Wednesday, September 29, 2010

குழ்ந்தைகள் நம்மைக் கவனிக்கிறார்கள்

பெரியவர்களான நம்மில் எத்தனை பேர், நாமும் முன்னர் கடந்து வந்த, சமகால குழ்நதைகளின் உலகத்தை கூர்ந்து கவனிக்கிறோம்?. அவர்கள் தங்களுக்குள் விளையாடும் விதத்தை, சண்டையிட்டு உடனேயே சமாதானமாகிற விதத்தை, அவர்களின் குறும்பும் நுண்ணறிவும் பெரிதான களங்கங்களுமல்லாத இயங்குமுறையை நாம் பெரிதும் கவனிப்பதேயில்லை. "சத்தம் போடாம இருக்கமாட்டீங்க?" போன்ற அதட்டல்களே நாம் அவர்களுடன் கொள்ளும் பொதுவான உரையாடல்களாக அமைகின்றன.

மாறாக குழந்தைகள் நம்மை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிய மாட்டோம். கற்பிதங்கள் ஏதும் திணிக்கப்படாத அந்த மூளைகளில் 'ஏன்? எதற்கு? எப்படி?' போன்றவையான அடிப்படைகளில் ஆயிரம் கேள்விகள் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. நீர்க்குமிழ் தோன்றி உடைவதிலிருந்து பாரதமப் பிரதமர் ஏன் டவலை எடுத்து தலையில் சுருட்டி வைத்திருக்கிறார் என்பது வரை எல்லாவற்றிற்கும் அவர்களுக்கு விடை தெரிந்தாக வேண்டும். நாம் பல முறை அவர்களை அலட்சியப்படுத்தும் போது, தற்காலிகமாக அவர்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டாலும்  விடை அறியும் தீரா ஆர்வம் அவர்களை துரத்திக் கொண்டேயிருக்கிறது. 

பெரியவர்களான நமக்குள் ஏற்படும் கோப, குரோதங்களுக்காக நிகழும் சண்டைகளையும், உடலிச்சை சரசங்களையும், புறம் சொல்லுதலையும், சகலவிதமான திருட்டுத்தனங்களையும் சுற்றியுள்ள குழந்தைகள் எங்கே கவனிக்கப் போகிறார்கள், அல்லது கவனித்துதான் அவர்களுக்கு என்ன புரியப் போகிறது என்பதே நம் யூகமாக இருக்கிறது. நம்மைக்காட்டிலும் அதிக நுண்ணுணர்வுள்ள குழந்தைகள் அதைச் சரியாய்ப் புரிந்து கொள்வது மட்டுமல்லாமல் ஞாபகத்திலும் அப்படியே வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களிடம் சாவகாசமாக பொழுதுகளில் நெருங்கி உரையாடும் போதும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

இத்தாலிய நியோ-ரியலிசப் படைப்புகளின் முன்னோடிகளில் ஒருவர் விட்டோரியா டிசி கா. அதுவரை சினிமா உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த முறைமைகளிலிருந்து விலகி படப்பிடிப்புக் கூடங்களின் செயற்கைப்படுத்தப்பட்ட சூழலில் அல்லாமல் இயற்கையான அந்தந்த சூழலிலும் தொழில்முறை நடிகர்கள் அல்லாத நபர்களையும் வைத்து உருவாக்கப்படும் முறை நியோ - ரியலிசப் பாணி என்றழைக்கப்பட்டது. 


டிசிகாவின் 'பைசைக்கிள் தீவ்ஸ்' உலக சினிமா பார்வையாளர்களுக்கு மிகப் பரிச்சயமானது. இந்தப் படத்தைக் காண்பதற்காக நீண்ட ஆண்டுகள் காத்திருந்த நான் அதற்காக இடது கையையும் வெட்டித் தர தயாராய் இருந்தேன். அதற்கான அவசியமில்லாமல் சொற்ப ரூபாய்களிலேயே இதன் குறுந்தகடு கிடைக்குமென்பது பிறகுதான் தெரியவந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இத்தாலியில் ஏற்பட்டிருந்த வறுமையையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும், உள்ளூர்க் கலாச்சாரப் படைப்புகளை ஒதுக்கி அந்த இடத்தில் அமெரிக்கத் திரைப்படங்கள் ஆக்ரமித்துக் கொண்டிருந்த அவலம்.. போன்றவைகளை 'பைசைக்கிள் தீவ்ஸ்' மிகச் சிறப்பாக முன் வைத்தது. 

 

இதற்கும் நான்காண்டுகளுக்கு முன்பு அதாவது 1944-ல் டிசிகா உருவாக்கிய திரைப்படம் The Children Are Watching Us. 

'இந்தக் கட்டிடம் வெறும் சிமெண்ட்டாலும் செங்கற்களாலும் ஆனது. இதை ஒரு வீடாக மாற்றுவது உன் கையிலதான் இருக்கிறது' என்று ஒரு கணவன் தன் புது மனைவியிடம் சொல்வது போல் ஒரு காட்சி மெளனராகம் திரைப்படத்தில் வரும். குடும்பம் என்கிறதொரு நிறுவனம் ஒரு பெண்ணால்தான் முழுமையடைகிறது, அவளால்தான் சிறப்பாக பேணப்படுகிறது, தொடர்ந்து இயங்குகிறது. அவள் அந்த நிறுவனத்திலிருந்து விலகி விட்டால் அது தட்டுத் தடுமாறி பிறகு அமிழ்ந்தே போய்விடுகிறது.

'இப்படியாகச் சொல்லித்தானே எங்களை விலங்கிட்டு வைத்திருக்கிறீர்கள்?' என்பது பெண்ணியவாதிகளின் கூக்குரலாக இருந்தாலும் இதுவே உண்மை. ஒரு ஆணால் இந்த நிறுவனத்தை சிரமப்பட்டாவது விதிவில்க்காக  இயங்க வைத்துவிட முடியுமென்றாலும் ஒருக்காலும் பெண் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தை அவனால் நிரப்ப முடியாது.
 
The Children Are Watching Us திரைப்படம் மேற்சொன்னவைகளை பிரதானமான முன்வைத்து இயங்குகிறது.

நான்கு வயதுச் சிறுவனான பிரிக்கோ, தந்தைக்கும் தாய்க்கும் ஏற்படும் உணர்ச்சிப் போராட்டத்தினால் அலைகழிக்கப்படுகிறான். அவனது தாய் நினா, ராபர்டோ என்பவனைக் காதலிக்கிறாள். அவனுடன் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக தன் குடும்பத்திலிருந்து விலகிச் செல்கிறாள். கணவனான ஆண்டிரியா, இது குறித்து பெருத்த அவமானமும் துன்பமும் அடைகிறான். சிறுவனை பார்த்துக் கொள்வதற்காக உறவினர்களிடம் உதவியை நாடுகிறான். இதனால் அலைக்கழிக்கப்படும் சிறுவனான பிரிக்கோ மிகுந்த காய்ச்சலில் விழுந்து கிடப்பதைக் கேள்விப்பட்டு தாய் திரும்பி வருகிறாள். அவளுடன் இணைந்து வாழ விருப்பமில்லாவிட்டாலும் மகனுக்காக அவளைத் தன்னுடன் இருக்க அனுமதிக்கிறான் கணவன். இப்படியாக சில நாட்கள் கழிகின்றன. தம்பதிகளுக்குள் இயல்பாக நேசம் மலருகிறது. மனைவியை மகிழ்விப்பதற்காக அருகிலுள்ள நகருக்கு சில நாட்களுக்கு இன்பச் சுற்றுலா ஏற்பாடு செய்கிறான் கணவன். ஆனால் அலுவலக விஷயமாக இரண்டொரு நாட்களிலேயே உடனே திரும்ப வேண்டிய சூழ்நிலை. மனைவியையும் மகனையும் சுற்றுலாத் திட்டம் முடிந்த பிறகு வந்தால் போதும் என தான் மாத்திரம் திரும்புகிறான்.

திரும்ப வரப்போகும் மனைவிக்காக வீட்டு அலங்காரங்களைச் செய்துக் கொண்டிருக்கும் அவனுக்கு, தாயால் கைவிடப்பட்டு எங்கெங்கோ அலைக்கழிக்கப்பட்டு எப்படியோ திரும்பி வரும் மகனின் மூலம் அதிர்ச்சி கிடைக்கிறது.

ஆம். அவனது மனைவி மீண்டும் காதலருடன் போய் விடுகிறாள். இம்முறை அவமானம் தாங்காத கணவன் தற்கொலை செய்து கொள்கிறான்.




திரைப்படங்களில் அதுவரை மிகுந்த ஆச்சாரமாக பேணிக் காக்கப்பட்டுக் கொண்டிருந்த 'குடும்பப் பெண்' என்னும் குறியீட்டை அதற்குரிய பிரத்யேக உணர்ச்சி வெளிப்பாடுகளின் மூலம் சித்தரித்து அந்தக் குறியீட்டை உடைத்தெறிந்ததின் மூலம் இந்தப் படம் முக்கியமானதாக உள்ளது.

தங்களின் காதல்களை வெளிப்படையாகச் சொல்லும், மனைவியிடமிருந்து விலகி காதலியை தேடிச் சென்று மனம் திருந்தி மீண்டும் மனைவியிடமே வந்தால் கூட இயல்பாக ஏற்றுக் கொள்ளப்படும் ஆண்களின் உலகத்தில், அதே வகையான உணர்ச்சிகள் பெண்ணுலகத்திலும் இருக்கலாம் என்று சிந்திப்பதையே ஆபத்தானதாக இன்றும் கூட கருதப்படும் சூழலில் 1940-களில் இம்மாதிரியான திரைப்படம் வந்தது நிச்சயம் புரட்சியானதாகத்தானிருக்க வேண்டும். இத்திரைப்படத்தையே அந்த மனைவியின் பார்வையில் இயக்குநர் சித்தரித்தால் நமக்கு இந்த உறவின் இன்னொரு பரிமாணம் தெரிந்திருக்க்கூடும்.

டிசிகா இத்திரைப்படத்தை மிக சுவாரசியமாகவும் லாவகமான காட்சிக் கோர்வைகளின் மூலம் நகர்த்திச் செல்கிறார். பொதுவாக குழந்தைகளை வைத்து படப்பிடிப்பு நடத்துவது கடினமானது. தாம் நினைப்பதை உடனேயே செயல்படுத்தி விடக்கூடிய சுதந்திரமுள்ள குழந்தைகளை ஒரு குறிப்பிட்ட உணர்ச்சி சட்டகத்திற்குள் கட்டுப்படுத்தி இயங்க வைப்பது மிகுந்த பொறுமையைக் கோரக்கூடியது. இதில் பிரிக்கோவாக நடித்திருக்கும் சிறுவன் ஒவ்வொரு பிரேமிலும் மிக இயல்பாக நடித்திருக்கிறான். தந்தையின் அருகாமையிருந்தாலும் தாயின் அரவணைப்பே அவனுக்குத் தேவை என்பதை பல காட்சிகளில் வெளிப்படுத்துகிறான்.

படத்தின் இறுதிக் காட்சி மிக முக்கியமானது. கணவனின் தற்கொலைக்குப் பிறகு மகனைத் தேடி வரும் தாய், அவன் தன்னிடம் வருவான் என்று தீர்மானமாக நம்புகிறாள். இத்தனை துன்பத்திற்கும் காரணம் அவளுடைய காதல்தான் என்பதை தன் நுண்ணறிவால் புரிந்து கொள்ளும் பிரிக்கோ, கண்ணீருடன் தன்னுடைய புறக்கணிப்பையே அவளுக்குத் தண்டனையாகத் தருகிறான். எவர் துணையுமின்றி அவன் தனியாக திரும்பி நடக்கும் சித்திரத்துடன் படம் நிறைகிறது.

'ஒரு துப்பாக்கியை உன் படைப்பில் வர்ணணை செய்திருந்தால் பின்னர் அது நிச்சயம் வெடிக்க வேண்டும்' என்கிறார் ருஷ்ய சிறுகதையாசிரியர்  ஆண்டன் செகாவ். இத்திரைப்படத்திலும் அந்தக் குடும்பம் கட்டிடடத்தின் எட்டாவது மாடியில் தங்கியிருப்பது ஆரம்பக் காட்சியில் சூசகமாக உணர்த்தப்படுகிறது. படத்தின் இறுதியில் கணவன் தற்கொலை செய்து கொண்ட  செய்தி மாத்திரமே உரையாடல்களின் மூலம் நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது. எனில் அத்தற்கொலை எவ்வாறு நிகழ்ந்திருக்க வேண்டும் என்பதை பார்வையாளன்தான் யூகிக்க வேண்டும்.

திரும்பி வந்த மனைவி உண்மையாகவே தன் குடும்பத்துடன் மீண்டும் இணைந்து கொள்ள விரும்புகிறாள். தன்னைத் தேடி வரும் காதலனையும் விரட்டியடிக்கிறாள். ஆனால் அவள் மனம் எவ்வாறு திரும்பவும் மாற நேர்கிறது என்பதை மிக இயல்பான காட்சிகளின் மூலம் சொல்கிறார் இயக்குநர். சுற்றுலா நகரில் கட்டற்ற சுதந்திரத்துடன் இரு ஆண்களுடன் சுற்றும் பெண் இவள் கண்ணில் பட்டுக் கொண்டேயிருக்கிறாள். அதில் ஒருவனும் இவளைத் தொடர்ந்தபடியே இருக்கிறான். அந்தக் குழுமத்துடன் நட்பேற்படும் சூழலும் நிகழ்கிறது. இந்நிலையில் இவளைத் துரத்தி வரும் காதலுனும் அங்கு வந்து சேர இவளுக்குள் பழையகாதல் உணர்வுகள்
சுதந்திரமாக துளிர்க்கின்றன்.

இந்த கணவன்-மனைவி உறவின் விரிசலை மோப்பம் பிடித்தபடியே அலையும் பக்கத்து வீட்டுக்காரி, அந்தக் குடும்பத்தினருக்காக மிக உண்மையாக, ஆத்மார்த்தமாக உழைக்கும் தாதி, காதலனைத் தேடிப் போகும் சகோதரியை ஆதரிக்கும் தங்கை, அவளுடைய வயதான காதலன்...என்று ஒவ்வொரு பாத்திரமும் அதற்குரிய தனித்தன்மைகளுடன் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன்.




இத்திரைப்படம் முழுவதுமே சிறுவனான பிரிக்கோவின் பார்வையிலேயே செல்கிறது. படத்தின் ஆரம்பத்திலேயே, தாய் இவனை விட்டு விலகிச் சென்றிருப்பதை அறியாமல் அந்நியச் சிறுவனோடு தன் சைக்கிளை பகிர்ந்து கொள்வதும்,  தந்தையை புண்படுத்த வேண்டாமே என்று தாயின் பொய்களுக்கு உடந்தையாக இருப்பதும், வீட்டிற்கு வரும் தாயின் காதலனை கையைப் பிடித்து கடித்து துரத்துவதும், சுற்றுலா நகரில் தன்னை விட்டு விட்டு காதலனுடன் சுற்றும் தாயை வெறுத்து தன்னந்தனியாக ஊர் திரும்ப முடிவு செய்வதும் என்று குழந்தைகளின் அகவுணர்வுகள் இவனின் மூலம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

படத்தின் ஒளிப்பதிவு குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது. நுட்பம் வளர்ந்ததின் காரணமாக நாம் இழந்தவைகளில் கறுப்பு -வெள்ளைத் திரைப்படங்களும். அட்சரம் பிசகாத துல்லியமான வண்ணத் திரைகளில் கூட கொண்டு வர முடியாத உணர்ச்சி வெளிப்பாடுகளை கறுப்பு -வெள்ளைச் சட்டகங்கள் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன.

குழந்தைகளின் உலகின் மூலம் பெரியவர்களின் அபத்த உலகைக் காண விரும்புவர்கள் தவற விடக்கூடாத திரைப்படமிது.

suresh kannan

8 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான விமர்சனம்.. கண்டிப்பா பார்க்கணும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல அறிமுகம்.. பகிர்வுக்கு நன்றி சு.க

Deepa said...

அருமையான பகிர்வு. மிக்க நன்றி.

ராம்ஜி_யாஹூ said...

es raa's style of writing cinema review.

இளங்கோ said...

நல்லதொரு படத்தை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி.

Ashok D said...

நாமும் பல விஷயங்களில் நிராகரிக்கப்பட்ட, கனவுகள் சிதைக்கப்பட்ட குழந்தைகளே...

//எவர் துணையுமின்றி அவன் தனியாக திரும்பி நடக்கும் சித்திரத்துடன் படம் நிறைகிறது// தானாக கண்ணீர் துளி எட்டிப்பார்த்துவிட்டது :)

//ஒரு ஆணால் இந்த நிறுவனத்தை சிரமப்பட்டாவது விதிவில்க்காக இயங்க வைத்துவிட முடியுமென்றாலும் ஒருக்காலும் பெண் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தை அவனால் நிரப்ப முடியாது//
நிச்சயமாக முடியாதுதான்... சத்தியமான வரிகள் சுரேஷ் கண்ணன்

நர்சிம் said...

தமிழினியில் இப்படம் குறித்தும் டிசிகா குறித்தும் வந்த கட்டுரை படிக்கும்பொழுதே பார்க்க வேண்டும் போல் இருந்தது.

டிசிகாவின் நியோ ரியலிஸம் குறித்து தெரிந்து கொள்ள ஆசை.

மயிலாடுதுறை சிவா said...

வழக்கம் போல் அருமையான விமர்சனம்,படத்தை பார்க்க தூண்டுகிறது.

நன்றி

மயிலாடுதுறை சிவா....