Saturday, July 11, 2020

Black Butterfly (2017) - ‘எழுத்தாளனின் கனவு'





பரமபத விளையாட்டு போல அமைந்த அபாரமான திரைக்கதைதான் இந்த  திரைப்படத்தின் முக்கியமான சுவாரசியம். ஆனாலும் ஒருவகையில் போங்காட்டம்.

***

Paul ஓர் எழுத்தாளன். கடந்த காலத்தில் வெற்றிகரமாக இருந்தவன். ஆனால் இப்போது எழுதலாம் என்று அமர்ந்தால் எதுவும் தோன்றுவதில்லை. மண்டையில் சரக்கு தீர்ந்து விட்டதோ என்னமோ. எனவே எப்போதும் சரக்கும் கையுமாக போதையில் இருக்கிறான். இருக்கையில் அமர்ந்தபடி அப்படியே உறங்கி விடுகிறான்.

நகரை விட்டு தள்ளியிருக்கும் ஒதுக்குப்புறமான வீட்டில் தனிமையில் வாழும் அவன் எழுதிய சமீபத்திய நாவல் 'குப்பை' என்று நிராகரிக்கப்படுகிறது. நொந்து போகும் எழுத்தாளன் தனது வீட்டை விற்று விட முடிவு செய்கிறான். ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கும் பெண்ணிடம் பேசி விட்டு நகரத்திற்கு செல்கிறான்.  முன்னால் ஒரு வாகனம் வழிவிடாமல் ஆட்டம் காட்டிக் கொண்டே செல்கிறது. எரிச்சலாகும் பால், ஒருவழியாக அந்த வாகனத்தை தாண்டிச் சென்று  டிரைவரை திட்டி விட்டுச் செல்கிறான்.

ரியல் எஸ்டேட் பெண்ணுடன் எழுத்தாளன் உணவகத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது வழிவிடாமல் தகராறு செய்த வண்டியின் டிரைவர் வருகிறான். இருவருக்கும் சிறிய தள்ளுமுள்ளு நடக்கிறது. அப்போது அருகிலிருக்கும் வலுவான ஓர் இளைஞன் எழுந்து வந்து தகராறு செய்யும் டிரைவரைத் தாக்கி எழுத்தாளனைக் காப்பாற்றுகிறான்.

நன்றியுணர்ச்சி காரணமாக, நாடோடியாக சுற்றிக் கொண்டிருக்கும் அந்த இளைஞனுக்கு தன் வீட்டில் இடம் தருகிறான் எழுத்தாளன். இளைஞன் மிக உதவியாக இருக்கிறான். வீட்டை பழுது பார்க்கிறான்; சமைத்துப் போடுகிறான்.

'எழுதுவற்கான விஷயம் எதுவும் மண்டையில் தோன்றவில்லை' என்று எழுத்தாளன் சொல்லும் போது இளைஞன் ஒரு யோசனை தருகிறான். டிரைவருடன் தகராறு, வழியில் காப்பாற்றும் ஓர் இளைஞன். அவனுக்கு அடைக்கலம்... என்று அப்போது நடக்கும் சம்பவங்களை வைத்தே ஒரு நாவல் எழுதலாமே என்கிறான். இருவரும் அதைப் பற்றி தொடர்ந்து உரையாடுகிறார்கள்.

***


ஒரு கட்டத்தில் இளைஞனின் மீது எழுத்தாளனுக்கு சந்தேகம் எழுகிறது. அவன் வெளியே சென்றிருக்கும் போது அவனது பையை ஆராய்கிறான். அப்போதுதான் அந்த அதிர்ச்சியான விஷயம் தெரிகிறது. அவன் சிறையிலிருந்து தப்பி வந்திருக்கும் ஒரு குற்றவாளி. எழுத்தாளனுக்கு வியர்த்துப் போகிறது.

மிகச்சரியாக இந்தச் சமயத்தில்  வந்து விடும் இளைஞன் 'ஓ கண்டுபிடித்து விட்டாயா, இனி மேல் நீ என் அடிமை. எனக்குத் தெரியாமல் நீ எதுவும் செய்யக்கூடாது. எங்கும் போகக்கூடாது' என்று துப்பாக்கியைக் காட்டி எழுத்தாளனை வீட்டிற்குள் தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறான். வேலியில் போன ஓணானை ஜீன்ஸ் பேண்ட்டிற்குள் விட்டுக் கொண்ட கதையாகி விட்டது எழுத்தாளனுக்கு.

இப்படியான கொழுத்த ராகுகால நேரத்தில் அசந்தர்ப்பமாக எழுத்தாளனின் வீட்டிற்கு வருகிறாள் ரியல் எஸ்டேட் பெண். எனவே அவளும் பணயக் கைதியாக மாட்டிக் கொள்கிறாள்.

எழுத்தாளனும் ரியல்எஸ்டேட் பெண்ணும் தப்பிக்கும் முயற்சிகளை எல்லாம் தோற்கடிக்கிறான் இளைஞன். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணும் செத்துப் போகிறாள். அந்தப் பக்கமாக ரோந்து வரும் காவலரையும் இளைஞன் சுட்டுக் கொல்கிறான்.

ஓர் அதிர்ஷ்டகரமான தருணத்தில் துப்பாக்கி எழுத்தாளனிடம் கிடைக்கிறது.  நிலைமை தலைகீழாகிறது. இப்போது எழுத்தாளன் இளைஞனை மிரட்டுகிறான். இருவருக்குமான உரையாடலில் நமக்கு ஒரு விஷயம் புரிகிறது. எழுத்தாளனின் மனைவி மட்டுமல்லாமல், அந்தப் பிரதேசத்தில் காணாமற் போன பெண்களுக்கும் எழுத்தாளனுக்கும் பூடகமான தொடர்பிருக்கிறது.

எழுத்தாளன் இளைஞனை நோக்கி சுடுகிறான். ஆனால் எதுவும் நேர்வதில்லை. போலியான குண்டுகள்.

***

தாம் கைது செய்யப்படும் போதுதான் எழுத்தாளனுக்கு எல்லாமே புரிகிறது. ரியல் எஸ்டேட் பெண், வழியில் தகராறு செய்த டிரைவர், அந்த நாடோடி இளைஞன், ரோந்து வந்த போலீஸ்காரர்  என எல்லோருமே காவல்துறையைச் சேர்ந்தவர்கள். சிவாஜி நடித்த 'புதிய பறவை' திரைப்படத்தைப் போல  எழுத்தாளனின் குற்றங்களை அவனே ஒப்புக் கொள்ளும் வகையில் இந்த 'கோப்பால்கள்' நடித்திருக்கிறார்கள்.

இளைஞன் எழுத்தாளனிடம் விசாரணை செய்கிறான். ஆனால் எழுத்தாளன் தம் குற்றங்களை மறுக்கிறான். சாமர்த்தியமாக அதிலிருந்து நழுவ முயற்சிக்கிறான். 'இது நான் எழுதிய கதை. முடிவு என்னுடைய விருப்பம் போலத்தான் அமைய வேண்டும்' என்று இருவருமே பிடிவாதம் பிடிக்கிறார்கள். வேறு வழியில்லை, எழுத்தாளன் சட்டத்தின் பிடியில் சிக்கித்தான் ஆக வேண்டும்.

***

எழுத்தாளன் திடுக்கிட்டு எழுகிறான். அதுவரை நடந்த சம்பவங்களையெல்லாம் மடமடவென்று ஒரு தாளில் எழுதத் துவங்குகிறான்.

புரியவில்லையா, கட்டுரையின் தலைப்பை ஒருமுறை படியுங்கள்.


எழுத்தாளனாக Antonio Banderas. இளைஞனாக Jonathan Rhys Meyers. இருவரின் அபாரமான நடிப்பிற்காகவும் சுவாரசியமாக அமைக்கப்பட்ட திரைக்கதைக்காகவும் இந்த திரைப்படத்தை நிச்சயம் பார்க்கலாம். நடக்கும் சம்பவங்களையும் எழுதவிருக்கும் நாவலையும் இணைத்து இருவருக்குள்ளும் நிகழும் உரையாடல்கள் சுவாரசியம். அற்புதமாக இயக்கியிருப்பவர் Brian Goodman.

என்னவொன்று, படம் முடிந்ததும் சற்று நேரம் 'ஙே' என்று முழிக்க வேண்டியிருக்கும்.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

No comments: