Sunday, January 20, 2013

புத்தகக் காட்சி - அலெக்ஸ் பாண்டியன்

இந்த முறை புத்தகக் காட்சிக்கு போகத் தோன்றவில்லை. (இப்படி சொல்வதுதான் இப்போது பேஷனோ). என்னவோ ஒரு சலிப்பு. புத்தகம் வாசிப்பதை விட சினிமா பார்ப்பது எளிதாக இருப்பதோ அல்லது கடந்த வருட புத்தகங்கங்களே கன்னி கழியாமல் இருப்பதோ, என்ன காரணமோ தெரியவில்லை. என்றாலும் ஒரு நண்பர் அந்தப் பக்கமாக சென்றதால் கூட சென்றேன். நண்பர் இரண்டு மணி நேர அவகாசம்தான் தந்திருந்தார். ஞாயிறு என்பதால் நல்ல கூட்டம். யாருக்கோ மெளன அஞ்சலி செலுத்தப் போவது போல் ஒரு கிலோ மீட்டர் ஊர்வலமாய்ப் போனால் டிக்கெட் கவுண்ட்டர். ஒருசேர அத்தனை கூட்டத்தையும் புத்தகங்களையும் பார்த்தால் எரிச்சலாக வந்தது. விவாகரத்து செய்ய முடியாத மனைவியைப் போல் தன்னிச்சையாக ஒவ்வொரு ஆண்டும் ஹிண்டு பேப்பருக்கு சப்ஸ்கிரிப்ஷன் கட்டுவது போல சில இதழ்களுக்கு ஆண்டு சந்தா கட்டினேன். கூட்டத்தில் தெரியாமல் ஒருவர் மேல் மோதினதிற்கு முணுமுணுப்பாக கெட்ட வார்த்தையால் திட்டினார். கூப்பிட்டு 'என்னங்க?" என்றதற்கு 'உங்களை இல்லைங்க".

கடகடவென்று அத்தனை கடைகளையும் கடந்தேன். நமக்கு முன்னோடியாக எத்தனையோ அறிஞர்களும் சாதனையாளர்களும் இருக்கிறார்கள். அவர்களின் பாதையில் நடக்க வேண்டுமென்று யார் அறிவுறுத்தினாலும் நாம் கேட்பதில்லை. ஆனால் புத்தகக் காட்சி அதை சாதித்திருக்கிறது.

விகடனில் சுஜாதா மலர் வாங்கலாமா என்று யோசித்து பிறகு வேண்டாம் என முடிவு செய்தேன் (காரணம் தெரியாது). அஞ்ஞாடியை வாங்கலாம்தான். ஊறுகாய் ஜாடி மாதிரி யார் அதை தூக்கி அலைவது?..

சென்னை பிலிம் ஸ்கூல் என்றொரு கடை. என்னவென்று எட்டிப்பார்த்தால் டிஸ்கவரி சேனல் சாயலில் விதவிதமான பறவைகளின் புகைப்படம். "இந்தப் பையன்தாங்க இதையெல்லாம் எடுத்தான்" என்றார் ஒரு பெண்மணி. சுட்டிக்காட்டப்பட்ட பையன் சுட்டி டிவி பார்க்கும் வயசில் இருக்கிறான். நிழல் பதிப்பகத்தில் திடீரென்று சிறு ஆவேசம் வந்து கீழ்கண்ட புத்தகங்களை வாங்கினேன்.

1) தமிழ் சினிமாவின் பரிமாணங்கள் - விட்டல்ராவ்
2) நவீன கன்னட சினிமா - விட்டல்ராவ்
3) சினிமா ரசனை - அம்ஷன் குமார்.

வெளியே வந்து நண்பருடன் KF Strong - உடனும் மதிய உணவாக குஸ்காவுடனும் (கவனிக்க: குஸ்கா) புத்தகக் காட்சி அனுபவம் இனிதே நிறைவடைந்தது.


                                                               ********

அலெக்ஸ் பாண்டியன் பார்த்தேன். இந்தப் படத்தைப் பற்றி நான் எந்தக் குறையும் சொல்லப் போவதி்லலை, ஒரே ஒரு விஷயத்தை தவிர்த்து.

என்னுடைய புகாரெல்லாம் இதை திரையரங்கத்தில் காசு கொடுத்து பார்தத பார்வையாளர்கள் குறித்துதான். குறிப்பாக இந்தப் படத்தை அதிகம் குறை சொல்லி எழுதியவர்கள் அல்லது எழுதாமல் மனதிலேயே புழுங்கினவர்கள். இந்தப் படத்தின் முன்னோட்டங்களை பார்த்தாலே இது ஒரு கீழ்தர மசாலா படங்களில் ஒன்று என்பது நன்றாகவே தெரிகிறது.

எனில் ஏன் முதல் நாளே சென்று காசு கொடுத்து திரையரங்கில் சென்று பார்த்து இந்த மாதிரி மூளையைக் கழற்றி வைத்து பார்த்தாலும் ரசிக்க முடியாத எரிச்சலூட்டுகிற மசாலாப் படங்களை தயாரிக்கும் இயக்குநர்களையும் தயாரிப்பாளர்களையும் அறிந்தோ அறியாமலோ ஊக்குவிக்க வேண்டும்? அவர்களின் மார்க்கெட்டிங் மூளைத் திணிப்புகளுக்கு ஏன் பலியாக வேண்டும்? பின்பு ஏன் புலம்ப வேண்டும்? ஒவ்வொரு மோசமான படத்திற்கும் இது தொடர்ந்து நிகழ்ந்தே வருகிறது. அதனால்தான் சொல்கிறேன். இந்த திரை வியாபாரிகளை குறை சொல்லி உபயோகமில்லை. எது தேவையோ அதை சப்ளை செய்கிறார்கள். அவ்வளவுதான். நுகர்வோரின் தேர்வில்தான் அது அடங்கியிருக்கிறது. நல்ல படம் என்று அறியப்படுபவற்றை (இதற்கான அளவுகோல் அவரவர்களுக்கான அறிவு முதிர்ச்சியில்தான் அடங்கியிருக்கிறது) ஒரு கடமையாகவே திரையரங்கில் சென்று பாருங்கள். சினிமா எனும் ஊடகத்தின் மீதும் அது சமூகத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்தும்  உண்மையாக அக்கறை கொண்டிருப்பவர்கள் கட்டாயம் செய்ய வேண்டியது இது பின்பு புலம்பி உபயோகமில்லை.

அப்படியே இந்த கச்சாடக்களை எல்லாம் பார்த்துத்தான் ஆக வேண்டுமெனில் இரண்டு மூன்று நாட்கள் பொறுங்கள். ஒரளவிற்கு தெளிவான பிரிண்ட்டுகள் உடனேயே வந்து விடுகிறது. அதில் பார்க்கலாம். (குழந்தைகளோடு வீட்டில் பார்க்கிற அபாயம் இதில் இருக்கிறது.). இப்படியாவது நம் உணர்வுகளை இந்த வணிக வியாபாரிகளுக்கு உறைக்க வைக்கலாம்.

அலெக்ஸ் பாண்டியனில் என்னை அதிகம் எரிச்சலூட்டியது ஆக்ஷன் காட்சிகள் கூட இல்லை. எந்தவொரு தர்க்கத்திற்கும் உட்படாத அவையெல்லாம் காமெடிக் காட்சிகளாகவே மக்கள் பார்க்கிறார்கள் என்பது இயக்குநர்களுக்கு தெரிகிறதா இல்லையா என்பது புரியவில்லை. மேலும் நாமும் இவை போன்ற அபத்தங்களுக்கு பழகி விட்டிருக்கிறோம். நான் குறிப்பிட விரும்புவது இத்திரைப்படத்தில் சித்தரிக்கப்படும் so called நகைச்சுவைக் காட்சிகளை. இத்தனை கீழ்தரமான, மலிவான ஆபாச நகைச்சுவையை சமீபத்தில் எந்தவொரு படத்திலும் பார்த்ததாக நினைவில் இல்லை.



suresh kannan

2 comments:

தமிழ்மகன் said...

மீண்டும் "ஜாவா எச்சரிக்கை" - http://mytamilpeople.blogspot.in/2013/01/how-to-disable-java-in-browsers.html

Janaki said...

சமீபகாலமாக உங்கள் பதிவுகளை படிக்க நேர்ந்தது. உங்கள் பதிவுகளை படிக்கையில் பக்கத்தில் இருந்து பேசிக்கொண்டு இருப்பதைப் போன்று உணர்கிறேன். இந்த உணர்வை எற்படுத்தியதர்க்கு நன்றி .