Friday, November 06, 2015

'ஆச்சி' மனோரமா - நகைச்சுவைத் திலகத்தின் வெற்றிடம்


தமிழ்த்திரை போல வேறெந்த திரையுலகிலும் இத்தனை நீண்ட, தொடர்ச்சியான, அதிக எண்ணிக்கையிலான நகைச்சுவை நடிகர்களின் வரிசையில்லை. ஆனால் அதில் பெரும்பான்மையானவர்கள் ஆண் நடிகர்கள்தான் என்பதை கவனிக்க வேண்டும். உலகெங்கிலும் கூட இதுதான் நிலைமை. பெண் நகைச்சுவையாளர்கள் குறைவு. தமிழ்த் திரையில் கூட டி.ஏ மதுரம், சி.டி.ராஜகாந்தம், டி.பி.முத்துலட்சுமி, எம்.சரோஜா, அங்கமுத்து, காந்திமதி, சச்சு, கோவை சரளா போன்று ஒருசில பெயர்களை மட்டுமே சொல்ல முடியும். ஆணாதிக்கம் நிறைந்த உலகில் பெண் சாதனையாளர்கள் அரிதாகவே உருவாகி வர முடியும் என்கிற சமூகவியல் காரணம் ஒன்றுண்டு என்றாலும் பொதுவாக பெண்களுக்கு நகைச்சுவையுணர்வு குறைவு அல்லது இல்லை என்கிற பொதுப்புத்தி சார்ந்த கருத்தை அநாயசமாக உடைத்துப் போட்டவர் நடிகை மனோரமா. இந்த வகையில் இவரின் பங்கு மகத்தானது. பெரும்பாலும் ஆண்மைய சிந்தனையையே சார்ந்து இயங்கும் இந்தச் சமூகத்தில் ஒரு பெண் கலைஞர் தன்னுடைய துறையில் மிக  நீண்ட காலம் இயங்கி நாடகங்களில் துவங்கி பிறகு பல மொழிகளில் சுமார் ஆயிரத்து ஐநூறு திரைப்படங்களுக்கும் மேலாக நடித்து முடித்திருக்கிறார் என்பதில் அவரின் நடிப்பாற்றலையும் தாண்டி சமூகவியல் நோக்கிலும் இது அரிதான ஓர் உலக சாதனை என்பதில் சந்தேகமில்லை.

பொதுவாகவே நகைச்சுவையாளர்களின் தனிப்பட்ட வாழ்வு துயரமும் சோகமும் கொண்டதாக இருக்கும் என்பார்கள். மனோரமாவின் வாழ்வும் இதற்கு விதிவிலக்கல்ல.  சுயநலமான ஆண்களால் வஞ்சிக்கப்பட்ட உலகம் அவருடையது. மனோரமா பத்து மாதக் குழந்தையாக இருந்த போது 'பெண் குழந்தை பிறந்த எரிச்சலில்' அவருடைய தந்தை காசி கிளாக்குடையார் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். மனோரமாவின் தாய் ராமாமிர்தத்தின் தங்கையையே அவர் இரண்டாவதாக மணம் புரிந்தார். தன்னுடைய சொந்த சகோதரியினாலும் கணவனாலும் பல துன்புறுத்தல்களுக்கு ஆளானார் ராமாமிர்தம். தற்கொலை முயற்சியிலிருந்தும் காப்பாற்றப்பட்டார். தாக்குப்பிடிக்க முடியாத அந்தச் சூழலில் குழந்தை மனோரமாவைச் சுமந்து கொண்டு மன்னார்குடியிலிருந்து காரைக்குடியிலுள்ள பள்ளத்தூருக்கு இடம் பெயர்ந்தார். அங்கிருந்த செட்டியார் குடும்பமொன்றில் பணிப்பெண்ணாக பணிபுரிந்தார்.

மிகுந்த வறுமையான சூழ்நிலையில் வளர்ந்தாலும் சிறுவயதிலேயே மனோரமாவிற்குள் இசை குறித்த ஞானம் இயற்கையாக படிந்திருந்தது. ஒரு பாடலைக் கேட்ட மாத்திரத்திலேயே அதை அப்படியே பாடும் திறன் இருந்தது. பள்ளி நிகழ்ச்சியொன்றில் 'பாருக்குள்ளே நல்ல நாடு' எனும் பாரதியின் பாடலை அவரே தன்னிச்சையாக 'காற்றினிலே வரும் கீதம்' எனும் எம்.எஸ் பாடிய பாடலின் மெட்டில் பாடியதை அனைவரும் பாராட்டினர்.  அவருடைய பாட்டுத் திறமை காரணமாக நாடகங்களில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது. வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை தொடர இயலாத சூழலில் சம்பாத்தியத்திற்காக நாடகங்களில் சிறு வேடங்களில் நடிக்கத் துவங்கினார். அதிலும் அவரும் திறமை வெளிப்பட்டு புகழ் கிடைத்தது. மனோரமாவின் அசாத்தியமான திறமையை அறிந்து கொண்ட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவரை தன்னுடைய நாடகக் குழுவில் இணைத்துக் கொண்டார்.

தமிழ் திரையில்  'மாலையிட்ட மங்கை' திரைப்படத்தின் மூலம் நகைச்சுவைப் பாத்திரத்தில் அறிமுகமானார் மனோரமா. கவிஞர் கண்ணதாசனின் மூலம் இந்த அறிமுகம் நிகழ்ந்தது. 'தனக்கு நகைச்சுவை வராது' என்பதற்காகவும் நாயகியாக நடிக்க விரும்பிய காரணத்தினாலும் அவருக்கு நகைச்சுவைப் பாத்திரத்தில்  நடிக்க தயக்கம் இருந்தது. 'நாயகியாக நடித்தால் சில வருடங்கள் மட்டுமே நடிக்க முடியும். நகைச்சுவை நடிகை என்றால் பல ஆண்டுகளுக்கு நடிக்கலாம்' என்கிற கண்ணதாசனின் அறிவுறுத்தலும் வழிகாட்டுதலும் பிற்பாடு உண்மையாகிப் போனது. அதற்குப் பிறகு 'கொஞ்சும் குமரி' உள்ளிட்ட சில படங்களில் மனோரமா நாயகியாக நடித்தாலும் நகைச்சுவை நடிகை என்கிற அடையாளமே அவருக்கு அழுத்தமான அடையாளத்தை உருவாக்கியது.

பல சிரமங்களுக்கிடையில் தன்னை வளர்த்து உருவாக்கிய தாய் ராமாமிர்தம் மீது மனோரமாவிற்கு பெரும் பக்தியே உண்டு. ஆனால் அவருடைய தாயைப் போலவே மனோரமாவின் தனிப்பட்ட வாழ்வும் துயரச் சாயலுடன் அமைந்தது. தன்னுடன் திரைப்படங்களில் நடித்த ராமநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மனோரமா. ஆனால் இந்த இன்ப வாழ்வு குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்து விட்டது. மனோரமாவிற்கு குழந்தை பிறந்த நேரத்தில் ஏற்பட்ட சச்சரவு காரணமாக ராமநாதன் அவரைப் பிரிந்து சென்று விட்டார். வேறு திருமணமும் செய்து கொண்டார். தனக்குப் பிறந்த மகனுடன் அதற்குப் பிறகான தன்னுடைய நீண்ட வாழ்க்கையை தனிமையுடன் எதிர்நீச்சல் போட்டு கடந்து வந்தார் மனோரமா. ராமநாதன் இறந்த சமயத்தில் அவர்களுக்குப் பிள்ளையில்லை என்கிற காரணத்தினால் கணவரின் துரோகத்தையும் மறந்து தன்னுடைய மகனின் மூலம் அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய வைத்ததில் மனோரமாவின் நல்லியல்பை புரிந்து கொள்ள முடிகிறது.

***

கோபிசாந்தா என்கிற இயற்பெயருடைய மனோரமாவின் நீண்ட கலைப்பயணத்தை பொதுவாக இரண்டு பகுதிகளாக காண முடியும்.அறிமுகமான  'மாலையிட்ட மங்கை' துவங்கி மிக நீண்ட காலத்திற்கு விதம் விதமான பல்வேறு பாத்திரங்களில் நகைச்சுவை நடிகையாக நடித்தவர் மனோரமா. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அல்லது வட்டாரத்தை சேர்ந்த கதாபாத்திரமாக நடிக்க நேர்ந்தால் குறுகிய நேரக் கற்றலிலேயே தன்னுடைய உடல் மொழியையும் மாற்றிக் கொள்வதோடு அந்த வட்டார மொழியையும் கச்சிதமாக உச்சரிக்கும் திறமை இயற்கையாகவே மனோரமாவிற்குள் படிந்திருந்தது. தன்னுடைய இளமைப் பருவத்தின் பெரும்பான்மையையும் காரைக்குடி பகுதியில் கழிக்க நேர்ந்ததால் நகரத்தார்களின் வட்டார வழக்கை இவரால் மிகத்திறமையாக பின்பற்ற முடிந்தது. பல நாடகங்கள் முதற்கொண்டு தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் ( 'ஜில் ஜில் ரமாமணி') உள்ளிட்டு வெளிப்பட்ட இந்த பிரத்யேகமான திறமையை பல திரைப்படங்களில் காண முடியும். இந்தத் திறமையின் மூலமாக அன்பாக வழங்கப்பட்டு இவருடன் ஒட்டிக் கொண்ட 'ஆச்சி' என்கிற அடைமொழி இறுதி வரைக்கும் பயணித்தது.

நாகேஷ், சோ, சந்திரபாபு, விகே ராமசாமி, தேங்காய் சீனிவாசன் போன்ற நகைச்சுவை நடிகர்கள் முதற்கொண்டு அடுத்தடுத்த தலைமுறையைச் சார்ந்த ஏறத்தாழ தமிழின் பெரும்பாலான  நடிகர்களுடன் நடித்த சாதனை மனோரமா ஒருவருக்கே இருக்க முடியும். நகைச்சுவைப் பகுதிதானே என்று அலட்சியமாக அல்லாமல் அதிலும் தன்னுடைய அர்ப்பணிப்பையும் குணச்சித்திரத்தோடு கூடிய நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தும் அரிதான திறமையைக் கொண்டிருந்தார் மனோரமா. 'அன்பே வா' திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு சொந்தமான வீட்டை 'அவர்தான் உரிமையாளர்' என்று அறியாமல் அவரிடமே வாடகைக்கு தருவார் நாகேஷ். இந்த உண்மை மனோரமாவிற்கு மட்டுமே தெரியும். ஆனால் இதைச் சொல்ல விடாமல் தடுத்து விடுவார் எம்.ஜி.ஆர். இந்த விஷயங்களை அறியாத நாகேஷ் தன்னுடைய பிரத்யேகமான நகைச்சுவையோடு எம்.ஜி.ஆரிடம் ஆர்ப்பாட்டமாக அதிகாரம் செய்வார். நாகேஷிடம் உண்மையை சொல்லவும் முடியாமல் சொந்த வீட்டிலேயே தன் முதலாளி எதிர்கொள்ளும் ஆர்ப்பாட்டங்களை தாங்கவும் முடியாமல் தத்தளிப்பார் மனோரமா. தன்னுடைய நகைச்சுவை நடிப்பிற்கு இடையில் அதையும் தாண்டி இந்த தத்தளிப்பையும் சங்கடத்தையும்  மிகத் திறமையாக வெளிப்படுத்தும் இயல்பான நடிகையாக விளங்கினார்  மனோரமா. இது போல் பல திரைப்படங்களை உதாரணமாக சொல்ல முடியும். ஏ.பி. நாகராஜன் இயக்கிய கண்காட்சி என்கிற திரைப்படத்தில் ஊமை, ஆங்கிலோ இந்தியன் என ஒன்பது வேடங்களில் நடித்திருக்கிறார்.

மனோரமாவின் இந்த  நீண்ட நகைச்சுவைப் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்ததாக 'உன்னால் முடியும் தம்பி' திரைப்படத்தைச் சொல்லலாம். நகைச்சுவை நடிகையான மனோரமாவிற்குள் இருந்த குணச்சித்திர நடிகையின் அபாரமான திறமை வெளிப்படுமாறு அவரது பாத்திரத்தை அத்திரைப்படத்தில் சிறப்பாக வடிமைத்திருந்தார் பாலச்சந்தர். வாய் பேச இயலாத நாதஸ்வர வித்வானின் மனைவியாகவும் கமல்ஹாசனின்  அன்பான அண்ணியாகவும் தன்னுடைய மாமனார் ஜெமினி கணேசனின் பழமைவாத செயற்பாடுகளை பொறுத்துப் பார்த்து ஒரு கணத்தில் வெடித்து தீர்ப்பவராகவும் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதுவரை பெரும்பாலும் நகைச்சுவை நடிகராக மட்டுமே அறியப்பட்டிருந்த மனோரமா சிறந்த குணச்சித்திர நடிகையாகவும் தமிழ் சினிமா அறிந்தது, இந்தப் படத்திற்குப் பிறகுதான். இதைப் போலவே வசந்த் இயக்கிய 'நீ பாதி நான் பாதி' திரைப்படத்திலும் வித்தியாசமான நடிப்பை வழங்கிய மனோரமாவைப் பார்க்க முடியும்.

தமிழ் திரையுலகின் ஒரு துரதிர்ஷ்டம் என்னவென்றால் ஒரு பாத்திரம் ஒருவருக்கு பொருத்தமாக அமைந்து விட்டால் அல்லது அது வெற்றி பெற்று விட்டால் அதை ஒரு அழுத்தமான முத்திரையாக  அந்த நடிகரின் மீது குத்தி ஏறத்தாழ அனைத்து இயக்குநர்களுமே அதைப் போன்ற பாத்திரத்தையே தொடர்ந்து தருவார்கள். காவல் துறை நபர், அப்பாவி வேலைக்காரர் என்பது போன்று ஒரே பாத்திரத்திலேயே தங்களின் வாழ்நாள் முழுவதையும் கழித்த துணை நடிகர்கள் உண்டு. இதனாலேயே சிறிய வேடங்களில் நடிக்கத் தயங்கும் நடிகர்கள் உண்டு. எனவே இதற்கு முன் பெரும்பாலான திரைப்படங்களில் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்த மனோரமாவை 'உன்னால் முடியும் தம்பி' திரைப்படத்திற்குப் பிறகு பெரும்பாலான நாயகர்களின் அம்மா பாத்திரத்தில் பொருத்தி பொங்கி பொங்கி அழ வைத்தனர். 'அம்மா சென்ட்டிமென்ட் காட்சியா, கூப்பிடு மனோரமாவை' என்றாகி விட்டது. படப்பிடிப்புத் தளத்திற்குள் வரும் முன்னரே அவர் மூக்கைச் சிந்திக் கொண்டே வர வேண்டும் என்றாக்கி விட்டனர். இந்தத் தேய்வழக்கு பயன்பாட்டிற்கு இடையிலும் அவருடைய திறமை தன்னிச்சையாக வெளிப்பட்டுக் கொண்டுதான் இருந்தது. வி.சேகர் என்றொரு குடும்பப்பட இயக்குநர். அவர் படங்களில் வருபவர்களில் எல்லோருமே மிகையுணர்ச்சியோடு கத்திக் கொண்டேயிருப்பார்கள். இவர் இயக்கிய திரைப்படங்களில் ஒன்றான 'நான் பெத்த மகனே' வில் தன் ஒரே மகனின் மீது அதீதமான பாசமும் பொசசிவ்னஸ் குணாதிசயமும் உள்ள தாயாக மனோரமா நடித்திருப்பார். அது வெகுசன திரைப்படம்தான் என்றாலும் அந்த மெலோடிராமாவிற்குள்ளேயும் தன்னுடைய இயல்பான நடிப்பை மனோரமா வெளிப்படுத்தினார்.

நடிகர்களில் பொதுவாக இருவிதமுண்டு. இயக்குநரின் படைப்பாற்றலை பெரிதும் நம்பி தம்மை முழுமையாக அவரிடம் ஒப்புக் கொடுத்து விடும் நடிகர்கள். சம்பந்தப்பட்ட இயக்குநர்கள்தான் இவர்களின் நடிப்பாற்றலை உணர்ந்து அதற்கேற்ப பாத்திரங்களை வடிவமைத்து அந்த உணர்வுகளை, உடல்மொழியை இவர்களிடம் விளக்கி விட்டால் போதும். தம்முடைய பகுதியை இந்த நடிகர்கள் சிறப்பாக அசத்தி விடுவார்கள். இவர்கள் இயக்குநர்களின் செயல்களில் பெரும்பாலும் தலையிட மாட்டார்கள். சிவாஜி போன்றோர் இவ்வகையானவர்கள். இன்னொரு வகையான நடிகர்கள் ஒருநிலையைக் கடந்த பின்னால் தங்களின் பாதையை தாங்களே வடிவமைத்துக் கொள்வார்கள். அதற்கேற்ப கதைகளை, இயக்குநர்களை அமைத்துக் கொள்வார்கள். எம்.ஜி.ஆர், கமல் போன்றவர்கள் இந்தவகையினர்.

மனோரமா முதல் வகையைச் சார்ந்தவர். இயக்குநர் தம்மிடம் என்ன விளக்குகிறாரோ, அவற்றை உள்வாங்கி தமிழ் வெகுசன சினிமாவின் வழக்கமான போக்கிற்கு ஏற்ப திறமையாக வெளிப்படுத்துபவர். மனோரமாவின் முற்கால திரைப்படங்களைக் கவனித்தால் துடுக்குத்தனமான பெண்ணாக, சக நகைச்சுவை ஆண் நடிகர்கள் வழிந்து துரத்த உள்ளுக்குள் மறுகினாலும் அவர்களை கண்டிப்புடன் துரத்துபவராக இருப்பார். பெரும்பாலான திரைப்படங்கள் இப்படித்தான். ஏற்கெனவே குறிப்பிட்டபடி 'அம்மா' நடிகையான பிறகு வழிய வழிய கண்ணீர் சிந்தும் பாத்திரங்கள். இவர் 'பொம்பளை சிவாஜி' என்றழைக்கப்பட்டது ஒருவகையில் சரியானதே. ஏனெனில் சில அரிதான விதிவிலக்குகளைத் தவிர்த்து சிவாஜியைப் போலவே வீணடிக்கப்பட்ட கலைஞர்களில் மனோரமாவும் ஒருவர். மனோரமாவின் பன்முகத் திறமையை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத தமிழ்த்திரை இயக்குநர்களைத்தான் இதற்கு நொந்து கொள்ள வேண்டும். 'திருநங்கை' பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்கிற அவரது நீண்ட கால ஆசை நிறைவேறாமல் நிராசையாகவே முடிந்து விட்டது.

மனோரமா திரையுலகில் புகழ்பெற்ற நடிகையாக நிலைபெற்றுவிட்ட காலத்திலும் நாடகங்களில் நடிப்பதையும் கைவிடாத தொழில்பக்தியைக் கொண்டிருந்தார். பார்வையாளர்களின் உடனடி கைத்தட்டலையும் எதிர்வினையையும் சினிமாவில் சம்பாதிப்பதை விடவும் பெரும் செல்வமாக கருதினார். சில வானொலி, தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்தார். முறையான சங்கீதப் பயிற்சி இல்லாவிட்டாலும் துவக்க காலம் முதலே கேள்வி ஞானத்தின் மூலம் பாடல்களை பாடும் திறமையைக் கொண்டிருந்த மனோரமா தன்னுடைய கணீர் குரலால் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப் பாடல்களையும் பாடியுள்ளார். சென்னை வட்டார வழக்கு மொழியில் இவர் பாடிய 'வா வாத்யாரே வூட்டாண்ட..' எனும் பாடல் அது வெளிவந்த காலத்தில்  மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

மேடை நாடக மரபிலிருந்து திரையுலகிற்கு இடம்பெயர்ந்த கலைஞர்களின் வரிசையில் அதன் கடைசிக் கண்ணிகளில் ஒருவராக இருந்தவர் மனோரமா. தங்களுடைய கலையின் மீது பக்தியும் அர்ப்பணிப்பும் உள்ளவர்கள் 'தங்களின் கலைச் செயலாற்றல் வெளிப்படும் போதே உயிர் பிரிய வேண்டும்' என்று நினைப்பார்கள். மனோரமாவும் அது போன்ற எதிர்பார்ப்பை பல சமயங்களில் வெளிப்படுத்தியிருந்தார். தன்னுடைய இறுதிக்காலம் வரை ஏதோவொரு திரைப்படத்தில் நடிக்கும் அயராத உறுதி அவரிடம் இருந்தது. சமூகத்தின் ஏனைய துறைகளைப் போலவே ஆண்மைய சிந்தனையோடு இயங்கும் திரையுலகில் தன் தனிப்பட்ட துயரங்களையும் மீறி நீண்ட காலத்திற்கு பல நூறு திரைப்படங்களில் நடித்து பெண்  நகைச்சுவை நடிகர்களுக்கெல்லாம் ஒரு முன்னோடி கலைஞராக விளங்கிய அந்த நகைச்சுவைப் பேரரசி ஏற்படுத்திய வெற்றிடமும் சாதனைகளும்  நிரந்தரமாக இருக்கும். 

- உயிர்மை - நவம்பர் 2015-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)


suresh kannan

No comments: