சமயங்களில் ஒரு குறிப்பிட்ட திரையிசைப் பாடல் புயல் போல் நம்மை ஆக்ரமித்துக் கொள்ளும். நாள் முழுவதும் அதையே முணுமுணுத்துக் கொண்டிருப்போம். நாம் முணுமுணுப்பை நிறுத்தினால் கூட அது தொலைவில் எங்கோ ஒலித்துக் கொண்டிருப்பது போலவே தோன்றும். பொதுவாக இதில் மெல்லிசைப் பாடல்களே தன்னிச்சையாக தேர்வாகும் என்றாலும் சமயங்களில் வேகதாளயிசைப் பாடல்களும் சேர்வதுண்டு.
அவ்வகையில் மன்மதன் அம்பு' திரைப்படத்தின் WHO IS THE HERO பாடலை நாளெல்லாம் கேட்டுக் கொண்டும் முணுமுணுத்துக் கொண்டும் இருக்கிறேன். ஏன் இது இத்தனை தீவிரமாக எனக்குப் பிடித்துப் போனது என்பது எனக்கே விளங்கவில்லை. நான் இவ்வாறு துவக்கத்தில் விரும்பும் பாடல்கள் பொதுவில் நிச்சயம் ஹிட்டாகாது. பொதுவில் நன்றாக ஹிட்டான 'நாக்கு முக்கா' போன்றவற்றைகளைக் கேட்டால் எனக்கு கொலைவெறியே வரும். அப்படி ஒரு ராசி. 'சத்தம் போடாதே' படத்தில் சுதா ரகுநாதன் பாடிய இந்தப் பாடல் நிச்சயம் வெற்றி பெறும் என்று இங்கு எழுதியிருந்தேன். கர்நாடக இசையோடே பெரிதும் தொடர்புப்படுத்தி அறியப்பட்டிருந்த சுதா, அதிலிருந்து விலகி இந்த வேகதாளயிசைப் பாடலை பாடியிருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் இன்றைக்கு இது எத்தனை பேருக்கு நினைவிருக்கும்?.
WHO IS THE HERO-வை நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா பாடியிருக்கிறார். இவர் ஒரு பாப் இசைப் பாடகி என்பதையும் முன்னமே சில திரையிசைப் பாடல்களை பாடியிருக்கிறார் என்பதை அறிந்திருந்தாலும் இதைக் கேட்ட பின்புதான் அவரைப் பொருட்படுத்தி கவனிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
தமிழ்த்திரையில் ஒரு காலகட்டத்தில் பெரும்பாலும் பாலு - ஜானகி கூட்டணியே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் நிலை மாறி ரகுமானின் வருகைக்குப் பிறகுதான் கார்த்திக் உள்ளிட்ட பல புதிய இளம் பாடகர்களின் மீது வெளிச்சம் பரவியது. உதித் நாராயணன், சுக்விந்தர் சிங், ஷ்ரேயா கோஷல் என்று வடக்கிலிருந்தும் சிலர் இங்கு பாடுவது வழக்கமாக ஆனது. புதுக்குரல்களை தொடர்ந்து ரகுமான் முயன்று கொண்டேயிருக்கிறார். ரகுமானுக்குப் பிறகு இதை மற்ற இசையமைப்பாளர்களும் பின்பற்றி வருகின்றனர். இதிலுள்ள மிகப் பெரிய பிரச்சினை, அவர்களின் முறையற்ற தமிழ் உச்சரிப்புதான். பல இசையமைப்பாளர்கள் இதை கண்டு கொள்வதேயில்லை. அட்சரம் பிசகாமல் ஹிந்தி மொழியில் பாலசுப்பிரமணியம், ஜேசுதாஸ் போன்றவர்களால் பாட முடிந்தாலும் அங்குள்ள இனவாத அரசியல் அவர்களை அங்கு நீடிக்க விடாமல் துரத்தியது. ஆனால் இங்கு தமிழ்க் கொலை செய்யப்பட்டும் தொடர்ந்து அந்த பாடகர்களுக்கே வாய்ப்பு தரப்படுவது துரதிர்ஷ்டம்.
ஜாஸ் இசை வகையில் அமைந்திருக்கும் இதை ஆண்ட்ரியா effortless ஆக அநாயசமாக தடங்கலில்லாமல் பாடியிருக்கிறார். இடையில் வரும் பேய்ச்சிரிப்பும் உற்சாகமாத்தான் இருக்கிறது. உச்சஸ்தாயியில் சுருதி விலகாமல் இவர் லாவகமாக பாடியதைக் கண்டு "என்னால் நிச்சயம் முடியாது" என்று கமல் வியந்ததாகக் கூறப்படும் ஒரு trivia உண்மையா என தெரியாது. "எம்.எஸ்.வி. இளையராஜா வரிசையில் தேவி ஸ்ரீ பிரசாத் வரக்கூடும் என்று இசை வெளியீ்ட்டு விழாவில் கமல் சொன்னது அதீதம் என்றாலும் இந்த வரிசையில் ரகுமானை வேண்டுமென்றே தவிர்த்ததில் என்ன அரசியலோ?.
தேவி ஸ்ரீ பிரசாத்தும் பாப் இசைக் கலைஞராகவே தன் பயணத்தை துவங்கியவர் என்றாலும் இங்கு அதிக வாய்ப்பில்லாத நிலையில் ஆந்திர திரைக்குச் சென்று அங்குள்ள கலாசாரத்திற்கேற்ப காரம் சாரமாக 'செம குத்துடன்' இசையமைத்து புகழின் உச்சிக்குச் சென்று விட்டார். ஏறக்குறைய எல்லாப்பாடல்களும் ஓரே மாதிரியான வேக தாளயிசையில் உருவாக்கப்படும் (உதா: 'குண்டுமாங்கா தோப்புக்குள்ளே) அவரது பாடல்களை பொதுவாக நான ரசிப்பதில்லை. ஆனால் மன்மதன் அம்பு அவரது வழக்கமான பாணியிலிருந்து விலகி ரசிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளதிற்குக் காரணம் கமலாக இருக்கலாம். சுந்தர்.சி எடுத்த 'அன்பே சிவம்' போல. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இன்னொரு பரிமாணத்தை இந்த ஆல்பம் நம் முன் வைக்கிறது.
பெரும்பாலான பாடல்களை கமலே எழுதி பாடியும் இருக்கிறார். 'நீல......... வானம்' என்று அவர் இழுக்கும் இழுப்பில் அது 'நீள...' வானமாக மாறும் அதிசயமும் (?!) நிகழ்கிறது. கமல் கவிதையில் பச்சையான முற்போக்கு வாசனை. திரிஷா கவிதையை பள்ளிக்கூட மாணவி போல் ஒப்பித்தாலும் அவர் குரலிலுள்ள feminine என்னை வசீகரிக்கிறது.
இருந்தாலும் இந்த ஆல்பத்தில் என்னை அதிகம் கவர்ந்த பாடல் இதுதான். அக்கம் பக்கத்தில் சண்டைக்கு வந்தாலும் பரவாயில்லை என்று இந்தப் பாடலை உயர் டெசிபல் சத்தத்தில் கேட்டுப் பாருங்கள்.
suresh kannan


