Wednesday, September 08, 2010

எலிக்கறி, தொலைக்காட்சி பெட்டி அரசியல் (PEEPLI LIVE)

'உலகத்தின் மிகப்பெரிய  ஜனநாயக நாடு இந்தியா' என்றொரு வதந்தியிருக்கிறது. 'அப்படியல்ல' எனறு தீவிரமாக நம்புகிற தேசபக்தர்களை அவரவர்கள் நம்பும் கடவுள்கள் காப்பாற்றட்டும்.

அதிகாரத்தின் அனைத்து சட்டத்திட்டங்களுக்கும் அரசியல்களுககும் ஒடுங்கிப் பணிந்து தேர்தல் நாளன்று  உங்களுக்குப் பதிலாக இன்னும் வேறு யாரும் போடாத அதிர்ஷ்டமிருந்தால் ஓட்டுப் போட்டு  ஜனநாயகக் கடமையை ஆற்றின திருப்தியோடு ஒதுங்கி ஒரு நல்ல 'குடிமகனாக' நீங்கள் இருக்கிற வரை ஒன்றுமில்லை. இந்தப் புள்ளியிலிருந்து நீங்கள் நகர முயற்சிக்கும் போதுதான் பிரச்சினை.

உதாரணமாக சாதாரண பொதுமனிதனாகிய  உங்களுக்குச் சொந்தமானதொரு நிலத்தை பன்னாட்டு நிறுவனமோ, பலம் வாய்ந்த அரசியல்வாதியோ அல்லது உள்ளூர் ரவுடியோ கைப்பற்ற வேண்டுமென்று முடிவு செய்து விட்டால் கடவுளே கூட உங்கள் நிலத்தைக் காப்பாற்ற முடியாது. அரசு இயந்திரத்தின் எல்லாக்கதவுகளும் நீங்கள் வரும் போது மூடிக் கொள்ளும்.

சரி. கருத்துச் சுதந்திரமாவது இருக்கிறதா என்று பார்த்தால் .. பேருந்தில் பயணிக்கும் போது நடத்துநர் மீதி சில்லறை தராத எரிச்சலில் "என்னா சார் கவர்ண்மெண்ட்" என்று புலம்பிக் கொள்ளலாம். அவ்வளவுதான். அதிகாரத்திற்கு எதிராக மெலிதாக நமக்கே கேட்காத குரலில் முணுமுணுத்துக் கொள்ளத்தான் அனுமதியுண்டு.  எதிர்ப்பது ஓர் அமைப்பு என்றால் அரசு நால்வகை உபாயங்களையும் பயன்படுத்தி அதை ஒழித்து விட தொடர்ந்து முயலும்.  பொதுஜனங்களில் ஒருவர் என்றால் போச்சு. உங்கள் விரைக்கொட்டையை நசுக்கினால் கூட கேட்க ஆள் இருக்காது.

இந்த நிலையில் என்ன செய்யலாம்?

ஏதாவது புதினத்தை மாய யதார்த்த பாணியில் எழுதி மழுப்பிப் பார்க்கலாம். ஆனால் மொத்தம் நூறே பேர் படிக்கும் இந்த மாதிரியான பத்திரிகைகளில்  ஜாங்கிரித்தனமான மொழியில் எழுதப்படுகிற படைப்புகளை உளவுத்துறையில் உள்ளவர்கள் கூட கவனமாக வாசிக்க மாட்டார்கள் . இருப்பது  இரண்டேபேர் என்றாலும்  நான்கு குழுக்கள் அமைக்கும் தமிழ்ச் சமூக மனோபாவத்தின் படி அந்தப் புதினத்தை சாக்காகக் கொண்டு  அடித்துக் கொள்வதிலேயே சொல்ல வந்தது அதற்குள் நமத்துப் போய்விட்டிருக்கும்.

இந்தியாவின் பலமான, பரவலான ஊடகம் என்றால் அது சினிமாதான். தயிர் சாதத்திற்கு ஊறுகாய் இல்லாவிட்டால் கூட ஒப்புக் கொள்ளும் நம் சமூகம், சினிமா இல்லையென்றால் 'சிறந்த தமிழ்ப்படத்தை தேர்ந்தெடுக்கப் பணிக்கப்பட்ட' ஆக்டோபஸ் மாதிரி மூச்சுத் திணறியே செத்துவிடும். அதிவீர்யமான போதை மருந்தாகச் செயல்படும் இந்தியச் சினிமாவினால் புரட்சியேதும் நடக்க வாய்ப்பேயில்லை என்கிற காரணத்திறாகவேதான் அதற்கு வரிச்சலுகைகளும் இன்னபிற உதவிகளும் கிடைக்கின்றன என்பது வதந்தியாகத்தான் இருக்க வேண்டும்.



சமூகச் சொரணயுள்ள படைப்பாளிகள் சற்று பூடகமாவோ, நகைச்சுவையில் மறைத்தோ சமூகப் பிரச்சினையொன்றை அலசிப் பார்க்கலாம். அப்படியாக ஒரு அரசியல் அங்கத சினிமாவாக சமீபத்தில் வந்திருப்பது PEEPLI (LIVE).

அரசாங்கத்தால் பெரிதும் புறக்கணிக்கப்படுகிற விவசாயச் சமூகம், தற்கொலை செய்து கொள்கிற சமகாலப் பிரச்சினையை சொல்ல முனைகிற இந்தத் திரைப்படம் அதை அழுத்தமாக நிறைவேற்றியிருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. நகைச்சுவையில் உள்ள அபாயமும் இதுதான். நகைச்சுவையின் ஊடாக சாப்ளின் முன் வைக்கிற அரசியலைப் புரிந்து கொள்ளாமல் அவைகளையே 'காமெடி' படங்களாக புரிந்து கைதட்டி சிரித்து உடனே மறந்து விடுகிற நம் சமூகம் இந்தப் படத்தையும் ஒரு நகைச்சுவைப் படமாகவே மாத்திரம் புரிந்து கொண்டால் அதில் ஆச்சரியமேதும் கிடையாது. ஏனெனில் PEEPLI (LIVE)  நகைச்சுவையைத் தாண்டி அதற்கான எந்தவொரு தீவிரத்தையும்  கொண்டிருக்கவில்லை.

பீப்லி (லைவ்)-வை செவ்வியல் திரைப்படமான 'பதேர் பாஞ்சாலி'யோடு ஒப்பிடப்படுகிற அபத்தங்கள் சிலவற்றைக் கண்டேன். இந்தத் திரைப்படத்தின் இயககுநரான  அனுஷா ரிஸ்வி கூட இதை ஒப்புக் கொள்ள மாட்டார். ஒரு இந்திய கிராமத்துக் குடும்பத்தின் வறுமையை எவ்வித பிரச்சார தொனியுமின்றி யதார்த்தமாக சொல்லிச் செல்கிற 'பதேர் பாஞ்சாலி' ஒரு சிறந்த கலைப் படைப்பாக உயர்ந்த தளத்தில் இயங்குகிறதென்றால் பீப்லி (லைவ்)-வோ மல்டிப்ளெக்ஸ்-ஸின் உயர் / நடுத்தர வர்க்கத்தினர் சில மணி நேரங்கள் சிரித்து விட்டுப் போகிற ஒரு சராசரி நகைச்சுவைப்படமாக மாறிப் போகக்கூடிய அபாயத்தை தன்னுள் வைத்திருக்கிறது.

முக்ய பிரதேஷ் எனும் கற்பனையான பிரதேசத்தின் 'பீப்லி' கிராமத்தைச்  சேர்ந்த வறுமை விவசாய சகோதரர்கள் நத்தா, புதியா. வங்கிக் கடனை அடைக்க முடியாமல் தங்களின் விவசாய நிலம் பறிபோகும் சூழ்நிலையில் உள்ளூர் அரசியல்வாதியிடம் உதவி கேட்டுச் செல்ல, அவனுடைய உதவியாளன் அவர்களைத் தவிர்க்கும் பொருட்டு "தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு அரசு ஒரு லட்சம் ரூபாய் வழங்குகிறது' என்ற செய்தியை போகிற போக்கில் சொலகிறான். சகோதரர்கள் குத்துக்காலிட்டு அமர்ந்து கலந்தாலோசிப்பதில்  'தம்பி தற்கொலை செய்து கொள்வது' என்று அரை மனதாக முடிவாகிறது.

இந்தச் செய்தி உள்ளுர் பத்திரிகையாளனின்  காதில் விழுந்து கட்டுரையாக வெளிவர தேசிய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு இந்தச் செய்தியை தீப்பிடிக்க வைக்க முடியும் தோன்றுகிறது.

அதற்குப் பின் ஒரே அதகளம்தான்.

TRP எனும் மாயமானை துரத்திப் பிடிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராகயிருக்கும் தொலைக்காட்சி ஊடகங்கள், ஆளுங்கட்சிக்கு நெருக்கடியையும் சங்கடத்தையும் ஏற்படுத்த இந்தத் தற்கொலையை பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் எதிர்க்கட்சிகள், இதிலிருந்து தப்பிக்க நினைக்கும் ஆளுங்கட்சியின் சதித்திட்டங்கள், முட்டாள்தனமான பொம்மை அரசு அதிகாரிகள் ... என சகலரையும் அம்மணப்படுத்தியுள்ளது இத்திரைப்படம்.

'நத்தா தற்கொலை செய்து கொள்வானா, இல்லையா' என்பதை ஒரு பரபரப்பூட்டும் விவாதமாக கிரிக்கெட விளையாட்டிற்கு நிகரான தேசிய சூதாட்டம் போன்ற நிலைக்குச் செல்லுமாறு ஊதிப் பெருக்குகின்றன ஊடகங்கள். அந்த எளிய கிராமத்து வீட்டை  லைவ் டெலிகாஸ்ட் வாகனங்கள் சூழந்து கொள்ள அந்த இடமே திருவிழாக் கோலம் கொள்கிறது. (இந்த இடத்தில் உருகுவே நாட்டுத் திரைப்படமான 'The Pope's Toilet'-ஐ நினைவு கூரலாம். பிரேசிலின் எல்லைப்புற கிராமமொன்றில் போப் வருவதையொட்டி ஏற்படும் பரபரப்பை உபயோகப்படுத்தி பணம் சம்பாதிக்க நினைக்கும் அந்தக் கிராமத்தினரின் கனவு எப்படி நிராசையாகிறது என்பதைச் சொல்கிறது அந்தப்படம்).

கேமராவைப் பார்த்தாலே  ஓடி ஒளியும்  நத்தாவை தொடர்ந்து இரவு பகலாக கண்காணிக்கின்றன ஊடகங்கள். நத்தாவின் நண்பர்கள் உட்பட ஊரிலுள்ள அனைவருமே முக்கியஸ்தர்களாகி ஒவ்வொரு சானலும் ஆளுககு கிடைக்கிற நபர்களை பேட்டி காண்கின்றனர். தொலைக்காட்சியில் தங்களின் முகம் தெரியப் போகிற பூரிப்பில் எல்லோருமே ஏதோவொன்றைச் செல்ல உண்மை என்கிற வஸ்துவைப் பற்றி யாருமே கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இது எந்த அளவிற்கு போகிறது என்றால், இதுதான் நத்தா மலம் கழிக்கச் சென்ற பாதை, இதுதான் நததாவின் மலம் என்று வட்டமிட்டுக் காட்டுமளவிற்கு செல்கிறது. போட்டி ஊடகங்களை முந்திச் செல்லவும் சாதாரணமான ஒன்றை 'ஏதோ அதில் உள்ளது' போலவும் காண்பிப்பதற்காக, ஊடகங்கள் எத்தனை தூரத்திற்கும் தரம் தாழத் தயாராய் இருக்கின்றன என்பதை முகத்தில் அறைகிறாற் போல் சித்தரிக்கின்றன இக்காட்சிகள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 'விவசாயிகள் வறுமை காரணமாக பசி தாங்காமல் எலிக்கறி சாப்பிடுகிறார்கள்' என்றொரு புகார் எழுந்தது. எதிர்க்கட்சிகள் ஒருபுறம் இதை ஊதிப் பெருக்க முயன்று கொண்டிருக்க ஆளுங்கட்சியோ புள்ளிவிவரங்களுடன் இதை மறுத்து 'எலிக்கறி உண்கிற வழக்கமுள்ள சில பழங்குடி மக்களை' காண்பித்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக மழுப்பியது.

இத்திரைப்படத்திலும் நத்தா தற்கொலை சர்ச்சை தேசிய விவாதமாக பரவிக் கொண்டிருக்க  மாநில ஆளுங்கட்சி இதை மூடி மறைக்கவும் எதிர்க்கட்சிகள் இந்த வாய்ப்பை தவற விடாமல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் எல்லா வழிமுறைகளையும் பயன்படுத்துகின்றன. ஓட்டு வாங்குவதற்காக அரசியல்வாதிகள் ஏற்படுத்தும் கவர்ச்சியான சலுகைத் திட்டங்கள் எவ்வாறு மக்களுக்கு எவ்வித பயனும் அளிப்பதில்லை என்பது சில காட்சிகளின் மூலம் கிண்டலடிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கும்பல் கைபம்ப் ஒன்றை நத்தா குடும்பத்திற்கு வழங்கி விட்டுச் செல்கிறது. அதைப் பொருத்துவதற்குரிய செலவு செய்ய முடியாத சூழலில் அது சிறுவர்களின் விளையாட்டுப் பொருளாகிறது. இன்னொரு கும்பல் பெரிய தொலைக்காட்சி பெட்டியை வழங்கி விட்டுச் செல்கிறது. (ஏதாவது நினைவுக்கு வருகிறதா?).

நத்தா தற்கொலை செய்வான் என்று சில ஊடகங்களும் இல்லை என்று சில ஊடகஙகளும் அவரவர்களின் அரசியல் ஆதாயங்களுக்கேற்ப பிரச்சாரம் செய்துக் கொண்டிருக்க நத்தாவின் மகன் தூங்கிக் கொண்டிருக்கிற நத்தாவை எழுப்பிக் கேட்கிறான் "எப்பப்பா செத்துப் போவே?. பணம் கிடைச்சு நான் போலீஸ்காரனாவனும்".
 


நஸ்ருதீன் ஷா, ரகுபீர் யாதவ் போன்றசொற்பமான தெரிந்த முகங்களைத் தவிர  ஹபிப் தன்வீரின் நாடக குழுவிலிருந்தும் கிராமத்து ஆசிவாசிகளும் நடித்திருக்கின்றனர். பிரதான பாத்திரமான நத்தா (ஓம்கார்தாஸ் மாணிக்புரி) கூட நாடகக் குழுவைச் சேர்ந்தவர்தான். நத்தாவின் பாத்திரம் மிகத்திறமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. யாரைப் பார்த்தாலும் மிரண்டு ஓடும் இவன் சமயங்களில் தனக்கான கற்பனை உலகில் சந்தோஷமாக இருக்கிறான். அரசியல்வாதியிடம் உதவி கேட்கப் போகும் போது அண்ணனான புதியா, வந்த விஷயத்தைப் பேசிக் கொண்டிருக்க, இவனோ மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் அவித்த முட்டையை  வாய் ஊறப் பார்த்துக் கொண்டிருக்கிறான். பின்பு தனக்கான கனவுலகில் அதைச் சாப்பிடுவானாகயிருக்கும்.

நத்தாவின் குடும்ப உறுப்பினர்களின் பாத்திரங்கள் இன்னும் சுவாரசியம். நத்தாவின் மனைவி திரைப்படங்களில் சம்பிரதாயமாக காட்டப்படும் இந்தியப் பெண்ணிலலை. நிலத்தை இழந்துவரும் கணவனை துடைப்பத்தால் அடிக்காத குறையாக துரத்துகிறாள். அவனுடைய கையாலாகததனம் அவளுக்கு மிகுந்த எரிச்சலைத் தருகிறது. 'நத்தா'வின் மரணம் (?!) கூட அவளைப் பாதிப்பதில்லை. அதற்கான ஆதாயம் எப்போது வரும் என்பதில்தான் அவளுடைய முழுக்கவனமும் இருக்கிறது. எப்போதும் கட்டிலில் படுத்திருக்கும் நோயாளித் தாய் சகோதரர்கள் இருவரையும் உரத்த குரலில் சபித்துக் கொண்டேயிருக்கிறாள்.

வசனங்கள் பல இடங்களில் படு நக்கலாக ஒலிக்கின்றன. "உன்னிடமிருந்து எதையும் எடுத்துக் கொள்ளாமல் அரசாங்கம் எதையும் உனக்குத் தராது தம்பி" என்கிறான் ஒரு அரசியல்வாதி. "உயிரோட இருக்கறவங்களுக்கே எந்த உதவியும் செய்யாத அரசாங்கமா, செத்தவங்களுக்கு உதவப் போவுது?" என்று அரசுத் திட்டத்தை ஒரு பாமரன் கிண்டலடிக்கிறான்.

இந்தக் களேபரங்களுக்கு இடையில் ஒரு சிறிய கிளைக்கதையும் ஓடுகிறது. தனியொருவனாக தொடர்ந்து உழைத்து கிணறொன்றைத் தோண்டிக் கொண்டேயிருக்கும் ஒருவர் அது முடிவடையாமலே செத்துப் போகிறார். ஆனால் இதை சிலரைத்தவிர அந்த ஊர் மக்களோ குறிப்பாக ஊடகங்களோ கண்டுகொள்வதில்லை. உண்மையாக முன்நிறுத்தப்பட வேண்டிய ஆரோக்கியமான செய்திகளை விட்டுவிட்டு வெறும் கவர்ச்சியையும் பரபரப்பையுமே ஊடகங்கள் தலைப்புச் செய்திகளாக்குகின்றன.

ஒரு  அசலான இந்தியக் கிராமத்தையும் குடும்பத்தையும் முன்நிறுத்துவதில் இந்தப்படம் வெற்றியடைந்திருக்கிறது. ஊடகங்கள் கிராமத்தில் நுழைந்த பின் ஏற்படும் கலாட்டாக்களும் அரசியல் சதுரங்கக் காட்சிகளும் அதற்கேயுரிய பரபரப்புகளுடன் சொல்லப்பட்டிருக்கின்றன. அசலான நாட்டார் இசைப் பாடல்களை இப்படத்தில் கேட்க முடிகிறது.

நடிகர் அமீர்கான் இந்த அரசியல் அங்கதத் திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார். ஆளுங்கட்சியின் விழாக்களில் ஜால்ரா அடிப்பதிலேயே காலங்கடத்தும் தமிழக முன்னணி நடிகர்களுக்கு இதில் செய்தியிருக்கிறது. நத்தா பாத்திரத்தில் அமீர்கானே நடிக்கவிருந்து பின்பு தன்னை விட ஓம்காருக்கே அது பொருத்தமாயிருக்கும் என உணர்ந்து அதைக் கைவிட்டிருக்கிறார்.

முன்பே குறிப்பிட்டது போல் இதுவொரு 'நகைச்சுவைப்' படமாகவே போய்விடும் அபாயமிருக்கும் அளவிற்கு இயக்குநர் இது சம்பந்தப்பட்ட காட்சிகளிலேயே முழுக் கவனம் செலுத்தியிருக்கிறார். மாறாக விவசாயிகளின் ஆதாரமான பிரச்சினைகளையும் இணைக்கோடாக சற்று தீவிரத் தொனியில் மெலிதாக சொல்லிச் சென்றிருக்கலாம். விவசாயிகளைச் சோம்பேறிகளாகவும் எப்போதும் அரசுத் திட்டங்களையும் சலுகைகளையும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் சித்தரித்திருப்பதால் இப்படத்திற்கு சில விவசாய அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பும் எழுந்திருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் 8 மில்லியன் விவசாயிகள் தங்கள் தொழிலை கைவிட்டுவிட்டு பிழைப்பிற்காக நகர்மயமாகியிருக்கும் ஒரு குறிப்புடன் படம் நிறைகிறது. இதுதான் இத்திரைப்படத்தின் மூலம் நாம் உணர வேண்டிய முக்கியமான செய்தி. ராணுவத்திற்கான பல கோடி செலவுகளையும் அரசியல்வாதிகளின் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களையும் சமூகத்தின் ஒரு பிரிவு மாத்திரம் கோடீஸ்வரர்களாக வீங்கிக் கொண்டே பொருளாதாரச் சமநிலையின்மையையும் கள்ள மெளனத்துடன் வேடிக்கை பார்க்கும் அரசு, மிக ஆதாரமான விவசாயத்தை இப்படியாக புறக்கணிக்கும் போது 'வருங்காலத்தில் நாம் எதை உண்ணப் போகிறோம்' என்கிற கேள்வி பூதாகரக் கவலையுடன் நம் முன்னே நிற்கிறது.

டெய்ல் பீஸ்: இத்திரைப்படத்தை பாரதப் பிரதமர் திரு.மன்மோகன் சிங் சமீபத்தில் பார்த்திருக்கிறார். அவரும் இதையொரு 'காமெடி' படமாகவே அணுகினார் போலிருக்கிறது. பிறகு நிகழ்ந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் "அரசுக் கிடங்குகளில் மட்கி வீணாகும் தானியங்களை அதற்குப் பதிலாக வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு விநியோகிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறதே?' என்ற கேள்விக்கு 'அரசுத் திட்டங்களில் தயவுசெய்து நீதிமன்றங்கள் தலையிட வேண்டாம்' என்று பதிலளித்திருக்கிறார்.

அரசியல்வாதிகள் அரசியல்வாதிகள்தான்.

suresh kannan

10 comments:

Anonymous said...
This comment has been removed by the author.
ஜோ/Joe said...

நல்லதொரு அறிமுகம் ..அருமையா எழுதியிருக்கீங்க ..பிரச்சார நெடி இல்லாத படம் தான் செவ்வியல் படமாக இருக்க முடியும் என்பது போன்ற சிலவற்றில் மாற்றுக்கருத்துண்டு .

யாசவி said...

Just browsing for reading.

But cannot move away without comments

Nice review and your usual sense of humor comes out :)

//உதாரணமாக சாதாரண பொதுமனிதனாகிய உங்களுக்குச் சொந்தமானதொரு நிலத்தை பன்னாட்டு நிறுவனமோ, பலம் வாய்ந்த அரசியல்வாதியோ அல்லது உள்ளூர் ரவுடியோ கைப்பற்ற வேண்டுமென்று முடிவு செய்து விட்டால் கடவுளே கூட உங்கள் நிலத்தைக் காப்பாற்ற முடியாது. அரசு இயந்திரத்தின் எல்லாக்கதவுகளும் நீங்கள் வரும் போது மூடிக் கொள்ளும்//

//ஏதாவது புதினத்தை மாய யதார்த்த பாணியில் எழுதி மழுப்பிப் பார்க்கலாம். ஆனால் மொத்தம் நூறே பேர் படிக்கும் இந்த மாதிரியான பத்திரிகைகளில் ஜாங்கிரித்தனமான மொழியில் எழுதப்படுகிற படைப்புகளை உளவுத்துறையில் உள்ளவர்கள் கூட கவனமாக வாசிக்க மாட்டார்கள் //

//நடிகர் அமீர்கான் இந்த அரசியல் அங்கதத் திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார். ஆளுங்கட்சியின் விழாக்களில் ஜால்ரா அடிப்பதிலேயே காலங்கடத்தும் தமிழக முன்னணி நடிகர்களுக்கு இதில் செய்தியிருக்கிறது.//

Anonymous said...

Most of the scenes are contrived and one could predict what would be the next scence.It is neither an intelligent critique nor a good satire.what difference is there between the media it mocks and the makers of the film. Media played a positive role in many issues related to famine and farmers suicide despite overkill.

ஈரோடு கதிர் said...

நல்ல அலசல்

குரங்குபெடல் said...

நல்ல பதிவு . . . பாராட்டுக்கள்

Annamalai Swamy said...

நல்ல பதிவு!

வித்யாஷ‌ங்கர் said...

really iam wonder ialso writting comparing popes toilet and peeli live
inmy saamakodai.blogspot.com

Anonymous said...

Vanakkam Suresh Kannan,

Ungal blogirku naan pudhiyavan, kadantha sila naatkalaga ungalathu ovvoru postayum padithen silirthen. Enaku migavum aacharyamaga irukirathu, ungal ovvoru thalaipum ennai bramikka vaikirathu. En manaivi, en nanbargal, udan pani puribavargal matrum naan puthithaga santhikkum ovvoruvaridamum ungalai patriyum ungal blogai patriyume pesugiren. Yaar neengal? Neengal ezhuthiyathil irunthu ovvondraga eduthu ungalidame solla enaku viruppam illai. Samugathai pattriya ungal aathangam gavanikkapada vendiyathu.

You're simply great.

thanks
Velu Radhakrishnan

Anonymous said...

Hi Kovi Kannan,

Have seen the Hindi Movie " TAARE ZAMEEN PAR"

Sundar