Wednesday, January 30, 2019

'மகேஷிண்டே பிரதிகாரம்' - அவல நகைச்சுவையின் அழகியல்






இந்தியாவில் மையநீரோட்ட சினிமாக்கள் மரபான கதைகூறல் முறையிலிருந்து பொதுவாக மெல்ல விலகி வருகின்றன. ஒரு புள்ளியிலிருந்து துவங்கி ஒரு முழு வட்டமாக மறுபடியும் அதில் இணையும் தேய்வழக்கு திரைக்கதைகள் மறைந்து வருகின்றன. வழக்கமான பாணியில் அல்லாமல் அநேர்க்கோட்டு வரிசையில் சம்பவங்களின் தொகுப்பாக உயிர் கொள்கின்றன. பின்நவீனத்துவத்தின் காலக்கட்டத்தில் இருக்கிறோம் என்பதை அழுத்தமாக நினைவுப்படுத்தும் படைப்புகள் உருவாகி வருகின்றன. பழைய கால சிவாஜி படங்கள் மாதிரி கதாபாத்திரங்களின் மிகையான புறச்செய்கைகளின்  மூலம் உணர்ச்சிகள் வெளிப்படுத்தப்படுவதில்லை. ஐரோப்பிய சினிமாக்கள் போல கலையமைதியுடன் கூடிய காட்சிகளின் மூலம் பாத்திரங்களின் அகச்சிக்கல்கள் பார்வையாளர்களுக்கு நுட்பமாக கடத்தப்படுகின்றன.

உலகமயமாதல், மல்ட்டிபெக்ஸ் அரங்கங்களுக்கென்று உருவாகும் பிரத்யேகமான பார்வையாளர் சதவீதம் ஆகியவை திரைக்கதை உருவாக்கங்களில் பாதிப்பை செலுத்துகின்றன. உலக சினிமாவின் பரிச்சயமும் செல்வாக்கும் கொண்ட இளைய தலைமுறை இயக்குநர்கள் தங்களுக்கான சாத்திய எல்லையில் மரபை மீற நினைக்கிறார்கள். இவ்வாறான மாற்று முயற்சிகள் இந்தி திரைப்படங்களில்  எப்போதோ துவங்கி விட்டன. இவ்வாறான போக்கை மலையாள சினிமாக்களில் தற்போது காண முடிகிறது. இந்தப் போக்கின்  சாயல் அழுத்தமாக படிந்துள்ள திரைப்படம் 'மகேஷிண்டே பிரதிகாரம்'. (மகேஷின் பழிவாங்கல்).


***


மகேஷ் என்கிற இளைஞன் அவனுக்கு சம்பந்தமில்லாத ஒரு தெருச்சண்டையில் வீழ்ந்து அவமானப்படுகிறான். ஊரே  அவனை வேடிக்கை பார்க்கிறது. உள்ளுக்குள் உடைந்து போகும் அவன், தன்னை அடித்தவனை திரும்ப அடித்து வீழ்த்தாமல் இனி காலில் செருப்பு அணிவதில்லை என சபதம் கொள்கிறான். இதுதான் இந்த திரைப்படத்தின் ஒருவரிக் கதை. வாசிப்பதற்கு சாதாரணமாகத் தெரிந்தாலும் அபாரமான திரைக்கதையின் மூலம் சுவாரசியப்படுத்தியிருக்கிறார்கள். ஒருவரால் ஏற்பட்ட பாதிப்பிற்கு பழிவாங்காமல் சில விஷயங்களின் மீதான தியாகமும் வைராக்கியமும் நிகழ்வது என்பது இதிகாச காலத்திலிருந்தே ஒரு மரபாக நம்மிடம் உள்ளது.

ஆலப்புழாவில் தம்பன் புருஷன் என்கிற நபர் தெருச்சண்டை ஒன்றை விலக்கப் போய் தாக்கப்பட்டு வீழ்ந்திருக்கிறார். பழிவாங்காமல் இனி  காலில் செருப்பு அணிவதில்லை என்கிற  வீராப்புடன் மூன்று வருடங்களுக்கும் மேலாக காத்துக் கொண்டிருந்தார்.  இந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

குளத்தின் கரையில் ஹவாய் செருப்புகள் சுத்தப்படுத்தப்படும் அண்மைக் கோணத்தில் அமைந்த காட்சியோடு படம் துவங்குகிறது. அந்தச் செருப்பு  படத்தின் மையத்திற்கு முக்கியமான குறியீடாக இருக்கப் போகிறது என்பதை முன்னொட்டாக உணர்த்தும் காட்சியது. குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் மகேஷ் (ஃபகத் பாஸில்) ஒரு சராசரி மலையாளியின் சித்திரத்தை சில நொடிகளில் நமக்குத் தந்து விடுகிறார்.

மகேஷ் குளித்து விட்டு கரையேறும் போது பின்னணியில் அபாரமான பாட்டொன்று ஒலிக்கிறது. அவன் வாழும் இடுக்கி எனும் பிரதேசத்தைப் பற்றிய பாடல். மாண்டேஜ் காட்சிகளாக விரியும் இந்தப் பாடலின் மூலமாக அந்த மண்ணின் மணத்தையும் கலாசாரத்தையும், அந்த மண்ணைச் சாராத பார்வையாளர்கள் கூட நெருக்கமாக உணரும் படி அந்தப் பாடல் சிறப்பாக அமைந்துள்ளது. மோனநிலையில் உறைந்திருக்கும் மகேஷின் தந்தை, மகேஷ் சமையல் செய்யும் காட்சி, அவனுடைய அன்றாட நடைமுறைச் செயல்கள் என மாறி மாறி வரும் காட்சிகள்  ஒரு சிறப்பான அறிமுகத்தையும் புத்துணர்ச்சியையும் இந்தப் பாடல் காட்சிகளின் மூலமாக நமக்குத் தருகின்றன.

***


தன் நண்பருக்காக மகேஷ் தெருச்சண்டையில் ஈடுபடும் சம்பவமானது  மிக தற்செயலாக நிகழ்கிறது. ஆனால் அதற்கு முன் சங்கிலித்தொடர் போல சில பல சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதன் எதிர்வினையாகத்தான் இந்தச் சண்டை நடக்கிறது. பல்வேறு சம்பவங்களை ஒன்றிணைத்து இந்தப் புள்ளியில் வந்து நிறுத்தும் திரைக்கதையின் வசீகரம் இயல்பானதாகவும் அற்புதமானதாகவும் இருக்கிறது.

இதைப் போலவே மகேஷின் காதல் தொடர்பான காட்சிகளும். அவனுடைய பள்ளித் தோழிதான் அவள். இளம் பருவத்திலேயே துவங்கும் காதல் நெருக்கமாக வளர்கிறது. அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை என்றாலும் மனதளவில் தம்பதிகளைப் போலவே உணர்கிறார்கள். ஆனால் இந்தக் காதல் நிறைவேறுவதில்லை. வழக்கமான சினிமா வில்லன்களோ, பெற்றோர்களின் கடுமையான எதிர்ப்போ என்று எதுவுமேயில்லை. அவளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். அவன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறவன்.

பெண் பார்க்கும் போது அவன் வந்து பேசும் தருணத்தில் அவளுடைய மனதில் சலனம் வந்திருக்கலாம். ஏனெனில் மகேஷ் உள்ளூரில் ஒரு சாதாரண ஃபோட்டோ கிராஃபர். அவள் தன் பெற்றோர்களிடம் பிடிவாதம் பிடித்தோ அல்லது மகேஷிடம் வந்து இணைந்தோ கூட தன் திருமணத்தை முடித்திருக்க முடியும். சூழல் அவ்வாறான இணக்கத்தோடுதான் இருக்கிறது. அவளது பெற்றோர்களுக்கு கூட இவர்களின் காதல் தெரியும். அவளின் சம்மதமில்லாமல் திருமணத்தை நடத்த மாட்டார்கள் என்பது போல் காட்சிகள் நகர்கின்றன. 'அவனைக் கட்டிக்கிட்டா வெளிநாட்டுக்குப் போகலாம்' என்கிற ஒரே வரியின் மூலம் ஆசையை விதைக்கிறார் அவளின் தந்தை. அவ்வளவுதான், காதல் 'டமால்' ஆகிறது.

இயல்பு வாழ்க்கையில் இப்படித்தான் பல காதல்கள் முறிகின்றன. காதலை விடவும் தங்களின் வாழ்க்கை குறித்த பாதுகாப்பு உணர்வே பெண்களுக்கு அதிகமாயிருக்கும். அதுதான் யதார்த்தமான விஷயம். ஆனால் சினிமாவானது காதல் என்பதை  இதுவரை மிகையான புனிதத்துடன், போலித்தனமாக சித்தரிப்பதுதான் வழக்கம். இத்திரைப்படம் அந்த நாடகத்தன்மையிலிருந்து  விலகி இயல்பாக சித்தரிப்பது சிறப்பு. மகேஷின் காதலி தன் காதலைத் துறக்கும் காட்சிக் கோர்வைகள் மிக மிக இயல்பாக நகர்ந்து செல்கின்றன.

***


இத்திரைப்படத்தின் பல காட்சிகள் Black comedy எனப்படும் அவல நகைச்சுவையின் பாணியில் சுவாரசியமாக உருவாகியிருக்கின்றன. உதாரணத்திற்கு இதைச் சொல்லலாம். மகேஷின் வயதான தந்தை 'எல்லாம் மாயை' எனும் தத்துவார்த்தமான மனநிலைக்கு நகர்ந்து விடுகிறார். இவரின் தொடர்பற்ற செயல்கள் மற்றவர்களுக்கு குழப்பத்தை தருகின்றன. இவர் வீட்டை விட்டு காணாமற் போய் விட்டதாக நினைத்து காவல் நிலையத்திற்கு புகார் தரும் காட்சியில் இவருடைய நண்பர்கள் ஆளுக்கொரு யூகங்களைச் சொல்வார்கள். "அவர் கொஞ்ச நாளாவே ஆளு சரியில்லை சார்"  இங்கே ஒரு சிறிய பிளாஷ்பேக்.

மகேஷின் தந்தையும் நண்பர்களும் சீட்டாடிக் கொண்டிருக்கும் போது அவர் எங்கோ வெறித்து பார்த்துக்  கொண்டிருப்பார். 'இந்த உலகம்தான் எத்தனை அழகானது' என்பார். நண்பர்களும்  அவர் பார்வையின் திசையில் கவனிப்பார்கள். ஒருவன் சாலையில் மூக்கைச் சிந்திக் கொண்டிருப்பான். மாட்டுச்சாணி படிந்த கறை சாலையில் உறைந்திருக்கும்.

இன்னொரு காட்சி இன்னமும் ரகளையானது. மகேஷின் தந்தையும் அவருடைய சகவயது நண்பரும் அமர்ந்திருக்கும் போது அவர் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் இயேசுவின் படத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார். 'என்னவோய்.. அங்கயே பார்க்கறீரு?' என்று நண்பர் கேட்கும் போது 'நாம ஒரு  திருவிழாவில காபரே டான்ஸ் பார்த்தமே, ஞாபகம் இருக்கா?" என்பார் மகேஷின் தந்தை. நண்பரும் அந்தப் படத்தை உற்றுப் பார்ப்பார். அவருடைய முகம் பரவசத்தில் மலரும். 'மறக்க முடியுமா" என்பார்  இளிப்புடன். பின்னணியில் அவர்கள் பார்த்திருந்த டான்ஸில் கேட்டிருந்த பாட்டு பின்னணியில் ஒலிக்கும். இவ்வளவு உரையாடலும் இயேசு படத்தின் பின்னணியில் நிகழ்வதுதான் இதிலுள்ள அபாரமான நகைச்சுவை.

படம் முழுக்க இது போன்ற அவல நகைச்சுவையில் நனைந்த காட்சிகள்  மிக மிக இயல்பானதாக வருவது அத்தனை சுவாரசியம். தம்மால் பழிவாங்கப்பட வேண்டிய ஆசாமியின் பணியிடம் பற்றிய தகவல் தெரிந்து, சட்டென்று தீர்மானித்து மகேஷ் ஆவேசமாக கிளம்புவான். அவனின் நண்பர்களும் ஊர்க்காரர்களில் சிலரும் வேடிக்கை பார்க்க உற்சாகமாக பின்னால் வருவார்கள். ஆனால் அங்கு சேர்ந்ததும்தான் தெரியும், 'அந்த ஆசாமி நேற்றுதான் துபாய் சென்று விட்டான்' என்ற செய்தி. பொங்கிய ஆவேசத்தையும் பழிவாங்கும் உணர்ச்சியையும் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் அசட்டுத்தனமாக நிற்பான் நாயகன். சுற்றிலும் வேடிக்கை பார்க்க காத்திருந்த பார்வையாளர்கள் வேறு. என்னவொரு அவலமான சூழல்?

***

இத்திரைப்படத்தின் நாயகனான ஃபகத் பாஸிலின் தந்தை நீண்டகாலமாக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்பது நமக்குத் தெரியும். இந்தப் பின்னணியில் இருந்து  நேரடியாக திரைக்கு வரும் அதிர்ஷ்ட வாரிசுகள் தங்களின் பிம்பத்தை வளர்த்துக் கொள்ள என்னென்ன அட்டூழியங்களைச் செய்வார்கள் என்பதை தமிழ் சினிமாவில் நாம் பார்க்கிறோம். ஆனால் ஃபகத் பாஸில், ஒரு சராசரியான மலையாளியின் சித்திரத்திற்கு மேலான எந்த விஷயத்தையும் இத்திரைப்படத்தில் செய்வதில்லை. காதலில் அபத்தமாக தோற்றுப் போகிறார். எதிர்பாராத அந்நியனிடம் அடிவாங்கி அலங்கோலமாக சாலையில் விழுகிறார். ஊரே வேடிக்கை பார்க்கிறது.  அவர் செருப்பணியாதது குறித்த கிண்டல்கள் வருகின்றன. எதிராளியைத் தாக்குவதற்காக கராத்தே கற்றுக் கொள்ளும் சுயபகடி சார்ந்த காட்சிகளும் வருகின்றன. இறுதிக் காட்சியில் எதிராளியை வீழ்த்துவது சினிமாவுக்கேயுரிய உச்சக்காட்சி என்றாலும் இயல்பானதாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படியொரு பாத்திரத்தில் தமிழில் உள்ள எந்தவோரு முன்னணி நடிகராவது ஒப்புக் கொள்வாரா என்று சந்தேகமாக  இருக்கிறது.

இதில் வரும் நகைச்சுவைக்காட்சிகளும் அபாரம். மலையாளத் திரைப்படங்களுக்கேயுரிய அழுங்கிய ஆனால் அற்புதமான நகைச்சுவை. மகேஷின் போட்டோக் கடையின் பக்கத்தில் ஃபிளெக்ஸ் போர்டு அச்சடிக்கும் கடை வைத்திருக்கும் குடும்ப நண்பராக Alencier Ley Lopez அட்டகாசமாக நடித்திருக்கிறார்.  எவனோ மூக்கைச் சிந்துவதை வெறித்துப் பார்த்து 'உலகம் அழகானது' என்று தன் நண்பரும் மகேஷின் தந்தையும் ஆனவர் உளறும் போது திகைப்புடன் பார்க்கும் இவர், பிறகு 'பேபி, நீ கூட அழகானவன்தான்' என்று அவர் சொன்னவுடன் முகச்சுளிப்பை மாற்றிக் கொண்டு பெருமையான முகபாவத்தை தரும் அந்த சிறுஅசைவு அத்தனை அழகானது.

மகேஷின் காதலி அவனைத் தேடிச் செல்வதற்கு ஏதுவாக, அவளுடைய குடும்ப உறுப்பினர்களை திசை திருப்புவதற்காக இவர் செய்யும் நாடகமும் அதனால் இவர் படும் பாடும் நல்ல நகைச்சுவைக் காட்சி. நாடகக்குழு அனுபவமும் உள்ள இவர் 1998-ல் இருந்தே மலையாளத் திரையுலகில் நடித்து வந்தாலும் சமீபத்தில்தான் பரவலான கவனத்திற்கு உள்ளாகியிருக்கிறார் என்கிற தகவலை பார்த்த போது ஆயாசமாக இருந்தது. மலையாளத்திலுமா அப்படி?

இதைப் போலவே Soubin Shahir-ன்  நகைச்சுவை பங்களிப்பும். இவர் காட்டும் எளிய முகபாவங்களுக்கு கூட சிரிப்பு வருகிறது. 'மம்மூக்காவா, லாலேட்டனா, யார் பெருமையான பாத்திரங்களில் நடிப்பதில் சிறந்தவர்' என்று உற்சாகமாக பேசி  அப்போதுதான் அறிமுகமான ஓர் இளம் பெண்ணை உடனேயே இவர் நட்பாக்கிக் கொள்வது சிறந்த காட்சி. 'தன்னுடைய பெண்ணின் பின்னால் இவன் சுற்றுகிறானோ' என்று அவரது தந்தை இவரிடம் கண்டிப்புடன் பேசும் போது அதை நிராகரித்து இவர் காட்டும் தீவிரமான முகபாவம் நகைச்சுவையின் இன்னொரு பக்கம். அபாரமான நடிகர்.


***

இதில் வரும் பெரும்பாலான முகங்களும் அவர்களது அசைவுகளும் சினிமாத்தனமானதாக இல்லாமல் இயல்பானதாக இருக்கின்றன. மகேஷின் முதல் காதலியும், மகேஷ் இரண்டாவதாக  தன் காதலை எதிர்கொள்ளும் பெண்ணும் கூட அத்தனை இயல்பாக நடித்திருக்கிறார்கள். மகேஷின் தந்தையாக நடித்த,  அந்தோனி கொச்சி, சில காட்சிகளில் வந்தாலும் முதிர்ச்சியான நடிப்பை தந்திருக்கிறார். தாம் எடுத்த புகைப்படத்தை ஓர் இளம் பெண் நிராகரித்த அவமானத்தை மகேஷால் தாங்க முடியாத போதுதான் அந்த துறையில்  தம் தந்தைக்கு உள்ள திறமையை கண்டறிகிறான். அவர் வீட்டை விட்டு காணாமற் போவதில்லை. பின்புறமுள்ள தோட்டத்தில் வரும் பறவையை புகைப்படம் எடுப்பதற்காக இரவில் காத்திருக்கிறார்.

பொருத்தமான தருணங்களில் ஒலிக்கும் பாடல்களும் இனிமையானதாக உள்ளன. கேரள மண்ணின் மணம் கமழும் இசை. இயல்பான, நேர்த்தியான ஒளிப்பதிவு. சமையல் செய்வதின்் இடையில் மகேஷ் அறையின் வாசலில் நிற்கும் காட்சி ஒன்று, தன்னந்தனியான ஓர் ஆணின் சித்திரத்தை அவனின் மனநிலையை ஒரு நொடியில் நமக்கு கடத்தி விடுகிறது. இப்படியாக பல காட்சிகள் நுண்ணுணர்வுடனும் ரசனையுடனும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இயக்குநர் திலீஷ் போத்தனுக்கு இது முதல் திரைப்படம் என்பதை நம்ப முடியவில்லை. மலையாளத் திரைக்கு புதிய அலை இயக்குநர்களின் மத்தியில் ஒரு திறமையான புதுவரவு.

(அம்ருதா - டிசம்பர் 2016 இதழில் பிரசுரமானது)

suresh kannan

No comments: