Tuesday, January 22, 2019

ரஜினி என்கிற மாயமான்







தங்களின் துயரங்களிலிருந்து மீட்பதற்காக எந்த ரட்சகனாவது வர மாட்டானா என்பது பொதுசமூகத்தின், குறிப்பாக அடித்தட்டு மக்களின் ஆதாரமான ஏக்கங்களுள் ஒன்று. எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் இந்த எதிர்பார்ப்பு ஓயாது. மதம் போன்ற நிறுவனங்கள் இந்த ஏக்கத்தை வலுவாகப் பற்றிக் கொண்டு ,அவரவர்களின் பிம்பங்களை முன்நிறுத்தி அசைக்க முடியாத அமைப்புகளாகி விட்டன. அரசர்கள் கடவுளுக்கு நிகராக கருதப்பட்ட, அப்படி கருதப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட காலங்களும் முன்பு இருந்தன. ஜனநாயகம் மலர்ந்து மக்கள் அதிகாரத்திற்கு நகர முடியும் என்கிற மறுமலர்ச்சிக் காலக்கட்டத்தில் அரசியல்வாதிகள் இந்த இடத்தை அபகரித்துக் கொண்டார்கள். ஒரு சராசரி நபர் சாம, பேத, தான, தண்டம் என்று பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டால் ஒரு குறுநில மன்னருக்கான அதிகாரத்தையும் செளகரியங்களையும் பெற்று விட முடிகிறது.

பொதுமக்களுக்கு உண்மையாகவே சேவை செய்வதின் மூலமாகவோ அல்லது அப்படியான பாவனைகளின் மூலமாகவோ அதிகார அரசியலுக்குள் வருவது ஒருவழி. இதற்கு நீண்ட காலமாகும். ஆனால் இதற்கான குறுக்கு வழியும் ஒன்று இருக்கிறது. அது சினிமா. கச்சிதமாக திட்டமிடப்பட்ட காட்சிகளின் மூலம் தன்னை அவதார நாயகராகவும் அடித்தட்டு மக்களின் மீட்பராகவும் காட்டிக் கொண்டால், நிழல் பிம்பங்களை நிஜம் என்று நம்பும் சமூகம் அதிகாரத்தை இந்த நடிகர்களிடம் ஒப்படைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இந்த வழிமுறையில் வெற்றிகரமாக பயணித்த அரிதான உதாரணம் எம்.ஜி.ஆர்.

இன்றைய விளம்பர நிபுணர்கள் கூட அதிசயப்படக்கூடிய விஷயமாக எம்.ஜி.ஆரின் திட்டங்களும் முன்தயாரிப்புகளும் இருந்தன.  ஏறத்தாழ அனைத்து திரைப்படங்களிலும் ஏழைப் பங்காளனாக தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டதோடு அரசியல் அடையாளங்களையும் அவற்றில் மிக நுட்பமாக திணித்து மக்களின் அபாரமான நம்பிக்கையைப் பெற்றார். இன்றும் கூட அடித்தட்டு மக்களிடையே இவரது பிம்பம் செல்வாக்குடன் இருக்கிறது. ‘நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்…’ என்கிற பாடலின் மூலம் அவர் வைத்த கோரிக்கையை மக்கள் நிஜமாக்கிக் காட்டினார்கள். இவரின் அரசியல் எதிரியாக கருதப்பட்ட கருணாநிதியை முழுதாக ஓரங்கட்டி, ஏறத்தாழ 13 வருடங்கள் தொடர்ந்து முதலமைச்சராக இருந்த பெருமை எம்.ஜி.ஆருக்கு வாய்த்தது.

ஆனால் எம்.ஜி.ஆரின் ஆட்சி நடைமுறையில் இருந்த காலக்கட்டங்களில் அடித்தட்டு மக்கள் உண்மையாகவே மகிழ்ச்சியாக இருந்தார்களா? அவர்களின் பெரும்பாலான துயரங்கள் தீர்க்கப்பட்டனவா? இது தொடர்பாக எம்.எஸ்.எஸ். பாண்டியன் எழுதிய ‘பிம்பச்சிறை’ என்கிற நூலை வாசித்துப் பார்க்கலாம். எம்.ஜி.ஆர் என்கிற பிம்பம் படிப்படியாக திட்டமிட்டு வளர்ந்ததையும், அதிகாரத்தில் அமர்ந்த பிறகு நிகழ்ந்த குளறுபடிகளும் நிர்வாக சீர்கேடுகளும் புள்ளிவிவரங்களோடு அந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. நிழலை நிஜமாக நம்பினதற்காக தமிழக மக்கள் தந்த விலை இது. 

எம்.ஜி.ஆர் என்கிற புலியைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட பல பூனைகள் பின்னர் கிளம்பின. சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர் என்று இந்தப் பட்டியல் மிக நீண்டது. எம்.ஜி.ஆர் தந்த ஆதரவின் பின்புலத்தில் இதில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா மட்டுமே. அவருக்கு என ஓர் இரும்பு ஆளுமையையும் பல அடாவடிகளின் மூலம் வளர்த்துக் கொண்டார். ஆனால் மற்றவர்கள் எல்லாம் சூடான பாலில் வாய் வைத்த பூனையைப் போல மறுபடியும் சினிமாத் துறைக்கே அலறியடித்துக் கொண்டு திரும்பி ஓடினார்கள். விஜய்காந்த் போன்றவர்கள் திரிசங்கு சொர்க்கம் போல இடையில் மாட்டிக் கொண்டு விழிக்கிறார்கள். என்றாலும் இந்த வரிசை ஓய்வதாக இல்லை. அரசியல் அதிகாரத்திற்குள் நகர சினிமா என்கிற குறுக்கு வழி எளிதாக இருக்கும் என்கிற கற்பனையில் நேற்று நடிக்கத் துவங்கிய இளம்நடிகர் கூட காமிராவை நோக்கி வீர வசனங்கள் பேசும் நகைச்சுவைகளும் பெருகத் துவங்கி விட்டன.

ஆனால் நிழலுக்கும் நிஜத்திற்குமான வித்தியாசத்தை பொதுமக்கள் இன்று உணர ஆரம்பித்து விட்டார்கள். முன்பெல்லாம் சண்டைக்காட்சிகள் என்றால் அது தொடர்பான படப்பிடிப்பை ஸ்டூடியோவிற்கு உள்ளே ரகசியமாகத்தான் வைத்துக் கொள்வார்களாம். ஹீரோ தாவுவதையும் பறப்பதையும் உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கும் பார்வையாளர்களுக்கு இது சார்ந்த ரகசியங்கள் புலப்பட்டு, சினிமா மீதும் சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீதும் அவர்களுக்கு இருக்கும் கவர்ச்சி குறையக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. ஆனால் பெரும்பாலான படப்பிடிப்புகள் இன்று வெளிப்புற இடங்களில்தான் நடைபெறுகின்றன. கிராஃபிக்ஸ் முதற்கொண்டு சினிமாவின் பல நுணுக்கங்களை, அதிலுள்ள பிழைகளை பார்வையாளர்களே அலசத் துவங்கியிருக்கிறார்கள். இவற்றில் சித்தரிக்கப்படும் சாகசங்கள் பெரும்பாலும் போலியானவை என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. நாயக நடிகர்களின் மீதான கவர்ச்சி குறைவதற்கு இது போன்ற காரணங்கள் முக்கியமானதாக அமைந்திருக்கின்றன. இந்தச் சூழலில் இன்னொரு எம்.ஜி.ஆர் உருவாவது இனி சாத்தியமேயில்லை என்றுதான் தோன்றுகிறது.

**

சமீப காலத்திய தமிழக அரசியல் சூழலில் ஜெயலலிதா விட்டுச் சென்ற வெற்றிடத்தை குறிவைத்து மறுபடியும் சில நடிகர்கள் அரசியல் களத்திற்குள் குதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவற்றில் பிரதானமானவர் ரஜினிகாந்த். ‘வருவேன், ஆனா வர மாட்டேன்’ என்கிற மதில் மேல் பூனை கதையாக, அரசியலுக்குள் நுழைவதாக ரஜினிகாந்த் கூறிக் கொண்டிருக்கும் புனைவிற்கான வயது ஏறத்தாழ 25 ஆண்டுகள். மாறி மாறி அரசாண்ட இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியால் சலிப்பும் வெறுப்பும் கொண்டிருக்கும் தமிழக மக்கள், மாற்றத்திற்காக அல்லாடிக் கொண்டிருக்கும் போது இந்த ‘வருவேன், வரமாட்டேன்’ விளையாட்டை இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக அவர் நிகழ்த்திக் கொண்டிருப்பது நிச்சயம் முறையல்ல. தன்னுடைய நிலைப்பாட்டை பட்டவர்த்தனமாக தெரியப்படுத்தாமல் சூழ்நிலைக்கு ஏற்ப ஜாக்கிரதையாக விளையாடிக் கொண்டிருப்பதும் ஒருவகையில் மக்களுக்கு செய்கின்ற துரோகம்தான். இது மட்டுமல்லாமல், இந்த ‘மதில் மேல் பூனை’ கதையாடலை தன்னுடைய திரைப்படக்காட்சிகளுக்கான முதலீடாகவும் மாற்றிக் கொண்ட சாமர்த்தியசாலிதான் ரஜினிகாந்த். ‘நான் பாட்டுக்கு என் வழியில் போயிட்டிருக்கேன்.. என்னை சீண்டாதீங்க’ என்று புனைவுப் பாத்திரங்களிடம் வீராவேசமாக பேச, மக்கள் அந்தப் பாவனையைப் புரிந்து கொண்டு பலமாக கைத்தட்டி மகிழ்ந்தார்கள். இப்படி சில வருடங்கள் அவரது சினிமா வண்டி ஓடிக் கொண்டிருந்தது.

எம்.ஜி.ஆரைப் போல தன் திரைவாழ்க்கையை ரஜினி திட்டமிட்டு அமைத்துக் கொள்ளவில்லை. அவ்வாறு தீர்மானிக்கும் செல்வாக்கு துவக்க காலக்கட்டங்களில் அவரிடம் இல்லாமலிருந்தது. வில்லன் பாத்திரங்களின் மூலம் வெற்றியடைந்து நாயகராக பதவி உயர்வு பெற்றாலும் கூட, குடிப்பது உள்ளிட்ட காட்சிகளில் அவர் நடிக்கத் தயங்கவில்லை. எம்.ஜி.ஆரைப் போல தன்னை ஒழுக்கவாதியாகவும், நேர்மறை பிம்பமாகவும் சித்தரித்துக் கொள்ள ரஜினி அதிகம் மெனக்கெடவில்லை. திரைக்கு வெளியிலும் தன்னுடைய பிம்பம் குறித்தான கவலை அவருக்கு இல்லை. ஒருவகையில் அவருடைய சிறப்பு அம்சங்களில் ஒன்றாக இதுவே பேசப்பட்டது.

வருங்காலத்தில் தானொரு ‘சூப்பர் ஸ்டார்’ ஆவோம் என்கிற கற்பனையோ எதிர்பார்ப்போ ரஜினிக்கு இல்லை. இதை வெளிப்படையாகவே பல நேர்காணலில் அவர் கூறியிருக்கிறார். என்றாலும் காலம் இந்த தங்க கீரிடத்தை அவர் தலையில் வைத்தது. ரஜினியின் கடுமையான உழைப்பும் இதற்கு காரணமாக இருந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை. ‘தானுண்டு தன் நடிப்புண்டு’ என்றிருந்த ரஜினியை அரசியல் உள்ளே இழுக்கும் என்று கற்பனை செய்திருப்பாரா என்று தெரியவில்லை என்றாலும் இது எல்லா பிரபலங்களுக்கும் நேரக்கூடிய விபத்துதான்.

ஒரு சராசரி நபருக்கு, அரசியல் மீது இருக்கக்கூடிய பொதுவான கோபங்களையும் கிண்டல்களையுமே அவர் திரைப்படத்தின் பாடல்களும் காட்சிகளும் ஒரு காலக்கட்டத்தில் பிரதிபலித்தன. குரு சிஷயன் திரைப்படத்தில் வரும் ‘நாற்காலிக்கு சண்டை போடும்’ பாடல் ஓர் உதாரணம். ‘எனக்கு கட்சியும் வேண்டாம், கொடியும் வேண்டாம்’ என்றெல்லாம் கூட தன் அரசியல் ஒவ்வாமையை வெளிப்படையாக பதிவு செய்தவர். மக்களிடம் பிரபலமும் செல்வாக்கும் கொண்டவர்களின் மீது அரசியல்வாதிகளுக்கு ஒருபுறம் ஈர்ப்பும் இன்னொரு புறம்எரிச்சலும் வருவது இயற்கை. ஒன்று அவர்களை வளைக்கப் பார்ப்பார்கள் அல்லது உடைக்கப் பார்ப்பார்கள்.

அந்த வகையில் அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவிற்கும் ரஜினிகாந்த்திற்கும் உரசல்கள் ஆரம்பித்தன. காவல்துறையினர் ரஜினியின் காரை போயஸ் கார்டனின் வெளியில் நிறுத்தி விசாரணை செய்தார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் ரஜினி தன் திரைப்படங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேசிய அரசியல் விமர்சனங்கள், வசனங்கள் ஆளுங்கட்சியை எரிச்சலூட்டியதாகவும் கூறப்படுகிறது. ‘அண்ணாமலை’ திரைப்படத்தில் துவங்கிய இந்த உரசல், பாட்சா திரைப்படத்தின் வெற்றிவிழாவில் பெரிய சர்ச்சையாக மாறியது. மணிரத்னம் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டதையொட்டி விழா மேடையில் இதை ரஜினி காரமாக விமர்சிக்க, படத்தின் தயாரிப்பாளரான ஆர்.எம்.வீரப்பன், ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளாகி பதவியை இழந்தார். இதன் இடையில் பாமக கட்சியோடு ஏற்பட்ட உரசலில் அந்தக் கட்சிக்காரர்கள் ‘பாபா’ திரைப்படத்தின் படப்பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடிய நகைச்சுவையும் நிகழ்ந்தது.

இதனால் பல்வேறு வகையில் எரிச்சலுக்கு உள்ளான ரஜினி, 1996-ல் நிகழ்ந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக – தாமக கூட்டணிக்கு ஆதரவாக குரல் தந்தார். ‘ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது’ என்று அவர் ஆவேசமாக கூறியதை, தொலைக்காட்சிகளில்  மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டது திமுக.  இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு, அப்போதைய ஆளுங்கட்சியின் மீது பொதுமக்கள் சலிப்பும் கோபமும் கொண்டது பிரதான காரணம் என்றால், ரஜினியின் ஆதரவும் ஒரு குறிப்பிடத்தக்க பங்காக அமைந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் பிறகு நிகழ்ந்த தேர்தல்களில் ரஜினியின் ‘வாய்ஸ்’ பெரிதும் எடுபடவில்லை. இதை உணர்ந்த ரஜினியும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் நேரடி ஆதரவு தராமல் ‘கழுவிய நீரில் நழுவிய மீனாக’ இருந்தார். மறுபடியும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த போது ஒரு விழா மேடையில் அவரை ‘தைரியலட்சுமி’ என்று புகழவும் ரஜினி தயங்கவில்லை.

தமிழக அரசியலுக்கும் ரஜினிக்கும் இடையில் நிகழ்ந்த இந்தச் சம்பவங்களை விவரமாக எழுதுவற்கான காரணம் இருக்கிறது. ரஜினி அரசியல் பாதைக்குள் தற்செயலாக வந்து விழுந்ததற்கான தடயங்கள் இவை. மற்றபடி பொதுமக்களின் பிரச்சினைகளைப் பற்றிய பிரத்யேகமான கருத்தோ, பார்வையோ, அக்கறையோ அவரிடம் எப்போதும் இருந்ததில்லை. திரைத்துறையினர் நிகழ்த்தும் போராட்டங்களில் மட்டும் கட்டாயத்திற்காக கலந்து கொள்வார். காவிரி நீர் பிரச்சினைக்காக நிகழ்ந்த ஒரு போராட்டத்தில் நடிகர் சங்கத்தோடு இணையாமல் தனியாக உண்ணாவிரதம் இருந்து பரபரப்பை ஏற்படுத்தினார். ‘என் வழி, தனி வழி’ என்கிற அவருடைய ‘பஞ்ச்’ வசனத்தை இப்படித்தான் நடைமுறையில் நிரூபிக்க வேண்டுமா?

‘நதிநீர் இணைப்பிற்காக ரூ.ஒரு கோடி தருகிறேன்’ என்று அவர் அறிவித்ததும் பரபரப்பானது. இந்தியாவின் நதிகளை இணைப்பதென்பது பல நூறு கோடிகளை கோரி நிற்கும் திட்டம் என்பதால் எளிதில் சாத்தியமில்லாதது என்பது ஒருபுறம் இருக்க, இயற்கையான முறையில் பாயும் நதிகளை வலுக்கட்டாயமாக இணைப்பது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பல லட்சம் மக்கள் தங்களின் வாழ்விடங்களை இழக்க வேண்டியிருக்கும் என்றும் சொல்கிறார்கள். இவற்றையெல்லாம் ஆராயாமல் ரஜினி அறிவித்தது ஒரு ‘ஸ்டண்ட்’ ஆகவே படுகிறது. அவருடைய குரல் பலரால் கவனிக்கப்படும் போது அதுபற்றிய பொறுப்பில்லாமலும் ஒரு பிரச்சினையின் ஆழத்தை அறியாமலும் சினிமாவில் பேசும் ‘பஞ்ச்’ வசனங்களைப் போன்று நிஜ வாழ்விலும் சொல்லுபவரால் என்ன மாதிரியான திட்டங்களை மக்களுக்கு சாத்தியப்படுத்த முடியும்?

நேரடி அரசியலுக்குள் வருவதற்கான எண்ணம் ரஜினிக்கு இப்போது கூட இல்லை என்றே தோன்றுகிறது. ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் ஆடிய நாடகத்தையே சமகாலத்திலும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்கிறார். அரசியல் கட்சியை துவங்குவதற்கான ஏற்பாடுகளை அவர் தெரிவித்த போது வழக்கம் போல் ஊடகத்தில் அந்தச் செய்தி தீ போல பற்றிக் கொண்டது. ஒரு செய்தியாளர் ‘உங்கள் கட்சியின் கொள்கை என்ன?’ என்கிற ஆதாரமான கேள்வியை முன்வைக்கும் போது கூட அவரால் தெளிவாக பதிலளிக்க முடியவில்லை. இந்தச் சம்பவத்தைப் பற்றி ‘தலையே சுத்திடுச்சு’ என்று வேறு இடத்தில் சொல்லி சிரித்துக் கொள்கிறார். இதற்காக மக்களும் அவரைப் பார்த்து சிரிக்கிறார்கள் என்பதை அவர் அறிகிறாரா இல்லையா என்று தெரியவில்லை.

‘இன்னமும் கட்சியே துவங்கவில்லை, அதற்குள் கொள்கையைப் பற்றி என்ன சொல்ல முடியும்?” என்று அவர் வெள்ளந்தியாக பேசுவதிலிருந்து கதையே இல்லாமல் சினிமா படப்பிடிப்பிற்கான பூஜையைப் போட்டு விடுவது போல, கட்சியின் கொள்கைகள், தொலைநோக்குத் திட்டங்கள், வாக்குறுதிகள் என்கிற எந்தவொரு அடிப்படையான விஷயங்களும் இல்லாமல் விளையாட்டு போல கட்சியைத் துவங்கவிருக்கிறாரா என்று தோன்றுகிறது. தனது ஒவ்வொரு புதிய சினிமா வெளியாவதற்கு முன்பும் படம் ஓடுவதற்காக செயற்கையாக ஒரு பரபரப்பைக் கிளப்பி விட்டு விடுகிறார் என்று பெரும்பாலோனார் கருதுகிறார்கள் இதற்கான முகாந்திரங்கள் அவருடைய தொடர்ச்சியான செய்கைகளில் தெரிகின்றன. ‘போர் வரும் போது பார்க்கலாம்’ என்று ரசிகர்களை உசுப்பி விட்டு விட்டு அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள சென்று விடுபவரை மக்களின் பிரதிநதி என்று கூட அல்ல, ஒரு கட்சியின் தலைவர் என்று கூட சொல்ல முடியவில்லை.

காவிர் நீர் விவகாரத்திற்காக, ஐபிஎல் போட்டியை எதிர்த்து நிகழ்ந்த போராட்டத்தின் போதும் சரி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு  விவகாரத்தின் போதும் சரி, ரஜினியின் அசலான ‘வலதுசாரி’ முகம் கொடூரமாக வெளிப்பட்டது. ‘சீருடை அணிந்த காவலர்களை அடிப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்’ என்று காவல்துறையினருக்கு பரிந்து பேசினார். இது ஒருவகையில் ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்தான். ஆனால் காவல்துறையால், போராட்டக்காரர்கள் மீதும், காவல்நிலையத்தில் புகார் தர வருகிறவர்கள் மீதும், ஏன் அன்றாடம் பொதுமக்கள் மீது நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள், ஊழல், லஞ்சம், பொய் வழக்குகள் என்று நீளும் பல மோசடிகளைப் பற்றி அவர் எப்போதாவது பொதுமக்களின் குரலாக நின்று பேசியிருக்கிறாரா?

ஸ்டெர்லெட் ஆலையை மூடுவதற்காக நிகழ்ந்த மக்கள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு ‘சமூக விரோதிகள்’தான் காரணம் என்று ஆவேசமாக பேட்டியளித்தார் ரஜினிகாந்த். காவல்துறையினர் தாக்கப்பட்டதற்காக இந்த இடத்திலும் கண்டனம் தெரிவித்தார். ஏறத்தாழ நூறு நாட்கள் அமைதியாக நிகழ்ந்த போராட்டத்தை திசை திருப்ப அல்லது கறை படிய வைக்க, அரசு மற்றும் கார்ப்பரேட் கூட்டணியின் சதியில் சில கைக்கூலிகள் போராட்டத்தில் ஊடுருவி வன்முறையை நிகழ்த்தியிருக்கலாம். ஆனால் பல அப்பாவி மனிதர்களின் உயிர் பறி போயிருக்கும் நேரத்தில் அதைப் பற்றி பிரதானமாக பேசாமல் ‘சமூக விரோதிகள்’ என்று அசந்தர்ப்பமாக பேசியிருப்பதின் மூலம் மக்களின் உணர்வுகளையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துகிறோம் என்கிற பிரக்ஞை கூட அவருக்கு இல்லை.

அடித்தட்டு மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு எவ்வகையிலும் உதவாத ‘ஆன்மீக அரசியல்’ என்றொரு கொள்கையை முன்வைப்பது, முன்னாளில் ‘சோ’வும் இன்னாளில் ‘குருமூர்த்தியும்’ ரஜினியின் அரசியல் ஆலோசகர்களாக இருந்தார்கள் என்று சொல்லப்படுவது, ஸ்டெர்லைட் போராட்ட விவகாரத்தில் ஆளுங்கட்சிக்கு சாதகமாகப் பேசுவது … ரஜினியின் இந்த நிலைப்பாடுகளையெல்லாம் கூட்டி கழித்துப் பார்த்தால், பாஜகவின் செல்வாக்கை தமிழகத்தில் வளர்ப்பதற்காக உபயோகிக்கப்படும் மறைமுக பிம்பம் ரஜினிகாந்த் என்று சொல்லப்படுவதில் உண்மையிருக்குமோ என்று தோன்றுகிறது.

ஒரு திரைப்படத்தை மூன்று மணி நேரம் பார்க்கும் ஒரு சராசரி ரசிகன் கூட அதில் அழுத்தமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் அரசியல் உணர்வின் பால் கவரப்படுவான். அது குறித்து சிந்திக்கத் துவங்குவான். அடித்தட்டு மக்களின் ‘நில உரிமைக்கான போராட்டத்தை’ அடிப்படையாகக் கொண்ட ‘காலா’ திரைப்படத்தில் பல நாட்கள் நடித்திருந்தும் அதில் பேசப்பட்டிருக்கும் அரசியலால் ரஜினி துளி கூட ஈர்க்கப்படவில்லை என்றே தெரிகிறது. ‘எல்லாத்துக்கும் போராட்டம்னா தமிழ்நாடு சுடுகாடாயிடும்’ என்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் எரிச்சல்பட்டது அவருடைய ‘வலதுசாரி’யின் முகத்தை அம்பலப்படுத்துகிறது.. அவர் நடித்த திரைப்படத்தின் கருத்தாக்கத்திற்கு அவரே முரணாக நிற்கிறார். திரைக்குள் ஒரு ரஜினியும், திரைக்கு வெளியே வேறு ஒரு ரஜினியுமாக விலகி நிற்கும் ‘டபுள் ஆக்ஷனை’ அவரால் சிறப்பாக செய்ய முடிகிறது.

ரஜினிகாந்த் தனிப்பட்ட வகையில் சில நற்பண்புகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் அரசியல் தளத்தில் இயங்குவதற்கான துளி தகுதி கூட அவரிடம் தென்படவில்லை. அரசியலில் நுழைவதையே இருபத்தைந்து ஆண்டுகளாக மேலாக குழப்பிக் கொண்டிருப்பவரிடம், துரதிர்ஷ்டவசமாக அரசியல் அதிகாரம் கிடைத்து விட்டால் மக்களுக்கான திட்டங்கள் எல்லாம் இந்தக் குழப்பத்திலேயே தள்ளாடி நின்று விடும். ‘எப்போது அவர் அரசியலுக்கு வருவார்?’ என்று கொலைவெறியுடன் காத்திருக்கும் ரசிகர் படையிடம் அதிகாரப் பங்கீடு கிடைத்தால் முன்னாள் அரசியல்வாதிகள் அடித்த கொள்ளையையே தொடர்வதற்கான சாத்தியங்கள் அதிகம். இந்த வாய்ப்பிற்காகத்தான் ரஜினியின் அரசியல் சூதாட்டத்தை பல வருடங்களாக அவர்கள் சகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

திரைத்துறையில் ரஜினி ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கலாம். ஆனால் அரசியலைப் பொறுத்தவரையில் அவர் ஒரு மாயமான். அவரை நம்பி பின்தொடர்ந்து சென்றால் இழப்பு தமிழக மக்களுக்குத்தான். இதை பெரும்பாலான சதவீதத்தினர் அறிந்தே வைத்திருக்கிறார்கள். என்றாலும் தங்களுக்கான மீட்பரை எதிலும் எங்கும் தேடும் அப்பாவிகள் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. 

('பேசும் புதிய சக்தி - ஜூலை 2018 இதழில் பிரசுரமானது)

suresh kannan

No comments: