Thursday, January 09, 2020

ரஜினி – முருகதாஸின் ‘காட்டு தர்பார்’



 
பொதுவாக ரஜினியின் வணிக சினிமா அரசியல் மீதும் அல்லது அவர் அரசியலுக்கு வருவதாக சொல்லிக் கொண்டிருக்கும் பூச்சாண்டி விளையாட்டு மீதும் பல விமர்சனங்களை வைத்தாலும் அவர் திரைப்படம் வரும் போது ‘பார்த்துதான் வைப்போமே’ என்கிற மெல்லிய ஆவல் சராசரியான நபருக்கு எழுவது இயல்புதான். வெறித்தனமான ரசிகர்கள் உருவாக்கும் ஆரம்ப அலை அடங்கியவுடன் குடும்பம் குடும்பமாக சென்று அவரின் திரைப்படங்களைப் பார்ப்பது ஒரு தமிழ் மரபு. அந்த வகையில் ரஜினியின் charisma இன்னமும் பெரிதாக அடங்கி விடவில்லை என்பது உண்மை.

ஆனால் ‘தர்பார்’ வெளியீட்டில் இவ்வகையான சந்தடிகள் எதையும் அதிகம் பார்க்க முடியவில்லை. ரஜினி மறுபடியும் ‘கமர்சியல்’ சந்தைக்குள் நுழைந்திருப்பது மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி விட்டதா?

தர்பார் - இது எதைப் பற்றிய திரைப்படம்?

ஆதித்யா அருணாச்சலம் (ரஜினிகாந்த்) ரவுடிகளை ‘கன்னா பின்னாவென்று’ என்கவுன்டரில் போட்டுத்தள்ளும் ஒரு வெறி கொண்ட காவல்அதிகாரியாக நமக்கு அறிமுகமாகிறார். அவர் ஏன் அப்படி மூர்க்கத்தனமாகிறார் என்பதை ஒரு பின்கதையின் வழியாக சொல்கிறார்கள்.

ஆக.. காவல்துறை அதிகாரியின் வீரத்தை, பெருமிதத்தை, அரச பயங்கரவாதத்தின் கொலைகளை கண்மூடித்தனமாக ஆராதிக்கும் திரைப்படம் இது. ஹரியின் ‘சாமி’ ‘சிங்கம்’ போன்றவைகளின் இன்னொரு வெர்ஷன். அவ்வளவே. புதுமையாக எதுவுமில்லை.

ஒருவகையில் இது எழுபது, எண்பதுகளில் வெளியாகும் திரைப்படத்தைப் போலவே பலவிதமான கிளிஷேக்களுடன் உள்ளது. ஒரு நேர்மையான காவல் அதிகாரி, எதிரிகளால் தன் பிரியமான உறவை இழப்பார். அதற்கு பழிவாங்க கிளம்புவார். ‘தர்பாரின்’ ஒன்லைனும் இதே அரதப்பழசுதான்.

**

முதலில் இந்தத் திரைப்படத்திலுள்ள நல்ல (அப்படியாகத் தோன்றும்) விஷயங்களை பார்த்து விடுவோம்.

முன்பே குறிப்பிட்டது போல ரஜினியின் வசீகரம் இன்னமும் குறையவில்லை என்பதை ஒப்புக் கொண்டேயாக வேண்டும். இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தின் வேறெந்த முன்னணி நடிகருக்கு கூட இப்படியொரு வசீகரத்தன்மை பெரிதும்  குறையாமல் இருக்குமா என்று தெரியவில்லை. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் ஒரு காலத்தில் இளசுகள் முதல் பெரிசுகள் வரை செல்வாக்கு பெற்றிருந்த ஜாக்கிசானின் வெற்றி கூட இப்போது அடங்கி விட்டது.

‘தர்பாரில்’ ரஜினி ஸ்டைலாக நடக்கிறார், ஆக்ஷன் செய்கிறார், குறும்புகள் செய்கிறார். சில காட்சிகள் காமெடியாக இருந்தாலும் பார்ப்பதற்கு அப்படியொன்றும் பெரிய முரணாகத் தெரியவில்லை. மனதிற்குள்ளாக ரசிக்கத்தான் செய்கிறோம். (இளமைப் பருவம் முதல் ரஜினியைப் பார்த்து வளர்ந்ததால் அப்படித் தோன்றுகிறதா அல்லது தமிழ் சினிமாவின் தொடர்ச்சியான அபத்தங்கள் நம்மை அவ்வாறு கண்டிஷன் செய்து விட்டதா என்பது ஆய்வுக்குரியது). ஆக்ஷன் காட்சிகள் போலி என்பதை அறிந்தாலும் இந்த வயதில் இப்படி வேகமாக உடலை அசைப்பதே ஒரு சாகசம்தான்.

திரைப்படத்தின் முதல் பாதியில் வரும் ‘ஆள்மாறாட்ட’ குற்றங்கள், அதைப் பற்றிய விசாரணைகள் போன்றவை சற்று நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. அதற்குப் பிறகு படம் முழுக்க டொங்கலாகி விடுகிறது. பாவம் சுனில் ஷெட்டி. திடகாத்திரமான உடம்புடன் தமிழில் வில்லனாக அறிமுகமாகியிருக்கிறார். ஆனால் எக்ஸ்ட்ரா நடிகர் போலவே அவரை குறைவாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். திடகாத்திரமான ஒருவரைத் தேர்ந்தெடுத்து விட்டு அவரது சுண்டுவிரலை மட்டுமே திரைக்கதையில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

மெயின் வில்லனின் பாத்திரம் அழுத்தமாகவும் சுவாரசியமாகவும் அமைந்தால்தான் நாயகனின் சாகசங்களும் அதிகம் எடுபடும். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இது நிரூபிக்கப்பட்டதொன்று.

இவற்றைத் தாண்டி ரஜினி செய்யும் தனிநபர் சாகசங்கள் பலவும் ‘காமெடியாக’ இருக்கின்றன. கமிஷனர் என்கிற அதிகாரத்தில் இருந்தாலும் எந்தவொரு குற்றவாளியைப் பிடிக்க வேண்டுமானாலும் மற்றவர்களை ஓரமாக நிற்க சொல்லி விட்டு இவரே தன்னந்தனியாக சென்று ‘ஹீரோத்தனத்தை’ நிறுவுகிறார். இப்படிப்பட்ட காட்சிகள் அபத்தமாகவும் காமெடியாகவும் இருக்கின்றன. ஒரு இண்டர்நேஷனல் குற்றவாளியைப் பிடிக்க சம்பந்தப்பட்ட நாடுகள் உதவி செய்ய முன்வந்தாலும் ‘நானே தனியாப் பிடிக்கறேன்’ என்று ஹீரோத்தனம் செய்ய இவர் அடம்பிடிக்கும் போது இந்த காமெடியின் அளவு உச்சத்திற்குப் போகிறது.

ஒருபக்கம் என்கவுன்டர் போலீஸாக இருந்து கொண்டு இன்னொரு பக்கம் அழகான பெண்ணிடம் பேசுவதற்கு வாய் குழறுவதாக இவர் செய்யும் நகைச்சுவை இருக்கிறதே.. அபத்தம். ஒரு காரெக்ட்டரின் நம்பகத்தன்மை எப்படி சீரழிந்தால் என்ன, ஒரு திரைப்படத்தில் ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என்று அனைத்து நவரசக்குப்பைகளும் வந்து விட வேண்டும் என்று இயக்குநர்கள் கிணற்றுத் தவளையாக யோசிப்பதால் வரும் வினை இது.

நாயகி என்றொருவர் இருக்க வேண்டும் என்கிற சம்பிரதாயத்திற்காக நயன்தாரா. நல்லவேளை, டூயட் எல்லாம் வைத்து இயக்குநர் நம்மைச் சோதிக்கவில்லை. ஆனால் டூயட் இல்லையே.. தவிர இதர அசட்டுத்தனமான ரொமான்ஸ் எல்லாம் நடக்கிறது.

ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ். கமலின் மகளாக ஒரு படத்தில் நடித்து விட்டதால் ரஜினியின் மகளாக இன்னொன்றில் நடிக்க விரதம் இருந்தாரோ. என்னமோ. ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவு இதில் அழுத்தமாக வெளிப்படவில்லை. ஒருவகையில் இதுதான் பழிவாங்கலின் அடிப்படையே. என்றாலும் தன் ‘கடைசி வீடியோ’வில் இவர் பேசுவது நன்று.

முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு மொக்கையான கவுண்ட்டர் வசனம் பேசுவதை இன்னமும் எத்தனை நாளைக்கு ‘காமெடி’ என்று யோகிபாபுவும் பெரும்பான்மையான தமிழ் ரசிகர்களும் நினைத்துக் கொண்டிருக்கப் போகிறார்களோ என்று தெரியவில்லை.

‘கல்யாணம் பண்ண வேண்டிய வயசுல ஒரு பொண்ணை வெச்சிக்கிட்டு.. இந்த வயசுல.. எங்க வீட்டு பெண்ணை லவ் பண்றியே.. நியாயமா?” என்று ரஜினியை ஒரு பாத்திரம் கேள்வி கேட்கிறது. ‘ஹே.. சூப்பர்பா..’என்று தோன்றியது அந்தக் காட்சியில்தான். தன் மகள் வயது நாயகிகளுடன் ரஜினி டூயட் பாடிய அத்தனை காட்சிகளும் அந்த ஒரு நொடியில் நம் கண் முன் வந்து போகின்றன. ரஜினி படத்திலேயே அவரை நாசூக்காக சவட்டியிருக்கும் முருகதாஸிற்கு பாராட்டு.

‘படையப்பா’ திரைப்படத்தில் உடம்பை முறுக்கி ரஜினி சண்டையிடும் காட்சியைப் பார்த்து ‘வாட் அ மேன்?’ என்று அப்பாஸ் வியக்கும் நகைச்சுவைக் காட்சி ஒன்று உண்டல்லவா? அப்படியே இதிலும் ஒன்று இருக்கிறது. உடற்பயிற்சி செய்யும் ரஜினியின் முறுக்கேறிய உடலை க்ளோசப்பில் காட்டுகிறார்கள். தமிழ் சினிமாவில் VFX டிபார்ட்மெண்ட் எத்தனை தரமாக முன்னேறியுள்ளது என்பதற்கு இந்தக் காட்சி ஓர் உதாரணம்.

இதைப் போலவே, தங்கப் பதக்கம்’ திரைப்படத்தில் மனைவி இறந்த செய்தியைக் கேட்டவுடனேயே விறைப்பு குறையாமல் சல்யூட் அடித்து விட்டு தடுமாறி விழச் சென்று பிறகு சமாளித்துக் கொண்டு சிவாஜி செல்வார் அல்லவா? அப்படியொரு நகைச்சுவையும் இதில் உண்டு. முருகதாஸின் டீமில் அறுபதைக் கடந்த உதவி இயக்குநர் எவரோ இருக்கிறார் போலிருக்கிறது. அவர் ‘சிவாஜி’யின் வெறிபிடித்த ரசிகராகவும் இருக்கக்கூடும்.

மும்பையின் நிழல் உலகு பின்னணியில் நிகழ்ந்திருக்கும் இந்தக் காமெடி கலாட்டாவை இயக்குநர் ‘ராம்கோபால் வர்மா’ ஒருவேளை பார்த்தால் எப்படியெல்லாம் டிவிட்டரில் கிண்டலடிப்பார் என்றொரு கற்பனை ஓடியது. அப்படி கந்தர கோலமாக ரவுடிகளை ஹாண்டில் செய்திருக்கிறார்கள்.

மிகுந்த போராட்டங்களுக்குப் பிறகு திருநங்கைகள், காவல்துறை உள்ளிட்ட அரசு பதவிகளில் அமரத் துவங்கி விட்ட காலம் இது. ஆனால் இயக்குநருக்கோ நடிகருக்கோ இது குறித்த சமூக உணர்ச்சி எதுவுமில்லை. ‘பணம் கொடுத்தால் அவர்கள் வாழ்த்தி நடனமாடுவார்கள்’ என்பதையே காட்டியிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் ஒரு திருநங்கையை ‘எக்ஸ்ட்ரா’ நிமிடங்கள் கட்டிப்பிடித்து கிளுகிளுப்பாகிறார் ரஜினி. காமெடியாம்.

சந்தோஷ் சிவன் போன்ற திறமையான ஒளிப்பதிவாளர்கள், இது போன்ற சாதாரண திரைப்படங்களுக்கு தங்களின் உழைப்பைக் கொட்டுவது அநீதி. அனிருத்தின் பாடல்களும் சரி, பின்னணி இசையும சரி. எதையும் அவர் ‘கிழிக்க’வில்லை. நம் காதுகள்தான் கிழிகின்றன.

‘இளம் வயது நாயகிகளுடன் டூயட் பாடி நடிப்பது எனக்கே சங்கடமாக இருக்கிறது. இனி என் வயதிற்கு ஏற்ற பாத்திரங்களில் நடிக்கவிருக்கிறேன்” என்று சுயபரிசீலனையுடன் தன்னை உணர்ந்து அறிவித்த ரஜினி, (அதற்கு லிங்கா போன்ற சில தோல்விகளும் காரணம்) ‘கபாலி’ ‘காலா’ என்று சரியான திசைக்கு தடம் மாறினார். அவையும் வணிகத் திரைப்படங்கள்தான் என்றாலும் ரஜினி நடிப்பதற்கு ஏற்ற இடம் அந்தத் திரைக்கதையில் இருந்தது. ஆனால் ஒரு தீவிர ரசிகனாக எண்பதுகளின் ரஜினியை மீண்டும் கொண்டு வருகிறேன் பேர்வழி என்று ‘பேட்ட’யின் மூலம்  ரஜினி என்கிற தேரை இழுத்து வந்து பழைய சாக்கடையில் இறக்கி விட்டார் கார்த்திக் சுப்புராஜ்.

‘அடடா.. சொல்லியிருக்கக்கூடாதா.. நானும் இந்த மாதிரி பண்றதுல.. பெரிய ஆளாச்சே’ என்று முருகதாஸூம் தேர் பயணத்தை சாக்கடையில் இன்னமும் ஆழமாக இறக்கியிருக்கிறார். விளைவு ‘தர்பார்’.

இந்த அழகில் தமிழ் சினிமாவில் ‘கதை’ என்கிற வஸ்து இருப்பதாக நம்பி அதற்காக கதை, திருட்டு, பஞ்சாயத்து எல்லாம் நடப்பதாக கேள்விப்படும் போது எப்படி சிரிப்பது என்றே தெரியவில்லை.


**

இப்படிப்பட்ட க்ளிஷேக்கள், காமெடிகள், பொழுபோக்கு  போன்றவற்றைத் தாண்டி கருத்தியல் ரீதியாகவும் இதுவொரு ஆபத்தான திரைப்படம். ஏனெனில் இதில் வரும் காவல்அதிகாரியான ‘ஆதித்யா அருணாச்சலம்’ கண்மூடித்தனமான ‘என்கவுன்டர்’ ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்கிறார். இவர் சுட்டுத் தள்ளுகிறவர்கள் எல்லாம் நிச்சயம் ரவுடிகள்தானாம். இந்த லட்சணத்தில் ‘மனித உரிமை கமிஷன்’ அதிகாரியையே துப்பாக்கி முனையில் தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத வகையில் மிரட்டுகிறார். முருகதாஸின் வித்தியாசமான ‘சிந்தனை’ இது.

இந்தியாவில் இதுவரை நடந்த என்கவுன்டர் கொலைகளில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் எளிய சமூகத்தினராக இருப்பதில் ஏதோ ஒரு விந்தையுள்ளது. குற்றம் செய்ததாக வலுவாக சந்தேகப்படும் ஒரு அமைச்சரின் மகனோ, அரசாங்கத்தின் உயர் அதிகாரியின் மகனோ ‘என்கவுண்டரில்’ போட்டுத் தள்ளப்பட்டதாக வரலாறு இல்லை. .

காவல்துறையும் நீதித்துறையும் பெரும்பாலும் அழுகிப் போயிருக்கும் சூழலில் ‘கொடூரமான குற்றவாளி’ என்று உறுதிப்படுத்தப்பட்ட ஒரு ஆசாமியை, சட்டத்தின் வழியாக சென்று தண்டிக்க முடியாது என்கிற நடைமுறை காரணம் கருதி, ஒரு நேர்மையான காவல்துறை ஆசாமி ‘என்கவுன்டராக’ கொலை கூட ஏதோ ஒருவகையான நியாயமுள்ளது. நான் சட்டத்தையும் நீதியையும் முழுக்க நம்புபவன் என்றாலும் இதையும் சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது. ஆனால் நடக்கும் ‘என்கவுன்டர்கள்’ எல்லாமே இப்படிப்பட்ட ‘நேர்மையுடனா” நடக்கின்றன?

ஒரு சமூகத்தின் கூட்டு மனச்சாட்சியை தற்காலிகமாக திருப்திப்படுத்தவும், உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றி ஒளித்து விட்டு அந்த இடத்தில் எளியவர்களை பலியிடும் சடங்காக அல்லவா ‘என்கவுன்டர்கள்’ அமைந்திருக்கின்றன?

இந்தச் சூழலில் தமிழ் சினிமாவும் ‘என்கவுன்டர்களை’ பெருமிதப்படுத்தி உருவாக்குவதில் உள்ள ஆபத்தை உணர்ந்திருப்பது போல் தெரியவில்லை. குருதிப்புனல் திரைப்படத்தில் கமலுக்கும் நாசருக்கும் ஒர் அற்புதமான உரையாடல் நடைபெறும். குறைந்தபட்சம் அப்படியொரு சமநிலையான காட்சி கூட இது போன்ற ‘போலீஸ்’ திரைப்படங்களில் இருப்பதில்லை.

இந்த நோக்கில் ரஜினியும் முருதாஸும் இணைந்து ‘காட்டு தர்பார்’ நடத்தியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.





suresh kannan

4 comments:

Sunil kumar said...

அட்டகாசமான நேர்மையான முதல் விமர்சனம்...

poppu said...

அங்கங்கே ரஜினியை ரசிக்க முடிகிறது என்பது நேர்மையான ஒப்புதல் வாக்குமூலம். தரப்பு வரிந்து கட்டாத ஒரு திரை ரசிகனின் விமரசனம். ரசிகர்கள் ரஜினியைக் கொண்டாடுவது எரிச்சலூட்டுகிறது் ஆனாலும் தர்பார் போஸ்டர்களைக் காணாமல் கடந்து விட முடிவதில்லை என்பது உண்மையே.

Rinnozah said...

அருமையான, நேர்மையான விமர்சனம் with typical ‘Suresh Kannan’ touch.

raajselvaa said...

Just now i have seen Pigil with family through sun tv...rubbish at its best...children and adult are laughing while watching...f@%k this movie...if it is a sports film ..definitely no doubt some real sports film directors will commit suicide...Paandiyamma character used is the real murder of cinema...even some low budjet movies r better compared with these Vijays mass films...as u told these films should not become hits...these type of movies have to be utter flops ...then only some quality films will come...i hope and pray this Durbar will be an utter flop ...please God show mercy...