Tuesday, July 07, 2009

ஒளிவட்டம் சுமக்கும் அரசு ஊழியர்கள்


எந்தவொரு 'அரசு இயந்திரங்கள்' இயங்கும் கட்டிடத்திற்குள் நுழைய நேரும் போதெல்லாம் நான் 'எல்லாம் வல்ல இயற்கையை' பலமாக வேண்டிக் கொள்வேன், 'உலகத்தினுள்ள அனைத்து பொறுமையையும் எனக்குக் கொடு' என்று. சித்தர்கள் உபதேசம் செய்தால் கூட கேட்காத நாம் ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டு கண்களில் பரிதாபத்தை தேக்கிக் கொண்டு நிற்கக்கூடியது எதுவென்றால் அது அரசு அதிகாரிகளின் மேஜைகளின் முன்னால்தான். 'ஒரு கலைஞன் பிறக்கிறானா அல்லது உருவாகிறானா' என்கிற விவாதத்தைப் போல 'அரசு ஊழியர்களையும் அந்த வரிசையில் யாராவது சேர்த்துக் கொண்டால் தேவலை. 'உங்களை ஆளப்பிறந்தவர்கள் நாங்கள்' என்று பிறக்கும் போதே அந்த பாக்கியத்தைப் பெற்றவர்கள் போல் அவர்கள் அலட்சியமாய் நம்மை அணுகும் போது இதுதான் தோன்றுகிறது. ஒரக்கண்ணால் நம்மைப் பார்த்துவிட்டு பைலில் செயற்கையாக மூழ்கிப் போகும் 'ஆபிசரின்' முன்னால் தவம் செய்யும் ரிஷிகளைப் போல ஆடாமல் அசையாமல் நிற்க நேரும் போது நம்முடைய மனித ஜென்மத்தின் மீதே கோபம் வருகிறது. ஒரு கால்குலேட்டருக்கு இருக்கும் மூளை கூட இல்லாத அந்த ...... களுக்கு நாம் வந்திருக்கும் காரணத்தைச் சொல்லி விளக்க வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுவது ஒருபக்கம் என்றால் நாம் எடுத்துச் சென்றிருக்கும் படிவம் முறையாக நிரப்பப்படாததற்காக அவர்கள் சொல்லும் salt பெறாத காரணங்கள் இன்னும் நம் எரிச்சலை அதிகரிக்கச் செய்கின்றன.

brandband connection ஒன்றிற்காக சலுகை விளம்பரம் ஒன்றை பத்திரிகையில் பார்த்து விண்ணப்பித்ததில் சிலபல வரலாற்று நிகழ்வுகளுக்குப் பிறகு இணைப்பு வந்தது. ஆனால் அதற்கான bill வந்த போது விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த சலுகை கட்டணச்சீட்டில் இல்லாமல் இருந்தது. (அடடா எப்படி ஒரு oxymoron... இல்லாமல் இருந்தது). துரைமார்களுக்கு தொலைபேசி கேட்டதில் நேராக வரவேண்டும் என்று உத்தரவு கொடுத்துவிட்டார்கள். இணையச் சேவை வழங்கும் அவர்கள் இந்த 'துக்கடா சமாச்சாரத்தை" மின்னஞ்சலிலேயே முடித்துவிடலாம். அப்படியெல்லாம் சுலபமாக முடித்துவிட்டால் அவர்களைப் பற்றின பிம்பம் என்னாவது? அரசு ஊழியர்களா, கொக்கா? நேராகப் போய் முரட்டுக் கணவனிடம் புலம்புகிற அப்பாவி மனைவி இறைஞ்சுகிற குரலில் இதைப் பற்றின புகாரைப் பற்றிச் சொன்ன போது அந்த மகானுபாவர் கேட்டது. "அந்த விளம்பரம் எப்ப நாங்க போட்டிருக்கோம். அதோட காப்பி வெச்சிருக்கீங்களா?" அதாவது அவர்கள் வெளியிட்ட விளம்பரத்தை அவர்களுக்கே நாம் நிரூபிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். வேறு வழியேயில்லை. அதைத் தேடிக் கண்டுபிடித்து மறுபடியும் போக வேண்டியதாயிருந்தது.

()

இது பரவாயில்லை. சில மாதங்களுக்கு முன்பு நடந்ததை உங்களிடம் 'அனத்தினால்'தான் மனசு ஆறும் போலிருக்கிறது. போதிய கல்வியறிவு அல்லாத ஒரு உறவினர் பெண்மணி (கையெழுத்து போடுவதை மாத்திரம் ஓவியம் வரைவதைப் போல கற்றுக் கொண்டிருக்கிறார்) துணைக்காக வங்கிக்கு அழைத்தார். படித்தவர்களுக்கே அதோகதி என்னும் போது அவ்வளவாக படிக்காதவர்களை ஆடுமாடுகளைப் போல விரட்டுவார்கள் என்கிற அவரின் முன்அனுபவம் காரணமாக இருந்திருக்கலாம். Fixed deposit ஒன்றை உடைத்து பணத்தை எடுக்க வேண்டும். அவசரத்தேவை. அவரது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பணம் செலுத்த வேண்டும். அதற்கு என்னையும் ஒரு 'ஆள்' என்று நினைத்து அழைத்திருந்தார்.

சம்பந்தப்பட்ட மேஜையில் இருந்தவர் டெபாசிட் ரசீதை ஓரக்கண்ணால் பார்த்து 'ஆசி' அருளுவதற்கே அரைமணி நேரம் ஆயிற்று. ஆனால் மனிதர் சாவகாசமாக ஜ்வால்யமான புன்னகையுடன் ஜார்ஜ்புஷ் போல அந்த வெடிகுண்டைத் தூக்கிப் போட்டார். "நீங்க பணத்தை எடுக்க முடியாது. உங்க அக்கவுண்டு inactive-வா இருக்கு".

ஏன் என்று நாங்கள் பவ்யமாக வினவியதற்கு ரிசர்வ் வங்கியின் சமீபத்திய வழிகாட்டுதலின் படி KYC (Know Your Customer) என்கிற வழிமுறை நடைமுறைக்கு வந்திருப்பதாகவும் அதன்படி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களின் இருப்பை சான்றாதாரங்களுடன் நிருபித்தபின்தான் கணக்கை கையாள முடியும் என்றார். 'அதுசரி அய்யா. தற்போது இவருக்கு மிக அவசரமாக பணம் தேவைப்படுகிறது. இப்படி திடீரென நீங்கள் சொன்னால் எப்படி? ஏறக்குறைய தினமும் வங்கிக்கு வந்து போகிறவர்களுக்கு நீங்கள் சொல்வது ஒருவேளை தெரிந்திருக்கலாம். ஆனால் பிக்சட் டெபாசிட் போடுவதற்காகவே கணக்கு வைத்திருக்கும் இவர்களைப் போன்றவர்கள் எப்படி அறிவார்கள்? நீங்கள் ஒரு கடிதம் அனுப்பித் தெரிவித்திருக்கலாமே? எனில் முறையான ஆதாரங்களோடு நாங்கள் தயாராக வந்திருப்போமே?.. என்று பணம் தேவைப்படும் அவசர சூழ்நிலையையும் விளக்கி நான் கண்ணகி திரைப்படத்தில் வரும் கண்ணாம்பா மாதிரி கேள்வி கேட்டதில் ஆசாமி உயர் அதிகாரி இருந்த பக்கத்து மேஜையை காண்பித்தார். அவர் எடுக்க வேண்டிய தொகை எவ்வளவு என்பதை விசாரித்து விட்டு 20 ஆயிரத்திற்குள்தான் என்பதால் எடுத்துக் கொள்ளலாம் என்று பச்சைக் கொடி காட்டினார். ஆக.. பணத்தை எடுப்பதற்கு வழியிருந்தும் அவசர சூழ்நிலை தெரிந்திருந்தும் அதை இந்த ஆசாமி வெளிப்படுத்தாமல் நாங்கள் கெஞ்சிக் கூத்தாடிய பின்புதான் தம்முடைய மேலதிகாரியிடம் அனுப்புகிறார்.

சரி இந்த படலம் முடிந்ததே என்று சற்று நம்பிக்கையோடு அமர்ந்திருந்த போது 'ஆசி' தந்த ஆசாமி எங்களை கூப்பிட்டு பிக்சட் டிபாசிட்டை இடையில் எடுப்பதனால் வட்டியிழப்பு போக வரும் தொகையைச் சொல்லி கையெழுத்திடச் சொன்னார். அந்தச் சமயத்தில் பர்சன்டேஜ் கணக்கெல்லாம் பார்க்க விரும்பாமல் (பார்க்கத் தெரியாது என்பது வேறு சமாச்சாரம்) காண்பித்த இடத்தில் கையெழுத்திடச் சொல்லி பலியாடு போல் அமர்ந்திருந்தோம். எங்களின் காகிதங்கள் காசாளரின் வெற்று கேபினுள்ளே நீண்ட நேரமாக இருந்தது. விசாரித்ததில் அவர் சாப்பிடச் சென்றிருக்கிறார் என்கிற தகவல் கிடைத்தது. (அப்போது மணி மதியம் 12.50). பக்கத்து கேபினுள் இருப்பவரை "நீங்கள் தரலாமே' என்று இறைஞ்சியதில் 'அமெளண்ட் சில்லறையா வருதுங்க. என்கிட்ட சில்லறை கிடையாது. வருவாரு. வெயிட் பண்ணுங்க' என்றார். 'அய்யோ, சார் சில்லறை எவ்வளவுண்ணு சொல்லுங்க. எங்கிட்ட இருந்தா தர்றேன். இல்ல.. வெளிய போய் மாத்திட்டு வர்றேன்' என்று இன்னொரு கூப்பாடு போட்டதில் முனகிக் கொண்டே சீட்டை தூக்கிப் பார்த்துவிட்டு யோசனையுடன் 'நாடி ஜோசியர்' மாதிரி என்¦ன்னவோ கணக்குகள் போட்டுப்பார்த்துவிட்டு இவர் பங்குக்கு இவர் டோனி பிளேர் மாதிரி இன்னொரு குண்டைப் போட்டார். 'இதுல போட்டிருக்கற அமெளண்ட் வர்றாது சார். தப்பா கால்குலேட் பண்ணியிருக்காங்க" என்றார். "அந்த அமெளண்ட்டுக்கு கையெழுத்துப் போட்டிருக்கோமே" என்று கேட்டதற்கு மனிதர் கேபினில் இருந்து விலகி 'அருளாசி' ஆசாமியிடம் கிசுகிசுத்தார். அவர் எங்களை அழைத்து "அவர் சொல்றது சரிதான். இவ்வளவுதான் வரும்.வாங்கிட்டுப் போங்க" என்றார், ஏதோ நாங்கள் கூலி வேலை செய்துவிட்டு 'அய்யா பாத்துக் கொடுப்பார்" என்று நிற்கிறதைப் போல.

இனிமேலும் என்னால் பொறுக்க முடியவில்லை. என்னுள் இருந்த நாகரிகமெல்லாம் தொலைந்து போய் பதின்மத்தில் பேசின பாஷையையெல்லாம் புதுப்பித்ததில் அவர்களும் கோஷ்டி சேர்ந்து எகிற ஆரம்பித்தார்கள். நான் உச்சக்கட்ட கோபத்துடன் கிளை மேலாளரைத் தேடியதில் அவர் 'எங்கோ' போயிருப்பதாக தகவல் கிடைத்தது. "ஏதோ ஒரு அமெளண்ட்டுக்கு கையெழுத்து வாங்கிட்டு, வேற ஏதோ அமெளண்டு தர்றதா சொன்னா என்னங்கய்யா அர்த்தம். வெளையாடறீங்களா, Ombudsman-ல கம்ப்ளைண்ட் பண்ணுவேன்'னு சத்தமிட்டு விட்டு ஏற்கெனவே போட்டிருந்த கையெழுத்தை அடித்துவிட்டு புதிதான தொகைக்கு கையெழுத்திடச் சொன்னேன். பாவம் அந்த உறவினர் பெண்மணி. நாங்கள் மாற்றி மாற்றிக் கத்திக் கொண்டிருந்ததில் வெளிறிப் போய் குற்றவுணர்வுடன் அமர்ந்திருந்தார்.

()

'வங்கியில் பணம் போடுகிறவர்களால்தான் தங்களுடைய பிழைப்பு ஓடுகிறது' என்கிற அடிப்படையைக் கூட வசதியாக மறந்து இப்படி வாடிக்கையாளர்களை அலைக்கழிக்கவும் அவமதிக்கவும் செய்கிற அரசு வங்கி ஊழியர்களைக் கண்டால் எரிச்சலாக வருகிறது. தனியார் வங்கிகளோடு போட்டி போடுகிற நெருக்கடியான சூழ்நிலை கூட இவர்களின் ஏகாதிபத்திய உணர்வை அடக்கவில்லையே என்றும் ஆச்சரியமாக இருக்கிறது. ஊதிய உயர்வு கேட்டு இவர்கள் வேலை நிறுத்தம் செய்யும் போதும் சாலையில் கோஷம் போடும் போதும் பொதுமக்களுக்கு ஏற்படும் வயிற்று எரிச்சல் gelusil mps-ல் கூட அடங்காது. இது ஓர் உதாரணம்தான். இம்மாதிரி பல்வேறு துறைகளில் அரசு ஊழியர்களின் அலட்சியங்களினால் தினம் தினம் அசெளகரியப்படுகிற அல்லல்படுகிற மனிதர்களின் கதைகளை தொகுத்தால் இணையமே நிரம்பி வழியும்.

அரசுப்பணியில் இணைவதற்கு முன்னால் இவர்களும் இதே மாதிரியான அலைக்கழித்தலை சந்தித்தவர்கள்தானே, அப்புறம் ஏன் டிராகுலா கடித்த மாதிரி இவர்களும் டிராகுலாவாக மாறிப் போகிறார்கள் என்பது மாத்திரம் புரியவில்லை. (மிக அபூர்வமாக மென்மையாக முறையாக தம்மை அணுகும் பொதுமக்களை எதிர்கொள்ளும் அரசு ஊழியர்களைப் பற்றியும் இங்கு சொல்லியாக வேண்டும்). ஒருவேளை நானும் அடித்துப்பிடித்து ஒரு அரசு ஊழியனாக ஆகியிருந்தால் இந்த 'ஜோதியில்'தான் கலந்திருப்பேனோ என்று என் மேலேயே சந்தேகம் வருகிறது. இதை வாசிக்க நேரும் அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் உடனே என் மீது பாயாமல் இதற்கான அவர்கள் பார்வையையும் தீர்வையும் பரிந்துரைத்தால் மகிழ்வேன்.

suresh kannan

88 comments:

ரவி said...

ஒளிவட்டம் குறித்து நீங்கள் பேசுவது உச்சகட்ட காமெடி.

முதலில் நீங்கள் உங்களுக்கு போட்டுக்கொண்ட ஒளிவட்டத்தில் இருந்து வெளியே வாருங்கள்...

இப்படிக்கு
முட்டாள்

மதன் said...

நீங்கள் சொன்னது சரி சுரேஷ்.. இங்கே பெங்களூரில் நான் லைசன்ஸ் வாங்குவதற்குப் பட்டேன் பாருங்கள் பாடு.. சொல்லி மாளாது.. பரத கண்டம் முழுதும் இந்த மாதிரி 9 - 6 வெளக்கெண்ணெய்கள் ஒரே போலத்தான் இருப்பார்கள்!

Athisha said...

திருவாளர் புருனோ அவர்களை எங்கிருந்தாலும் கோதாவிற்கு வருமாரு அழைக்கிறேன்.

சு.க வை பந்தாட அவர்தான் சரியான ஆளு..!

*****

மற்றபடி டிபிகல் தினமலர் ஸ்டைல் கட்டுரைங்க..

Badri Seshadri said...

இதில் சுரேஷ் கண்ணனுடன் சண்டை போட எதற்கு மற்றவர்களை அழைக்கவேண்டும்? அவர் சொல்வது அனைத்தும் நியாயமே.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஒரு கணக்கைத் தொடங்க என் மனைவி திண்டாடிக்கொண்டிருக்கிறார். “சனிக்கிழமை அக்கவுண்ட் தொடங்கமாட்டோம். மற்ற நாள்களில் 2.30 மணிக்குள் வரவேண்டும்.”

“இல்லங்க, அதுக்குள்ள ஸ்கூலிலிருந்து வெளியே வரமுடியாது.”

“அதைப்பத்தி எங்களுக்குக் கவலையில்லை.”

அதாவது தீர்வே சொல்லாமல் நடந்துகொள்வதுதான் அரசு வங்கிகளின் இன்றைய நிலை. வீட்டுக்கு எதிராக உள்ளது பாரத ஸ்டேட் வங்கி. அதில் எப்போதோ என் மனைவி செக் புத்தக வசதியும் ஏடிஎம் கார்ட் வசதியும் இல்லாமல் கணக்கு தொடங்கியிருக்கிறார். அதைச் சரி செய்வதற்கு சில முறை வங்கி மேனேஜர் அறைக்குச் சென்று பேசியும் ஒரு காரியம் நடக்கவில்லை.

ஸ்டீபன் லீகாக் கதையில் வருவதுபோல, நேரம் ஆனாலும் பரவாயில்லை என்று வங்கிக் கணக்கை மூடுவது ஒன்றுதான் வழி.

மெட்ரோவாட்டரில் தண்ணீர் சார்ஜ் கட்ட இன்று போனால், அங்கே ஒரு புண்ணியவான் சும்மா உட்கார்ந்து காது குடைந்துகொண்டிருக்கிறார். “இப்ப கிடையாது சார், காலைல 8.30 - 11.30-க்குள்ள வாங்க”

“ஏங்க, இப்ப, சும்மாத்தானே இருக்கீங்க?”

“அதெல்லாம் நாளைக்கு வாங்க.”

நல்லவேலையாக இப்போது மின்சார வாரியத்துக்குப் பணத்தை வீட்டிலிருந்தபடியே இணையம் மூலம் கட்டமுடிகிறது. இணைய வசதி இல்லாத பாவிகள் கதியை நினைத்துப் பாருங்கள்!

அரசுப் பணியாளர்கள், அரசு நிறுவனங்கள், அரசு வங்கிகள் அனைத்தையும் வாய்ப்பு கிடைத்தால் தீ வைத்துக் கொளுத்திவிடலாம் போன்ற கோபம்தான் வருகிறது.

தனியார் வங்கிகளில் பிரச்னை இல்லாமல் இல்லை. ஐசிஐசிஐ வங்கியைப் பற்றி ஆயிரம் கதை சொல்வார்கள். ஆனால் அந்த வங்கிக்கு இரவு எட்டு மணிக்கும் போய் கணக்கு தொடங்க முடிகிறது. எல்லாவித டிரான்சாக்‌ஷன்களையும் எந்த நேரத்திலும் செய்யமுடிகிறது. சனிக்கிழமை இதைச் செய்யலாம், இதைச் செய்யக்கூடாது என்று கழுத்தறுப்பு இல்லை.

பொதுமக்களுக்குப் பயன்படாத எல்லா அமைப்புகளையும் மாற்றவேண்டும். அதற்கான கேம்பெய்ன் எங்கிருந்தாவது தொடங்கவேண்டும்.

பிச்சைப்பாத்திரம் said...

நண்பர்களுக்கு நன்றி.


பதிவில் குறிப்பிட மறந்து போன முக்கியமான இரண்டு விஷயங்களை சொல்லி விடுகிறேன்.

1) அரசுப் பணியாளர்கள் மீது மக்களிடம் இருக்கும் பொதுவான கோபமும் ஆற்றாமையும் எல்லோரும் அறிந்ததுதான். இதை அரசுப் பணியாளரும் அறிந்துதான் வைத்திருப்பார்கள் எனும் போது எது அவர்களின் அலட்சிய மனப்பான்மையை தொடரச் செய்கிறது என்பதையும் இதற்கான உளவியல் மற்றும் சமூக ரீதியான பின்னணியை அறிய விரும்புகிறேன். நான் பதிவிலேயே குறிப்பிட்டது போல் குறைந்த பட்ச நியாயத்துடன் நடந்து கொள்ளும் அரசுப் பணியாளர்களையும் சந்தித்திருக்கிறேன். இது ஏதோ disclaimer சமாச்சாரம் அல்ல. நல்லனவற்றையும் குறிப்பிட வேண்டும் அல்லவா?

2) படித்தவர்களே வங்கியில் இவ்வாறான கசப்பான அனுபவங்களைச் சந்திப்பதால் கல்வியறிவுயில்லாத ஏழை மக்கள் வங்கிக்குச் செல்ல சங்கடப்பட்டு 'சீட்டு கட்டுவது" போன்ற முறையில்லாத அமைப்பில் தங்களின் பணத்தை தொலைத்துவிட்டு பின்னர் அழுகிறார்கள். கொடுமையான விஷயம் என்னவெனில் தீவிபத்து நடக்கும் பல குடிசைகளில் கல்வி மற்றும் திருமணம் போன்ற விஷயங்களுக்காக அவர்கள் சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருக்கும் பணம் எரிந்து போயிருப்பதை தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைச் செய்திகளில் பார்க்கும் போது நமக்கே மனம் கலங்குகிறது. வங்கிப் பணியாளர்களே தாமாக முன்வந்து படிக்காதவர்களிடமும் user friendly ஆக நடந்து கொண்டால் ஏழைகளின் பணமும் பாதுகாப்பாக இருப்பதோடு அவர்களின் சேமிப்புப் பழக்கமும் அதிகமாகும் ; வங்கிகளுக்கும் பணஇருப்பு இன்னும் பெருகும்.

Anonymous said...

உங்கள் ஆதங்கம் புரிகிறது சுரேஷ்.

ஆனால் என்ன செய்வது நாமெல்லாம் எஜுகேட்டட் இம்பொடண்ட்ஸ்.

என்னுடைய வங்கியில் 10 லட்சம் CC இருக்கு அதற்கு அடமானமாக 25 லட்ச ரூபாய் வீட்டையும் கொடுத்திருகிறேன்.
கிட்டத்தட்ட 8 வருடங்களாக வாடிக்கையாளன்.

ஒவ்வொரு முறை மேலாளர் மாறும் பொழுதோ அல்லது அவருக்கடுத்த பதவியில் இருப்பவர் மாறும் பொழுதோ நாங்கள் படும் துன்பம் கொஞ்சமல்ல.

சார் மினிமம் பேலன்ஸ் மெயிடெய்ன் பண்ணுங்க என்று சத்தமாக அனைவர் முன்னாலும் சொல்லும்போது கூசிப் போகிறேன்.

என்ன செய்ய? இவர்களாகத் திருந்தினால்தான் உண்டு.

ஆனந்தன் said...

நீங்கள் சொல்ல்வது முற்றிலும் உண்மையே நண்பரே .

சே.வேங்கடசுப்ரமணியன் said...

அரசு ஊழியர்கள் ,வங்கிப்பணியாளர்கள்,ஆசிரியரகள் என எல்லா அரசு அமைப்பில் இருந்து கொண்டு ஊதியம் பெறும் நண்பர்கள்,எல்லோருமே தங்களை சுயவிமரிசனம் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.சு.க.போன்ற அனுபவம் மேற்கண்ட ஊழியர்களுக்கும் ஏற்பட்டிருக்கும்.ஏனெனில் வங்கி ஊழியர்களுக்கு அரசு ஊசியர்களிடம் ஆக வேண்டிய வேலைகளுக்கு அலயவிடப்பட்ட அவஸ்த்தை அனுபவங்களும் அவர்களுக்கு இடையே பரஸ்பரம் ஏற்பட்டிருக்கும்.இது ஒளிவட்டம் சார்ந்த விஷயமாக பார்க்க வேண்டியதில்லை.இது தனி மனித ஒழுக்கம்,மற்றும் மனிதாபிமான உணர்வுகளின் அடிப்படையிலானது.எங்களது அலுவலக உதவியாளர் ஒருவர் மகனுக்கு கல்விக்கடன் சென்றவருடம் ஒரு சிபாரிசுமின்றி ஆட்டோ கூட வேண்டாம் 2 வீலரிலேயே வருகிறேன் என சொல்லி வீட்டிற்கு வந்து ஆய்வு செய்து ஒரு வங்கி அதிகாரி சேங்ஷன் செய்தார்.(ஒரு டீ கூட குடிக்கவைல்லை) இந்த வருடம் அந்த அதிகாரி மாற்றலாகி வேறு அதிகாரி.கல்லூரி கட்டணத்தொகை கூடிவிட்டது எனவே கூடுதலாக 5000 வேண்டும் எனகேட்டதற்கு,கூடுதல் கட்டணம் வழ‌ங்காமல் அவரை படாதபாடு படுத்தி நேற்றுவரை உள்ள வட்டி கட்டிணால்தான் இந்தவருட லோன் என சொல்லிவிட்டார்.சக ஊழியரிடம் 5 வட்டிக்கு 13000 ரூ கடன் வாங்கி வட்டியையும் கூடுதல் கட்டணத்தையும் கட்டி முடித்தார்.(நேற்றய அரசு அறிவிப்பில் வட்டி நீக்கம் செய்யப்பட்டுள்ளது).நல்ல அதிகாரி,அலையவிடும் அதிகாரி,வட்டிக்கு வாங்கும் ஊழியர்,சக ஊழியருக்கே 5 வட்டிக்கு பணம் கொடுக்கும் ஊழியர்கள் என அனத்தும் சேர்ந்த கலவை தான் அரசு இயந்திரம். என்ன...... முதல் ரக ஊழியர்கள் குறைவாகவும் இரண்டாம் ரக ஊழியர்கள் அதிகமாகவும் இருப்பது தான் நமது துரதிருஷ்டம்.இது பார்முலா... அரசு ஊழியர்கள்,தனியர் நிறுவன ஊழியர்கள்,தெரு,காலனி,ஃபளாட்,எந்த ஒரு குழுவிலும் நல்லவர்கள் மைனரிட்டியாக வே இருக்கிறார்கள்.

சே.வேங்கடசுப்ரமணியன் said...

அதிகாரம் என்பது பிறருக்கு உதவுவதற்காக நமக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு.

ramalingam said...

இரண்டு விஷயங்கள் சரி செய்ய வேண்டும்.
1.அக்கௌண்டபிலிட்டி. அவர்கள் தவறு செய்தால் யாரும் தட்டிக் கேட்க முடியாது. அவ்வளவு சுலபமாக அவர்களை வேலை நீக்கம் செய்ய முடியாது. அப்புறம் எப்படி பயப்படுவார்கள்?
2.யூனியன். ஏதாவது ஒரு பிரச்னை என்று சொன்னால் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். உதாரணம் பஸ் கண்டக்டர்கள், டிரைவர்கள்.
அரசியல் காரணங்களால் அரசும் இவர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. நல்ல சொகுசு வாழ்க்கைக்கு பழகி விட்டார்கள். மக்களுக்கோ, நாட்டுக்கோ இவர்களால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. ஒரு பாஸ்போர்ட் அதிகாரியின் லீலைகளை சமீபத்தில் பார்த்திருப்பீர்களே!

அபுல் கலாம் ஆசாத் said...

சுரேஷ்ஜி, சல்தாஹை!

அது அப்படித்தான்.

வீட்டுவரிகட்ட காசோலை கொடுத்தோம், காசோலைக்குப் பின்னால முகவரி எழுதணும், வீட்டு முகவரியும் வரிகட்டுன வீட்டு முகவரியும் வேற. அவ்வளவுதான். இன்னா சார் வூடு வாடகைக்கு வுட்ருக்கீங்களா? வேல்யுவேஷ்ன் மாத்தணும்ல ஆரம்பிச்சு...சல்தாஹை!

அன்புடன்
ஆசாத்

Subbaraman said...

Nalla padhivu. Muzhuvadhum unmai.

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

ந்ல்ல பதிவு..இந்த தொல்லைக்குதான் நான் வங்கி பக்கமே செல்வதில்லை..?

Beski said...

அருமை.
இதுபோல எனக்கும் பல அனுபவங்கள் உண்டு.
நூரு பேருல ஒருத்தர்தான தப்ப தட்டி கேக்குறோம். அவங்களச் சொல்லி குற்றமில்லை. வர்ற எல்லாரும் இப்படி எதுத்துப் பேசினா அவங்க ஒழுங்கா இருப்பாங்க.
---
இதே மாதிரி...
http://www.yetho.com/2009/06/1.html
http://www.yetho.com/2009/06/2_08.html

manasu said...

உன்னால, என்ன 58 வருஷத்துக்கு ஒரு .....ம் புடுங்கமுடியாதுங்கிற தெனாவெட்டுதான். வேறென்ன... நிறைய அனுபவித்திருக்கிறேன்.

எப்படியோ, உதவி செய்றேன்னு உபத்திரவம் பண்ணியாச்சு. சும்மாவா விட்டாங்க அந்தம்மா உங்கள??????

Unknown said...

மன ரீதியாக அரசு வேலையில் இருப்பவர்களுக்கு இனி நம்மை யாரும் வேலையிலிருந்து எளிதில் தூக்க முடியாது என்ற அசாத்திய தைரியம். பணி உயர்வும் seniority படிதான் உழைப்பின் பேரில் அல்ல.
பிறகு என்ன, எனக்கு நானே ராஜா தான். என்னதான் உயர்பதவிகளில் இருந்தாலும் அவர்களே retire ஆகிவிட்டால் அடுத்த நாள் ஆபீஸ் நுழைந்தால் கூட இதே கதிதான்.

நீங்கள் கூறியது போல் சிட்டியில் உள்ள ஏழை மக்களுக்கு பாதிப்பு இருக்கலாம். ஆனால் படிக்காத கிராமத்து மக்கள் யாரை எப்படி எங்கு "சோப்புப்" போட்டு கவனிக்க வேண்டும் என நன்கு அறிந்துள்ளனர். May be சுயமரியதை எல்லாம் பொருட்படுத்தாமல் வேலை நடந்தால் போதும் என்ற ஒரே குறிக்கோள் தான்.

தனியார் கம்பனிகளை போல உழைப்பை முன்னிறுத்தி, அல்லது ஒவ்வொரு நிமிடமும் என்ன செய்கிறோம் என ரிப்போர்ட் உயரதிகாரிக்கு அனுப்பவேண்டும் என்ற திட்டம் வந்தால் தானாக விழுதடித்துக் கொண்டு முறைத்தாலும் பணியையாவது முடித்துத் தருவார்கள் இந்த ஜாம்பவான்கள்.

ஹரன்பிரசன்னா said...

Fantastic post.

ஒவ்வொரு நாளும் வங்கிகளிலிருந்தும் அரசு அலுவலகங்களிலுந்தும் இப்படி ஆற்றாமையுடன் வெளியேறும் மக்களின் எண்ணிக்கை வெகு அதிகம். தன்மானத்தை இழந்துவிட்டுத்தான் அரசு அலுவலகங்களுக்குள்ளும் வங்கிகளுக்குள்ளும் நுழையமுடியும்.

Anonymous said...

மிக அவசியமான பதிவு சுரேஷ்,
அரசு அலுவலகங்களுக்குள் நுழைந்தாலே எதோ பீரியட் மூவீ செட்டுக்குள் நுழைந்தது போலவே காட்சி அளிக்கின்றது, கேரக்டர் களையும் சேர்த்துத்தான். படித்தவர்களையே ஒரு தீண்டாதவர் போல நடத்தும் அவர்களிடம் பாவம் கல்வி அறிவு இல்லாதோர் படும் பாடு....

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்......

Anonymous said...

neengal solvadhu sari than

sameebathil naan broadband apply panni patta padu and bank account open pannuvadhukum neengal sonna adhae experience enakkum nnadandhadhu

Arun Nadesh said...

//ஒளிவட்டம் குறித்து நீங்கள் பேசுவது உச்சகட்ட காமெடி.

முதலில் நீங்கள் உங்களுக்கு போட்டுக்கொண்ட ஒளிவட்டத்தில் இருந்து வெளியே வாருங்கள்...

இப்படிக்கு
முட்டாள் //

Repeating..

another முட்டாள்

Anonymous said...

100% required post for the present world. govt, bank employees r nt ful skiled and never worry abt common mans problems(which created by them) my opinion abt ICICI bank is "best in technology; worst in service" in many icici atm's a/c nt working, printed slip not available, to avoid huge money drw frm atm tactically only 100 rs notes available & many time "service currently unavailable'
ALSO THEY FILL cash only in the busy hours. hope u all knw icici insists all the customers to maintain minimum of rs5000. as balance.complaints may xtend in many pages.

Kumky said...

அனேகம் விவாதிக்க இருக்கிறது சுரேஷ்.
ஆனால் பொதுவாக நீங்கள் சொல்வதுதான் உண்மை.அதற்கான காரண காரியங்கள் குறித்து முழுமையாக யோசிப்போம்.

jothi said...

கோவிலுக்கு சென்றால் நமக்காக உண்மையாக கடவுளிடம் வேண்டும் ஐயரும் இருக்கிறார்கள், நம் உடையையும் கலரையும் பார்த்து அடுத்தவருக்கு தட்டை நீட்டும் ஐயரும் இருக்கிறார்கள். எல்லாம் மனிதர்கள்தான். உங்கள் கருத்தில் உடன்பாடு இல்லை. பின்னூட்டம் பெரிதாய் வந்ததால் எதிர்பதிவாக போட்டிருக்கேன். முடிந்தால் கருத்தை சொல்லுங்கள்.

http://jothi-kannan.blogspot.com/2009/07/blog-post_07.html

தமிழ்மண் said...

செந்தழல் ரவி என்கிற காமெடி பீஸ் உங்களின் இந்தப் பதிவிற்கு எதிர்பதிவு போட்டிருக்கிறாரே, பார்த்தீர்களா?

பிச்சைப்பாத்திரம் said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

//செந்தழல் ரவி என்கிற காமெடி பீஸ் உங்களின் இந்தப் பதிவிற்கு எதிர்பதிவு போட்டிருக்கிறாரே, பார்த்தீர்களா?//

தமிழ்மண்: பார்த்தேன். இணையத்தில் இம்மாதிரியான விபத்துக்களெல்லாம் தவிர்க்க முடியாதது. நீங்கள் உங்கள் வழியில் சென்று கொண்டிருந்தாலும் வேண்டுமென்றே மோதி உங்களை தடுமாற வைத்து அதைக் கண்டு இன்புறும் அழுகிப் போன வக்கிர மனங்கள் இணையத்தில் சிலது உண்டு. அவைகளைக் கண்டும் காணாமல் செல்வதே நம்முடைய மனநலத்திற்கும் நேரத்திற்கும் நல்லது. நீங்கள் சொல்லும் நபர் என்னுடைய பதிவுகளில் தொடர்ந்து சீண்டும் விதத்திலேயே பின்னூட்டங்களைப் போட்டு வந்திருப்பதை கவனித்துக் கொண்டிருந்தேன். பதிவில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை வாசிக்காமலேயே பின்னூட்டம் இட்டுச் செல்லும் அந்த நபரின் உளப்பிரச்சினை என்று தெரியவில்லை. பொதுவாக என்னுடைய பதிவுகளில் பின்னூட்டங்களை நீக்குவதை மிக அரிதான சமயங்களில் மாத்திரமே செய்திருக்கிறேன். என்னுடைய பதிவுகளை வாசிக்கும் நண்பர்களுக்கு தரும் குறைந்த பட்ச மரியாதையாக அவர்களின் சங்கடமான பின்னூட்டங்களையும் அனுமதித்துக் கொண்டிருந்தேன். இனி இந்த மாதிரியான நபர்களின் பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.

நீங்கள் குறிப்பிட்ட பதிவின் பின்னூட்டங்களில் 'தனிநபர் தாக்குதலில் நம்பிக்கையில்லை' என்று குறிப்பிடும் இதே நபர் பின்வரும் பின்னூட்டமொன்றில் என்னை 'அவன்' என்று ஏகவசனத்தில் குறிப்பிட்டிருப்பதைக் கண்டேன். இன்னொருவரின் தலையின் மீது ஏறி நின்றாவது தம்மை வெளிச்சத்தில் நனைத்துக் கொள்ள முயலும் இம்மாதிரியான பிரகஸ்பதிகளின் எழுத்துக்களே அவர்கள் யாரென்று அடையாளம் காட்டி விடுகிறது. சுயமாக இரண்டு பத்திகள் கூட எழுதத் தெரியாதவர்கள் இப்படித்தான் இன்னொருவரைச் சார்ந்து அவர்களைச் சுரண்டி தம்முடைய மேதாவித்தனத்தை நிருபித்துக் கொள்ள முயல்வார்கள். இவர்களைப் புறக்கணித்து விட்டு முன்னகர்ந்துச் செல்வதே ஆரோக்கியமானது.

()

இந்தச் சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு இன்னொன்றையும் குறிப்பிட்டுவிட வேண்டும் என்று தோன்றுகிறது. 'உன்னுடைய பதிவுகள் எரிச்சலை ஏற்படுத்துகிறது; உபதேசம் செய்கிறது' என்ற ரீதியிலான தொடர்ச்சியான பின்னூட்டங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. இந்த நண்பர்கள் முன் நான் வைக்கும் வேண்டுகோள் இதுதான்: என்னுடைய பதிவுகளைப் படிக்காதீர்கள்; புறக்கணியுங்கள். எரிச்சலேற்படுத்தும் என்னுடைய பதிவுகளை படிப்பதின் மூலம் உங்களையும் வதைத்துக் கொண்டு என்னையும் தொந்தரவிற்கு ஆளாக்காதீர்கள். நான் எழுதுவதை சரியான தொனியில் எடுத்துக் கொண்டு வாசிக்கும் / உள்ளடக்கத்தோடு முரண்பட்டால் அதை ஆரோக்கியமான மொழியில் பின்னூட்டமிடும் விவாதிக்கும் சில நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எனக்குப் போதும். என்னுடைய இந்தப் பதிவிற்கு ஜோதி என்கிற நண்பர் இட்டிருக்கிற பதிவையும் படித்தேன். [http://jothi-kannan.blogspot.com/2009/07/blog-post_07.html]அந்த மாதிரியான எதிர்வினைகளே நான் விரும்புவது.

இனி மேற்குறிப்பிட்ட ரீதியிலான பின்னூட்டங்கள் இந்தப் பதிவில் அனுமதிக்கப்படமாட்டாது. 'எங்கே என் பின்னூட்டம்' என்று பின்னர் கேள்வி எழுப்புவதில் அர்த்தமில்லை. என்னைத் திட்ட வேண்டும்; காயப்படுத்த வேண்டும் என்கிற மன அரிப்புடன் இருப்பவர்கள், இணையத்தின் ஏராளமான இடத்தின் ஏதாவதொரு மூலையில் உங்களின் வக்கிரங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். அதற்கும் கைதட்டவும் வேடிக்கை பார்க்கவும் தயாராக இருக்கிற நபர்களோடு கூடி இன்புறுங்கள்.

நண்பர்களின் புரிதலுக்கு நன்றி.

K.R.அதியமான் said...

நல்ல பதிவு. ஒரு தொழில்முனைவோனுக்கு அரசு எந்திரம் தரும் நெருக்கடிகளை அனுபவத்வருக்கு இன்னும் பல பரிமாணங்கள் புரியும்.

மேலும் பார்க்க :

http://nellikkani.blogspot.com/2008/07/blog-post.html
பொதுத் துறை நிறுவனங்கள் பற்றி..

na.jothi said...

//மிக அபூர்வமாக மென்மையாக முறையாக தம்மை அணுகும் பொதுமக்களை எதிர்கொள்ளும் அரசு ஊழியர்களைப் பற்றியும் இங்கு சொல்லியாக வேண்டும்//
தஞ்சாவூர் bsnl telephone customer care centre அபூர்வமான இடத்துல ஒன்னு (டெலிபோன் மட்டும் தான்)
ப்ரான்ட்பேன்ட்க்காக ஒரு வருஷம் அலைஞ்ச கதை உண்டு
இந்த பிரச்னைகள் எல்லா இடத்திலும்
இருக்கு அரசு, தனியார் கம்பெனிகளிலும்.
தனியாரை பொருத்தவரை ஆரம்பக்கால customer coordination
நல்லா இருக்கு. அதற்கப்புறம் தான்
அவங்களும் அலைய விடறாங்க

பிச்சைப்பாத்திரம் said...

அதியமான் நன்றி.

J: அரசுத்துறை பணியாளர்களை குறைச் சொன்னதால் தனியார் துறையை உயர்த்தி சொன்னதாக அர்த்தமில்லை. அதிலும் பல சேவைக் குறைபாடுகளும் எரிச்சலூட்டும் சம்பிராதயங்களும் உள்ளன. வித்தியாசம் என்னவெனில் அதை நீங்கள் உரிமையுடன் தட்டிக் கேட்கலாம்; வேறு நிறுவனத்தின் சேவைக்கு மாறிக் கொள்ளலாம். சில அரசுத்துறைகளில் அது சாத்தியமில்லை. (உதா: மின்சாரம்). அதற்காக எல்லாவற்றையும் தனியார் மயமாக்கச் சொல்லி நான் வாதிடவில்லை. அது ஆபத்தானது.

na.jothi said...

சுரேஷ்,
இதற்கு தீர்வுகள் சொன்னா
நீங்கள் சொல்லும் போல் அனைத்தும்
தனியார்மயம் ஆபத்துன்னா
monopoly இருக்குற அரசாங்க இயந்திரங்கள் உள்ளவங்க இப்படிதான்
இருப்பாங்க
அரசாங்கமும், தனியாரும் சேர்ந்து ஒரு நிறுவனமா மாறினா
உதாரணத்துக்கு vsnl & Tata telecom

Rajan said...

agree with you.
they have not learnt the lesson even after the private banks have started eating in to their share, with pleasant and polite banking experience.the main reason is lack of accountability. 90% branches of banks which are government undertaking behave this way.(having said that my recent 3 years experience with corporation bank in bangalore has been good.)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

There is a clear defined appeal process in government departments. If we are not satisfied with an order of a lower level officer, we may appeal against his order with his superiors.

Whereas in private companies, there are no such provisions and we have to go to court only :(

இது எனக்கு மிகப் பெரிய + பாயிண்டாகத் தெரிகிறது.

K.R.அதியமான் said...

முதலில் இந்திய லேபர் ஆக்ட் (தொழிலாளர் சட்டம்) சட்டத்தை மாற்ற வேண்டும். அமெரிக்கா போன்று. அதாவது வேலை விட்டு நீக்கவும், புதிதாக எந்த வேலைக்கும் யாரை வேண்டுமானாலும் கான்ட்ராக்ட் முறையில் வேலையில் அமர்த்தவும், நிறுவனங்களுக்கு பரிபூரண சுதந்திரம் அளிக்கபட வேண்டும். இந்திய மென் பொருள் துறையில் இது ஓரளவு உள்ளது. யாருக்கு வேண்டுமானாலும்
எப்போது வேண்டுமானாலும் வேலை போகும் என்ற பயம் இருப்பதால், லொல்லு பண்ணாமல் அனைவரும் ஒழுங்கா வேலை பார்க்க வாய்ப்பு அதிகம். ஆனால் அரசு துறையில் ஒரு கடை நிலை ஊழியரிடம் கூட வேலை வாங்குவது மிக கடினம்.

கனரா பாங்கில் எங்க நிறுவனத்திற்க்கு கணக்கு. அங்கு மேலாளரால் அங்கு வேலை பார்க்கும் ப்யூனிடிம் வேலை வாஙக முடியவில்லை. பாதி நேரம் வெளியே சென்று ரியல் எஸ்டேட் வேலை பார்க்கும் அந்த ப்யுன், யூனியனில் உள்ளார். ஒழுங்காக
வேலை செய்ய மாட்டார். (சில நேரங்களில், பழைய கால கொத்தடிமை / ஜமீந்தார்களின் ஆண்டான் /அடிமை அடக்குமுறை
அமைப்பில் தான் இவர்களை
பணியில் அமர்த்த வேண்டும் என்ற கொடூரமான வெறியை கிளப்புகிறது. ஆனால் தப்புதான்).

த‌மிழ‌க‌ மின்சார‌ வாரிய‌த்தில், எங்க‌ள் நிறுவ‌ன‌த்திற்க்கு புதிய‌ மின்
இணைப்பு ம‌ற்றும் இருக்கும் மின் உப‌யோக‌ அள‌வை அதிக‌ப‌டுத்த‌ ஒரு
முய‌ற்ச்சியில் இருக்கிறோம். "அவ‌ர்க‌ள்" கேட்ட்கும் ல‌ஞ்ச‌ம் ம‌ற்றும் எங்க‌ளை ந‌ட‌த்தும் வித‌ம் பற்றி ஒரு 100 ப‌க்க‌ம் எழுத‌ வேண்டும் என்ற‌ கொலை வெறி உள்ள‌து. இந்த‌ நேர‌த்தில்,
ந‌டைமுறை யதார்த்த‌ம் அறியாமல் பேசும் இட‌துசாரி அன்ப‌ர்க‌ளின் க‌ழுத்தை எம் க‌ர‌ங்க‌ளால் நெறிக்க‌ துடிக்கும் கொலை வெறி மிக‌ அதிக‌மாகிற‌து. க‌ட‌வுளே, சாந்தி சாந்தி..

Kumky said...

K.R.அதியமான் said...

முதலில் இந்திய லேபர் ஆக்ட் (தொழிலாளர் சட்டம்) சட்டத்தை மாற்ற வேண்டும். அமெரிக்கா போன்று. அதாவது வேலை விட்டு நீக்கவும், புதிதாக எந்த வேலைக்கும் யாரை வேண்டுமானாலும் கான்ட்ராக்ட் முறையில் வேலையில் அமர்த்தவும், நிறுவனங்களுக்கு பரிபூரண சுதந்திரம் அளிக்கபட வேண்டும். இந்திய மென் பொருள் துறையில் இது ஓரளவு உள்ளது. யாருக்கு வேண்டுமானாலும்
எப்போது வேண்டுமானாலும் வேலை போகும் என்ற பயம் இருப்பதால், லொல்லு பண்ணாமல் அனைவரும் ஒழுங்கா வேலை பார்க்க வாய்ப்பு அதிகம்.


அதியமான்., மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டைக்கொளுத்திய கதைதான் நினைவிற்க்கு வருகிறது.ஏற்கெனவே மென்பொருள் நிறுவன பனியாளர்களின் நிலை பரிதாபமாகத்தான் உள்ளது.இதேபோல அரசுத்துறை பணியாளர்களையும் மாற்றிவிட்டால் உருப்பட்டுவிடும்.

எங்கோ ஒரு சில தவறுகள் நடைபெறுவதால் ஒட்டு மொத்த அமைப்பையும் குறை சொல்லிக்கொண்டிருப்பதில் பயனில்லை.இவ்வாறு வாதத்திற்க்கு எடுத்துக்கொண்டோமானால், ஒரு வியாபாரி வாழ்நாளில் எவ்வளவு சொத்து சேர்க்க முடியும்,அரசியல்வாதி எவ்வளவு சம்பாதிக்க முடியும்,அரசு ஊழியர்களின் வாழ்நாள் சாதனை என்ன எனப்தெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
அரசு ஊழியர்களில் ஏகப்பட்ட பிரிவுகள்.அதில் நீங்கள் குற்றம் சொல்வது கடை நிலை அல்லது அதற்க்கு மேலிருக்கும் நடுநிலை அலுவலர்களை பற்றி மட்டுமே.
அவர்கள் எந்த மாதிரியான கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்..எந்த மாதிரியான நெருக்கடியான சூழ்நிலையில் பணி புரிகிறார்கள் என்பதெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் நீங்கள் போய் நின்றவுடன் ராஜ மரியாதை தரவில்லை என ஒட்டு மொத்தமாக குறை சொல்வதில் அர்தமில்லை.

என்ன....ஒன்று ..இந்த சன நாயக நாட்டில் எல்லாமே ஒழுங்காக நேர்மையாக ஒழுக்கமாக நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.அரசியல் சினிமா சமூக ஒழுங்கு தனியார் நிறுவனங்கள் அரசு சாரா அமைப்புகள் மற்றும் இன்ன பிற.இந்த கொலைகார அரசு ஊழியர்களைத்தவிர...அப்படித்தானே.....

K.R.அதியமான் said...

//நீங்கள் போய் நின்றவுடன் ராஜ மரியாதை தரவில்லை என ஒட்டு மொத்தமாக குறை சொல்வதில் அர்தமில்லை.//

did i say that ? try to start and run a SSI unit, then you will understand. the great majority of Indian workers have no job security and are in unorganised sector with hire / fire basis.
the govt sector and the organised sector of the private alone have the job security. why should they alone enjoy that and with no accoutablity.

also try :

http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_12.html
தொழிலாளர் நலச் சட்டங்களும் வேலை வாய்ப்பும்

பிச்சைப்பாத்திரம் said...

கும்க்கி

//அவர்கள் எந்த மாதிரியான கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்..எந்த மாதிரியான நெருக்கடியான சூழ்நிலையில் பணி புரிகிறார்கள் என்பதெல்லாம் கவனத்தில் கொள்ளாமல்//

இதைப் பற்றித்தான் நிறைய அறிய விரும்புகிறேன். அரசு ஊழியர்களை ஒட்டு மொத்தமாய் குறை சொல்ல முயல்வது இந்தப் பதிவின் நோக்கமல்ல. ஆனால் பணி அழுத்தத்தை காரணம் காட்டி அலட்சிய மனோபாவத்தை நியாயப்படுத்த முடியாது அல்லவா?

Kumky said...

K.R.அதியமான் said...

//நீங்கள் போய் நின்றவுடன் ராஜ மரியாதை தரவில்லை என ஒட்டு மொத்தமாக குறை சொல்வதில் அர்தமில்லை.//

did i say that ? try to start and run a SSI unit, then you will understand. the great majority of Indian workers have no job security and are in unorganised sector with hire / fire basis.
the govt sector and the organised sector of the private alone have the job security. why should they alone enjoy that and with no accoutablity.

அன்பின் தோழர்(இந்த வார்த்தை பொதுவாக பயன்படுத்துவதால் உங்களுக்கு சங்கடமில்லையே)
தாங்கள் முதலில் குறிப்பிட்டுள்ளதற்கு அரசு ஊழியர்கள் எவ்வகையிலும் காரணமல்ல.இந்த அரசும்,வழிநடத்திச்செல்லும் அரசியல் அதிகாரம் படைத்தவர்களின் தவறான கொள்கை முடிவுகளும் மட்டுமே.இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் இந்திய கூலி தொழிளாலர்களின் நிலை மாறப்போவதுமில்லை.இதைதானே பெருமையாக வெளிநாடுகளில் கூவிக்கூவி தொழில் ஆரம்பிக்க அழைத்துக்கொண்டிருக்கிறது நமது அரசுகள்.

சொல்ல வந்தது என்னவென்றால் தனியார் துறைகளில் எப்போது வேண்டுமானாலும் வேளை பறிபோய்விடுமென்ற நிலை பரிதாபகரமானதா அல்லது அரசு ஊழியர்களுக்கும் விரிவு படுத்தப்பட வேண்டுமென்பதா?

பணிப்பாதுகாப்பு இருப்பதினாலேயே அரசு ஊழியர்கள் பொறுப்பற்றத்தனமாக இருக்கிறார்கள் என்பதை ஒட்டு மொத்தமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அரசு ஊழியர்கள் எவரும் வானத்திலிருந்து இறக்கையுடன் குதித்தவர்களில்லை.அவர்களும் நமது சமூகத்தின் அங்கம்தானே..உங்கள் அண்ணனோ அல்லது தம்பியோ அல்லது மாமாவோ அல்லது அக்கம் பக்க வீட்டில் வசிப்பவர்களோ எவரேனும் அரசு ஊழியர்களாக (அதிகாரிகளாக அல்ல) இருக்கும் பட்சத்தில் நெருங்கி விசாரித்துப்பாருங்கள்.இன்னும் அவர்கள் ஆங்கிலேயர்கள் உருவாக்கி வைத்த அடிமைத்தனமான அதிகார பல் சக்கரத்திலிருந்து விடுபடாமல் அவர்களின் ஆபீஸ் மற்றும் உயர் அதிகாரிகளைப்பற்றி மட்டுமே பொழுது முழுவதும் யோசித்துக்கொண்டும், பைல்களையும் துறைகளில் நிலவும் சர்வாதிகாரமான போக்குகளை சதா நேரமும் முனகிக்கொண்டிருப்பவர்களாகவும் காணமுடியும்.

எல்லோரையும் பாரட்டவும் கொண்டாடவும் முடியாத அதே நேரத்தில் ஒட்டு மொத்தமாக குறை சொல்லவும் கூடாதல்லவா..?

ஒரு அரசு ஊழியனின் வாழ்நாள் சாதனை என்ன? ஒரு வீடு அல்லது வீடு கட்டியபின் ஒன்று அல்லது இரண்டு திருமணங்கள் அவ்வளவுதான்.கடனைக்கூட பிள்ளைகள்தான் தீர்க்கவேண்டுமென்ற நிலைதான் இங்கு.

அவர்களின் அலட்சிய மனோபாவத்துக்கும் பணியினை முழுமையாக ஈடுபாட்டுடன் செய்யாமலிருக்கவும் வேறு வேறு சிக்கல்கள் அமைப்பினூடாக பிண்ணிப்பினைந்திருக்கின்றன.


பகிர்ந்துகொள்ள எவ்வளவோ இருக்கிறது.ஆதங்கங்களை எழுத்தில் மட்டுமே முழுதுமாக கொட்ட முடியவில்லை.

நான் உங்களை மட்டுமே குறிப்பிட்டு அந்த வார்த்தைகளை சொல்லவில்லை.அப்படி தோன்றியிருப்பின் மன்னிக்க.

மணிகண்டன் said...

சுரேஷ்கண்ணன், அதியமான்

பணி நிரந்தரம்ன்னா அரசு ஊழியர்கள் வேலை செய்யாம இருப்பாங்க. பத்து கிலோ அரிசி எலவசமா கிடைச்சா மக்கள் உழைக்க மாட்டாங்க - இது எல்லாம் அபத்தம்.

பல அரசுத்துறைகள்ல மக்கள் நல்லாவே வேலை செய்யறாங்க. secretariat போய் பாருங்க. documents legalization dept ன்னு ஒண்ணு இருக்கு. அங்கே எல்லாம் என்னால ஒருநாள் வேலையை கூட ஹேண்டில் பண்ண முடியாது. பிரச்சனை என்னன்னா வேலையை சுலபமாக்க ஏதாவது ஒரு ப்ராசஸ் மாற்றம் கொண்டு வந்தா, அதை ரெசிச்ட் பண்ணுவாங்க. ட்ரைனிங் பத்தாது.

வரும் consumerukku பொறுமை சுத்தமா கிடையாது. உள்ளார நுழையும் போதே வேலை நடக்கணும். அதே நம்ப நாடு ஸ்டில் a developing nation. அதுனால பிரைவேட் செக்டர் ரொம்பவே consumer friendly. அதுனால மக்கள் எல்லா எடத்துலேயும் அதுவே எதிர்பார்க்கறாங்க. பத்ரியோட பின்னூட்டம் பாருங்க. பேங்க் ஓபனிங் டைம்ல தான் அக்கௌன்ட் ஓபன் பண்ண முடியும். டைமிங் மாத்த அங்க உள்ள ஊழியருக்கு உரிமையோ / அதிகாரமோ இருக்காது. ஆனா, சனிக்கிழமை ஓபன் பண்ண முடியலைன்னு ஊழியர் கிட்ட கேட்டா அவருக்கு எரிச்சல் தான் வரும். (opening time standardise பண்ணி தகவல்கள் மக்களுக்கு போய் சேரும் வகையில் மாற்றங்கள் நிச்சயம் கொண்டு வரணும்)

developed nation எல்லாம் லேபர் பிரண்ட்லி. இந்த அளவு consumer friendliness கிடையாது. அதே மாதிரி பிரைவேட் செக்டார்ளையும் இதேயளவு தொல்லைகள் இருக்கு. அதுவும் outsourced service ன்னா இன்னுமே மோசம். யாரும் responsibility எடுத்துக்க மாட்டாங்க. (private mobile companies நல்ல example). Initially you get the service but later on, if there is a problem, you just don't know where to go. சோ, அரசுத்துறை மட்டும் சொல்லுவது நமக்கு உள்ள எரிச்சல் தான் முதல் காரணம். பொதுவாகவே நாம் முன்னேறவேண்டும்.

In europe, it is absolutely horrendous. If things work, it is great. Most of the times, it does work. But if there is an issue and if you have to reach a service agent to rectify the problems, you are just screwed.

ஜோ/Joe said...

பொதுவாகவே சேவைத்துறை என்பது இந்தியாவில் மிகக் கேவலமாகத் தான் இருக்கிறது. வாடிக்கையாளரை அலட்சியப்படுத்தினால் வேலையை பாதிக்கும் என்ற நிலை இல்லாதவரை இந்த அலட்சியம் தொடரும்.

என்னத்த சொல்ல ..இந்த விஷயத்தில் நானும் ஏகப்பட்ட கடுப்பு எனக்குண்டு.

Unknown said...

இது மிக ஒருதலை பட்சமான தீர்ப்பாக அமைந்த பதிவு.தீர்ப்பும் வழங்கி அதனை வழிமொழிந்துமான பிறகு பிரதிவாதத்திற்கு இடமேது ? ஒன்றே சொல்வேன்: Look at the systems,not the people.

In a nonworking system,behavior of everybody is same,irrespective of their affiliations,Govt or no Govt.

K.R.அதியமான் said...

Manikanttan,

//பணி நிரந்தரம்ன்னா அரசு ஊழியர்கள் வேலை செய்யாம இருப்பாங்க. ///

it IS true. you can compare the work ethics of any private mill with the corresponding govt sector mill. or compare RIL Jamngar refinery with our good old Madras REfinery (ChPCL) in N.Madras. there are reports (From a freind working there) of workers SLEEPING duing the shift. compare with RIL.
or try working for that CPCL or BSNL for some months first.

work ethics is directly related to job security. that is work ethic is distorted if govt rules distort free market forces of labour market.


also see :

http://athiyaman.blogspot.com/2007/05/ethics-corruption-and-economic-freedom.html

பிச்சைப்பாத்திரம் said...

//பின்னூட்டம் பெரிதாய் வந்ததால் எதிர்பதிவாக போட்டிருக்கேன். //

அன்புள்ள ஜோதி கண்ணன்

ஆரேர்க்கியான மொழியில் எதிர்பதிவு எழுதியமைக்கு நன்றி.

பொதுப்புத்திக்கு அரசு ஊழியர்கள மீது இருக்கும் வெறுப்பான மனநிலையை ஊதிப்பெருக்கும் முயற்சியல்ல என் பதிவு. அரசுத்துறையிலும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் நபர்களும் இருக்கிறார்கள். ஆனால் இவர்களின் சதவீதம் மிகக்குறைவானதும் விதிவிலக்கானதுமாகும். நான் பெரும்பான்மையைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். இதை உடனே பின்புறமாக வாசித்து தனியார் துறைக்கு ஆதரவான பதிவாக பார்க்கக்கூடாது. என் பதிவில் நான் அப்படி தனியார் துறைக்கு ஆதரவாக எதையுமே எழுதிவிடவில்லை. தனியார் துறையிலும் இதே மாதிரியான சேவைக்குறைபாடுகளும் அலட்சியப் போக்குகளும் உள்ளன. ஆனால் இவற்றின் சதவீதம் குறைவானது. அரசோ தனியாரோ பணியாற்றுவது அதே இரத்தமும் சதையுமான மனிதர்கள்தானே?

மேலும் தனியார் துறையில் உள்ள சேவைக்குறைபாடுகள் பற்றி அவர்களிடமே விவாதிக்க முடியும். கேள்விகள் கேட்க முடியும். சேவையில் திருப்தியில்லையெனில் வேறு நிறுவனத்தின் சேவைக்கு மாற்றிக் கொள்ள இயலும்.குறைந்த பட்சம் உங்களின் எதிர்ப்பை வெளிப்படையாக தெரிவித்து உங்களின் மனஉளைச்சலையாவது சற்று மட்டுப்படுத்திக் கொள்ள முடியும். அரசு அலுவலகங்களில் இதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. உங்களின் வேலையை வேண்டுமென்றே இழுத்தடித்து பழிவாங்கி உங்களைப் பணியவைக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி விடுவார்கள். வழக்கு, நீதிமன்றம் என்று செல்பவர்கள் ஒருசிலர்தான். அந்த தாமதமான நீதி உங்களுடைய பேரன்களுக்குத்தான் கிடைக்கும்.

தனியார்துறையின் பெருக்கம்கூட உலகமயமாக்கத்திற்கு பின்பான மாற்றம்தான். முன்பெல்லாம் ஒரு தொலைபேசி இணைப்புக்குக்கூட வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டியதிருந்தது. பலரை 'கவனிக்க' வேண்டியிருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து அரசுத்துறையின் அவலமான சேவையை மக்கள் சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது. இன்றும் கூட சில சேவைகளுக்கு அரசுத்துறையைத்தான் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. பொதுமக்களின் அசெளகரியங்களைப் பற்றி அவர்களுக்கு கிஞ்சித்தும் கவலை கிடையாது. பணியில் இருக்கும் பாதுகாப்பு ஒருபுறம் என்றால் அரசு இயந்திரம் இயங்கும் மெத்தனமானப் போக்கும் ஊழல் அழுத்தமாக படிந்துள்ள சூழலும் உற்சாகமானவர்களையும் நேர்மையானவர்களையும் கூட முடக்கிப் போட்டு ஜோதியில் ஐக்கியமாகிவிடும் சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. இந்த அபத்தமான சூழ்நிலையிலிருந்து போராடி தன்னை நிருபீத்துக் கொள்ளும் தன்மை சிலருக்கே வாய்க்கிறது.


அலுவலகத்தின் இடையே தனிப்பட்ட விஷயங்களைக் கவனிப்பதைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள். இது ஒரு பொதுவான இந்திய பணியாளர்களுக்கே உரிய மனநிலை. அலுவலக நேரத்திலிருந்து திருடி தமக்கு பயன்படுத்திக் கொள்வதில் ரகசிய மகிழ்ச்சி கிடைக்கிறது. இது அரசு மற்றும் தனியார் இருவருக்கும் பொதுவானதுதான்.

ஆனால் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் இதை மறைமுகமாகவும் குற்றஉணர்வோடும்தான் செய்ய முடிகிறது. வாடிக்கையாளர் எதிரே காத்திருக்கும் போது சக பணியாளரிடம் அரட்டையடித்துக் கொண்டிருப்பதோ அவரை அலட்சியமாக நடத்தி அவமதிப்பதோ தனியார் துறைகளில் அபூர்வம்தான். மாறாக அரசு அலுவலகங்களில் இது மிக சகஜமான ஒன்று. அரசு அலுவலகங்களுக்கு செல்வோர் உடனேயே தங்கள் வேலை முடிந்தவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று எழுதியிருந்தீர்கள். இதுவும் நடைமுறைக்கு முரணனான ஒன்று. அரசு அலுவலகங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் அதற்கு ஏற்றதான மனநிலையோடும் 'கவனிப்போடும்' செல்கிறார்கள்.

மறுபடியும் சொல்கிறேன். எல்லா அரசுப் பணியாளர்களையும் குற்றம் சொல்வது என் நோக்கமல்ல. அதிலும் போதுமான அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரியும் 'சிலர்' இருக்கிறார்கள். ஆனால் தங்கள் அடிப்படை கடமையை ஒழுங்காக நிறைவேற்றும் ஒருவரைக்கூட 'ஆகா தெய்வமே' என்று நாம் வியந்து பார்க்கும் சூழ்நிலை இருப்பது துரதிர்ஷ்டவசமானது. சுஜாதாவின் அந்நியன் பட வசனத்தின் படி 'கடமையை செய்வதற்கு' கூட லஞ்சம் கேட்கு்ம சூழ்நிலையில்தான் நாம் வாழந்து கொண்டிருக்கிறோம்.

பிச்சைப்பாத்திரம் said...

//இது மிக ஒருதலை பட்சமான தீர்ப்பாக அமைந்த பதிவு.தீர்ப்பும் வழங்கி அதனை வழிமொழிந்துமான பிறகு பிரதிவாதத்திற்கு இடமேது ?//

நண்பர் மணியன்: எல்லாக்கதவையும் அடைத்துவிட்டு முன்முடிவுடன் தீர்ப்பாக எழுதப்பட்ட பதிவல்ல இது.:-)

உங்களின் எண்ணங்களை இன்னும் விரிவாக இந்தப் பின்னூட்டத்திலோ அல்லது உங்கள் வலைப்ப_வில் தனிப்பதிவாகவோ எழுதலாம்.

TBR. JOSPEH said...

இந்த பதிவை ஒரு வங்கி அதிகாரி (தனியார் வங்கி) என்ற கோணத்தில் மட்டுமல்லாமல் ஒரு வாடிக்கையாளன் என்ற கோணத்திலும் வாசித்தேன்.

இந்த 'ஒளிவட்டம் சுமக்கும்' என்று கூறுகிறீர்களே அத்தகையவர்கள் அரசுத் துறை, தனியார் துறை என்றில்லாமல் நாம் சந்திக்கும் பல துறைகளிலும் உள்ளார்கள்.

நான் சுமார் முப்பாதாண்டுகாலமாக வங்கித்துறையில் பணியாற்றுவதால் ஒரு வங்கியில் கணக்கு துவங்க அல்லது அதில் பரிவர்த்தனைகள் செய்ய என்னென்ன வழிமுறைகள் உண்டு என்பதை அறிந்திருக்கிறேன். ஆனால் ஒரு வீடு கட்டவோ அல்லது அதற்கு மின் இணைப்பு பெறவோ அல்லது ஒரு ரேஷன் அட்டை பெறவோ என்னென்ன வழிமுறைகள் உண்டு என்பது எனக்கு நிச்சயம் தெரியாது. ஆகவே அந்த வழிமுறைகளை சரிவர செய்யாமல் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் 'அர்ச்சனை' வாங்கிக்கட்டிக்கொள்கிறேன். இப்படி வழிமுறைகளை சரிவர கடைபிடிக்காமல் ஏன் சார் வந்து எங்க பிரானணை வாங்குறீங்கன்னு கத்துனா வாங்கிக்க வேண்டியதுதான்.
என்னை மாதிரி தினம் தினம் எத்தனை பேர் வந்து அவர்களுடைய நேரத்தை வீணடித்திருப்பார்கள்? அந்த கோபத்தில்தான் பொறுமையிழந்து கத்துகிறார் போலும் என்று அப்போதெல்லாம் நினைத்துப்பார்ப்பதில்லை. இவன் பெரிய லார்டுன்னு நினைச்சிக்கிட்டு நானும் பதிலுக்கு சத்தம் போட்டிருக்கேன்.

சரி அரசு அலுவலகங்களும் வங்கிகளும் ஒன்றா என்று பலரும் கேட்பதுண்டு. வங்கியில் எங்களுடையை பணத்தை போட்டுவிட்டுத்தான் கேட்கிறோம் என்பார்கள் பலரும். உண்மைதான். உங்களுடைய பணம்தான். ஆனால் உங்களுடைய சேமிப்புக்கு வட்டி கிடைக்க வேண்டும் என்பதுடன் அது பாதுகாப்பவும் இருக்க வேண்டும் என்றுதான் அரசு வங்கிகளில் சேவையின் தரம் குறைவு என்று தெரிந்தும் அங்கு செல்கிறீர்கள். அரசு வங்கிகளில் கிடைக்கும் சேவையின் தரம் குறைவு என்பதற்கு தங்களை யாரும் ஏதும் செய்துவிடமுடியாத என்பதல்ல. இன்றைய சூழலில் எந்த துறை வங்கியிலும் உத்தியோக உத்திரவாதம் என்று ஏதும் இல்லை. அவர் எந்த தொழிலாளர் சங்கத்தை சார்ந்தவராயினும் சரி ஒழுங்கீனத்திற்கு இடமேயில்லை. உத்தியோகம் போகாவிட்டாலும் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படும் சூழலில் அவர் நிச்சயம் பணியிட மாற்றம் செய்யப்படுவார்.

ஆனால் பரிவர்த்தனை செய்ய வரும் ஒரு வாடிக்கையாளர் வங்கி வழிமுறைகளை சரிவர தெரிந்துக்கொள்ளாமல் என்னுடைய பணத்தைத்தானே கேட்கிறேன் உடனே தந்தால் என்ன என்றால் அது சரியில்லை.

பத்ரி சொன்ன குற்றச்சாட்டுகளூம் சரியில்லை என்பதுதான் என்னுடைய வாதம். ஒரு வங்கியின் அனைத்து கிளைகளும் ஒரே மென்பொருளை பயன்படுத்துகின்ற இன்றைய சூழலில் சனிக்கிழமைகளில் புது கணக்கு துவங்குவதில்லை என்பது தவறொன்றும் இல்லை. சாதாரண வார நாட்களில் நடைபெறும் பரிவர்த்தனைகளை விட சனிக்கிழமைகளில் இரண்டு மடங்கு என்பதை வாடிக்கையாளர்கள் புரிந்துக்கொள்வதில்லை. அதுவும் வாரநாட்களில் ஆறு மணி நேரத்தில் நடைபெறும் பரிவர்த்தனைகள் சனிக்கிழமைகள் மூன்று மணி நேரத்தில் முடிக்கப்படவேண்டும். ஆகவே WAN இணைப்பில் ஏற்படக்கூடிய அளவுக்கதிகமான போக்குவரத்தை (traffic) கட்டுபடுத்தவே சில வங்கிகள் இந்த கட்டுப்பாட்டை விதித்துள்ளன. அதை நிச்சயம் சம்பந்தப்பட்ட கிளை தன்னுடைய அறிவிப்பு பலகையில் வெளியிட்டிருக்கும். இப்படி பல காரணங்களை நான் எடுத்துக் கூற முடியும்.

நான் சொல்ல வருவது என்னவென்றால் ஒவ்வொரு துறைக்கும் சில கட்டுப்பாடுகள் உண்டு அவசியமும் கூட. அதை வாடிக்கையாளர்கள் தெரிந்து வைத்திருந்தால் இத்தகைய தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.

பிச்சைப்பாத்திரம் said...

டிபிஆர்,

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. உங்களைப் போன்ற அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றுகிற / பணியாற்றியவர்களின் பின்னூட்டங்களை குறிப்பாக எதிர்பார்க்கிறேன்.

//வாடிக்கையாளர்கள் தெரிந்து வைத்திருந்தால்//

அரசுத்துறைகளின் விதிகளையும் சம்பிராதயங்களையும் பொதுமக்கள் கரதலப்பாடமாக அறிந்துச் செல்வது நல்லது என்கிற ரீதியிலான உங்களின் கூற்று நடைமுறைக்கு சாத்தியமா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். சம்பந்தப்பட்ட துறையிலிருக்கும் அரசு ஊழியருக்கு இதைப் பற்றிய விதிமுறைகள் சரியாகத் தெரியாமல் பக்கத்திலிருப்பவர்களிடம் கேட்பதையோ அல்லது பொதுமக்கள் சொல்வதை ஈகோ காரணமாக ஏற்றுக் கொள்ளாமல் எரிந்து விழுவதையோ நடைமுறையில் காண்கிறோம். மேலும் நீங்கள் சொல்வது கல்வியறிவு உள்ளவர்களுக்கே பொருந்தும். அது இலலாதவர்களை அனுதாபத்துடன் அணுகாமல் அலைக்கழிப்பதும் அரையும் குறையுமாக பதில் சொல்வதும் கூட நடைமுறையில் காணக்கூடிய ஒன்றுதான்.

அரசு வங்கிகளில் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்கிற நம்பி்க்கை இதுவரை உண்மைதான். ஆனால் அதற்காகவே அங்கே சேவை குறைவாகத்தான் இருக்கும் என்றும் வாடிக்கையாளர்கள் மீது எரிந்துதான் விழுவார்கள், நாம்தான் அதைத் தாங்கிக் கொள்ள வேண்டும்... என்றெல்லாம் கூறி நியாயப்படுத்துவது சரி எனத் தோன்றவில்லை. தவறு வாடிக்கையாளர் மீதே இருக்கட்டும். எத்தனை அரசு ஊழியர்கள் அதை கனிவாக எடுத்துச் சொல்கிறார்கள்?

K.R.அதியமான் said...

//அன்பின் தோழர்(இந்த வார்த்தை பொதுவாக பயன்படுத்துவதால் உங்களுக்கு சங்கடமில்லையே)
தாங்கள் முதலில் குறிப்பிட்டுள்ளதற்கு அரசு ஊழியர்கள் எவ்வகையிலும் காரணமல்ல.//

அன்பின் கும்க்கி,

தங்கள் அன்பிற்க்கு நன்றி. நாம் எல்லோரும் தோழர்கள் தாம். இதில் சங்கடமென்ன. நீங்க‌ ஒரு அர‌சு வ‌ங்கியில் ப‌ணியாற்றுவாதாக‌ தெரிகிற‌து. அர‌சு ஊழிய‌ர் என்ப‌து ஒரு பொதுவான‌ பிர‌யோக‌ம். வைட் கால‌ர் ப‌ணிக‌ள் ம‌ட்டும் தான் இங்கி விவாதிக்க‌ப்ப‌டுகிற‌து. ஆனால், நான் எடுத்த்க்காட்டிய‌ உதார‌ண‌ங்க‌ள், புளு காலார் ப‌ணிக‌ள் ம‌ற்றும் மின்சாரா வாரிய‌ பொறியாள‌ர்க‌ள் ம‌ற்றும் லைன்மென்க‌ள் ப‌ற்றி.

அர‌சு துறை ஊழிய‌ர்க‌ளின் ம‌ன‌ உளைச்ச‌ல் ப‌ற்றி சொல்லியிருந்தீர்க‌ள். உண்மைதான். ப‌ல‌ க‌ழிச்ச‌டைக‌ள் ம‌ற்றும் ஊழ‌ல்வாதிக‌ள் ம‌ற்றும் அதிகார‌த்தை த‌வ‌றாக‌ ப‌ய‌ன்ப‌டுத்தும் வீண‌ர்க‌ள் ம‌த்தியில், நேர்மையாக‌ ப‌ணி புரியும் போது க‌டும் ம‌னோ உளைச்ச‌ல் உண்டாகும். ந‌ன்கு அறிவேன்.

ம‌னோபாவ‌ம் ப‌ற்றிதான் இங்கு அடிப்ப‌டை விவாத‌ம். ஜாப் செக்யூரிட்டி இருக்கும் போது ஒரு ஊழிய‌ரின் ம‌னோபாவ‌ம் மிக‌ மிக‌ மாறுகிற‌து. அனுப‌வ‌தில் புரியும். (உ.ம் : ஏர்டெல் நிறுவ‌ன் லைமேன்க‌ளை, பி.எஸ்.என்.எல் நிறுவ‌ன‌ லைன்மேன்க‌ளுட‌ன் ஒப்பிடுக‌) ; அவ‌ர்க‌ளின் ம‌னோபாவ‌ம் எப்ப‌டி உருவாகிற‌து ?
அமெரிக்கா, அய்ரோப்ப‌ போன்ற‌ நாடுக‌ளில் இருக்கும் அர‌சு ஊழிய‌ர்க‌ளின் ம‌னோபாவாம் எப்ப‌டி மாறுப‌டுகிற‌து ? ஏன் ? ஒரே வேலைக‌ளை செய்யும் ப‌ல‌ வ‌கை ம‌னித‌ர்க‌ள் / அமைப்பை சார்ந்த‌வ‌ர்க‌ளின்
ம‌னோபாவ‌ம் ம‌ற்றும் work ethics ஏன் மாறுப‌டுகிற‌து ?

மூல‌க்கார‌ண‌ம் சோசிய‌லிச‌ கொள்கையினால் விளைந்த‌ ஜாப் செக்யூரிட்டிதான். என‌து சுட்டிக‌ளை முழுமையாக‌ ப‌டிக்க‌வும்.

above all the vital issues of flexibility, adaptabiltiy and innovation will be very different in a rigid and bureacratic govt sector when compared to a dynamic and ever pioneering private sector.
The key word is Flexibilty and adaptabilty which gives maximum effieceny of output. or in other words : productivity.
repeat : productiviy.
custome service and friendliness all comes thru this.

The rigid structure and lack of flexibility in a typical govt set up like the TN Secratariat section was a result of all this foolishness. new posts are created but abolishing unwanted posts is IMPOSSIBLE. the mind set of the staff is infit for new trainings and new tech and innovations.

Govt school teachers : tons of lines can be written about their performance and commitment. esp in rural primary schools. they are paid above market salaries but their productivity is poor.
Why ?
why do even poor people try to avoud govt schools which have large areas, buildings and well paid and well educated staff ?

WHY ?

Indian said...

//உங்கள் அண்ணனோ அல்லது தம்பியோ அல்லது மாமாவோ அல்லது அக்கம் பக்க வீட்டில் வசிப்பவர்களோ எவரேனும் அரசு ஊழியர்களாக (அதிகாரிகளாக அல்ல) இருக்கும் பட்சத்தில் நெருங்கி விசாரித்துப்பாருங்கள்.இன்னும் அவர்கள் ஆங்கிலேயர்கள் உருவாக்கி வைத்த அடிமைத்தனமான அதிகார பல் சக்கரத்திலிருந்து விடுபடாமல் அவர்களின் ஆபீஸ் மற்றும் உயர் அதிகாரிகளைப்பற்றி மட்டுமே பொழுது முழுவதும் யோசித்துக்கொண்டும், பைல்களையும் துறைகளில் நிலவும் சர்வாதிகாரமான போக்குகளை சதா நேரமும் முனகிக்கொண்டிருப்பவர்களாகவும் காணமுடியும்.
//

கிழட்டு அநுபவங்கள்

.....
" நான் பல வருடங்களுக்கு முன்பு தூபாயில் வேலை செய்வதாக கூறி இருந்தேன் அல்லவா? அப்போது என் சொந்த வேலையாக ஒரு முறை கோலாலம்பூர் திரும்ப வேண்டி இருந்தது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸில், இக்கோனொமி கிளாஸ் டிக்கட். இரவு ப்ளைட். check-in முடிய பத்து நிமிடங்களுக்கு முன் கவுண்டருக்கு போய் சேர்ந்தேன். 'இக்கோனோமில் இடம் இல்லாததால் உங்களை ராஃபில்ஸ் கிளாசுக்கு (பிசினஸ் கிளாஸ்) மாற்றிய்ள்ளோம்" என்று கவுண்டரில் இருந்த பெண் சொன்னதும் எனக்கு படு குஷி.

விமானத்திற்குள் போய் எனக்கு கொடுக்கப்பட்டிருந்த சீட்டை தேடி உட்கார்ந்தால், அடுத்த சீட்டில் எங்கள் நிறுவனத்தின் சரக்கு கப்பல் பிரிவின் ஜெனரல் மானேஜர் - கோவாவைச் சேர்ந்த ஒரு இந்தியர். வேலை நிமித்தமாக சிங்கப்பூருக்கு பிரயாணம் செய்து கொண்டிருந்தார். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். விமானத்தில் சாப்பாடு பரிமாறும் நேரம் வந்தது. மெனு கார்டோடு, wine list ம் கூடவே வழங்கப் பட்டது. லிஸ்ட்டை பார்த்துவிட்டு என் பானம் என்னவென்பதை பக்கத்தில் நின்று ஆர்டர் எடுத்து கொண்டு இருந்த விமானப் பணிப்பெண்ணிடம் சொன்னேன். அவர் என் நண்பரிடம் திரும்பி "உங்கள் பானம் என்ன சார்?" என்று கேட்டார். என் நண்பர் அவர் கையில் வைத்திருந்த wine list ல் ஒரு பானத்தை காண்பித்து, "இது" என்று சொல்ல முற்பட்டுக் கொண்டிருக்கையில், மற்றோரு பணிப் பெண் அங்கு வந்து "இல்லை, மிஸ்டர் பிலிப்ஸ் உங்களின் பானம் பின்னால் வந்து கொண்டு இருக்கிறது" என்றார். நாங்கள் திரும்பிப் பார்த்தால், ஒரு பக்கெட்டில் ஒரு பாட்டல் வைனை ஐஸ் வைத்து குளிர வைத்த நிலையில் மற்றோரு பணிப் பெண் சுமந்து வந்து கொண்டிருந்தார்.

"நாம் இப்போதுதானே ஆர்டரே கொடுக்க போகிறோம்.....அதற்குள் எப்படி....வைன் ?!!" என்று எங்களுக்கு ஒரே குழப்பம். வந்த வைன் பாட்டலை என் நண்பர் கையில் எடுத்து பார்த்தார். அவரின் ஆச்சரியம் மேலும் பல மடங்கு கூடியது. "இது..இது...எனனக்கு மிகவும் பிடித்த வைன் ஆயிற்றே. இது எப்படி உங்களுக்கு தெரியும்?!!" என்று வாயை பிளந்தார். அதற்கு அந்த பணிப் பெண் "உங்களுக்கு இந்த வைனைப் பறிமாற வேண்டும் என்று எங்களின் டியூட்டி ரோஸ்டரில் சொல்லப் பட்டிருந்தது. அதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது. மன்னிக்கவும்." என்று சொல்லிவிட்டு சென்றார். அடுத்த அரை மணி நேரத்திற்கு என் நண்பர் தலையை பிய்த்து கொண்டபடி இருந்தார். பிறகு திடீர் என்று என் பக்கம் திரும்பி, "எனக்கு தெரிந்து விட்டது" என்றார். "ஆறு மாதங்களுக்கு முன்பு இதே மாதிரி நான் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் ஒரு இரவு ப்ளைட்டில் லண்டனுக்கு வேலையாக போகும்போது இதே மாதிரி ஒரு wine list என்னிடம் கொடுக்கப் பட்டது. அன்று அங்கிருந்த விமானப் பணி பெண்ணிடம் இந்த குறிப்பிட்ட வைன் இருக்கிறதா என்று கேட்டு, அவர் இல்லை என்று சொன்ன பிறகு, இந்த வைன் எவ்வளவு பிரமாதமான ஒன்று என்று அவரிடம் விலாவரியாக சொல்லி கொண்டிருந்தேன். அதை அவர் குறிப்பெடுத்து, அது கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் ஏற்ற பட்டு, ஆறு மாதம் கழித்து நான் வேறு ரூட்டிற்கு டிக்க்ட் புக் செய்யும் போது, என் பெயரை வைத்து என்னை அடையாளம் கண்டு, எனக்கு இந்த வைன் தான் பரிமாறப் படவேண்டும் என்கிற ஆர்டர் தரையில் வேலை செய்யும் சிப்பந்திகளிடம் கொடுக்க பட்டு, அதன்படி இந்த குறிப்பிட்ட வைன் விமானத்திற்கு அனுப்ப பட்டு, குறித்த நேரத்திற்கு முன்பே அது குளிர் படுத்தபட்டு, இங்கு எனக்கு வளங்க பட்டிருக்கிறது" என்று ஆச்சரியத்தோடு சொல்லி முடித்தார்.

உலகிலேயே அதிக லாபம் சம்பாதிக்கும், நம்பர் ஒன் விமான நிறுவனமாக ஏன் சீனர்கள் நடத்தும் 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' இருக்கிறது என்பது இப்போது புரிகிறதா?
....

SIA is 54 percent owned by the Singapore government.

The point is govt employees also has a social responsibility to improve the "current state" of the bureaucracy.

Effective governance requires participation from leaders, bureaucrats and the nation's subjects in their respective roles.

Indian said...

//ஆகவே அந்த வழிமுறைகளை சரிவர செய்யாமல் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் 'அர்ச்சனை' வாங்கிக்கட்டிக்கொள்கிறேன். இப்படி வழிமுறைகளை சரிவர கடைபிடிக்காமல் ஏன் சார் வந்து எங்க பிரானணை வாங்குறீங்கன்னு கத்துனா வாங்கிக்க வேண்டியதுதான்.
என்னை மாதிரி தினம் தினம் எத்தனை பேர் வந்து அவர்களுடைய நேரத்தை வீணடித்திருப்பார்கள்? அந்த கோபத்தில்தான் பொறுமையிழந்து கத்துகிறார் போலும் என்று அப்போதெல்லாம் நினைத்துப்பார்ப்பதில்லை.//

Instead, they could have taken a simple initiative of placing a black board displaying the process-flow and the documents prerequisite for the application.

"Information is wealth" - அன்னவெறி கண்ணையன் of Boys movie.

It is wealth at the hands of unscrupulous elements to demand bribe.

jothi said...

அன்புள்ள சுரேஷ் கண்ணன்,

உங்களின் பார்வைகளை எண்ணங்களை, அற்புதமாக நிலை நிறுத்தியதற்கு பாராட்டுகள். மேலே சொன்ன உங்களின் பொதுவான கருத்துகளுடன் நான் உடன்பட்டுதான் போகிறேன். நான் ஒன்றாம் வகுப்பிலிருந்து பொறியியல் மேற்படிப்பு வரை அரசு நிறுவங்களில்தான் படித்தேன். நான் பட்ட வேதனைகள் எனக்கு நன்றாகவே தெரியும். 100 கோடி மக்களிற்கு சேவை என்பது சாதாரண விஷயம் இல்லை. நீங்கள் நீங்களாக சொல்லுகிறீர்கள். நான் அவர்கள் இடத்தில் நான் இருந்தால் என்ன செய்வேன் என ஒரு சாதாரண மனிதனாக சொல்லுகிறேன். அதனால் அவர்கள் செய்யும் எல்லா செயல்களுக்கும் வக்காலத்து வாங்குவதாக அர்த்தமில்லை.

முதலில் இருந்த அரசாங்கங்களின் போக்கிற்கும், இப்போது உள்ள அரசாங்கங்களின் போக்கிற்கும் மிக மிக பெரிய வேறுபாடுகள் வந்துவிட்டன. முதலில் திட்டங்கள் தீட்டி சேவையை தந்தார்கள். அதிலும் சில மூதேவிகள் பணம் சம்பாதித்தார்கள். ஆனால் இப்போது எந்த சேவையை வழங்கினால் பணம் சம்பாதிக்கலாம் என திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அதை சார்ந்தவர்களும் சம்பாதிக்கிறார்கள். அரசாங்கமே அவர்களுக்கு துணை நிற்கும் போது திமிர் ஏறித்தான் போகிறது. அந்த திமிரை அடக்க வேண்டியன் அரசை நடத்துவன். இவன் உதவி அவனுக்கு தேவை என்பதால் கண்டும் காணாமல் போகிறான். திமிர் அதிகரித்துக் கொண்டே போகிறது.

jothi said...

//ஆனால் இவர்களின் சதவீதம் மிகக்குறைவானதும் விதிவிலக்கானதுமாகும். நான் பெரும்பான்மையைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்.//
கண்டிப்பாக ஒப்புக்கொள்ளவே மாட்டேன். என் அனுபவத்தில் கண்டிப்பான அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், தொழிலாளிகள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். உங்களின் அனுபவம் சென்னையுடன் மட்டும் முடிந்துவிடுகிறது என கருதுகிறேன். சென்னையை தாண்டி வாங்க. அதிலும் அரசு பணிகள் நீங்கள் சேவையை மட்டும் சொல்லுகிறீர்கள். அதை தாண்டி நிறைய துறைகள் உள்ளன. நான் முதலில் சொன்னது போல் 100 கோடி மக்களுக்கு சேவை என்பது சாதாரணமான விஷயம் இல்லை.
இன்றைக்கு ஒரு ரூபாய்க்கு மதிப்பு இல்லை. ஆனால் ஒரு 25 பைசாவிற்கு போஸ்ட் கார்டு வாங்கி 800 கி.மீ தொலைவில் உள்ள நண்பருக்கு அனுப்புங்கள். அது இன்றைக்கும் பத்திரமாக போகும். அதுதான் சேவைதுறை. எல்லோருக்கும் சமமான சேவை வழங்குவது. நீங்கள் ஸ்பீட் போஸ்ட்டில் உள்ள புகார்களை சொல்லுகிறீர்கள். நான் மதிப்பே இல்லாத 25 கார்டுக்கும் வழங்கவேண்டிய அவர்களின் சேவைகளின் கடினங்களை சொல்லுகிறேன். அவ்வளவுதான்,

jothi said...

சேவைத்துறை தனியார்மயமானால் பரவாயில்லை என சொல்லுகிறீர்கள்.

நல்ல நோக்கம்தான். ஆனால் பெரும்பாலான பன்னாட்டு வங்கிகள், கூரியர், ஆம்னி பேருந்துகள் மாநகரங்களை, பெரு நகரங்களை தாண்டி வருவதே இல்லையே. சிறு நகரில் உள்ளவர்களும் மனிதர்கள்தானே அவர்களுக்கும் வாயும் வயறும் உள்ளதே, என்ன செய்வது? அவர்களுக்கும் சேவை வழங்கவேண்டி இருக்கிறதே,.. என்ன செய்வது, வங்கிகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ 5000,25000 என 90% சாதாரண மனிதர்களின் வருகையை அடைத்து 10% பணக்கார கூட்டத்திற்கு மட்டும் சேவையை அள்ளி வழங்குவதில் என்ன நியாயம், அதில் என்னதான் கஷ்டம்?? அந்த சேவையில் என்னதான் குறைச்சல் வரக்கூடும்?

jothi said...

//அலுவலகத்தின் இடையே தனிப்பட்ட விஷயங்களைக் கவனிப்பதைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள். இது ஒரு பொதுவான இந்திய பணியாளர்களுக்கே உரிய மனநிலை. அலுவலக நேரத்திலிருந்து திருடி தமக்கு பயன்படுத்திக் கொள்வதில் ரகசிய மகிழ்ச்சி கிடைக்கிறது. இது அரசு மற்றும் தனியார் இருவருக்கும் பொதுவானதுதான்.//

நம்மில் ஒருவர்

jothi said...

//அரசு அலுவலகங்களுக்கு செல்வோர் உடனேயே தங்கள் வேலை முடிந்தவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று எழுதியிருந்தீர்கள். இதுவும் நடைமுறைக்கு முரணனான ஒன்று //

வேலை விஷயமாக அரசு அலுவலகங்களுக்கு செல்லும் நாம் வேலை உடனே முடியவேண்டும் என்றுதானே நினைப்போம். இதில் யாருக்கும் முரண்பாடு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

jothi said...

//அரசு அலுவலகங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் அதற்கு ஏற்றதான மனநிலையோடும் 'கவனிப்போடும்' செல்கிறார்கள்.//
//அந்நியன் பட வசனத்தின் படி 'கடமையை செய்வதற்கு' கூட லஞ்சம் கேட்கு்ம சூழ்நிலையில்தான் நாம் வாழந்து கொண்டிருக்கிறோம்.//

நான் முன்பே சொன்னது போல் லஞ்சம் துரதிர்ஷடவசமானது. அது நம்மில் ஒருவர்தான் ஆரம்பித்து வைக்கிறார். ருசி கண்ட காகங்களுக்கு பிறகு தானியங்கள் பிடிக்கவில்லை. கோழிகறிதான் பிடிக்கிறது. ஆனால் கோழிகறி குடுத்தாலும் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை தானியங்கள்தான் வேண்டும் என இருக்கும் பறவைகள் நிறைய இருக்கின்றன. அது நம் கண்களுக்கு தெரிவதில்லை. ரோட்டில் போகும்போது காகங்கள் மட்டுமே கண்ணில் தெரியும். அது யாரோ தூக்கி போடும் சிக்கன் துண்டிற்காக ஒரே இடத்தில் அலைந்து கொண்டே இருக்கும். அது தின்னும் போது கூட்டணிக்கு ஆளும் சேர்க்கும். எண்ணிக்கையில் அதிகம் உள்ள கிளிகளும், மைனாக்களும், குருவிகளும்,புறாக்களும் நம் கண்ணில் தெரியாதது நம் துரதிர்ஷ்டம். கழுகுகளும், காகங்களும் மட்டுமே நம் கண்ணில் தெரிகிறது. பறவைகள் அனைத்தும் மாமிச வகை என சொல்ல வைக்கிறது.

Vetirmagal said...

This is an important issue that gets under comedy and "it is like that only" attitude.

The public tolerates such behaviour. We are scared to ask why ? to the guys managing our affairs.

After the success of some private banks, I find that the nationalised banks have changed their attitude and are treating customers better. Of course there is a long way to go..
I remember there was some proposal of having citizen charter displayed in banks. some banks do follow it.

Unless we ask for better service , by way of write ups, complaints and media attention, we are not going to get it.

We have to keep envying those Singapore airline employees and customers!

A good discussion. Thanks.

புருனோ Bruno said...

//வீட்டுவரிகட்ட காசோலை கொடுத்தோம், காசோலைக்குப் பின்னால முகவரி எழுதணும், வீட்டு முகவரியும் வரிகட்டுன வீட்டு முகவரியும் வேற. //

வேற வேறயா

அப்புறம் !!!

---

உதாரணமாக நீங்கள் உங்கள் பயணச்சீட்டை முன்பதிவு செய்ய என்னை சொல்கிறீர்கள்

நான் என் பெயரில் முன்பதிவு செய்து விட்டேன்

--

பயணத்தின் போது உங்களை கீழிறங்க சொல்லும் பரிசோதகர் எவ்வளவு பொறுப்பற்றவர்... அவர் தலையில் எவ்வ்ளவு பெரிய ஒளிவட்டம் இருக்கிறது

--

என்ன கொடுமை சார் இது

புருனோ Bruno said...

பத்ரி சார்

//“சனிக்கிழமை அக்கவுண்ட் தொடங்கமாட்டோம். மற்ற நாள்களில் 2.30 மணிக்குள் வரவேண்டும்.” //

இது அவர்களது விதி. இதில் என்ன தவறு என்று கூறுகிறீர்கள்

நான் இரவு பத்து மணிக்கு வந்து உங்கள் கடையில் புத்தகம் வாங்க முடியுமா

--

“ஞாயிறு மதியம் கடை கிடையாது. மற்ற நாள்களில் 7.30 மணிக்குள் வரவேண்டும்.”

“இல்லங்க, அதுக்குள்ள எனக்கு டூட்டி முடியாது.”

“அதைப்பத்தி எங்களுக்குக் கவலையில்லை.”

--

இந்த உரையாடல் உங்கள் கடையில் நடந்தால் அது சேவைக்குறையா அல்லது பொறுப்பற்றத்தனமா அல்லது ஒளிவட்டமா

--

சனிக்கிழமை கணக்கு துவங்கும் வசதி என்பது ஒரு கூடுதல் வசதி.. enhancement.

சனிக்கிழமை கணக்கு துவங்க மாட்டார்கள் என்பது குறை அல்ல. it is not a bug

--

எனக்கு தேவையான வசதி இல்லை என்பதற்காக அதை குறையாக கூறுவது சரியா

--

ஒரு சர்தார்ஜி ஜோக்

சார் இதில் சன் டிவி தெரியவில்லை

சார், இது ரேடியோ, பாட்டு மட்டும் தான் கேட்கலாம். படம் பார்க்க வேண்டுமென்றால் டிவி வாங்க வேண்டும்

--

எனவே டிவி என்று விற்கப்பட்ட பொருளில் படம் தெரியவில்லை என்றால் தான் அது தவறு

ரேடியோவில் படம் தெரியவேண்டும் என்ற உங்கள் எதிர்ப்பார்ப்பு சரி
ஆனால் அதற்காக (பட்ம் தெரியவில்லை) என்பதற்காக ரேடியோவை குறை கூற முடியாது

--
புரியும் படி விளக்கியுள்ளேன் என்று நினைக்கிறேன்

சந்தேகம் இருந்தால் கேட்கவும்

--

அரசு துறைகளின் மேல் உள்ள 90 சதவித “குற்றச்சாட்டுகள்” இது போல் தான்

தவறு இல்லை என்றாலும் கூட தங்களின் அதீத எதிர்பார்ப்பு நிறைவேறாததையே குறை என்று கூறுவது தான் பிரச்சனையின் ஆதாரம்

ஒளிவட்டம் எங்கிருக்கிறது என்று இப்பொழுதுதாவது புரியும் என்று நினைக்கிறேன்

புருனோ Bruno said...

// தவறு வாடிக்கையாளர் மீதே இருக்கட்டும். எத்தனை அரசு ஊழியர்கள் அதை கனிவாக எடுத்துச் சொல்கிறார்கள்//

குறைவான சதவிதம் என்பது கசப்பான உண்மை

புருனோ Bruno said...

சில கேள்விகள்

1. நீங்கள் இது வரை உங்கள் நண்பர்களுக்கு / உறவினர்களுக்கு எழுதிய கடிதங்கள் எத்தனை (பதிவு தபாலில் அல்லாமல் சாதாரண தபாலில்)

2. அதில் எத்தனை சென்று சேர்ந்து
உள்ளன

3. எத்தனை சேர வில்லை

புருனோ Bruno said...

//நான் முன்பே சொன்னது போல் லஞ்சம் துரதிர்ஷடவசமானது. அது நம்மில் ஒருவர்தான் ஆரம்பித்து வைக்கிறார். ருசி கண்ட காகங்களுக்கு பிறகு தானியங்கள் பிடிக்கவில்லை. கோழிகறிதான் பிடிக்கிறது. ஆனால் கோழிகறி குடுத்தாலும் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை தானியங்கள்தான் வேண்டும் என இருக்கும் பறவைகள் நிறைய இருக்கின்றன. அது நம் கண்களுக்கு தெரிவதில்லை. ரோட்டில் போகும்போது காகங்கள் மட்டுமே கண்ணில் தெரியும். அது யாரோ தூக்கி போடும் சிக்கன் துண்டிற்காக ஒரே இடத்தில் அலைந்து கொண்டே இருக்கும். அது தின்னும் போது கூட்டணிக்கு ஆளும் சேர்க்கும். எண்ணிக்கையில் அதிகம் உள்ள கிளிகளும், மைனாக்களும், குருவிகளும்,புறாக்களும் நம் கண்ணில் தெரியாதது நம் துரதிர்ஷ்டம். கழுகுகளும், காகங்களும் மட்டுமே நம் கண்ணில் தெரிகிறது. பறவைகள் அனைத்தும் மாமிச வகை என சொல்ல வைக்கிறது.

மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள்

enRenRum-anbudan.BALA said...

இடுகைக்கு நன்றி, சுரேஷ்.

சுரேஷ் கண்ணன் சொல்லியிப்பது அத்தனையும் அரசு அலுவலகங்களிலும், வங்கிகளிலும் தினம் நடப்பவை.

இந்த ஜந்துக்கள் வேலை பார்க்கும் லட்சணத்திற்கு ஊதிய உயர்வு என்று எந்நேரமும் கூப்பாடு, வாங்க்குவது என்னவோ பென்ஷன் !!

பெரியவர், சிறியவர் என்று யாரிடமும் மரியாதை கிடையாது, கால்குலேட்டர் அளவு கூட மூளையற்ற இந்த ஜடங்களுக்கு!

தங்களது நேரம் போலவே, மற்றவருக்கும் வீண் செய்ய நிறைய நேரமிருக்கிறது என்று எண்ணுவது பரிதாபம்.

ஆனால், சத்தம் போட்டு கொஞ்சம் க்லாட்டா செய்தால், காரியம் நடக்க வாய்ப்பிருக்கிறது, சில சமயங்களில்.

நல்ல உழைப்பாளிகள் கூட அரசுப் பணிக்குப் போன பின், bad influence-ஆல் இப்படி ஆகி விடுவது துரதிருஷ்டமான விஷயம்.

ஒரு 10-15% ஆட்களால் தான் அரசு இயந்திரமே ஒடிக்கொண்டிருப்பது என்பது தான் யதார்த்தம்.

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

These Govt. servants will say they simply follow rules, when confronted. But for the rich and influential, they will break all these rules !!!

Last but not the least, we all know about the rampant corruption. So many raids are happening against RTO offices all over Tamilnadu. So Ruling politicians too are completely aware of these things. They too get the cut and the action taken is mostly an Eyewash.

Is anyone seeing some light at the end of the tunnel ? :)

ஜோ/Joe said...

//ஆகவே அந்த வழிமுறைகளை சரிவர செய்யாமல் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் 'அர்ச்சனை' வாங்கிக்கட்டிக்கொள்கிறேன். இப்படி வழிமுறைகளை சரிவர கடைபிடிக்காமல் ஏன் சார் வந்து எங்க பிரானணை வாங்குறீங்கன்னு கத்துனா வாங்கிக்க வேண்டியதுதான்.
என்னை மாதிரி தினம் தினம் எத்தனை பேர் வந்து அவர்களுடைய நேரத்தை வீணடித்திருப்பார்கள்? அந்த கோபத்தில்தான் பொறுமையிழந்து கத்துகிறார் போலும் என்று அப்போதெல்லாம் நினைத்துப்பார்ப்பதில்லை//

ஜோசப்சார்,
இதை ஏற்றுக்கொள்ள முடியாது ..எல்லோரும் போய் உயர் அதிகாரிகளிடம் நிற்பது எரிச்சலை உண்டாக்குகிறது என்றால் இங்கே சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருப்பது போன்ற நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் .

வங்கியில் நுழையும் போது ஒற்றை சாளர முறையில் வாடிக்கையாளர்கள் வரவேற்பாளரிடம் செல்ல வேண்டும் ..அவரிடம் தான் எதற்க்கு வந்திருக்கிறேன் என்று சொன்னால் அதற்கேற்ப அந்தந்த கவுண்டருக்கு தனித்தனி வரிசை எண்ணை வரவேற்பாளர் கொடுப்பார் ..எனவே சும்மா தொட்டதுக்கும் பிடிச்சதுக்கும் பெரிய அதிகாரிகளை போய் தொல்லை செய்வதை தவிர்க்கலாம் ..சனியன்று இல்லாத ஒரு சேவைக்கு ஒரு வாடிக்கையாளர் வந்தால் வரவேற்பாளரே வாடிக்கையாளரிடம் அதை தெரிவித்து அனுப்பி விடலாம் ..இதைக் கூடவா செய்ய முடியாது?

பிச்சைப்பாத்திரம் said...

ஜோ அவர்கள் அளித்த பின்னூட்டம் சில வார்த்தைகள் நீக்கப்பட்டு பிரசுரிக்கப்படுகிறது. புரிதலுக்கு நன்றி.

-------------------------------

வாடிக்கையாளர் பணம் போட்டதால் அதிகாரம் செய்கிறார் என்பதைத் தாண்டி வாடிக்கையாளர் பணத்தில் தான் தனக்கு சம்பளம் வருகிறது என்பதை பணியாளர்கள் உணர வேண்டும் .

பாமரர்கள் நிறைந்த நாட்டில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக கூட பேச முடியாதவர்கள் ************ வேலைக்கு வர வேண்டும் ,சம்பளம் வாங்க வேண்டும் ?

ஜோ/Joe said...

//புரிதலுக்கு நன்றி. //
பரவாயில்லை சுரேஷ் கண்ணன்.

எனக்கு கோபம் வந்ததற்கு காரணம் .. இவர்கள் எரிச்சல் படுவது கூட எல்லோரிடமும் ஒரே போல இல்லை . கொஞ்சம் பணக்காரன் ,மேல் தட்டு மக்கள் என்றால் இவர்கள் அந்த அளவு எரிச்சல் படுவதில்லை ..ஆனால் படிக்காத ,பாமர ,கீழ்தட்டு மக்களிடம் இவர்கள் நடந்து கொள்வதை பார்த்தால் ரத்தம் கொதிக்கும் .இவன் நம்மை என்ன செய்து விட முடியும் என்ற ஏகத்தாளம் தவிர வேறென்ன ?

Manikandan AV said...

அமைப்பை பாருங்கள்! ஊழியரை குறை சொல்லாதீர்கள் என்கிறார்கள். கேவலம் ஒரு பார்சல் ஐ பெற தபால் நிலையத்தில் நான் பட்ட அவமானத்தை இங்க படித்து பாருங்கள்.
அவர்களை ஒன்றும் கடன் கேட்கவில்லை. அற்பம், வந்திருக்கும் பார்சல் இ எடுத்து தருவதற்கு அவர்கள் செய்த அலும்பிற்கு......

படித்து விட்டு பிறகு பேச சொல்லுங்கள்.
http://manisscribblings.blogspot.com/2009/04/blog-post_19.ஹ்த்ம்ல்

யாருக்கு இல்லை அலுவலகத்தில் பிரச்சனைகள்??
ஆனால் வாங்கும் சம்பளதிற்காகவது உழைக்க வேண்டாமா?

Unknown said...

ஒரு பதிவில் அவரவர் வாதத்தை மிக தெளிவாகவும் பதற்றமில்லாமலும் பின்னூட்டத்தில் இட்டுள்ளதை இந்தப் பதிவில் பார்க்கிறேன் (முன்முடிபுகளோடு வந்துள்ள இரண்டு பின்னூட்டங்களை தவிர)

நல்ல பதிவு, அதற்கு நல்ல பின்னூட்டங்களும் - வாழ்த்துகள் சுரேஷ்.

புருனோ சார், அலுவலகத்தில் இத்தனை மணி வரையில் தான் இன்னின்ன காரியங்கள் செய்ய முடியும் என்று இருப்பது ஒளிவட்டம் அல்ல. ஆனால், அதற்கு மாற்றுத்தீர்வு கேட்டால் “எங்களுக்கு தெரியாது” என்று முகத்திலடித்தாற்போல் பேசுவதை ஒளிவட்டமல்லாமல் வேறென்ன சொல்வது?

இன்றளவில் நகராட்சி அலுவலங்களில் காசு கொடுக்காமல் எந்த வேலையாவது நடக்கிறதா? நான் எத்தனையோ முறை சென்ற இது போன்ற அலுவலகங்களில் ஒரே ஒரு முறை மட்டுமே காசு கொடுக்காமல் நேர்மையாக வேலையை முடிக்க முடிந்தது. அதுவும், அங்கே இருந்த ரெஜிஸ்டரர் நேர்மையானவராக இருந்ததால். ஆனால், விதிவிலக்குகளை மட்டுமே வைத்து வாதாட முடியாதே!!

புருனோ Bruno said...

//புருனோ சார், அலுவலகத்தில் இத்தனை மணி வரையில் தான் இன்னின்ன காரியங்கள் செய்ய முடியும் என்று இருப்பது ஒளிவட்டம் அல்ல. //

இதைத்தான் நான் கூறுகிறேன்

//ஆனால், அதற்கு மாற்றுத்தீர்வு கேட்டால் “எங்களுக்கு தெரியாது” என்று முகத்திலடித்தாற்போல் பேசுவதை ஒளிவட்டமல்லாமல் வேறென்ன சொல்வது?//

வங்கியின் வேலை நேரம் குறித்து நீங்கள் யாரிடம் கேட்டீர்கள்

வேலை நேரத்தை மாற்றக்கூடிய அதிகாரம் உள்ளவரிடம் கேட்டீர்களா அல்லது அந்த பொது மேலாளரிடம் கேட்டீர்களா

--

இரவு 11 மணிக்கு ஏன் கிழக்கு பதிப்பகம் திறந்திருக்கவில்லை என்று அங்குள்ள காவல்காரரிடம் நான் கேட்டு அதற்கு அவர் “எனக்கு தெரியாது” என்று கூறினால் அதற்கு பெயர் ஒளிவட்டமா

--

என்ன கொடுமை சார் இது

Indian said...

//இதை ஏற்றுக்கொள்ள முடியாது ..எல்லோரும் போய் உயர் அதிகாரிகளிடம் நிற்பது எரிச்சலை உண்டாக்குகிறது என்றால் இங்கே சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருப்பது போன்ற நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் .

வங்கியில் நுழையும் போது ஒற்றை சாளர முறையில் வாடிக்கையாளர்கள் வரவேற்பாளரிடம் செல்ல வேண்டும் ..அவரிடம் தான் எதற்க்கு வந்திருக்கிறேன் என்று சொன்னால் அதற்கேற்ப அந்தந்த கவுண்டருக்கு தனித்தனி வரிசை எண்ணை வரவேற்பாளர் கொடுப்பார் ..எனவே சும்மா தொட்டதுக்கும் பிடிச்சதுக்கும் பெரிய அதிகாரிகளை போய் தொல்லை செய்வதை தவிர்க்கலாம் ..சனியன்று இல்லாத ஒரு சேவைக்கு ஒரு வாடிக்கையாளர் வந்தால் வரவேற்பாளரே வாடிக்கையாளரிடம் அதை தெரிவித்து அனுப்பி விடலாம் ..இதைக் கூடவா செய்ய முடியாது? //

It is implemented in Koramangala RTO Office, Bangalore.

Indian said...

Earlier, public is resigned to the fact that govt sector is the only channel for their needs. With the competition from private sector, expectations have grown up exponentially. Govt, govt sector and govt employees do not seem to understand the expectation and seem to have an ostrich like attitude of not accepting it. They keep arguing that isn't it the pvt sector worse. Yes, where one pvt sector company fails, another pvt company fills the gap and serve the customer effectively. Can we say the same with govt sector (with their monopoly)?

Anonymous said...

//பத்ரி சார்

//“சனிக்கிழமை அக்கவுண்ட் தொடங்கமாட்டோம். மற்ற நாள்களில் 2.30 மணிக்குள் வரவேண்டும்.” //

இது அவர்களது விதி. இதில் என்ன தவறு என்று கூறுகிறீர்கள்

நான் இரவு பத்து மணிக்கு வந்து உங்கள் கடையில் புத்தகம் வாங்க முடியுமா
//

Certainly he cannot open his store 24X7. However, at least he would think of providing an alternate means like buying over internet. Because he has an intent to maximize sales and earn more profit.

HDFC bank has a permanent desk in my workplace to facilitate opening new accounts. Vodafone and Airtel has similar desks to accept new mobile connections.

Does govt banks atleast "consider", "deliberate about" providing alternate means to satisfy customer? What is the objective of running a bank? To serve customers or to pay salary to it's employees?

Anonymous said...

//“ஞாயிறு மதியம் கடை கிடையாது. மற்ற நாள்களில் 7.30 மணிக்குள் வரவேண்டும்.”

“இல்லங்க, அதுக்குள்ள எனக்கு டூட்டி முடியாது.”

“அதைப்பத்தி எங்களுக்குக் கவலையில்லை.”

--

இந்த உரையாடல் உங்கள் கடையில் நடந்தால் அது சேவைக்குறையா அல்லது பொறுப்பற்றத்தனமா அல்லது ஒளிவட்டமா
//

In a competitive business environment, a pvt sector company (or it's employees) may not dare to give such a reply. He or she can say so (however remote of such a happening) only at the risk of losing his job.

This it happened to recently. My pvt sector broadband ISP in Bangalore took no action for to resolve net connection failure for 3 days. I have to use some strong words to make force them. Threats of going to consumer court, writing in a blog, writing to Times of India or simply moving to their competitor make them to resolve the issue at last.

Could we expect the same with govt employees? Had this been the govt sector, all I could do is requesting/begging/greasing their palm to get the job done.

I have seen both the sectors and this is my experience.

வஜ்ரா said...

//
//ஒளிவட்டம் குறித்து நீங்கள் பேசுவது உச்சகட்ட காமெடி.

முதலில் நீங்கள் உங்களுக்கு போட்டுக்கொண்ட ஒளிவட்டத்தில் இருந்து வெளியே வாருங்கள்...

இப்படிக்கு
முட்டாள் //

Repeating..

another முட்டாள்
//

நீங்கள் எல்லாம் முட்டாள்களாக இருப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை

வஜ்ரா said...

பல அரசு நிறுவனங்கள் அரசு உழியர்களுக்கு சம்பளம் வழங்க மட்டுமே நடக்கிறது. அதை மாற்றி மக்களுக்கு சேவை செய்ய நடைபெறுமாறு மாற்ற அரசு நிறுவனங்களை தனியார் வசம் மாற்றி அல்லது தனியார் பங்கை அதிகப்படுத்தி விடுவதும், பணி நிரந்தரம் என்று ஒன்று இல்லாமல் செய்வதிலும் தான் இருக்கிறது.

என்னதான் செய்தாலும் வேலை மட்டும் போகாது என்கிற தைரியத்தில் தான் ஒளிவட்டம் மாட்டிக்கொள்கிறார்கள் இவர்கள். வேலை செய்யாவிட்டால் வேலை காலி என்ற நிலை வந்தால் தான் இவர்கள் வேலை செய்வார்கள்.

அப்பொழுது தான் சனிக்கிழமை அக்கவுண்ட் திறக்க முடியாது, பதினோரு மணிக்கு கிரகணம், ஆகையால் லைசன்சு வழங்க முடியாது என்று எல்லாம் சொல்ல மாட்டார்கள்.

புருனோ Bruno said...

//Does govt banks atleast "consider", "deliberate about" providing alternate means to satisfy customer? What is the objective of running a bank? To serve customers or to pay salary to it's employees?//

The Objective of a government Bank and a Private Bank are different

HDFC does not have a branch in any village

Where as Government Bank has branches in villages

--

For a government Bank, the customers are not just white collared people. It has a wide range

--

Just for one or two people, if the bank deputes 5 people to work in night, it is a waste of resources

On the other hand, they can very well open another branch in a far of village where HDFC does not care

--

I hope you understand this simple point

--

The fact is that a shop / bank not open at night is not a defect / bug. It is an enhancement / additional feature which is needed

You should be able to differentiate between the two

புருனோ Bruno said...

//In a competitive business environment, a pvt sector company (or it's employees) may not dare to give such a reply. He or she can say so (however remote of such a happening) only at the risk of losing his job.
//

You cannot compare a Government Bank with a Private Bank - Government Banks are obliged to have branches in Villages. Private Banks do not have them

The charges for Cheque book / draft etc are substantially higher in a private bank

The minimum balance is substantially higher in a private bank

--

In such a condition you cannot expect the same level of working hours / other facilities

--

Town Buses serve a different purpose. Airplanes serve a different purpose

Hope you understand the difference

புருனோ Bruno said...

//I have seen both the sectors and this is my experience.//

You are the gifted 10 % who is able to see both the sectors

Why can't you ask your favourite private sector to serve 100 percent of Indians !!

So that all indians can see both the sectors :) :) :)

--

By the way, Indian Posts cannot refuse delivery of a letter

Where as Private Courier Service will deliver only in cities / big towns

Now you are free to praise the private couriers !!!

புருனோ Bruno said...

//அப்பொழுது தான் சனிக்கிழமை அக்கவுண்ட் திறக்க முடியாது, பதினோரு மணிக்கு கிரகணம், ஆகையால் லைசன்சு வழங்க முடியாது என்று எல்லாம் சொல்ல மாட்டார்கள்.//

சனிக்கிழமை கணக்கு துவங்க வங்கி விதி அனுமதித்து துவக்கவில்லை என்றால் அது ஒளிவட்டம்

சனிக்கிழமை கணக்கு துவங்க வங்கி விதி அனுமதிக்காததால் துவக்கவில்லை என்பதை ஒளிவட்டம் என்று கூற முடியுமா

இது தான் என் கேள்வி

Beski said...

புருனோ Bruno said...
//சனிக்கிழமை கணக்கு துவங்க வங்கி விதி அனுமதித்து துவக்கவில்லை என்றால் அது ஒளிவட்டம்

சனிக்கிழமை கணக்கு துவங்க வங்கி விதி அனுமதிக்காததால் துவக்கவில்லை என்பதை ஒளிவட்டம் என்று கூற முடியுமா

இது தான் என் கேள்வி //

அந்த விதியை நிர்னயிப்பதும் அரசு ஊழியர்தானே?

K.R.அதியமான் said...

நண்பர் ப்ரூனோ,

அரசு மருத்தவமனைகளை பெரும்பாலும், மக்கள் நாடுவதில்லை. முடிந்தவரை தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர். வேற வழி இல்லாத பரம் ஏழைகள் தாம் அரசு மருத்துவமனைகளை
நாடுகின்றனர். ஏன் ? தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் அக்கிரமங்கள் வேறு விசியம். பள்ளிகள் விசியத்திலும் மக்களின் விருப்பம் அதே போலத்தான்.

எனது நண்பர் ஒரு நேர்மையான அரசு மருத்துவர். ஆரம்ப சுகாதார மையத்தில் பணி புரிகிறார். கதை கதையாக சொல்வார். ஆரம்ப சுகாதார மருத்தவர்கள், இதர பணியாளர்களின் ஒழுங்கீனம், பணிக்கு வராமல்,
உயர் அதிகாரியிடம் லஞ்சம் கொடுத்து சமாளிப்பது, வேலை திறன் மற்றும் ஊழல் பற்றி. மிக நேர்மையாகவும், ஒழுங்காக‌வும் ப‌ணி புரிவ‌தால் எம் ந‌ண்ப‌னுக்கு ப‌ல‌ பல‌ பிர‌ச்ச‌னைக‌ள், ம‌ன‌ உளைச்ச‌ல்க‌ள்.
இது உங்க‌ க‌ள‌மாக‌ இருப்ப‌தால் இதை ப‌ற்றி எழுதுங்க‌ளேன்.

வேலை போகும் ப‌ய‌ம் இல்லாத‌தால், அர‌சு ஆர‌ம்ப‌ சுகாதார‌ ப‌ணியாள‌ர்க‌ள் ம‌ற்றும் ம‌ருத்துவ‌ர்க‌ள் ஓ.பி அடிக்கின்ற‌ன்ர். ஊழ‌ல் செய்கின்ற‌ன‌ர் என்று ஒரு க‌ருத்து. ச‌ரியா அல்ல‌து த‌வ‌றா ?

வஜ்ரா said...

ஐயா புருனோ, இங்கே சனிக்கிழமை அக்கவுண்டு திறக்க முடியாது என்பது ஒரு அரசு வங்கியின் கஸ்டமர் தொடர்பில் இருக்கும் குறையை சுட்டிக்காட்டப் பயன்படுத்தப்பட்ட ஒரு விஷயம், அதுவே விதி என்று வாதாடுவதற்கு அல்ல.

அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு தாங்கள் யார் தயவில் வாழ்கிறோம் யார் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறோம் என்ற பிரக்ஞை கொஞ்சம் கூட இல்லாமல் இருக்கிறார்களே என்ற ஆதங்கத்திற்கு என்ன பதில் ?

இது அரசு வங்கியில், மருத்துவமனையில் மட்டுமல்லாமல் அரசு பல்கலைக்கழகங்களில் கூட இதே கதிதான்.

உதாரணமாக என் பெயரின் ஸ்பெல்லிங்கை தவறாக என் புரோவிசனல் சான்றிதழில் எழுதிவிட்டார் ஒரு பிரகஸ்பதி, அதுவும் என் பழைய சான்றிதழ் பிரதி ஒன்றை கொடுத்தும் பார்த்து எழுதுவதில் தவறு செய்துவிட்டார். அதை வைத்துத்தான் கான்வோகேஷானுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற பொது பிரச்சனை வரும் அகவே, ஐயா பெயர் தவறாக எழுதிவிட்டீர்கள் திறுத்திக்கொடுக்கவும் என்று கேட்டால், அவர்.

தாங்கள் இதற்கு முன்னால் என் புரொஃபெஸர், தலைமை புரொஃபெஸர் மற்றும் எனக்கு அனுப்பிய கடிதம் அனைத்தும் திருப்பி எடுத்துவரவேண்டுமாம், அதாவது, அவர்கள் அனுப்பிய கடிதத்தை அதுவும் தவறான என்பெயரை எழுதி அனுப்பியதை நான் அலைந்து திருப்பி வாங்கிவரவேண்டும். அப்பொழுத்து தான் வேலை நடக்குமாம்.

அவர் செய்த தவற்றை என் உதவியுடன் மூடி மறைக்கப்பார்கிறார் அந்தப் பிரகஸ்பதி. அதற்கு colletral அக என் சான்றிதழ்.

இது தான் அரசு நிறுவனம்.

இதற்காக நான் அவர் மீது புகார் செய்தால் எனக்கு சான்றிதழ் கிடைக்காமல் என் வேலை தடை படுவது தான் நடக்கும், அவரை நிர்வாகம் ஒன்றும் செய்யாது. ஒன்றும் செய்ய முடியாது என்பது நிதர்சன உண்மை. மெமோ கொடுத்தால் கிழித்துப்போடுவேன், என்று கூட அந்த அதிகாரி விளையாட்டாக தன் பக்கத்து மேசை அதிகாரியிடம் அளவளாவியிருக்கிறார். அதை பின்னர் அறிந்துகொண்டேன்.

Anonymous said...

கான்வோகேஷானுக்கு
என்ற பொது பிரச்சனை வரும்
திறுத்திக்கொடுக்கவும்
அப்பொழுத்து
தவற்றை
இவ்வளவு தவறாக தமிழ் எழுதும் பிரகஸ்பதி....அவரது பெயரில் ஸ்பெல்லிங்கை தவறாக எழுதிய பிரகஸ்பதியை குறைசொல்கிறது? என்ன கொடுமை சார்..இது?

புருனோ Bruno said...

//ஐயா புருனோ, இங்கே சனிக்கிழமை அக்கவுண்டு திறக்க முடியாது என்பது ஒரு அரசு வங்கியின் கஸ்டமர் தொடர்பில் இருக்கும் குறையை சுட்டிக்காட்டப் பயன்படுத்தப்பட்ட ஒரு விஷயம், அதுவே விதி என்று வாதாடுவதற்கு அல்ல.
//

ஐயா வஜ்ரா

சனிக்கிழமை அக்கவுண்ட் திறக்க முடியாது அந்த ஊழியரின் தவறில்லை என்பதே எனது வாதம்

அது உங்களுக்கு புரிந்ததா

புருனோ Bruno said...

//அரசு மருத்தவமனைகளை பெரும்பாலும், மக்கள் நாடுவதில்லை. முடிந்தவரை தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர். வேற வழி இல்லாத பரம் ஏழைகள் தாம் அரசு மருத்துவமனைகளை
நாடுகின்றனர். ஏன் ? //

மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை

அரசு என்றால் மட்டம், தனியார் என்றால் மட்டும் தான் உயர்வு என்று தனியார்மயத்தை ஊக்குவிக்கும் ஊடகங்கள் மற்றும் சில சுயநலமிகளின் விஷப்பிரச்சாரத்தை நம்புவதால்

புருனோ Bruno said...

//எனது நண்பர் ஒரு நேர்மையான அரசு மருத்துவர். ஆரம்ப சுகாதார மையத்தில் பணி புரிகிறார். கதை கதையாக சொல்வார். //

அவரைப்போல், என்னைப்போல், மாதவராஜைப்போல், பலரும் இருக்கிறார்கள். உங்களைப்போன்றவர்கள் சரியாக ஊக்குவித்தால் அது போல் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்

ஆனால் இங்கு நடப்பது என்ன

--

சனிக்கிழமை மதியம் புதிதாக கணக்கு துவங்க முடியாது என்ற நிர்வாக விதியை கூட அரசு ஊழியரின் தவறாக் சித்தரிக்கும் போக்கு தானே நடக்கிறது

இது யாரின் தவறு

--

ஒழுங்காக கடமையை செய்யும் பயணச்சீட்டு பரிசோதகரை பற்றி அவ்தூறாக ஏன் எழுதப்படுகிறது


--

இல்லாத கற்பனைக்குற்றச்சாட்டுகளை அரசு ஊழியர்களின் மீது சுமத்தும் காரணம் என்ன

--

புருனோ Bruno said...

//இதுவல்ல பிரச்சனை.. There is NO ACCOUNTABILITY. தாங்கள் செய்யும் அல்லது செய்யாத பணிக்கு அரசாங்க ஊழியர்களுக்கு பொறுப்பு என்பது சிறிதும் கிடையாது என்பதே என் கருத்து.//

முற்றிலும் தவறான கருத்து

அவர்களுக்கு தனியார் ஊழியர்களை விட accountability அதிகம்

ஆனால் அந்த accountability உங்களது அதீத எதிர்ப்பார்ப்பிற்கு எதிராக உள்ளது தான் பிரச்சனை

உதாரணமாக

நான் மேலே கூறிய புத்தகக்கடை உதாரணத்தில்

அது தனியார் புத்தகக்கடை என்றால் கடை முடிய பின்னர் அந்த கடைப்பணியாளர் ஒரு புத்தகத்தை எடுத்து பில் போட்டு விற்றகலாம்

ஆனால் 5 மணிக்கு பிறகு வங்கியில் ஒரு transaction தன்னிச்சையாக நடக்க முடியாது

// இந்த பொறுப்பின்மை என்பேதே அரசாங்க உழியர்களுக்கு கவசம் போல.. //

இல்லை

பிரச்சனை உங்களது அதீத எதிர்ப்பார்ப்பு தான்

புருனோ Bruno said...

சமீபத்தில் ஒரு பெண்பதிவர் ஒரு பதிவு போட்டிருந்தார்

ஒரு தொடர்வண்டி நிலையத்தில் தொடர்வண்டி கிளம்பும் படத்தை எடுத்து கார்டு தூங்குகிறார் என்று ஒரு அபாண்டத்தை கிளப்பியிருந்தார்

வழக்கம் போல் வயிற்றெரிச்சல் பார்ட்டிகள் அங்கும் சென்று அரசு ஊழியர்களை திட்டி தீர்த்தனர்.

நடைமேதையில் உட்கார்ந்து இருப்பவர் கார்டு அல்ல. கார்டு கடைசி பெட்டியில் இருப்பார். கொடி காட்டியவர் அந்த பணிக்கு உரியவர் என்று நான் சுட்டி காட்டியவுடன் அந்த பதிவு அழிக்க்பட்டது

ஏற்கனவே எழுதிய அபாண்டங்களுக்கு மன்னிப்பு இல்லை என்றால் கூட பரவாயில்லை, ஒரு மறுப்பு கூட இல்லை

இப்படி ஒழுங்காக நடக்கும் சம்பவங்களை கூட குறையாக கூறுவது ஏன் என்று அதியமான் போன்றவர்கள் தான் கூற வேண்டும்

புருனோ Bruno said...

//வேலை போகும் ப‌ய‌ம் இல்லாத‌தால், அர‌சு ஆர‌ம்ப‌ சுகாதார‌ ப‌ணியாள‌ர்க‌ள் ம‌ற்றும் ம‌ருத்துவ‌ர்க‌ள் ஓ.பி அடிக்கின்ற‌ன்ர். ஊழ‌ல் செய்கின்ற‌ன‌ர் என்று ஒரு க‌ருத்து. ச‌ரியா அல்ல‌து த‌வ‌றா ?//

தவறு

ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரின் வேலை நேரம் தெரியுமா உங்களுக்கு... இங்கும் பிரச்சனை உங்களின் அதீத எதிர்பார்ப்பு தான்

ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரு மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர்

இவர்கள் இருவரும் காலை 8 முதல் மாலை 5 வரை பணியில் இருக்க வேண்டும்.

அதன் பிறகு ஒருவர் மாலை 5 மணி முதல் அடுத்த நாள் காலை 8 வரை பணியில் இருந்து விட்டு தொடர்ந்து மாலை 8 மணி வரை களப்பணி செய்ய வேண்டும்

அதாவது

மருத்துவர் 1, மருத்துவர் 2 என்று எடுத்துக்கொண்டால்

மருத்துவர் 1 பணி நேரம் - வாரத்திற்கு 99 மணி நேரம்
திங்கள் காலை 8 முதல் செவ்வாய் மாலை 5 வரை - தொடர்ந்து 33 மணி நேரம்
புதன் காலை 8 முதல் வியாழன் மாலை 5 வரை - தொடர்ந்து 33 மணி நேரம்
வெள்ளி காலை 8 முதல் சனி மாலை 5 வரை - தொடர்ந்து 33 மணி நேரம்
மருத்துவர் 1 பணியில் இல்லாத நேரம் - வாரத்திற்கு - 69 மணி நேரம்
செவ்வாய் மாலை 5 முதல் புதன் காலை 8 வரை - 15 மணி நேரம்
வியாழன் மாலை 5 முதல் வெள்ளி காலை 8 வரை - 15 மணி நேரம்
சனி மாலை 5 முதல் திங்கள் காலை 8 வரை - 39 மணி நேரம்

மருத்துவர் 2 பணி நேரம் - வாரத்திற்கு 123 மணி நேரம்
செவ்வாய் காலை 8 முதல் புதன் மாலை 5 வரை - தொடர்ந்து 33 மணி நேரம்
வியாழன் காலை 8 முதல் வெள்ளி மாலை 5 வரை - தொடர்ந்து 33 மணி நேரம்
சனி காலை 8 முதல் திங்கள் மாலை 5 வரை - தொடர்ந்து 57 மணி நேரம்

மருத்துவர் 2 பணியில் இல்லாத நேரம் - வாரத்திற்கு - 45 மணி நேரம்
திங்கள் மாலை 5 முதல் செவ்வாய் காலை 8 வரை - 15 மணி நேரம்
புதன் மாலை 5 முதல் வியாழன் காலை 8 வரை - 15 மணி நேரம்
வெள்ளி மாலை 5 முதல் சனி காலை 8 வரை - 15 மணி நேரம்

இப்படி பணி செய்ய சொல்லிவிட்டு, மருத்துவமனைக்கு மருத்துவர்கள் வருவதில்லை என்று குற்றம் சொல்ல வேண்டியது தான் !!

பிற மாநிலங்களை ஒப்பிட்டால்
Name of Institutions Duty timings
Kerala 9 am to 1 pm / 2 to 3 pm
Karnataka 9 am to 1 pm/ 2 to 4.30 pm
Central institutions Working hours same as for other central govt. offices
Tamilnadu 8 am to 5 pm (5 pm to 8 am call duty on alternate day)

புருனோ Bruno said...

இதில் ஒரு மருத்துவர் வாரத்திற்கு 123 மணி நேரம் பணி செய்ய வேண்டும்

45 மணி நேரம் தான் அவர் பணியில் இல்லாத நேரம்

--

நீங்கள் வாரத்திற்கு 123 மணிநேரம் பணி, 45 மணி நேரம் ஓய்வு என்று என்றாவது பணிபுரிந்திருக்கிறீர்க்ளா

இதில் பலரால் வாரத்திற்கு 123 மணி நேரம் பணிபுரிய இயலாது. ஆக நீங்கள் செல்லும் போது மருத்துவர் இல்லாமல் இருக்கலாம்

அதற்கு காரணம் என்னவாக இருக்க முடியும்

1. அளவிற்கு அதிகமான வேலை நேரமா

அல்லது நீங்கள் கூறிய
ஓ.பி அடிக்கின்ற‌ன்ர். ஊழ‌ல் செய்கின்ற‌ன‌ர் வகைதானா

--

மனசாட்சியுடன் பதில் கூறுங்கள்