Saturday, June 19, 2010

ராவணன் - அபத்தமான இதிகாச 'ரீமிக்ஸ்'

சத்தியவான் சாவித்திரியை 'ரோஜா'வாகவும் மகாபாரதத்தை 'தளபதி'யாகவும் ரீமிக்ஸ் செய்த மணிரத்னத்திற்கு இராமாயணத்தை மாத்திரம் ஏன் விட்டுவைப்பானேன் என்று ஒர் அகால நேரத்தில் தோன்றியிருக்க வேண்டும். விளைவு ராவணன்.

நல்ல குணாதிசயங்கள் கொண்டிருக்கிறவரை ஹீரோவாக சித்தரிப்பதெல்லாம் எம்.ஜி.ஆர் காலத்திலேயே வழக்கொழிந்து போய் விட்டதால்,  நவீன நடைமுறைக்கேற்ப காலங்காலமாக நாட்டார் கதைகள் முதற்கொண்டு கதாகாலட்சேபங்கள் வரை நமக்கு 'கெட்டவனாவே' சித்தரிக்கப்படும் ராவணனை 'நாயகனாக' சித்தரிக்க முயன்றிருக்கிறார். ஆனால் இந்த காரியத்தை பல வருடங்களுக்கு முன்பே ஆர்.எஸ்.மனோகர் அவரது புராண நாடகத்தில் நிகழ்த்தி விட்டார். ராவணன் ஒரு சிறந்த இசைகலைஞன் என்பதும் கடுமையான தவவலிமை மூலமாக ஈஸ்வரனுக்கு நிகராக 'இராவணேஸ்வரனாக' விளங்கினான் என்பதுமாக அந்த ஆளுமையின் பல நல்ல விஷயங்கள் அந்த நாடகத்தின் மூலமாகவே எனக்கு தெரிய வந்தது.

மணிரத்னம் தனது 'காவிய வில்லனை' எப்படி சித்தரித்திருக்கிறார் என்று ஆவலோடு சென்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியது. மணிரத்னத்தின் அடிப்படை பிரச்சினையே எந்தவொரு தீவிரமான சமூகப்பிரச்சினையையும் மேலோட்டமான பாவனையோடு அதீத அழகுணர்ச்சியோடு அணுகி அதை ரொமாண்டிசைஸ் செய்து அதன் மையத்தின் கூர்மையை மழுங்கச் செய்வது. ஏனெனில் அவரின் பெரும்பாலான மேட்டுக்குடி பார்வையாளர்களிடம் இந்த வகையான சாக்லெட்தான் செல்லுபடியாகும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார். ரோஜா படத்தின் மூலம் அவர் தேசிய நீரோட்டத்தில் கலந்த பிறகு 'தனது படங்களை எப்படி வெற்றிகரமாக மார்க்கெட் செய்வது' என்பதிலேயே அவர் கவனம் முழுவதும் மையம் கொண்டிருக்கிறது. எனவேதான் முதலாளித்துவத்தின் அழுத்தமான பிம்பமான திருபாய் அம்பானியை நாயக ஆராதனை செய்ததும் அதில் வரும் ஒரு கம்யூனிஸ பாத்திரத்தை 'கையாலாகதவனாய்' கிண்டலடித்ததும்.


சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாசனையுடன் கூடிய இந்தப் படத்தின் பிரதான பாத்திரமான 'வீரய்யா' பழங்குடி கிராம மக்களின் பிரதிநிதியாகயும் அதிகார மையத்தை எதிர்த்து புரட்சி செய்பவனாகவும் சித்தரிக்கப்படுகிறான். ஆனால் அதற்கான எந்தவிதமான தடயங்களோ அழுத்தமான காட்சிகளோ படத்தில் இல்லவே இல்லை. மொத்தப்படமுமே ஏதோ லயோலா கல்லூரியின் பணக்கார மாணவர்கள் பழங்குடி மக்களாக வேடமிட்டு ஆடும் 'கல்ச்சுரல் டிராமா' போலவே இருக்கிறது. ('கோடு போட்டா' என்கிற பாடல் இதற்கான மிகச் சிறந்த உதாரணம்)  முன்பே சொன்னது போல பழங்குடி மக்களின் பிரச்சினைகளைத் தொடாமல் அவர்களின் நிலப்பரப்பை பார்ம் ஹவுஸ் போல் மிகை அழகுணர்ச்சியுடன் சித்தரித்து பார்வையாளனுக்கு எந்த அசெளகரியத்தையும் தர விரும்பாமல் கிளுகிளுப்பாக அமர வைத்திருக்கிறார். ஒருவேளை மும்பை தாராவி மக்களின் பின்புலத்தில் ஒரு சமீப படத்தை உருவாக்கினாரெனில் குழந்தைகள் வீட்டின் முன்னாலேயே மலம் கழிப்பதை 'லாங் ஷாட்டிலும்' மலத்தின் மீது மொய்க்கும் ஈயின் இறக்கைகளை 'டைட் குளோசப்' ஷாட்டிலும் அழகுணர்ச்சியுடன் காட்டுவாராக இருக்கும்.

ஓர் உண்மையான கலைஞனுக்கு சமூகப் பிரச்சினைகள் குறித்த இருக்க வேண்டிய அடிப்படை கோபமும் அறவுணர்ச்சியும் பொறுப்புணர்வும் மணிரத்னத்திடம் இல்லை. ஷங்கர் போன்று வணிகரீதியாக வெற்றி பெறுகிற, தொழில் நுட்பத்தை சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொள்கிற இயக்குநர்களின் பட்டியலில் அவர் பெயரைச் சேர்க்கலாமே ஒழிய ஒரு படைப்பாளியாக, கலைஞனாக அவரின் பெயர் இடம் பெறுவது சந்தேகமே.

மணிரத்னத்தின் படங்களிலிருக்கும் இந்த  பிரச்சினை குறித்த,  மேற்சொன்னவாறான விமர்சனங்கள் இருந்தாலும் அவரின் திரைக்கதை எனக்கு எப்போதுமே திருப்தியையும் பிரமிப்பையும் இதுவரை ஏற்படுத்தியிருந்தது.  சிறந்த இந்திய திரைக்கதையாசிரியர்களின் பட்டியலில் பிரதான இடத்தையே அவருக்குத் தர நான் விரும்புவேன். திரைப்பட ஊடகத்தின் அடிப்படை வடிவத்திற்கு முரணாக, நாடகத்தின் செல்லூயாயிட் வடிவமாக சலிக்காமல் நீள நீளமாக உரையாடிக் கொண்டிருந்த சினிமாவை காட்சிகளால் நகர்த்திச் செல்ல முயன்ற முதன்மையான இயக்குநர்களில் மணிரத்னத்தின் பங்களிப்பு தனித்துவமானது. ஆனால் 'ராவணனில்' அந்தத் தகுதியையும் இழந்து பரிதாபமாக நின்றிருக்கிறார் இயக்குநர்.

'முதல் வரியிலிலேயே கதையைச் சொல்ல ஆரம்பித்து விடு' என்கிற சுஜாதாவின் வழிகாட்டுதலுக்கேற்ப படம் ஐஸ்வர்யா ராய் கடத்தப்படும் ஆரம்பக் காட்சியிலேயே  விறுவிறுப்பாக துவங்குகிறது. 'அட' என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் படம் அந்த இடத்திலிருந்து இடைவேளை எனும் கற்பிதம் வரை துளிக்கூட நகரவில்லை. அதற்குப்  பின்பு ஐஸ்வர்யா ஏன் கடத்தப்பட்டார் என்பது பார்வையாளனுக்கு விளங்க வைக்கப்பட்ட பிறகுதான் அந்த சம்பவத்தின் அழுத்தமும் நியாயமும் அவனுக்கு புரிகிறது. அதுவரை ராவணன் சீதையை நோக்கி 'எச்சில் தெறித்து விடாமல்' கற்போடு ஜொள் விட்டுக் கொண்டிருப்பதை திரும்ப திரும்ப சலிக்கும் வரை நாம் பார்க்க நேர்கிறது. ஒரு காட்சியில் கை மேலே பட்டு விடாமல் அரை அடி உயர்த்தி ஐஸ்வர்யாவின் மார்புகள் உட்பட உடம்பு முழுவதும் தடவுகிறார் விக்ரம். இதற்கும் காதலர்கள் முத்தமிட்டுக் கொள்ளும் போது பூ வந்து மறைக்கும் காட்சிகளுக்கும் அதிக வித்தியாசமில்லை.

காட்சிகளை உருவாக்கும் விதத்தில் பழைய மணிரத்ன படங்களில் இருக்கும் மெனக்கெடலும் நம்பகத்தன்மையும் இல்லை. பழங்குடி மக்களும் ஐஸ்வர்யாவை மீட்க வந்திருக்கும் அதிரடிப்படையும் மோதும் வெடிகுண்டு காட்சிகள் மிக அமெச்சூராக இருக்கிறது. இதை விட ரோஜா'வின் ஆரம்பக் காட்சிகள் பல மடங்கு தரத்தில்  சிறப்பாக உருவாக்கப்பட்டிரு்நதன. தருக்க ரீதியாகவும் நிறைய சருக்கல்கள். தன் தங்கையை கற்பழித்த மரணத்திற்கு காரணமான காவல் அதிகாரியை வீரய்யா அப்படியா வெறுமனே நிர்வாணப்படுத்தி உயிரோடு விட்டு விடுவான்' என்பது பாத்திர வடிவமைப்பின் நம்பகத்தன்மையைக் கேலி செய்கிறது.

இந்த 'திரைக்கதை' விஷயத்தில் முதன்முறையாக மணிரத்னத்தின் படத்திலிருந்து அதிருப்தியாக வெளியே வந்தேன். என்றாலும் ஐஸ்வர்யா விக்ரம் மீது அதுவரை கொண்டிருக்கிற வெறுப்பிலிருந்து விடுபட்டு மெல்லிய நேசம் ஏற்படுத்திக் கொள்கிற அந்த பரிணாமத்தின் பயணத்தை சிறப்பாகவே கொண்டு வந்திருக்கிறார்.

()

ஒரு கதாபாத்திரத்திற்காக இப்படியா ஒருவன் உயிரைக் கொடுத்து நடிப்பான்? பாலா மாத்திரம் இந்த வைரத்தை கண்டுபிடிக்காமலிருந்தால் இன்னும் எத்தனை வருடத்திற்கு நிலக்கரியாக அல்லல்பட்டிருப்பாரோ? படத்தின் மிகப்பெரிய ஆறுதல் விக்ரம்தான். ஆனால் பிதாமகனில் சித்தரிக்கப் பட்டிருக்கிற அதே மாதிரியான ஆக்ரோஷ பாத்திரத்தை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் சீக்கிரம் சலித்துப் போய்விடும் அபாயத்தை அவர் உணர வேண்டும். மணிரத்னமாவது இவரின் பாத்திரத்தை வேறுவிதமாக வடிவமைத்திருக்கலாம். இந்தி வடிவத்தில் இவர் பிருத்விராஜின் காவல் அதிகாரி பாத்திரத்தில் நடித்திருப்பதாக கேள்விப்பட்டேன். இதற்காகவாவது இந்தி வடிவத்தை பார்க்க வேண்டும். ஒரே நேரத்தில் இருமொழி படப்பிடிப்புகளும் நிகழ்ந்த நிலையில்,  இரண்டு முரண்பட்ட பாத்திரங்களுக்கு அடுத்தடுத்த கணங்களில் தாவிக் குதிப்பது மிகச் சிரமமான காரியம். ஒரு பாத்திரத்தின் தாக்கத்திலிருந்து விடுபட்டு உடனே இன்னொரு பாத்திரத்தின் வடிவமைப்பிற்கு மாறுவது அத்தனை எளிதான காரியமல்ல.

ஐஸ்வர்யா சில பிரேம்களில் தற்செயலாக  அழகாய் இருக்கிறார்தான். இல்லையென்று  சொல்லவில்லை. ஆனால் உலக அழகி பட்டம் பெற்று ஒரு மாமாங்கம் ஆகிறதே? ஏன் இதை மணிரத்னம் உணரவில்லை. மணிமணியாக எத்தனை திறமையான இளம் நடிகைகள் இருக்கிறார்கள்? அவர் 'எந்திரனில்' ரஜினிக்கு நாயகியாக நடிக்கிறார் என்பதிலாவது அதில் ஒரு தருக்கரீதியான பொருத்தமும் நியாயமும் இருக்கிறது. :-) இதில் ஏன்? 14 நாட்கள் தொடர்ந்து காட்டில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர் பல காட்சிகளில் அநியாய புத்துணர்ச்சியுடனும் ஒப்பனையுடனும் இருப்பது பொருத்தமாக இல்லை. கிளைமாக்சில் விக்ரமுடன் உரையாடும் அந்த காட்சிகளில் மாத்திரம் அவரின் முகபாவங்களும் நடிப்பும் சிறப்பாக இருந்தது.

ஓர் ஆக்ரோஷமான காவல் அதிகாரி பாத்திரம் பிருத்விராஜிற்கு. பாவம் அமுல் பேபி மாதிரியான முகத்தை கூடுமானவரைக்கும் கடுமையாக வைத்துக் கொண்டு அவர் நியாயம் செய்திருக்க முயன்றாலும் எடுபடவில்லை. ஒரு பாத்திரத்தின் சிறந்த வெளிப்பாட்டிற்கு casting எத்தனை முக்கியம் என்பதற்கு மிகச் சிறந்த எதிர்உதாரணம் பிருத்விராஜ். ராவணன் ஒரு வேளை 'ஹோமோ'வாக இருந்திருந்தால் ஐஸ்வர்யாவை விட்டு விட்டு இவரைத்தான் கடத்தியிருப்பான். அத்தனை மென்மையாக மொழுமொழு வென்றிருக்கிறார்.'ஏன் உங்க கை இத்தனை முரடு' என்று வசனம் வைத்து இந்தக் குறையை சமன் செய்ய முயன்றிருக்கிறார் இயக்குநர்.

பிரபு கார்த்திக். 'அய்யோ ராமா'வென்று ஓவென்று கத்த வேண்டும் போலிருக்கிறது. பிரபுவையாவது ஒழிந்து போகிறதென்று சகித்துக் கொண்டு தொலைக்கலாம். கார்த்திக்கின் அக்கிரமம் தாங்கவேயில்லை. அக்னிநட்சத்திரம், மெளனராகம்... என்று ஒரு காலத்தில் இளைஞர்களுக்கு ஆதர்சமாக இருந்த கார்த்திக், 'வெத்தலை போட்ட ஷோக்கில்' இருந்து கொழகொழவென்று பேச ஆரம்பித்ததிலிருந்தே அவர் மவுசு போய்விட்டது. நீண்ட இடைவேளைக்குப் பின்பு திரையில் வந்து அதேமாதிரியே வெறுப்பேற்றியிருக்கிறார்.

ரஞ்சிதா வரும் மிக மிகச் சொற்ப காட்சிகளில் பார்வையாளர்கள் காரணமேயின்றி கொலைவெறியுடன் திரையரங்கில் கத்துகிறார்கள். எல்லோருக்குமே அதன் காரணம் புரிந்திருக்கிறது. ஒட்டுமொத்த சமூகத்தின் மனோபாவ அடிப்படையிலான கூட்டுப் புணர்ச்சிக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார் ரஞ்சிதா. பாவம் அந்தப் பெண். இனிமேல் பொதுவெளியில் குறைந்தபட்சம் தமிழகத்தில் அவர் உலவவே முடியாது போலிருக்கிறது. தமிழப்பண்பாட்டை ஒருபுறமும் பாலியல் வறட்சியின் விகாரத்தை மறுபுறமும் சுமக்கும் தமிழர்களுக்கு அவரையும் சாமியாரின் ஆண்குறியையும் இணைக்காமல் இனி யோசிக்கவே முடியாது. காமிராவை ஒளித்து வைப்பவர்கள் இனி மேலாவது சற்று தார்மீக ரீதியாக சிந்தித்துப் பார்க்கலாம்.

சில காட்சிகளிலே என்றாலும் சத்தமேயில்லாமல் மிக இயல்பாக திருநங்கையின் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் வையாபுரி.

ரஹ்மான் 'உசுரைப் போக்கி'க் கொண்டு உருவாக்கின பாடல்கள் பெரும்பாலானவற்றை வழக்கம் போலவே சொற்பமாக நசுக்கி நசுக்கி பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். 'உயிரே' படத்திலிருந்தே இந்த அராஜகம்தான். அப்படியெனில் மிகத் தைரியமாக பாடல்களே இல்லாமலே படத்தை வடிவமைத்திருக்கலாமே? ஆனால் அதற்காக ஆடியோ வருமானத்தையும் ரஹ்மானின் பிம்பம் வணிகத்திற்கு உபயோகப்படுவதையும் விட முடியாது. கஷ்டம்தான். கூழுக்கும் மீசைக்கும் ஆசை. கூடவே பலியாயிருப்பது வைரமுத்துவும்.

வசனம் சுஹாசினியாம். 'மணிரத்ன' வாசனையுடன் எழுதியிருக்கிறார். பல இடங்களில் என்ன பேசுகிறார்கள் என்றே புரியவில்லை. ஐஸ்வர்யா கடத்தப்படும் ஆரம்பக் காட்சியிலேயே துளி பயமின்றி கடத்துகிறவனை நோக்கி 'செம்மொழி'யில் ஏதோ கூறுகிறார். 'ரோஜா' திரைப்படத்தில் அரவிந்த்சாமி, எரியும் தேசியக்கொடியின் மீது விழுந்து அணைப்பது போன்று இதுவும் லாஜிக்கை தூக்கிப் போட்டு மிதிக்கிற காமெடியாக இருக்கிறது. 

()

இந்தப்படத்தை காண்பதற்கு ஒரே ஒரு மிகப் பெரிய நியாயமான காரணமிருக்கிறது என்றால் அது படத்தின் ஒளிப்பதிவாளர்களுக்காகத்தான் (சந்தோஷ் சிவன் மற்றும் மணிகண்டன்).

ஏறக்குறைய முழுத்திரைப்படமும் வனத்தின் பின்னணியில் நிகழ்கிறது. அருவியின் குளிர்ச்சியையும் இலைகளின் பச்சை வாசனையையும் அவர்களின் அற்புதமான ஒளிப்பதிவு நம்மிடம் கொண்டு சேர்த்திருக்கிறது. குறிப்பாக ஐஸ்வர்யா மேலிருந்து விழும் காட்சியிலும் விக்ரம் விழும் இறுதிக் காட்சியிலும் மரப்பாலத்தின் மீது நிகழும் சண்டைக் காட்சிகளிலும் ஒளிப்பதிவு மிகச் சிறப்பாக பங்காற்றியிருக்கிறது. கான்கீரிட் பொந்துகளில் வாழும் நாம் இயற்கையின் எத்தனை அற்புதமான விஷயங்களை தவறவிட்டுக் கொண்டிருக்கிறோம் என்கிற குற்றவுணர்ச்சியை இந்தக் காட்சிகள் ஏற்படுத்துகின்றன. ஒரு காட்சியில் அருவியின் நீர்ப்பரப்பின் மீது விக்ரமும் சில குழந்தைகளும் ஆட்டம் போடும் போது தினமும் முக்கால் பக்கெட் நீரில் குளிக்க வாய்த்த எனக்கு ஏறக்குறைய எனக்கு அழுகையே வந்துவிட்டது.

காலங்காலமாக அவர்கள் வாழும் இம்மாதிரியானஅருமையான வாழ்க்கையையும நிலப்பரப்பையும், வணிக முதலாளிகளும் அரசாங்கமும் கூட்டுச்சதியுடன் கேட்கும் போது எல்லாவற்றையும் உதறி விட்டு நகரத்திற்கு ஓடிப் போய் அங்கே பிச்சையெடுத்தோ கூலி வேலை செய்தோ, 'நகரமயமாகி' விட வேண்டுமாம். அப்படி செய்யவில்லையெனில் அவர்கள் உடனே 'பயங்கரவாதி'களாகி விடுகிறார்கள். தங்களின் உரிமையை வேறுவழியின்றி ஆயுதங்களின் துணையுடன் கேட்டால் அரசு தன்னுடைய முழு பலத்தையும் உபயோகித்து அவர்களை நசுக்கி அப்புறப்படுத்துகிறது. இந்த கசப்பான உண்மையை இயக்குநர் ஓரமாக ஒரு காட்சியில் கூட வைக்கவில்லை. 'ஒடுக்கப்பட்டவன்' என்று விக்ரம் சில சமயம் சொல்வதெல்லாம் சம்பிரதாயமான பாவனையில் இருக்கிறது.

ப்ரியாமணியின் திருமணக்காட்சிகளின் போது அமைந்திருக்கிற பின்னணிக் காட்சிகள் அந்தச் சூழலுக்கு முரணாக இருந்தாலும் கலை இயக்குநரின் உழைப்பைத் தெரிவிக்கிறது.

()

இயக்குநரிடம் இறுதியாக ஓரு வேண்டுகோள்.

தன்னுடைய வணிக மாய்மாலங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மிக அர்ப்பணிப்புடன் ஒரு படத்தையாவது வரும் காலங்களில் மணிரத்னம் இயக்க வேண்டும்.

நினைத்துப் பார்க்கிறேன். அவரின் 'நாயகன்' திரைப்படம் வந்த சமயத்தில் குறைந்தது பத்துமுறைக்கும் மேலாக பார்த்திருக்கிறேன். வீட்டுக்குத் திரும்பும் ஒவ்வொரு முறையும்  என்னை 'வேலு நாயக்கராக' உருவகம் செய்து கொண்டு 'கெத்தாக' நடந்து வருவேன். சோற்றுக்காக அப்போது செய்து கொண்டிருந்த பணியை உதறிவிட்டு, குறைந்தது ராமநாராயணனிடமாவது உதவியாளராக எப்படியாவது 'சினிமா'வில் சேர்ந்து விட வேண்டும் என்று யோசிக்க அளவிற்கு உத்வேகத்தை கொடுத்த படம் அது.

தமிழச்சினிமாவில் ஒரு சத்யஜித்ராயோ, ரித்விக் கடக்கோ, அகிரா குரசாவாவோ இனியாவது வருவார்களா அல்லது அது மெல்ல வெறும் பகற்கனவாகவே முடிந்துவிடுமா என்பது தெரியவில்லை. 

suresh kannan

48 comments:

ஷர்புதீன் said...

ஷங்கர் போன்று வணிகரீதியாக வெற்றி பெறுகிற, தொழில் நுட்பத்தை சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொள்கிற இயக்குநர்களின் பட்டியலில் அவர் பெயரைச் சேர்க்கலாமே...

i agreed


மணிரத்னம் தன்னுடைய வணிக மாய்மாலங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மிக அர்ப்பணிப்புடன் ஒரு படத்தையாவது வரும் காலங்களில் இயக்க வேண்டும்.

i agreed

jay said...

i havent seen the movie...but i strongly agree with all ur words...mani is the first director who took the tamil films far away from geographical and racial realities...sadly people like gautham menon are taking it further away...

அமுதா கிருஷ்ணா said...

பணக்கார டைரக்டர் அவரின் MBA அறிவு பணம் சம்பாதிப்பதில் தான் அதிகம் பயன் படும்.வியாபார தந்திரம் தான் அதிகம். ப்ணத்திற்காக தானே படம் செய்கிறார்..படம் இப்படி தான் இருக்கும் என்று தோன்றியது..அருமையான விமர்சனம்...

CS. Mohan Kumar said...

யப்பா என்ன நடை!! செம்மொழியில் எழுதியுள்ளீர்கள்!! மீண்டும் மீண்டும் நீங்கள் உபயோகிக்கும் சில வார்த்தைகளுக்கு காபி ரைட் வாங்கலாம் :))

துளசி கோபால் said...

அருமை.

உண்மையைச் சொன்னதுக்கு இனிய பாராட்டுகள்.

சின்னப்பயல் said...

ராவணனின் அனைத்து தலை'களையும் உரித்து தொங்கவிடுகிறது
உங்கள் விமர்சனம்.சர்வதேச அழுத்தமும்,வணிக நோக்கும் கலைஞனை
வெகுவாகச்சிதைத்து தனக்கேயுரிய படைப்பிலிருந்து வெளியே கொண்டு வந்து விடுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்...

ஹரன்பிரசன்னா said...

// மணிமணியாக எத்தனை திறமையான இளம் நடிகைகள் இருக்கிறார்கள்? அவர் 'எந்திரனில்' ரஜினிக்கு நாயகியாக நடிக்கிறார் என்பதிலாவது அதில் ஒரு தருக்கரீதியான பொருத்தமும் நியாயமும் இருக்கிறது. :-) //

விக்ரமைவிட இளமையாகத் தெரியும் ரஜினி போன்ற இளைஞர் ஒருவருக்கு, ஐஸ்வர்யா ராய் போன்ற கிழவியை ஹீரோயினாகப் போட்டது குறித்து என்னைப் போன்ற ரஜினி ரசிகர்கள் கொதிப்படைந்து இருக்கும்போது, மேலே காணும் உங்கள் வரிகள் கொதிக்கும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல உள்ளது என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

Cable சங்கர் said...

தெரிந்தோ தெரியாமலோ.. உங்களுடய விமர்ச்ன வரிகளும், என்னுடயதும் ஆல்மோஸ்ட் சேம்.. மணியை ஆராதிக்கும் லட்சகணக்கான பேரில் நானும் ஒருவன்.

குசும்பன் said...

//ஐஸ்வர்யா சில பிரேம்களில் தற்செயலாக அழகாய் இருக்கிறார்தான்.///

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் யார் அங்கே இவரை கழுவில் ஏற்றுங்கள்!

Ganesan said...

என்ன ஒரு நேர்த்தியான விமர்சனம்..

ராம்ஜி_யாஹூ said...

It is as expected, Mani has changed after Roja, Bombay.

Agni natchtram, idayathai tirudathe, mouna ragam , idhyakoil, anjali mani is different.

same with Kamal.

Kamal and Manirathnam have lost their creativity after their focus has changed to Hindhi market and more of commercial nature.

The more comedy is Mani & Bachans gave money to Indian English channels to market this film, tried to write articles in Google, facebook.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உண்மை கசக்கிறது!

சென்ஷி said...

//

// மணிமணியாக எத்தனை திறமையான இளம் நடிகைகள் இருக்கிறார்கள்? அவர் 'எந்திரனில்' ரஜினிக்கு நாயகியாக நடிக்கிறார் என்பதிலாவது அதில் ஒரு தருக்கரீதியான பொருத்தமும் நியாயமும் இருக்கிறது. :-) ////

எந்திரன் திரைப்படம் வெளிவந்தபிறகு உங்கள் விமர்சனத்தைப் பார்க்கலாம் :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரியான நடுநிலையான விமர்சனம், பெரும்பாலான விமர்சனங்கள் மணி என்ற பிரம்மாண்டத்தில் தொலைந்துவிட்டன. உங்கள் விமர்சனம் தனித்துத் தெரிகிறது!

சென்ஷி said...

//மேலே காணும் உங்கள் வரிகள் கொதிக்கும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல உள்ளது என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.//

நல்லவேளை பிரசன்னா உவமையோட சொல்லிட்டாரு. இல்லைன்னா கமல் ரசிகர்கள் கடுகு வெடிக்குதுன்னு உவமை கொடுத்துடுவாங்க :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மணிரத்தினத்திடம் இருந்து மீண்டும் ஒரு நாயகனோ அல்லது மவுனராகமோ ஏன் ஒரு அஞ்சலியோ எதிர்பார்க்க முடியாது, ரோஜா படத்திற்கு பிறகு வந்த அவருடைய அனைத்துப் படங்களுமே ஒரே கோட்டில் வந்துவிடும்! மணியின் கலை சுதந்திரத்தை, படத்திற்கான தேசிய மேட்டுகுடி வணிகம் தோற்கடித்து வெகுநாட்களாகிறது!

Maraicoir said...

கூர்மையான விமர்சனம். உங்கள் பதிவை பார்த்து விட்டு பின்னர் படத்தை எதற்கு பார்க்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. நன்றி.

Prasanna said...

Nice review.. Maniratnam surely makes the main problem of the movie go unnoticed with his romanticism.
For the last paragraph, I would request you to search for Chennai Trekking Club. When we trek we have explored far more exotic locations than this. And that too only 3 hrs travel from chennai.. Just google it..

மாதவராஜ் said...

சுரேஷ் கண்ணன்!

தெளிவாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

//மணிரத்னத்தின் அடிப்படை பிரச்சினையே எந்தவொரு தீவிரமாக சமூகப்பிரச்சினையையும் மேலோட்டமான பாவனையோடு அணுகி அழகுணர்ச்சியால் அமுக்கி அதை ரொமாண்டிசைஸ் செய்து அதன் மைய அழுத்தத்தை மழுங்கச் செய்வது. ஏனெனில் அவரின் பெரும்பாலான மேட்டுக்குடி பார்வையாளர்களிடம் இந்த வகையான சாக்லெட்தான் செல்லுபடியாகும் என்பதை அவர் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார்.//

மிகச்சரி.

விஸ்வா said...

கூர்மையான விமர்சனம்...

Ashok D said...

படித்ததில் ஆக சிறந்த விமர்சனம்.. Keep it up :)

லக்ஷ்மி said...

ரஞ்சிதா பற்றிய தங்கள் விவரிப்பு முற்றிலும் உண்மை. மறைந்த நடிகை சில்க் தான் ஒரு முறை சிறுநீர் கழித்ததை ஒரு கூட்டமே மேலிருந்து வேடிக்கை பார்த்தது பற்றி வருந்திக் கூறியிருந்தது நினைவு வருகிறது.

என்ன செய்ய, உலக சினிமாக்களின் சப் டைட்டில் பார்ப்பவர் போல பெண்களை நோக்கிக் கொண்டிருந்த உங்களுக்கு வி.தா.வ ஒரு கண் திறப்பாக அமைந்தது போல் அந்த கூட்டத்திலிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு படமோ இல்லை போதி மரமோ சீக்கிரம் அமைய இயற்கையை வேண்டுவதல்லாது என்ன செய்துவிட முடியும்?

வவ்வால் said...

Suresh,
enna aachariyam padam paarkamale ippadi than mani spoil seythiruppar enna ninaithen ,ungalukkum athe unarvu!

Maniyoda creativity expired aagi romba kaalam aachu.

Nalla english padam ethavathu vantha than mani pizhaipar!(copy adikka source venume)

om spielberg namaha!

பா.ராஜாராம் said...

என்ன அருமையான மொழி சுரேஷ் கண்ணன்!

கட்டிப் போடுகிறது.

butterfly Surya said...

தன்னுடைய வணிக மாய்மாலங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மிக அர்ப்பணிப்புடன் ஒரு படத்தையாவது வரும் காலங்களில் மணிரத்னம் இயக்க வேண்டும்/////////


இன்னும் ஏன்..? போதும் கண்ணன் அவரை விட்டுருங்க..

chandru / RVC said...

very good review

கருந்தேள் கண்ணாயிரம் said...

நண்பர் சுரேஷ்கண்ணன்..

மிக இயல்பாக, மிக உண்மையாக விமர்சித்துள்ளீர்கள். கிட்டத்தட்ட நீங்கள் சொன்ன அத்தனை விஷயங்கலையும் நானும் எனது பதிவில் அவதானித்திருக்கிறேன். அருமையான ஒரு நடுநிலை விமர்சனம் படித்த திருப்தி எனக்கு ஏற்பட்டது. வாழ்த்துகள். . உங்கள் பதிவைப் பற்றிப் பின்னூட்டிய நண்பர் குசும்பனுக்கு நன்றிகள்..

BalHanuman said...

சுரேஷ் கண்ணன்!

மிக நேர்மையான, கூர்மையான விமர்சனம்....

Vetirmagal said...

Superb review. Rings true.

Nayagan was a watershed. The guy who made Ravanan is just a shadow!

THE UFO said...

ஏனோ, சிரத்தையுடன் விமர்சனம் எழுதும் பலரும், என்னவென்றே தெரியவில்லை... மணிரத்னம் பாணியிலேயே... 'பட்டும் படாமல்', 'தாமரை இல்லை தண்ணீர் போல' அவரது இந்த படத்துக்கும் விமர்சனம் என்ற பெயரில் 'நுனிப்புல்' பதிவு போட்டிருக்கிறார்கள். 'சினிமா மாமேதை'(?) மணிரத்னம் படத்தை குறை சொன்னால், தன்னை 'விஷயம் இல்லாதவன்' என்று மற்றவர்கள் எண்ணுவார்கள் என்று ஐயுறுகிறார்களோ..? சரி, போகட்டும்...

ஆனால், நீங்கள் வித்தியாசமானவர். உண்மையை யாருக்கும் பயப்படாமல் உடைத்துள்ளீர்கள்.

நான் இப்படத்திற்கான-இதுவரை வலையில் படித்ததிலேயே- முழுமையான தரமான தெளிவான விமர்சனம் இது தான்.

வெல்டன், மிஸ்டர் சுரேஷ் கண்ணன்.

பார‌தி(Bharathy) said...

உங்க‌ள் விம‌ர்ச‌ன‌ம் அருமை.. ம‌ணிர‌த்ன‌ம் போன்ற‌ காப்ரேட் இய‌க்குன‌ர்க‌ளிட‌மிருந்து வேறு எதைத்தான் எதிர் பார்க்க‌ முடியும்??

//ஆனால் இந்த காரியத்தை பல வருடங்களுக்கு முன்பே ஆர்.எஸ்.மனோகர் அவரது புராண நாடகத்தில் நிகழ்த்தி விட்டார். ராவணன் ஒரு சிறந்த இசைகலைஞன் என்பதும் கடுமையான தவவலிமை மூலமாக ஈஸ்வரனுக்கு நிகராக 'இராவணேஸ்வரனாக' விளங்கினான் என்பதுமாக அந்த ஆளுமையின் பல நல்ல விஷயங்கள் அந்த நாடகத்தின் மூலமாகவே எனக்கு தெரிய வந்தது//

இதே போல் ஈழ‌த்து பேராசிரிய‌ரின் "ராவ‌ணேச‌ன்" ந‌வீன‌ நாட‌க‌ கூத்தை நான் நேர‌டியாக‌வே பார்த்த‌வ‌ன் என்ற‌ முறையிலும்..ம‌ணியின் ராவ‌ண‌ க‌தா பாத்திர‌த்தில் என‌க்கு புதுமை ஏற்ப‌ட‌வில்லை..

"ராவ‌ணேச‌ன்" ந‌வீன‌ நாட‌க‌ கூத்து ப‌ற்றிய‌ விம‌ர்ச‌ன‌ம்.
http://dantamil.blogspot.com/2010/02/blog-post_18.html

Anonymous said...

படத்தில் மிகப் பெரிய குறைபாடு 'வசனம்', எடிட்டிங் மற்றும் ஒலிப்பதிவு. பல காட்சிகளில் என்ன பேசுகிறார்கள் என்றே தெரியவில்லை. காட்சிகளில் ஒரு தொடர்பு இல்லை. ஒரு காட்சியில் பிரபு அடர்த்தியான தாடியுடன் வருகிறார். அடுத்த ஷாட்டில் ட்ரிம் செய்யப்பட தாடியுடன் வருகிறார். பொண்டாட்டிய பின்தொடரும் போலீஸ் அதிகாரி, கார்த்திக்கை பின்தொடர்ந்து சென்றிருக்கலாம். கரெக்ட். மணிரத்னம் படம் மாதிரி இல்லை.

Anonymous said...

Eventhough I havent watched it yet, among all the reviews, yours stands out. Liked your comments on Vinnaithaandi Varuvaaya too.

- Hidha

Anonymous said...

//எந்திரனில்' ரஜினிக்கு நாயகியாக நடிக்கிறார் என்பதிலாவது அதில் ஒரு தருக்கரீதியான பொருத்தமும் நியாயமும் இருக்கிறது. :-) //

அதென்ன தருக்க ரீதியான (தர்க்க ரீதியா?)பொருத்தமும் நியாயமும்.. கொஞ்சம் விளக்கவும்.

ராம்கி

Unknown said...

மிக உன்னிப்பாக கவனித்து எழுதி இருக்கிறீர்கள்.

//தமிழச்சினிமாவில் ஒரு சத்யஜித்ராயோ, ரித்விக் கடக்கோ, அகிரா குரசாவாவோ இனியாவது வருவார்களா அல்லது அது மெல்ல வெறும் பகற்கனவாகவே முடிந்துவிடுமா என்பது தெரியவில்லை. //

வணிகப் படங்களுக்குள் சிக்கி திக்கு முக்காடிக் கொண்டிருக்கும் தமிழ் திரை உலகில் இது நடக்குமா தெரியவில்லை. லாப நோக்கற்று தயாரிப்பாளர் தன் சுய திருப்திக்காக எடுத்தால் மட்டுமே உண்டு.

Jey said...

மணிக்கு யரோ செய்வினை வச்சிட்டாங்கனு நினைக்கிறேன்.

டிராகன் said...

நுட்பமான விமர்சனம் !!!!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...
This comment has been removed by the author.
Unknown said...

சுரேஷ் கண்ணன்- மிக நேர்த்தியாக எழுதுகிறீர்கள். நேர்மையான பதிவு. மேலும் உங்களின் மற்றப் பதிவுகளைப் படிக்க தூண்டியது. படித்துக்கொண்டிருக்கிறேன். வாழ்த்துகள். நன்றி..தொடர்ந்து எழுதுங்கள்.

Anonymous said...

http://vimarisanam.wordpress.com/2010/06/19/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/

பிச்சைப்பாத்திரம் said...

அன்பான ஜ்யோவ்ராம் சுந்தர்,

இந்த வலைப்பதிவில் எந்த பின்னூட்டத்தையும் மட்டுறுத்தாத நிலையையே முன்னர் எடுத்து வந்தேன். என்னைத் திட்டி வரும் பின்னூட்டங்களையும் மறுப்பதில்லை. (அதீதமான வசவு என்றால் நீக்கும்படியாகிவிடும்)

ஆனால் சில சமயங்களில் மற்ற வலைப்பதிவர்களை, எழுத்தாளர்களை தனிப்பட்ட வகையில் தாக்கும் பின்னூட்டங்களை பெரும்பாலும் நிச்சயம் பிரசுரிக்க மாட்டேன். அவ்வாறான சமயங்களில் 'ஏன் என் பின்னூட்டத்தை பிரசுரிக்கவிலலை' என்று கேட்டு சில (ஆபாச) கேள்விகள் வரும்.

சில சமயங்களில் கவனக்குறைவாகவோ அல்லது மிதமானதுதானே என்று நான் நினைக்கும் மற்ற நபர்களின் மீதான தாக்குதல்களை பிரசுரிக்க நேர்ந்தால், அதனால் பாதிக்கப்பட்டவர், "என்னைத் திட்டி வரும் பின்னூட்டத்தை நீ எப்படி பிரசுரிக்கலாம்,உனக்கு சுயபுத்தி இல்லையா?" என்று கேட்கும் கேள்விகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.

அது மட்டுமன்றி பின்னூட்டப் பகுதியில் எழுதப்பட்டிருக்கும் இந்த வாக்கியங்கள் பிளாக்கரின் நடைமுறையில் உள்ளதுதானே? நாமே எந்தவொரு பின்னூட்டத்தையும் மட்டுறுத்திதானே வெளியிடுகிறோம்? அதையேதான் மேற்சொன்ன பிரச்சினைகளின் காரணமாக நான் திரும்பவும் பின்னூட்டப் பெட்டியின் மேலேயே தெளிவாக எழுதி வைத்துள்ளேன்.

இது உங்களின் வருங்காலப் பின்னூட்டங்களுக்கான சமாதான மொழிகள் இல்லையென்றாலும், உங்களைப் போலவே இவ்வாக்கியங்களை நெருடலாக உணர்பவர்களுக்கும் விளக்கமாக இருக்கட்டும் என்று இதை எழுதுகிறேன்.

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எத்தனை அடித்தாலும் தாங்கிக் கொள்ள முடியாது அல்லவா? :-)

Umesh said...

nice review !

Read mine here!
Expecting ur feedback!

Raavanan-Ten heads but no brain!

http://theumeshblog.blogspot.com/2010/06/raavanan.html

கிரி said...

@சுரேஷ் கண்ணன் ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. திரைக்கதையும் எடிட்டிங்கும் தான் படத்திற்கு ரொம்ப முக்கியம் அதுவே சொதப்பினால்... பெரிய ஏமாற்றம் தான்.

//ஹரன்பிரசன்னா said...
மேலே காணும் உங்கள் வரிகள் கொதிக்கும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல உள்ளது என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.//

ஹரன் பிரசன்னா அதற்க்கு தான் அந்த வரிகளையே சுரேஷ் கண்ணன் போட்டு இருக்கிறார் :-) ரஜினியை வாருகிற வாய்ப்பு கிடைத்ததால் கொண்டாட்டம் தான் சுரேஷ் கண்ணனுக்கு :-)

@சென்ஷி ராம்கி ;-)

சாமக்கோடங்கி said...

துல்லியமான விமர்சனம்..

தொடருங்க...

yamuna rajendran said...

suresh kannan.wow. you are in form in this review.sharp and spontaneous.yamuna rajendran

பிச்சைப்பாத்திரம் said...

Mr. Yamuna Rajendran, thanks for your encouraging comment.

ARE A EM said...

சுரேஷ்கண்ணன்:

உங்கள் blog க்கு முதல் முறையாளன்.அழகான விமர்சனம். என் தாய்க்கு அனுப்பி படிக்க பரிந்துரை செய்துள்ளேன். பாராட்டுக்கள். ஆங்கிலத்துக்கு மாறிக்கொள்கிறேன், மன்னியுங்கள்.

I'm no fan of Tamilnadu police or the politicians, and even I feel most of Maniratnam's movies portray the military, police etc in a negative light consistently. Nayagan, Uyire, Ravanan etc. It also feels like he injects a subtle element of class-war in most of his movies like Thalapathi, Iruvar etc. He should fire himself and his wife as dialog writers in his future movies; they got the accents mostly confused.

கடைசியாக:
முதலாளிகள் முதலாளித்துவம் மீது உங்களுக்கு என்ன கோபம்? என் தந்தை 35 வருடங்களுக்கு முன் 5000 ரூபாய் கடன் வாங்கி ஆரம்பித்த தொழிலில் இன்று 20பேர் நேரடியாக வேலை செய்கிறார்கள். அதுவும் மிகச்சிறு தமிழக நகரத்தில். சினிமாவில் காட்டுவது போல, எங்கள் தொழிலால் யாருக்கும் எந்த கேடும் தீங்கும் இல்லை.

அனைத்து முதலாளிகளும் கெட்டவர் அல்ல. முதலாளித்துவம் என்பது அவ்வளவு மோசம் அல்ல.

Anonymous said...

sir intha padathil costume, makeup, camera angle, scene ellame pala english padathil irunthu suttaathu than