைத்துச் செல்கிறார் தந்தை. முரட்டுத்தனமாக செயல்படும் ஜஸ்டினிடம் பேசி மனதை மாற்ற ஜிம்மி என்பவர் கூட வருகிறார்.

இவர்களின் வருகைக்காக வீட்டில் காத்திருப்பவர்கள் தாய், சகோதரன், ஜஸ்டினின் காதலி சமந்தா, அவர்களின் குழந்தை. வீட்டின் மாடியறையில் ஜஸ்டினை இழுத்துச் சென்று ஒரு நாற்காலியில் இறுக்கமாக கட்டிப் போடுகிறார்கள். இல்லையென்றால் அவனால் இவர்களது உயிருக்கே கூட ஆபத்து நேரிடலாம். ஜிம்மிக்கு இந்த ஆபத்து பற்றி நன்கு தெரியும்.

மயக்கம் தெளிந்த ஜஸ்டின் எல்லோரையும் வெறித்துப் பார்க்கிறான். ‘என்னை அவிழ்த்து விடுங்கள். என் பெயர் ஜஸ்டின் இல்லை” என்று வெறித்தனமாக கத்துகிறான். ரகசியக் குழுவில் அவனுடைய பெயர் வேறு. சகோதரன் ஜஸ்டினை வெறுப்புடன் பார்க்கிறான். ‘இந்த முரடனை ஏன் வரவழைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று அவனுக்கு கோபம். ‘ஐயோ.. என் பிள்ளை இத்தனை பயங்கரமாக பேச மாட்டானே” என்று தாய் பதறுகிறாள். அருகில் பாசமாக செல்லும் அவளுடைய காதை வெறியுடன் கடிக்கிறான் ஜஸ்டின். எப்படியோ இழுத்து சமாளிக்கிறார்கள்.

ஜிம்மி எத்தனையோ பேசிப் பார்த்தும் ஜஸ்டின் அப்படியேதான் இருக்கிறான். அவனது காதலி சமந்தா, தன் குழந்தையுடன் வந்து  பாசமாக பேசுகிறாள். ம்ஹூம்…

இரவு நேரம் வருகிறது. வெளியே எவரோ அமர்ந்திருப்பதை ஜஸ்டினின் தந்தை பார்க்கிறார். ‘நான் போய் பார்த்து விட்டு வருகிறேன்’ என்று ஜிம்மி கிளம்புகிறார். இருட்டில் அமர்ந்திருப்பது ஒரு இளம்பெண். இவர் துரத்தினால் நகர்வதில்லை அருகில் செல்லும் போது விருட்டென்று மறைந்து விடுகிறாள்.

அவள் அங்கு ஏதோ வரைந்து வைத்திருக்கிறாள். ஜிம்மி அருகில் சென்று பார்க்கிறார். ரகசியக்குழுவின் அடையாளக்குறி. ஜஸ்டினின் காதருகில் உள்ள அதே அடையாளம். இவர்கள் எப்படி தங்களைப் பின்தொடர்ந்து வந்தார்கள் என்று ஜிம்மிக்கு ஆச்சரியம். இவர்கள் தாக்கிய இன்னொரு இளைஞன் மயக்கம் தெளிந்து பின்னால் வந்திருக்க வேண்டும்.

ஜிம்மி அந்த மாயப் பெண்ணை துரத்திச் செல்லும் போது மேலேயிருந்து வீசப்படும் கயிற்றில் சிக்குகிறார். அப்போதுதான் தெரிகிறது.. ஒருவர் அல்ல.. பல நபர்கள் அந்த வீட்டைச் சுற்றி நிற்கிறார்கள். நரியைப் போன்ற முகமூடியுடன் அணிந்து குழுவாக நகரும் அவர்களின் இயக்கமே அச்சமூட்டுவதாக இருக்கிறது. இளம்பெண் ஓடிவந்து அநாயசமாக ஜிம்மியின் கழுத்தில் கத்தியைப் பாய்ச்சுகிறாள்.

வீட்டின் உள்ளே இருந்து பார்க்கிறவர்கள் அதிர்ந்து போகிறார்கள். கதவு, சன்னல் என்று எல்லாவற்றையும் அடைக்கிறார்கள். காவல்துறையின் உதவியை நாடலாம் என்று தொலைபேசியை எடுத்தால் வேலை செய்வதில்லை. அக்கம் பக்கத்தில் நடமாட்டம் இல்லாத இடம். ஒரு மைல் தூரத்திற்கு ஓடிச் சென்றால்தான் அடுத்த வீடு. ஆனால் வெளியில் சென்றால் குள்ளநரிக் குழு கடித்துக் குதறி விடும்.

ஒரு குழந்தை உட்பட உள்ளே மாட்டிக் கொண்டிருப்பவர்கள் நால்வர். கூடவே இருக்கும் வெடிகுண்டு ஜஸ்டின். வெளியே கொலைவெறிக்குழு. எப்படி தப்பிப்பார்கள்? கொலைகாரரர்கள் அவசரப்படுவதில்லை. இவர்கள் வெளியே வரும் வரை மெளனமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘அவர்கள் என்னை மீட்க வந்திருக்கிறார்கள்’ என்று ஜஸ்டின் குரூரமாகப் புன்னகைக்கிறான்.

குழுவில் உள்ள குள்ளநரி முகமூடி ஒன்று மெல்ல வீட்டினுள் நுழையப் பார்க்கிறது. சமந்தாவின் கையைப் பிடித்து வெளியே இழுக்கிறது. ஜஸ்டினின் தந்தை அவளைக் காப்பாற்றுகிறார். “அவர்களுக்கு இவன்தானே வேண்டும், பேசாமல் இவனை வெளியே தள்ளிவிட்டு நாம் தப்பிக்கலாம்” என்று கத்துகிறான் சகோதரன். ஆனால் பெற்றோர் அதற்கு ஒப்புக் கொள்வதில்லை.

மெல்ல மெல்ல தாக்குதல்கள் ஆரம்பிக்கின்றன. அவர்கள் அவசரப்படவேயில்லை. உள்ளே நுழையும் ஒருவனை ஜஸ்டினின் தந்தை மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு சாகடிக்கிறார். என்றாலும் மெல்ல மெல்ல ஒருவர் ஒருவராக வருகிறார்கள். குழந்தை வீறிட்டுக் கத்துகிறது.

‘நான் பின்பக்க கதவின் வழியாக வெளியேறி ஓடிச் சென்று பக்கத்தில் உதவியை கேட்கிறேன்’ என்று சகோதரன் வெளியே ஓடுகிறான். ஆனால் சாமர்த்தியமாக சென்றாலும் அவர்களிடம் மாட்டிக் கொள்கிறான். முதலில் அவனுடைய கையை எரிக்கிறார்கள். இதை வீட்டிற்குள் இருந்து பார்க்கிற தாய், பாசத்தில் வெளியே செல்ல அவளும் மாட்டிக் கொள்கிறாள்.

கட்டப்பட்டிருக்கும் ஜஸ்டின் சந்தோஷக் கூச்சலிடுகிறான். அவனை கழற்றி வெளியே அனுப்பினால் தப்பிக்க முடியுமா? அனுப்பினாலும் தம்மைக் கொன்று விடுவார்களா? குழப்பம்.. பதட்டம்… பயம்….

வேறு வழியில்லாமல் அவனைக் கழற்றி விடுகிறார்கள். அவன் மெல்ல வெளியே செல்கிறான். ஆனால் சகோதரனையும் தாயையும் மெல்ல மெல்ல அவர்கள் சாகடிக்கிறார்கள். வேறு வழியில்லை. ஜஸ்டினின் தந்தை, சமந்தாவிற்கு ஓர் உபாயம் சொல்கிறார். “நான் வெளியே சென்று அவர்களை திசை திருப்புகிறேன். நீ குழந்தையை தூக்கிக் கொண்டு வேகமாக ஓடி விடு”.

அவ்வாறே வெளியில் சென்று  அவர் குழுவிடம் போராடுகிறார். எல்லோரையும் முகமூடிக் குழு சாகடிக்கிறது. சமந்தா குழந்தையை தூக்கிக் கொண்டு பதைபதைப்புடன் நீண்ட தூரம் ஓடுகிறாள். தப்பித்து விட்டோம் என்று நினைக்கும் போது…. பின்னால்....

எப்படியாவது அனைவரும் தப்பித்து விடுவார்கள் என்று நாம் நினைக்கும் போது அதற்கு எதிர்திசையில் செல்வதுதான் இந்த திரைக்கதையின் சாகசம். முதலும் முடிவும் இல்லாமல் இருந்தாலும் பரபரப்பான திகில் காட்சிகளுக்காக பார்ககலாம். இயக்கம். Kevin Greutert.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

No comments: