Thursday, April 17, 2014

தங்க மீன்கள் - மிகையின் கலை

ஒரு முன்குறிப்பு:

'தங்கமீன்கள்' திரைப்படம் வெளிவந்த போது அது குறித்து பிரமாதம், சிறந்தபடம், குப்பை, சென்டிமென்ட் அழுகாச்சிபடம், போலியான திரைப்படம் என்கிற விதமான பல்வேறு விமர்சனங்கள் வந்தன. இணையத்தில் சில அறிவுஜீவிகள் தங்களின் வீங்கின மூளையுடன் இத்திரைப்படத்தை தடவிப் பார்த்து உற்சாகமாக தி்ட்டித் தீர்த்தார்கள். பல அபத்தமான கருத்துகள் வெளிப்பட்டன. இந்தநிலையில் இத்திரைப்படத்தைப் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது. சிறந்தபடம் என்று சொல்ல முடியாவிட்டாலும் இத்தனை மூர்க்கத்துடன் புறக்கணிக்கப்பட வேண்டிய திரைப்படமல்ல என்பது மாத்திரம் உறுதியாகத் தெரிந்தது. எனவே இது குறித்து ஃபேஸ்புக்கில் சில குறிப்புகளை தொடர்ந்து எழுதினேன். எனினும் முழுமையாக ஒரு கட்டுரை எழுத விருப்பமிருந்தும் நிறைவேற்ற இயலாமல் போய்க் கொண்டிருந்தது.

நண்பர் சரவணன் (சரோ லமா) 'படப்பெட்டி' இதழிற்காக ஒரு கட்டுரை எழுதித் தரும்படி கேட்டுக் கொண்ட போது அந்த வேண்டுகோள் தந்த உத்வேகத்தில் இத்திரைப்படம் குறித்த ஒரு கட்டுரையை எழுதி அனுப்பினேன். பொதுவாக சிற்றிதழ்கள் பிரத்யேகமாக சந்திக்கக்கூடிய வழக்கமான தடைகள் காரணமாக அந்த இதழ் வெளிவருவது தாமதமாகிக் கொண்டேயிருந்தது. சரவணனிடம் இது குறித்து சமயங்களில் நினைவுறுத்தும் போதெல்லாம் சங்கடத்துடன் பதிலளிப்பார். ஒருவழியாக சில நாட்களுக்கு முன் இதழ் வெளிவந்துவிட்டதாக தெரிவித்திருந்தார். ஆனால் இன்னமும் எனக்கு வந்து சேரவில்லை. இதழ் கைக்கு கிடைத்தவுடன் இந்தக் கட்டுரையை இணையத்தில் பகிரலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தங்கமீன்கள் திரைப்படம் தேசியவிருது பெற்றிருக்கும் இந்தச் சூழலில் இதை வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என தோன்றிற்று. இந்தக் கட்டுரை எழுதப்படுவதற்கு பிரதான காரணம் நண்பர் சரவணன்தான். எனவே அவருக்கு நன்றி. இத்திரைப்படம் குறித்து சில நண்பர்கள் முன்வைத்த எதிர்மறையான விமர்சனங்களின் சில பகுதிகளுக்கு இந்தக் கட்டுரையில் விடைகாண முயன்றிருக்கிறேன். கட்டுரை எழுதப்பட்ட நாள் 18·10·2013.

சிறுமி சாதனா உட்பட விருது பெற்றிருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்.

இனி கட்டுரை:


தங்க மீன்கள் - மிகையின் கலை

இத்திரைப்படத்தைப் பற்றி உரையாடுவதற்கு முன் சிலவற்றை சற்று கறாராக தீர்மானத்துக் கொள்வது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.எந்தவொரு கலைப்படைப்பிலும் அதன் உள் அடுக்குகளில் நிறைய சிறந்த விஷயங்களையும் புத்திசாலித்தனங்களையும் கொண்டிருந்தாலும் அதனுடைய முழுமையான வடிவத்தை சற்று தள்ளி நின்று பார்க்கும் போது தன்னுடைய இலக்கை நோக்கின தெளிவையும் சீரான பயணத்தையும் கொண்டிருக்க வேண்டும். ஒரு திரைப்படத்தின் பார்வையாளனும் அதனுள் இருக்கும் பல சிறந்த விஷயங்களை அப்போதைக்கு உணர்ந்தாலும் படம் உரையாடும் ஒட்டுமொத்தமான தொனி்யைத்தான் ஒரு தொகுப்பாக தன் நினைவில் காலங்கடந்தும் நிறுத்திக் கொண்டிருப்பான்.

அந்த வகையில் தங்கமீன்கள், அதனுடைய முழுமையான வடிவத்தின் தெளிவான பயணத்திலிருந்து விலகியிருக்கிறது. மிகையுணர்ச்சிகள், சில நம்பகத்தன்மையற்ற காட்சிக்கோர்வைகள் போன்றவற்றினால் இந்தப் படைப்பின் கலையமைதி சிதைந்திருக்கிறது. படத்தின் மையம் எதுவென ஒரு தெளிவில்லை. தந்தைக்கும் மகளுக்குமான அன்பா, அல்லது சமகால கல்விமுறை இயங்குவதில் உள்ள அபத்தமா, அல்லது இரண்டிற்கும் இடையிலான தத்தளிப்பா, லாபத்தில் இயங்கும் தனியார் பள்ளிகள் x தன்னிச்சையாக இயங்கும் அரசுப் பள்ளிகளுக்கு  இடையிலான ஒப்பீடா என்று பல குழப்பங்களில்  மூழ்கியிருக்கிறது. போதாதற்கு 'நல்லாசிரியர்களுக்கு சமர்ப்பணம்' என்று எண்ட்கார்டு போட்டு கூடுதல் குழப்பத்தை இயக்குநர் ஏற்படுத்தியிருக்கிறாரோ என்று தோன்றுகிறது.

ஆனால் ஒரு திரைப்படம் ஒரு தொனியைத்தான் அதன் மையமாக கொண்டிருக்க வேண்டும் என்று கறாரான எந்தவொரு விதியுமில்லை. கலை வாழ்க்கையை பிரதிபலிக்க வேண்டும் என்கிற நோக்கில், நம் வாழ்விலும் எத்தனை பிரச்சினைகளின் மையங்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுகின்றன. திரைப்படத்திலும் அது பிரதிபலிக்கலாம். ஆனால் அந்தக் கலவை, அந்தப் படைப்பின் கலையமைதி கெடாமல் கச்சிதமான, உறுத்தலற்ற திரைக்கதையாக திட்டமிட்டிருக்கப்பட வேண்டும். ராமின் திரைப்படம் இதை தவற விட்டிருப்பதாக தோன்றுகிறது.

இந்த இடையூறுகளைத் தாண்டி 'தங்க மீன்களிடம்' ஒரு பார்வையாளன் தன்னை முழுவதுமாக ஒப்படைத்துக் கொண்டால் மிகச் சிறந்த அனுபவத்திற்குள்ளாக முடியும் என்பதில் சந்தேகமில்லை. இதில் துண்டு துண்டாக மிகச் சிறந்த பல தருணங்கள் இருக்கின்றன. கல்யாணி என்கிற கல்யாணசுந்தரத்தின் அசலான வாழ்க்கை இருக்கிறது. உறுதியான இழையால் பிணைந்திருக்கும் தந்தைக்கும் மகளுக்குமான தூய அன்பு இருக்கிறது. வருங்கால தலைமுறையை அதன் எல்லா இயல்புகளையும் சிந்தனைகளையும் துடைத்து விட்டு பொருளீட்ட மாத்தி்ரமே சிந்திககத் தூண்டும், பணத்தை மாத்திரமே துப்பத் தெரிந்த ATM இயந்திரங்களாக மாற்றுகின்ற சமகால கல்வித்துறையின் மீதான விமர்சனம் இருக்கிறது. குடும்பம் என்கிற நிறுவனம் தனிநபர்களுக்கு ஏற்படுத்தும் அழுத்தங்களையும் அதனால் ஏற்படும் உறவுச் சிக்கல்களையும் மனஅழுத்தங்களையும் பற்றி திரைப்படம் உரையாடுகிறது.

***

இயக்குநர் ராமின் முதல் படைப்பான 'கற்றது தமிழ்' திரைப்படம், பால்யத்திலிருந்து தொடரும் காதலை ஓர் இழையாகவும் குழப்பமான கல்விமுறைகளாலும் அரசியல் கொள்கைகளினாலும் சமூகத்தில் ஏற்படும் பொருளாதார சமநிலைமையின்மையை இன்னொரு இழையுமாக கொண்டு பயணத்தி்ருந்தது. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு மொழியுணர்வை ஆயுதமாக படிக்கட்டாக பயன்படுத்திய அரசியல் கட்சிகள், தங்கள் இலக்கை அடைந்தவுடன் கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டன. ஆனால் அந்த உணர்வின் தூண்டுதலால் தமிழை மாத்திரமே அறிந்த தலைமுறை, உலகமயமாக்கத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திகைத்து நிற்கிறது. கொள்கைகளை உருவாக்கினவர்களின் அடுத்த தலைமுறை திரவியம் ஈட்ட டெல்லி வரை செல்லும் செல்வாக்கை பெற, கொள்கைகளை பின்பற்றின அப்பாவிகள் கூடுவாஞ்சேரியைத் தாண்ட முடியாமல் தேங்கிப் போனார்கள்.

அவ்வாறே 'தங்கமீன்கள்' திரைப்படமும் தந்தைxமகள் இடையிலான அன்பும் பாசமும் ஓர் இழையிலும், கல்விக்கூடம் எனும் நிறுவனம் மனப்பாடக் கல்வியை திணித்து சுயசிந்தனைகளை அழித்து குழந்தைகளின் மீது செலுத்துகிற வன்முறையையும் மனஉளைச்சலையும் பற்றி மற்றொரு இழையிலும் உரையாடுகிறது. குடும்பங்களில் உள்ள உறவுச்சிக்கல்கள், ஆதிக்கங்கள், உலகமயமாக்கலின் எதிரொலி நுகர்வுக் கலாச்சாரமாய் நடுத்தரவர்க்கத்தினரின் வாழ்வில் எதிரொலிப்பது போன்றவை கிளை இழைகள்.

***

நாகர்கோவிலின் சிறுநகரத்தில் பாத்திரங்களுக்கு பாலிஷ் போடும் வேலையைச் செய்பவன் கல்யாணசுந்தரம் என்கிற கல்யாணி. பெருநகர் பெயர்ந்து பொருளீட்டுவதை விடவும் தன்னுடைய பாச மகளின் அருகாமையிலேயே இருக்கும் சுதந்திரத்திற்காக நீண்ட வருடங்களாகவே சொற்ப வருமானத்துடனும், சமயங்களில் அது கிடைக்காமலும் அங்கேயே பணிபுரிகிறான். 'சில்வர்மேனாக' தன்னைக் காண மகள் சந்தோஷப்படுவாள் என்பதற்காக பணியின் போது தன் முகத்தில் படும் கெமிக்கல் கறையை துடைக்காமல் அப்படியே பள்ளிக்குச் செல்கிறான். அதற்காக அவனை முட்டாள் என்று பொருள் கொள்ள முடியாது. அவமானத்தை சகிக்க முடியாதனின் பொருட்டு தன்னுடைய தந்தையின் பொருளாதார உதவியை மறுக்கக்கூடிய சுயமரியாதை அவனுக்கு இருக்கிறது. பணத்தை வைத்துக் கொண்டே அலைய வைக்கும் நண்பனிடம் கோபத்தைக் காட்ட முடிகிறது. சிக்கலான சூழலில் வீட்டை விட்டு வெளியேற முடிகிறது. விலையுயர்ந்த நாயை மகள் கேட்கும் போது, அவளிடம் சொல்லி புரிய வைத்து விடலாம்தான் என்றாலும் அவளும் புரிந்து கொள்ளக்கூடியவள்தான் என்றாலும், தன்னுடைய தந்தைமையை அவளிடம் நிரூபிக்க, தனக்கு உடம்பு சரியில்லை என்றவுடன் உதவி செய்ய தானாக வீட்டை விட்டு கிளம்பி விட்ட அவளின் அற்புதமான பாசத்திற்கு கைம்மாறாக தன்னுடைய சக்திக்கு மீறி எங்கெங்கோ பயணம் செய்ய முடிகிறது, எவரெவர் காலிலோ விழ முடிகிறது.

ஒரு கீழை பிரதேச நடுத்தரவர்க்க தகப்பனின் சித்திரம் கல்யாணியின் மூலமாக அதன் விசித்திரங்களோடும் விதிவிலக்குகளோடும் உணர்வுகளோடும் அற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பாத்திரத்தின் பெயரே 'கல்யாணி' என்ற தாய்மையின் அடையாளத்துடன் சித்தரிக்கப் பட்டிருக்கிறது. இவனின் தந்தை, இவன் குழந்தையுடனேயே சுற்றுவதைக் கண்டு 'குழந்தைக்கு எதுக்குடா ரெண்டு அம்மா, பொறுப்பா போய் சம்பாதிக்கறவன்தாண்டா அப்பன்" என்று எரிச்சல்படுகிறார். இயக்குநர் ராம், கல்யாணியாகவே அற்புதமாக உருமாறியிருக்கிறார்.

கல்யாணியின் மனைவியாக நடித்திருக்கும் ஷெல்லி கிஷோர், உதிரிப்பூக்கள் 'அஸ்வினி'யை நினைவுப்படுத்தும் சோகம் இழையோடும் இயல்பான முகத்தைக் கொண்டிருக்கிறார். பொதுவாக பிரபலம் அல்லாத இயக்குநர்கள் நாயகர்களாக நடிக்கும் போது அதை சமன் செய்ய பிரபலமான நாயகியை நடிக்க வைப்பார்கள். வணிக காரணங்களாகக் கூட இருக்கலாம். ராம் அதைச் செய்யாமலிருப்பதே தன் படைப்பின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. 'பணம் இல்லாதது இல்லைங்க பிரச்சினை. பணம் இருக்கற இடத்துல பணம் இல்லாததுதான் பிரச்சினை' என்று மாமனாரின் வீட்டில் அண்டி வாழும் சூழலை மிகச் சரியாக புரி்ந்து கொண்டு அதிகம் சம்பாதிக்காத கணவனுக்கும் குத்திக் காட்டும் மாமியாருக்கும் இடையில் புழுங்கித்தவிக்கும் ஒரு சராசரியான மருமகளின் சித்திரத்தை கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். வீட்டை விட்டு வெளியேறும் கணவன் கோபத்துடன் தன்னை அழைக்கும் போது, கதவைச் சாத்திக் கொண்டு அழுகையுடன் போக மறுப்பது, சிக்கலான சூழலில்பெண்கள் உணர்ச்சிவசப்படாமல் சமயோசிதமாக யதார்த்ததிற்கு ஏற்ற முடிவையே எடுப்பார்கள் என்கிற பிரத்யேக நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் காட்சி சரியாகவே பதிவாகியுள்ளது. கணவன் தன்னை சரியாக புரிந்து கொள்ளவில்லையோ என்கிற கலக்கத்தில் 'நானும செல்லம்மா மாதிரிதாங்க' எனும் காட்சிகள், வீட்டின் உள்அரசியல் தாங்காமல் வெளியே கணவனுக்காக காத்திருந்து வெளியே சென்று உரையாடுவது போன்ற காட்சிகள், மருமகள்களின் துயரங்களின் சாட்சியாக இருக்கின்றன.

திரைப்படத்தி்ன் பிரதான பாத்திரங்களுள் ஒன்றான செல்லம்மா. கல்யாணியின் மகள். சாதனா என்கிற சிறுமி இந்தப் பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். குழந்தைகளுக்கான தேசிய விருது பெறத் தகுதியானவர் என்று தோன்றுகிறது. குமாஸ்தாக்களை உருவாக்குவதற்காக ஆங்கிலேயேர் காலத்தில் உருவாக்கப்பட்ட கல்விமுறையை அதிகம் மாற்றமின்றி இன்னமும் புழக்கத்தில் வைத்திருக்கும் பள்ளிகள், குழந்தைகளின் சுயசிந்தனைகளை அழித்து மனப்பாடக்கல்வியையே பெரிதும் ஊக்குவிக்கின்றன. இதனாலேயே இதில் பின்தங்கியிருக்கும் செல்லம்மா, கற்றல் திறனில் குறையுள்ளவளாக கருதப்படுகிறாள். ஆதிமனிதன் இயற்கையின் மூலமாகவே  பல கற்றல்களையும் புரிதல்களையும் பெற்றான். செல்லம்மாவும் இயற்கையை மிக நுட்பமாக கவனிப்பதின் மூலமாகவே தன் கற்றல் திறனை வளர்க்கிறாள். ஆனால் துரதிர்ஷ்டமாக நடைமுறையில் இது 'கிறுக்குத்தனமாகவே' புரிந்து கொள்ளப்படுகிறது. W -க்கும் M -க்கும் உள்ள வேறுபாட்டை கரடியாக கத்தி கற்றுத் தரும் ஆசிரியையிடமிருந்து புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், இயற்கையின் மூலமாகச் சொல்லித் தரும் தகப்பனிமிருந்து உடனே கற்றுக் கொள்ள முடிகிறது. எனில் குறை எதன் மீது என்பது சமகால கல்வித்துறையை முன்னிட்டு நாம் சிந்திக்க வேண்டிய விஷயம்.

மாவட்ட ஆட்சித் தலைவர் இறந்து போவதால் பள்ளி விடுமுறை அறிவிக்கப்படும் போது கைத்தட்டி மகிழந்து பிறகு தண்டனை பெறும் செல்லம்மா. 'பிறந்த நாள் உடையணிந்து "யாரும் உன்னை இன்னிக்கு திட்டமாட்டாங்க" என்று சொல்லப்படும் போது "அப்ப இதையே ஸ்கூல் யூனிபார்மா வெச்சா நல்லாயிருக்குமில்ல" என்று சொல்லும் செல்லம்மா. 'ஒரு கேள்விக்கு ரெண்டு பதில் சொன்னா பெயில் போடுவாங்க' எனும் செல்லம்மா..இப்படி படம் முழுமையும் பார்க்க நேரும் செல்லம்மாவின் பல காட்சிகளிலிருந்து பள்ளிக்கூடங்கள் சிறைக்கூடங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் அவலத்தையும் இயந்திரத்தனமான கல்விமுறையையும் குழந்தைகளை ரேஸ்குதிரைகளாக மாற்றித்தரும் கல்விக்கூட முதலாளிகள் கொள்ளையடித்துக் கொழுத்துக் கொண்டிருப்பதையும் உணர முடிகிறது. கற்பனையில் தன்னை எவிட்டாவாக உருமாற்றிக் கொண்டு தன் தோழியிடம் செல்லம்மா சொல்லும் கதை ஓர் அழகான குறும்படம்.

சொற்ப நேரமே என்றாலும் எவிட்டா மிஸ்-ஸின் கிளைக்கதை வண்ணநிலவனின் சிறுகதை போல் பூடகமான சோகத்துடன் அற்புதமாக பதிவாகியிருக்கிறது. மற்ற ஆசிரியைகள் செல்லம்மாவிடம் கடுமையாக நடந்து கொள்கிற போது எவிட்டா மிஸ் மாத்திரமே கருணையுடன் நடந்து கொள்கிறார். அதனாலேயே செல்லம்மாவிற்கு எவிட்டா மிஸ்-ஸை மிகவும் பிடித்து விடுகிறது. எவிட்டாவிற்கு திருமணமாகி பள்ளியை விட்டு விலகியவுடன் மகளின் வேண்டுகோளின்படி அவரின் வீட்டிற்குச் செல்கிறான் கல்யாணி. ஆனால் அவர் அங்கு மனைவியை சந்தேகப்படும் ஆணாதிக்க கணவனிடம் சிக்கி அவதிப்படுகிறார் என்பதை வசனங்கள் பெரிதாக ஏதுமின்றி கண நேரத்திலேயே பார்வையாளர்களுக்கு  புரியும் படியாக காட்சியமைத்திருக்கிறார் இயக்குநர். அதற்காக மனிதர்களை கருப்பும் வெள்ளையுமாகவும் சித்தரிக்கவில்லை. அந்தக் கணவன் தனது சந்தேகம் தீர்ந்தவுடன், கல்யாணியிடம் ஆதரவாக தோள் மீது கைபோட்டு பேசுகிறான். இதே போல் இன்னொரு காட்சியில் கல்யாணியின் தங்கை பாத்திரமும். நாயக்குட்டி வாங்குவதற்காக அதிகப் பணத்தை கேட்கும் அவனிடம் தர மறுக்கிற தங்கை, அவன் வாங்கி வரும் சாக்லெட்டுக்காக மகனிடம் சண்டை போட்டு வாங்குகிறார். இயக்குநர் நினைத்திருந்தால் தங்கை பாத்திரத்தை ஒரு வில்லியாகவே சித்தரித்து கல்யாணி பெறப்போகும் அனுதாபத்தைக் கூட்டியிருக்கலாம். ஆனால் அதுவரை பெரிய மனுஷியாக சண்டை போடும் தங்கை, சாக்லெட்டுக்காக சண்டை போடும் போது சிறுகுழந்தையாக மாறி, அந்தப் பாத்திரமே வேறு நிறத்தில் மாறும் அதிசயம் நடக்கிறது.  பூ ராம், ரோகிணி, பூரிக்காக தற்கொலையை தள்ளிப்போடும் சிறுமி நித்யஸ்ரீ  என்று பல துணை பாத்திரங்கள் இத்திரைப்படத்திற்கு உறுதுணையாக நின்றிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாகள் அர்பிந்து சாரா நிலப்பிரதேசங்களின் அழகியலை, காட்சிகளின் உணர்வுகளை சிறப்பாக பதிவாக்கியிருக்கிறார். அறையின் எல்லா ஜன்னல்களையும் அடைத்து விட்டு தேர்விற்காக தயார்செய்ய செல்லம்மா கட்டாயப்படுத்தப்படும் காட்சியில், அறையின் உச்சக்கோணத்தில் இருந்து பதிவாகும் காட்சிகள் அதுவோர் சிறையென்பதை கச்சிதமாக பார்வையாளனுக்கு உணர்த்துவது ஓர் உதாரணம். யுவனின் இசையில் ஆனந்த யாழ் பாடல் உன்னதமான அனுபவத்தைத் தருகிறது. பின்னணி இசையும் பல காட்சிகளில் அதனதன் உணர்வுகளுக்கு பொருத்தமாக பின்தொடர்ந்தாலும், சில காட்சிகளில் குறிப்பாக ராம் கதறியழும் காட்சிகளில், சோகத்தைக் கூட்டுகிறேன் பேர்வழி என்று அதீதமாக ஒலித்து நெருடலை ஏற்படுத்துகிறது.


முன்னரே குறிப்பிட்டபடி இத்திரைப்படம் முழுமையாய் ஒரு சிறந்த அனுபவத்தைத் தரா விட்டாலும் சில நுட்பமான காட்சிகளும் நுண்ணுணர்வுடன் உருவாக்கப்பட்ட சித்திரங்களும் சிறப்பானதாக வெளிப்பட்டு அக்குறையை சமன் செய்கிறது.  ஒரு காட்சியின் பின்னணியிலுள்ள நிலப்பிரதேசத்தின் தன்மையை பார்வையாளனுக்கு கடத்த. உணர்த்த இயக்குநர் மிகவும் மெனக்கெடுகிறார் என்பதாகப் படுகிறது. நாகர்கோவிலின் சிறுநகரமும், மலைகளும், இன்னமும் பெரிதாக கட்டிடங்கள் உருவாகிக் கொண்டிருக்கும் பள்ளியும், கொச்சின் நகரமும் ஆகிய காட்சிகள் இயங்கும் பின்னணிகள், அதன் அழுத்தத்தை பார்வையாளனிடம் வலுவாக செலுத்துகின்றன. பளளிக்கூட கட்டிடம் காட்டப்படும் அதே காட்சியில் பெருத்த சப்தத்துடன் தண்டவாளத்தில் பயணிக்கும் ரயிலின் காட்சி, குழந்தைகளின் கற்பனை உலகை பள்ளிக்கூடங்கள் நசுக்கி மிதித்தொழிக்கின்றன என்பதாகவே உணாத்துகிறது. கல்யாணி தன் நண்பனிடமிருந்து வாங்கப் போகும் கடனுக்காக காத்திருக்கும் வேளையில் அங்குள்ள சிறுவர்கள்.. 'ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்தது' என்று விளையாடுகிறார்கள். அதே சமயத்தில் செல்லம்மா தனது பள்ளியில் ஆங்கிலப்பாடலுக்கு சரியாக ஆடத்தெரியாமல் ஆசிரியயையின் கண்டனத்திற்கு ஆளாகி அவமானப்படுகிறாள். நம் கலாசார வேர்களிடமிருந்து துண்டித்துக் கொண்டு  அயல் கலாசாரத்தின் வேடங்களுக்கு இயங்கப் பழகி விட்டோம் என்பது போன்ற பல நுட்பமான காட்சிகள் இத்திரைப்படத்தை ஒரு சுவாரசியமான அனுபவத்திற்கு உள்ளாக்குகிறது.

***

தமிழ் சினிமாவில் ஏறக்குறைய அனைத்து திரைப்படங்களுமே அதற்கேயுரிய செயற்கைத்தனங்களுடனும் யதார்த்த வாழ்விற்கு அந்நியமாய் இயங்குகிற மிகைகளுடன் வெளிவருகிற போது 'தங்கமீன்கள்' போன்ற அபூர்வமான விதிவிலக்குகளே, தமிழ் சினிமாக்களின் காண்பனுவத்தை அர்த்தபூர்வமாக்குகிறது. இதனுள் உள்ள சில குறைகளையும மீறி சிறந்த படம் எனும் தகுதியை தக்க வைத்துக் கொள்வதே இதன் வெற்றி. ஆனால் இத்திரைப்படத்திற்கான எதிர்வினைகளும் விமர்சனங்களும் அபத்தமான புரிதல்களும், சினிமா எனும் கலையை நுகர்வதில் நாம் எத்தனை பின்தங்கியும் நுண்ணுணர்வு இன்றியும் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. தர்க்கத்தி்ற்கு பொருந்தாததாக சொல்லப்படும் ஏறக்குறைய அனைத்து புகார்களுக்கும் இத்திரைப்படத்திலேயே அதற்கான நியாயங்கள் உள்ளன என்பதை சற்று உன்னிப்பாக பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.

உலகமயமாகத்தின் விளைவாக வேலைவாயப்புகள் பெருகி ஓர் அடிமட்ட தொழிலாளி கூட கணிசமான தொகையை ஊதியமாக பெற்றுவிடக்கூடிய சமகாலத்தில் கல்யாணி ஏன் ஸ்கூல் பீஸ் கூட கட்டமுடியாதவாறு சொற்ப சம்பளத்தில் துயரப்படுகிறான்? எப்போது வேண்டுமானாலும் தன் மகளை பார்க்கக்கூடிய அருகாமைக்காகத்தான் என்று படத்தின் காட்சிகளிலேயே விளக்கப்படுகிறது. குறைந்த சம்பளத்திற்காக கொச்சினுக்கு அவன் பயணப்படுவதற்கான முடிவு கூட மிக நெருக்கடியான சூழலில் வேறு வழியில்லாமல்தான் எடுக்கப்படுகிறது.

தங்க மீனாக மாறுவதாக கனவு காண்பதின் மூலம் தந்தையே குழந்தையிடம் தற்கொலை உணர்வை தூண்டுவதாக இன்னொரு புகார். படத்தின் முதல் காட்சியிலேயே குழந்தைகள் விளையாட்டுக் கற்பனையாக குளத்திலிருக்கும் தங்க மீன்களைப் பற்றி பேசிக் கொள்வதாக காட்சிகள் வருகின்றன. அதைத் தொடர்ந்து செல்லம்மா அதைக் காணச் சென்று குளத்திற்குள் இறங்கி தந்தையால் தடுக்கப்பட்டு விடுகிறாள். பிறகு மரணத்தைப் பற்றி இருவரும் நிகழ்த்தும் உரையாடலில் 'மலைல செத்தா மேகம் ஆயிடுவாங்க.காட்ல செத்தா மரமாயிடுவாங்க..குளத்துல செத்தா தங்கமீனாயிடுவாங்க' என்கிறார் தந்தை. இயற்கையின் மூலம் கற்பித்தலை நிகழ்த்தும் தந்தை, அதன் மூலமே குழந்தையின் கற்பனைத்திறனை ஊக்குவிக்கும் விதமாக நிகழும் இந்த உரையாடல் மிக இயல்பானதாக அமைகிறது. தங்கமீன்களை காண விழையும் மகளின் ஆசையாக அந்த சூழலில் தற்காலிமாக நிறைவேற்ற விரும்பும் ஒரு தகப்பனின் விருப்பமாகவும் இதை உணரலாம். ஆனால் குழந்தையின் அகத்திற்குள் மரணத்தைப் பற்றின சிந்தனைகளை வளர்ப்பது பள்ளிக்கூடம் தரும் மனஅழுத்தம்தான். அவளை முட்டாளாக காணும் சமூகம்தான்.

நாலாயிரம் ரூபாய் சொற்ப சம்பளத்தில் வாட்ச்மேனாக பணிபுரியும் கல்யாணி, ஏன் மகளுக்கு விலையுயாந்த நாய்க்குட்டியை வாங்கித்தர சம்மதித்து அத்தனை சிரமப்படுகிறான்?. 'எங்கோ அலைந்து திரிந்து கொண்டிருக்கும் நாய்க்குட்டியை தகப்பன் பிடித்து வருவான் என்பதாகத்தான் குழந்தை நினைக்கிறது. இதனை இத்தனை அதிகமான விலைக்கு விற்பார்கள், செல்வந்தர்கள் கெளரவத்திற்காக இதை வளர்ப்பார்கள் என்பதெல்லாம் குழந்தைகள் உலகம் அறியாதது. தன் குழந்தைக்காக எதையுமே செய்யாமலிருப்பதாக உணரும் கல்யாணி, தன் உடல்நலக்குறைவை அறிந்தவுடன் தன்னிடம் வருவதற்காக எதையும் யோசிக்காமல் தன் மகள் வீட்டை விட்டு கிளம்பி விட்டதாக அறியும் கல்யாணி, மிகவும் நெகிழ்ச்சியடைந்த நிலையில் அவளின் விருப்பமான நாய்க்குட்டியை எப்பாடு பட்டாவது வாங்கித்தர நினைக்கிறான். அதன் மூலம் தன் பதில் அன்பை நிரூபிக்க முடியும் என உறுதியாக நம்புகிறான். இதற்கான காட்சிகள் படத்திலேயே இருக்கின்றன.

இதன் பின்புலமாக நாம் உணர வேண்டியது, பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் சந்தைப்படுத்தல்களின் தந்திரங்களின் மூலம் வாடிக்கையாளர்களின் ஆழ்மனங்களில் தங்களின் பொருட்களை வாங்கும் விருப்பத்தை பல்வேறு ஊடகங்களின் மூலமாக தொடர்ந்து விதைத்துக் கொண்டேயிருக்கிறார்கள் என்பதுதான். செல்லம்மாவும் நாய்க்குட்டியைப் பற்றி தொலைக்காட்சி விளம்பரத்தின் மூலமாகவே அறிகிறாள். நுகர்வுக்கலாச்சாரத்தின் பலியாடுகளாக நாம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறோம் என்பதை நம் வீட்டை சற்று சுற்றிப் பார்த்து எத்தனை தேவையில்லாத பொருட்களின் மூலம் அடைத்து வைத்திருக்கிறோம் என்பதிலிருந்து உணரலாம்.

கல்யாணி ஏன் மனநிலை பிறழ்ந்தவன் போல் சாலையில் ஒருவரிடமிருந்து லேப்டாப்பை பிடுங்கிக் கொண்டு ஓடி அடிவாங்குகிறான் என்பது போன்ற விதிவிலக்கான காட்சிகளைத் தவிர மற்றவை அனைத்துமே அதனதன் தர்கக ஒழுங்கிற்குள்தான் இயங்குகின்றன. இதனை கல்யாணியாக நாம் உணர்ந்தால்தான் அதைப் புரிந்து கொள்ள முடியும். நம்முடைய செளகரியமான நிலையிலிருந்து அல்ல. ஏன் நாமே சில சிக்கலான நெருக்கடியான தருணங்களில் உணர்வு சார்ந்த முடிவுகளை எடுத்து விட்டு பிறகு நிதானமாக யோசிக்கும் போது அது எத்தனை அபத்தமானதாக இருந்தது என்று பரிசீலனை செய்து கொள்கிறோம். அவ்வாறே கல்யாணியின் வாழ்வை நாம் வெளியிலிருந்து பாாத்து விட்டு முடிவுகளை எடுக்க முடியாது.

கல்யாணியை ஏன் ஒரு முட்டாளாக தன்னிடமிருந்து அந்நியப்படுத்திக் கொண்டு சில பார்வையாளர்கள் உணர்கிறார்கள் என்பதை யூகித்துப் பார்த்தேன். முன்பிருந்ததையும் விட உலகமயமாக்கத்தின் விளைவிற்கு பிறகு எவரையும் எதையும் அதன் பொருளாதார அந்தஸ்தை வைத்தே எடை போடும் பிளாஸ்டிக்தனமான அளவுகோலிற்கு பழக்கப்பட்டிருக்கிறோம்.  இந்த சூழலில் ஒரு  தோல்வியுற்ற மனிதனாக, மகளின் மீதான பாசம் ஒன்றையே பிரதானமாக நினைக்கும் கல்யாணி நமக்கு அறிவற்றவனாகத் தெரிகிறான். நகரத்திற்கு புலம்பெயர்ந்து சம்பாதிக்கத் தெரியாத முட்டாளாகத் தெரிகிறான். அவனது அழுகை நம்மை எரிச்சலூட்டுகிறது. அன்பு, பாசம் போன்ற மெல்லுணர்ச்சிகளை, பொரூளீட்டுவதின் மோகம் நசுக்கி சிதைத்திருக்கிறதோ என்று சந்தேகமாக இருக்கிறது.  'வெளியே போய் பொறுப்பா சம்பாதிக்கறவன்டா அப்பன்' என்று 'நல்லாசிரியர் விருது' பெற்றிருக்கும் தந்தையாலேயே அறிவுறுத்தப்படுகிறான்.

சில குறைகளையும் மீறி தங்கமீன்கள் பார்வையாளகளால் வரவேற்கப்பட வேண்டியதொரு கலைப்படைப்பு என்பதில் சந்தேகமில்லை. இது போன்ற திரைப்படங்கள் வெற்றி பெறுவதன் மூலம்தான் இன்னமும் நல்ல திரைப்படங்கள் வெளிவருவதற்கான வாய்ப்பையும் சூழலையும நம்மால் உண்டாக்க முடியும்.


 suresh kannan

3 comments:

Anonymous said...

இனியாவது விருது வழங்கும் முன்னர் உங்களை போன்றோரின் கருத்துகளை கேட்டபின் விருது வழங்குதல் நலம் ;)

Unknown said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

வெங்கி said...

சுரேஷ் சார்,

நன்றி. சில கேள்விகளுக்கு விடை கிடைத்தது. நானும் கல்யாணிக்கு அந்நியமாகவே உணர்ந்தேன் படம் பார்க்கும்போது. ’ஏதொ குறைகிறதே’ என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நண்பர்கள் கேட்டபோது ‘மிக மிக நல்ல படம்’ என்று சொல்ல முடியாமல் தவித்தேன்; ‘கண்டிப்பாய் பாருங்கள்’ என்று மட்டும் சொன்னேன்.