Thursday, February 20, 2014

'அம்மா' குடிநீர்' 'அம்மா உணவகம்' 'அம்மா நீதிமன்றம்'

 சாதுர்யமாக காய் நகர்த்துவதன் மூலம், ராஜீவ் கொலை வழக்குத் தீர்ப்பு தொடர்பான பெரும்பான்மையான அரசியல் பலனை, மக்கள் ஆதரவை  ஜெயலலிதா பெற்று விட்டார் என்று தோன்றுகிறது. அம்மா குடிநீர், அம்மா உணவகம் மாதிரி 'அம்மா தீர்ப்பு'  

வைகோ, கருணாநிதி, ராமதாஸ், நெடுமாறன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், அரசியலுக்காகவோ அல்லது உண்மையான தன்னார்வத்தினாலோ இந்த விவகாரத்தில்  இத்தனை ஆண்டுகள் நிகழ்த்திய போராட்டத்தின் விளைவாக விழுந்த கனியின் ருசியை பெரும்பாலும் ஜெயலலிதாவே சுவைக்க நேர்ந்தது அவருடைய அதிர்ஷ்டத்தையும் சாதுர்யத்தையும் காட்டுவதோடு மற்றவர்களின் துரதிர்ஷ்டமாகவும் அமைந்திருக்கிறது. எதிர்பார்த்தது போலவே தமிழ் உணர்வாளர்களிடையே பாரபட்சமின்றி ஜெயலலிதாவிற்கு கிடைத்திருக்கும் பெரும் வரவேற்பும் பாராட்டும், எந்த நோக்கத்திற்காக இந்த முடிவை அவர் எடுத்தாரோ அதை சாதித்து விடுவார் என்கிற யூகத்தையே ஏற்படுத்துகிறது. இந்த அலையை மீறி மற்ற கட்சிகளுக்கான அரசியல் லாபம் என்பது எதுவுமே மிச்சமிருப்பதாக தோன்றவில்லை.

விடுதலைப்புலிகள் தொடர்புள்ள எந்தவொரு விஷயத்திலும் பாதகமான கண்ணோட்டத்திலேயே இதுசெயல்பட்டு வந்த ஜெ, இந்தச் சூழ்நிலையை 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' என்பதற்கேற்ப சாதகமாக உபயோகித்துக் கொண்டதைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகவோ விமர்சித்ததாகவோ தெரியவில்லை. உற்சாகமும் மிகையுணர்ச்சியுமான  கூச்சல்களின் இடையே இந்தக் குரல்களின் ஓசை அதிகம் எழவில்லை. 'தேர்தலுக்காகவோ அல்லது அரசியல் தந்திரமோ அல்லது எதுவாக வேண்டுமானலும் இருந்து விட்டுப் போகட்டும்' - ஜெவின் இந்த முடிவு பாராட்டத்தக்கது' என்பதே பெரும்பான்மையான குரல்களின் எதிரொலியாக இருக்கிறது. ஒருவேளை கருணாநிதி ஆட்சியில் இருந்து இந்த முடிவை ஒருவேளை எடுத்திருந்தால் 'வாக்கு வங்கிக்காகத்தான் இந்த சந்தர்ப்பவாத முடிவை எடுத்திருக்கிறார்' என்று இதே குரல்களே ஒலித்திருக்கலாம். குருட்டுத்தனமாகவோ அசட்டு தைரியத்துடனோ, வீம்புக்காகவோ ஜெ எடுக்கும் முடிவுகள் அவரை 'வீராங்கனை, இரும்புப் பெண்மணி' என்றெல்லாம் கருதப்படக்கூடிய எண்ண அலைகளை பொதுவெளியில் ஏற்படுத்தும் அதிர்ஷ்டம் அவருக்கு எப்போதும் அடிக்கிறது.

இதற்கு இன்னொரு கோணமும் இருக்கிறது. ஒருவேளை கருணாநிதியே இப்போது ஆட்சியில் அமர்ந்திருந்து இந்தச் சூழலை சந்தித்திருந்தால் ஜெ போல அதே உறுதியுடன் இந்த முடிவை எடுத்திருப்பாரா என்பது சந்தேகம்தான். தன்னுடைய அரசியல் லாபத்திற்காகவும், ஊழல் வழக்குகளிலிருந்து தங்களின் சுற்றத்தை பாதுகாத்துக் கொள்ளவும் மத்திய அரசை பகைத்துக் கொள்ள அவர் தயாராக இருந்ததில்லை என்பதே கடந்த கால அரசியல் நிகழ்வுகள் நமக்கு தரும் செய்தி. 'மத்திய அரசிற்கு இது குறித்து கடிதம் எழுதியிருக்கிறேன்' என்பதோ அல்லது 'ஒரு நாள் உண்ணாவிரதம்' அல்லது பந்த் என்னும் பாவனைகளோடு இந்தப் பிரச்சினையை அவர் திசை திருப்பியிருப்பதோடு முடித்திருப்பார். ஜெ-விற்கு கிடைத்திருக்கும் இந்த பெரும் ஆதரவு, ஏற்கெனவே அழகிரி பிரச்சினையால் துவண்டிருக்கும் திமுகவிற்கு இன்னும் பெரிய பின்னடைவை ஏற்படுத்தலாம்.

அரசியல் எனும் வியாபாரத்தை நடத்துவதென்பது எத்தனை சிக்கலான ஆனால் சுவாரசியமான திரில்லர் நாடகம் என்பதே இந்தத் தீர்ப்பிற்கு பின்னான நிகழ்வுகளின் மூலம் நாம் வழக்கம் போல் அறியும் செய்தி. மாநில அரசின் இந்த முடிவை, மத்திய அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதும் அதைத் தொடரப் போகும் நிகழ்வுகளும் இந்த நீண்ட நாடகத்தின் கிளைமாக்ஸ். இந்த அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காய்களாக 'வாழ்வா, சாவா' என்று அல்லல்படும் மனித உயிர்களின் நிலைதான் உண்மையிலேயே துன்பியல் சமாச்சாரம். இந்தத் தீர்ப்பும் இதன் தொடர்பான நிகழ்வுகளும் முழுக்க அரசியல் சமாச்சாரமாக முடிந்து விடாமல் மரண தண்டனைக்கு எதிரான திசையில் பயணிக்கத் துவங்குவதில்தான் நம்முடைய முதிர்ச்சி அடங்கியிருக்கிறது. உயிர்களில்  'தமிழ் உயிர்' 'இந்தி உயிர்' 'ஆங்கில் உயிர்' என்று எவ்வித கற்பித உணர்ச்சிப் பாகுபாடுமில்லை.

suresh kannan

No comments: