Tuesday, July 21, 2020

The Zookeeper's Wife -2017 - ‘மனித காட்சிச்சாலை'





நாஜிகளால் யூதர்கள் பல்வேறு விதமாக கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள் பற்றி ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வந்துள்ளன. அந்த வரிசையில் இதுவொன்று. போர் பற்றிய சித்திரமாக இல்லாமல், மிருகங்களை நேசிக்கும் மனிதநேயப் பெண் ஒருவரின் பார்வையின் வழியாக விரிகிறது.

தங்களின் உயிரைப் பணயம் வைத்து முந்நூறுக்கும் மேலாக யூதர்களை தப்ப வைத்து அவர்களை தங்களின் பராமரிப்பில் ஒளித்து வைத்த ஒரு குடும்பத்தைப் பற்றிய உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.

**

வருடம் 1939.  போலந்து நாட்டின் வார்சா நகரம். அங்குள்ள பிரம்மாண்டமான மிருகக்காட்சி சாலையின் பராமரிப்பாளராக இருப்பவர் டாக்டர். ஜேன். அவருடைய மனைவி அன்டோனியா. அவள் அனைத்து மிருகங்களின் அன்பையும் பெற்றிருப்பவள். அவளது ஒவ்வொரு அசைவையும் அவை பிரியத்துடன் கண்டுகொள்ளும். மிருகக்காட்சி சாலையில் உள்ள எல்லா மிருகங்களுக்கும் காலை வாழ்த்து சொல்வதில்தான் அன்டோனியாவின் நாள் துவங்கும்.

இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்து கொண்டிருந்த சமயம். ஜெர்மனியின் படை போலந்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது. அங்குள்ள பலர் நகரத்தை விட்டு வெளியேறுகிறார்கள். குறிப்பாக யூதர்கள் உயிர் பயத்தோடு தப்பியோடுகிறார்கள்.

ஜெர்மனியின் வான்வழித் தாக்குதல் நடக்கிறது. குண்டு மழை பொழிகிறது. இதில் மிருகக்காட்சி சாலையும் பாதிப்படைகிறது. மிருகங்கள் பதட்டத்துடன் தப்பிக்கப் பார்க்கின்றன. பல மிருகங்கள் சாகின்றன. அவற்றின் மீது அன்பு வைத்துள்ள அன்டோனியா பதறிப் போகிறாள். ஆனால் ஏதும் செய்ய இயலாத நிலைமை.

அவர்களின் குடும்பமும் ஊரை விட்டு வெளியேற முடிவு செய்கிறது. அன்டோனியாவிற்கு மிருகங்களை விட்டு பிரிய மனமில்லை. கணவனிடம் சொல்லிப் பார்க்கிறாள். ம்ஹூம்.. பலனில்லை. நிலைமையும் நாளுக்கு நாள் மோசமாகிறது. ஆனால் போர் சூழல் காரணமாக அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதால் அவர்கள் மறுபடியும் அங்கு திரும்பி வருகிறார்கள்.

பெர்லின் மிருகக்காட்சி தலைமையாளரான லட்ஸ் ஹெக் அங்கு வருகிறார். அவர் ஒரு ஜெர்மானியர். அன்டோனியாவிடம் தன் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறார். அங்குள்ள முக்கியமான மிருகங்களை பெர்லினுக்கு எடுத்துச் செல்வதாக சொல்கிறார். போர் முடிந்ததும் மீண்டும் அவற்றை திருப்பித் தருவதாக சொல்கிறார்.  அன்டோனியாவால் அதைத் தடுக்க முடியவில்லை. வேறு வழியும் இல்லை.

இறைச்சிக்காகவும் பாடம் செய்து பெருமையுடன் வரவேற்பறையில் மாட்டி வைப்பதற்காகவும் அங்குள்ள சில மிருகங்களை சுட்டுக் கொல்கிறார் லட்ஸ். அவருடைய நோக்கம் குறித்து அன்டேனானியாவிற்கு சந்தேகம் வருகிறது. ஆனால் பலமுள்ள ஜெர்மானிய படையை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலைமை.
**

போலந்தின் வதை முகாமில் அடைக்கப்பட்டுள்ள யூதர்கள் விதம்விதமாக கொடுமைப்படுத்தப்படுவதைக் கண்டு மனம் வருந்துகிறார் அன்டோனியாவின் கணவர். அங்குள்ள சிலருக்காவது உதவ வேண்டும் என்று அவருக்குத் தோன்றுகிறது.

எனவே மனைவியுடன் இணைந்து ஒரு திட்டம் போடுகிறார். வீணாக உள்ள மிருகக்காட்சி சாலையில் பன்றிப் பண்ணை ஒன்று ஆரம்பிப்பது. அதற்கான காய்கறிக் கழிவுகளை முகாமில் இருந்து கொண்டு வருவது. அப்போது கழிவுகளின் உள்ளே சில யூதர்களை ஒளித்து தப்பிக்க வைத்து அழைத்து வருவது.

ஆனால் இது மிகவும் ஆபத்தான திட்டம். ஏனெனில் யூதருக்கு எவராவது ஒரு குவளை தண்ணீர் தந்தால் கூட சுட்டுக் கொல்லப்படும் கொடுமையான நிலைமை அமலில் இருந்தது.

லட்ஸிடம் இதற்கான அனுமதி கேட்கிறார்கள். அவர் தயங்கும் போது ‘பன்றிப் பண்ணையின் மூலம் ராணுவ வீரர்களுக்கான இறைச்சி கிடைக்கும்’ என்று சொல்லி ஒப்புக் கொள்ள வைக்கிறார்கள்.

மிகுந்த பதட்டத்துடன் ஒவ்வொரு நாளும் யூதர்களை தன் வசிப்பிடத்திற்கு கொண்டு வருகிறார் டாக்டர். ஜேன். ஜெர்மனி ராணுவ வீரர்களால் வன்கலவிற்கு ஆளான ஓர் இளம்பெண்ணும் அதில் அடக்கம். விருந்தினர்களை வீட்டின் தரைத்தளத்தில் அன்புடன் தங்க வைக்கிறார் அன்டோனியா. போர் சூழலில் தங்களுக்கான உணவு கிடைப்பதே சிரமம் எனும் போது அவர்களையும் சமாளிக்கிறார். எவருடைய கண்ணிலும் அவர்கள் படாமல் மறைத்து வைப்பது இன்னொரு சவால்.

தன் வீட்டில் மறைந்து இருப்பவர்களுக்காக போலி அனுமதிச் சீட்டு வாங்கி அங்கிருப்பது அனுப்பி வைப்பது இன்னொரு திட்டம். வந்தவர்களை தன்னுடைய உறவினர்கள் என்று மற்றவர்களை நம்ப வைக்கிறார்.

ஜெர்மானியரான லட்ஸ்க்கு அன்டோனியாவின் மீது ஒரு கண். இக்கட்டான ஒரு சூழலின் போது ஒளிந்துள்ளவர்கள் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக அவருடைய கவனத்தை திசைதிருப்ப முத்தம் தர வேண்டிய நிலைமை அன்டோனியாவிற்கு ஏற்படுகிறது. இவர்கள் பழகுவதைப் பார்த்து அன்டோனியாவின் கணவருக்கு சந்தேகம் வருகிறது. குடும்பத்திற்குள் சண்டை மூள்கிறது. அன்டோனியா தன் நிலைமையை விளக்கிச் சொன்னாலும் பலனில்லை. என்றாலும் சண்டையின் சூடு மெல்ல தணிகிறது.

போர் சூழலின் நிலைமை மாறுகிறது. ரஷ்யப் படையின் கை ஓங்குவதால் ஜெர்மனி வீரர்கள் அச்சமடைகிறார்கள். இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளுர் புரட்சிப்படை ஒன்று ஜெர்மானியர்களைத் தாக்குகிறது. இந்த மோதலில் அன்டோனியாவின் கணவன் சுடப்படுகிறான்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட அன்டோனியா துயரமடைகிறாள். தன் கணவனைக் காப்பாற்ற, லட்ஸின் உதவியை நாடுகிறாள். இதற்காக தன் உடலைத் தரவும் தயாராக இருக்கிறாள்.

அன்டோனியாவின் குடும்பம் யூதர்களை ஒளித்து வைத்த விஷயத்தை லட்ஸ் அறிகிறான். பயங்கர கோபம் கொள்கிறான். அவன் வருவதற்குள் அனைத்து யூதர்களையும் தப்பிக்க வைக்கிறாள் அன்டோனியா. கோபத்தில் அவளுடைய மகனை சுடும் அளவிற்கு கோபம் கொள்கிறான் லட்ஸ். ஆனால் நல்லவேளையாக அவன் மனம் மாறுகிறது.

போர் முடிவிற்கு வருகிறது. ஜெர்மானியவர்கள் வார்ஸாவை விட்டு வெளியேறுகிறார்கள். அன்டோனியாவின் குடும்பம் மிருகக்காட்சி சாலைக்கு மறுபடியும் வருகிறது. அவளுடைய கணவனும் உயிரோடுதான் இருக்கிறான். அந்த இடத்தை அவர்கள் புதுப்பிப்பதோடு படம் நிறைகிறது.

**

நூற்றுக்கணக்கான யூதர்களை நாஜியின் கொடுமைகளில் இருந்து உயிரோடு தப்பிக்க வைத்ததற்காக அன்டோனியா தம்பதிக்கு விருது கிடைக்கிறது. இந்த மிருகக்காட்சி சாலை இன்றும் வார்ஸாவில் இயங்குகிறது.

பெண் இயக்குநரான Niki Caro இத்திரைப்படத்தை அற்புதமான இயக்கியுள்ளார். படம் முழுவதும் நெகிழ்வான காட்சிகளால் நிறைந்துள்ளன.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

No comments: