Monday, July 14, 2014

பாசமலர்கள் ஜோடியாக நடிக்கலாமா?



தி இந்து ஆங்கில நாளிதழின் பிரதி ஞாயிறு இணைப்பில் ரேண்டார் கை எழுதி வரும் இந்தத் தொடர் குறிப்புகளை ஆர்வமாக வாசிப்பேன். .

இந்த வாரத்தில் எழுதப்பட்டிருக்கும், 1961-ல் வெளிவந்த 'எல்லாம் உனக்காக' எனும் தமிழ் சினிமாவைப் பற்றி உங்களில் பெரும்பாலோனோர் அறிந்திருக்கிறீர்களா என தெரியவில்லை. பழைய தமிழ் சினிமாக்களை ஆர்வமுடன் தொடரும் நான் அறியேன். இத்திரைப்படத்தைப் பற்றி ரேண்டார் கை குறிப்பிடும் போது, கதையமைப்பும் நடிகர்களின் பங்களிப்பும் சிறப்பாக இருந்த போதிலும் வணிக ரீதியாக இத்திரைப்படம் தோல்வியடைந்ததற்கு 'நடிகர்களின் தேர்வு' (casting) என்பதையே காரணமாக குறிப்பிடுகிறார். அதாவது சிவாஜியின் முந்தைய திரைப்படமான பாசமலரில் அவரும் சாவித்திரியும் அண்ணன் -தங்கையாக நடித்து அது பெரும் வெற்றியை சந்தித்தது. எனவே அதற்குப் பிந்தைய இத்திரைப்படத்தில் அவர்கள் ஜோடியாக நடித்ததை மக்கள் விரும்பாததின் காரணமாகவே படம் தோல்வியடைந்தது என்கிறார்.

தினத்தந்தி நாளிதழில் பிரபல வசனகர்த்தா ஆரூர்தாஸ் எழுதி வரும் சுவாரசியமான தொடரையும் வாசிக்கிறேன். திரைத்துறையில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் ஆணை நாயகனாக தேர்வு செய்வதில் யாருக்கும் எந்தப் பிரச்சினையுமில்லை. ஏன், அதற்காக கடுமையான போட்டியே நடக்கும். ஏனெனில் அவன்தான் அத்திரைப்படத்தின் மையம். ஆனால் ஒரு நாயகியை தேர்வு செய்யும் போது அவர் முன்னதாக யார் யாருக்கெல்லாம் ஹீரோயினியாக நடித்தார், அவைகளில் எவை வெற்றி பெற்றன? இந்த குறிப்பிட்ட நாயகனுடன் எத்தனை படங்களுக்கு பிறகு நடிக்கிறார்? மக்களுக்கு சலிப்பேறாமல் இருக்குமா? என்றெல்லாம் கதை விவாதங்களின் போது இயக்குநர்களும் கதாசிரியர்களும் யோசிக்கிறார்கள் என்பது அத் தொடர்களில் வெளிப்படும் குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது.

ஒரு திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறும் ஒரே நோக்கத்திற்காக அதில் எத்தனை சமரசங்கள்? எனில் அத்திரைப்படம் எப்படி ஒழுங்குணர்வோடு சிறப்பாக வெளிவரும்?
 
பார்வையாளர்களாக ஒரு திரைப்படத்தை  முறையாக அணுகுவதற்கான போதிய பயிற்சி நம்மிடம் இல்லை என்பதற்கான பல அடையாளங்களில் இதுவுமொன்று. ஒரு திரைப்படத்தின் பாத்திரங்களை அந்தச் கதைச் சூழலில் பொருந்திருக்கும் நபர்களாக அணுகாமல் வெகுசன இதழ்கள் தங்களின் வணிகத்திற்கென உண்மையும் பொய்யுமாக அள்ளி இறைக்கும் பல வம்புகளின் மூலமும் அவர்களின் உண்மையான வாழ்க்கையின் தகவல்களையும் நிலைகளின் மூலமும் அவைகளை திரைப்படத்தில் பொருத்திப் பார்த்து அதை பாராட்டும் அல்லது விலகும் முதிரா மனநிலையே இதற்கு காரணமாகிறது.

ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தின் ஸ்கிரிப்டிற்கு குறிப்பிட்ட நடிகரும் நடிகையும் மிக மிக பொருத்தமாக அமைவார்கள் என அதன் இயக்குநர் யூகித்திருந்து ஆனால் அவர்கள் நிஜ வாழ்க்கையில் அண்ணன் - தங்கை என்று ஏதோவொரு உறவுமுறையில் இருக்கும் பட்சத்தில், தொடர்புள்ள நடிகர்களுக்கு சம்மதமிருந்தும், மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதன் காரணமாகவே இயக்குநர் அந்தத் தேர்வை நிராகரிப்பாராயின் ஒரு நல்ல திரைப்படம் உருவாவதை தடுப்பதற்கு  நம்மிடமுள்ள இந்த அபத்தமான மனநிலையும் ஒரு காரணமாயிருக்கிறது என்பது எத்தனையொரு கொடுமை?

suresh kannan

No comments: