Thursday, May 14, 2009

"ஏண்டா என் கதைய போடல?"

வடகரை வேலனின் சிறுகதை ஆ.வியின் சென்னைப் பதிப்பில் வராமல் அதற்குப் பதிலாக ஓர் விளம்பரம் வந்திருந்ததை இந்தப் பதிவின் மூலம் அறிந்த போது எனக்குள் பொறி தட்டியது. இதே போன்றதொரு சம்பவத்தை வைத்து நான் முன்னர் மரத்தடி குழுமத்தின் போட்டிக்காக ஓர் சிறுகதையை எழுதியிருந்தேன். தேடிப்பார்த்ததில் மரத்தடி குழுமத்திலேயே கிடைத்தது. இங்கே அதை மீள்பதிவு செய்திருக்கிறேன். படிப்பவர்கள் என் ஆரம்ப கால எழுத்தின் (இப்ப மட்டும் என்ன வாழுது!) அசட்டுத்தனங்களை ஆங்காங்கே உணரலாம்.

ஏற்கெனவே படித்திருந்தவர்கள் இப்படியே கிளம்பவும். புதிதாகப் படிப்பவர்கள் உங்களின் பொன்னான வாக்குகளை... சட். தேர்தல் நேரம்.. கருத்துக்களை பின்னூட்டத்தில் ஆபாசக் கலப்பில்லாமல் சொல்லவும்.

bagvan

வரம்

- சுரேஷ் கண்ணன்

ஆயிற்று. இத்தோடு திரும்பி வந்தது எனது இருபத்தைந்தாவது கதை. அதற்காக நான் எழுதியது வெறும் இருபத்தைந்து கதை மட்டுமே என்று நினைத்து விடாதீர்கள். அது கிட்டத்தட்ட நூறைத் தொடும். என்ன ஆச்சு இந்த பத்திரிகைகாரன்களுக்கு? கண்ட கண்ட குப்பைக் கதைகளை எல்லாம் போடுகின்றவன்கள், நாளைக்கு சர்வதேச புகழை அடையப் போகிற என் கதைகளை மட்டும் தேடியெடுத்து திருப்பியனுப்புகின்றான்களே? என்னுடைய இமாலய பிரச்சினையே இப்போது இதுதான்.

நீங்கள் வேண்டுமானாலும் என் கதைகளை படித்துப் பாருங்கள். நீங்களே ஒத்துக் கொள்வீர்கள், நான் சாகாவரம் பெற்ற கதைகளை எழுதியிருக்கிறேனென்று. உதாரணத்திற்கு என்னுடைய ஒரு கதை இப்படி ஆரம்பிக்கிறது.

'அந்த விபச்சாரி இருளை தன் முன்னோர்களை போல பயபக்தியுடன் நேசித்தாள். ஒரு துவாரம்தான் அவள் பசியாற்றுகிறது என்பதை எண்ணும் போது .....'


என்ன முகத்தை சுளிக்கிறீர்கள்? சர்வதேச தரத்துடைய சிறுகதை என்றால் இப்படித்தானிருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறியாதவர்களா என்ன? என் கதைகளை பிரசுரிக்காத இவர்களை நினைத்தால் ஒருபக்கம் எரிச்சலாகவும் ஒரு பக்கம் பரிதாபமாகவும் இருக்கிறது. எத்தனை நாளைக்குத்தான் சேகர் மாலாவை காதலிப்பது பற்றிய கதைகளை போடுவார்களோ?

இப்படி நான் புலம்பிக் கொண்டிருக்கையில்தான் நண்பன் என்று அவனாக சொல்லிக் கொண்டிருக்கும் சேகர் வந்தான். இவனை மாதிரி ஒரு அல்பையை நான் உலகத்திலேயே பார்த்ததில்லை. ஒரு சம்பவம் மூலம் உங்களுக்கு அதை உணர வைக்கிறேன்.

ஒரு முறை நானும் அவனும் ஒரு உணவகத்திற்கு சென்று உண்டு முடிக்கும் வேளையில் சர்வர் பில் கொண்டு வருவதைப் பார்த்தவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த பூரியை அப்படியே வாயில் அடைத்துக் கொண்டு கை கழுவுமிடத்தை நோக்கி ஓடினான். அப்போதுதான் பில் என் கைக்கு வருமாம். சரி, தொலைந்து போகிறது என்று தொகையைப் பார்த்த எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. நாங்கள் சாப்பிட்டதற்கும் அதிகமான தொகையாக இருந்தது. பிறகு சர்வர் சிலபல பார்சல் பொட்டலங்களை கொண்டு வந்ததும்தான் எனக்கு காரணம் புரிந்தது. இந்த அல்பை தான் மட்டும் ஓசியில் சாப்பிட்டு தொலைக்காமல் தனது குடும்பத்துக்கும் பார்சல் ஆர்டர் செய்திருக்கிறான்.

இப்படியாப்பட்டவன் என்னை இப்போது எரிச்சலூட்டப் போகிற அந்த கேள்வியை கேட்கிறான்.

"என்ன இந்த கதையும் திரும்பி வந்துடுச்சா? நான் ஒரு யோசனை சொல்றேன். கேக்கறியா?"

"உனக்கு ஒண்ணுக்கே ஒழுங்கா போவத் தெரியாது. நீ எனக்கு யோசனை சொல்றியா? சரி. என் நேரம். சொல்லு."

அப்புறம் அவன் சொன்ன யோசனை என் கவனத்தை ஒரளவு கவர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு சாமியார் இருக்கிறார். அவரிடம் போய் ஆசி வாங்கினால் நடக்காத காரியமும் ஒட ஆரம்பித்து விடுமாம். சாமியாருக்கு கட்டுகிற கட்டணம் சற்று அதிகமாக இருந்தாலும் காரியம் கட்டாயம் நடந்து விடுமாம். குழந்தை ஆசை உள்ள ஒரு பெண் அங்கு சென்றவுடன் குழந்தை பாக்கியம் கிட்டியிருக்கிறது, அவளுக்கு திருமணமாகாமலே. அவ்வளவு சக்தி அந்த சாமியாருக்கு. பல வி.ஐ.பி.கள் தங்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படுகின்ற நேரங்களில் எல்லாம் அவரிடம் சென்று ஆசி பெற்று அந்த ஆபத்துக்களை பினாயில் போட்டு கழுவி விடுவார்களாம்.

என்னென்னமோ சொல்லி என்னை சம்மதிக்க வைத்து விட்டான். அந்த சாமியாரைப் பற்றிய விவரங்கள் அடங்கிய ஒரு பளப்பள பிளாம்பெட் ஒன்றை காட்டினான். ஜிக்குஜிக்கா ஜிக்கா என்று பளபளாவென்றிருந்தது. அதை அச்சிடவே ஒன்றிற்கு 50 ரூபாயாக ஆகியிருக்கும் போலிருந்தது.

"அது சரிடா. நான் என்ன குழந்தையா பெத்துக்க ஆசைப்படறேன். என் கதை பிரசுரம் ஆகமாட்டேங்குது. அதுதான் என் பிரச்சினை. இதுக்கு போயா அந்த சாமியார் கிட்ட போகச் சொல்றே?"

"இதப்பார். என்ன பிரச்சினைன்றது முக்கியமில்ல. உன் பிரச்சினை தீருதான்றதுதான் முக்கியம். அது கட்டாயம் தீரும். அதுக்கு நான் கியாரண்டி"

என்று சொல்லிவிட்டு, அவனுக்கு நீண்ட நாட்களாக வேலை கிடைக்காமல் இருந்து சாமியாரின் ஆசிக்கு பிறகு, ஒரு பன்னாட்டுக் கம்பெனியில் வேலை கிடைத்தது எப்படி என்பதை விலாவரியாக சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் கழிவறையை சுத்தம் செய்யும் வேலை என்பதை மட்டும் சொல்லவில்லை. கள்ளப்பயல்.

இந்த யோசனையை பரிசீலிக்க வேண்டுமா என்று என் பகுத்தறிவு ஒருபக்கம் சொன்னாலும், ஒரு கதை வெளியாகிவிட்டாலும் எனக்கு கிடைக்கப் போகிற விருதுகளின் பட்டியல்களை யோசித்துப் பார்க்கும் போது இதை முயற்சி செய்யலாம் என்றுதான் தோன்றிற்று. நானும் எத்தனையோ வழிகளில் முயன்று பார்த்தும் என்னுடைய கதைகள் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கிடைக்காமல் போவதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.

() () ()

ஒரு சுபமுகூர்த்த தினத்தில் நானும் அவனும் அந்த சாமியார் இருக்கிற 'போட்கிளப்' பங்களாக்கு சென்றோம். சென்னையில் இந்த மாதிரி இடங்களும் இருக்கிறதா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சுத்தமாக இருந்த சாலையின் இருபுறமும் மரங்கள் காவலாக இருக்க, சூழலே குளுமையாக, பசுமையாக இருக்க, சட்டென்று ஊட்டியில் இருக்கிறோம் என்று கூட நம்பலாம் போல இருந்தது.

அந்த பங்களாவே மிக்க பணக்காரத்தனத்துடன் இருந்தது. கிரில் கேட்டுக்கே எத்ததை டன் இரும்பு செலவாகியிருக்குமோ என்று பிரமிப்பாக இருந்தது. காவற்காரன் எங்களை, அவன் மனைவியுடன் சந்தோஷமாயிருக்கையில் எழுப்பப்பட்டவன் போல் எரிச்சலுடன் பார்த்து உள்ளே அனுமதித்தான்.

வரவேற்பறையில் இருந்த வரவேற்பாளினியை உடனே காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம் போல் இருந்தது. இவளெல்லாம் சினிமாவில் நடிக்க போகாமல் ஏன் சாமியாருக்கு பேன் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உடன்வந்த அல்பன் சேகரோ, ஓட்டை ஆங்கிலத்தில் பேசி அவளை கவர முயற்சிக்க அவளோ எங்களை துளிகூட சட்டை செய்யாமல் எங்கள் அனுமதிச்சீட்டை வாங்கி பரிசோதித்துவிட்டு ஒட்டவைத்த புன்னகையுடன் உள்ளே அமரச் சொன்னாள். பாதகி.

அந்த சூழ்நிலையில் இருந்த செல்வந்தத்தனம் என்னை அசெளகரியமாக உணரச் செய்தது. விலை உயர்ந்த சாண்டலியர் விலை உயர்ந்த இதமான மஞ்சள் வெளிச்சத்தை பாய்ச்ச, நாங்கள் சோபாவில் பாதி உருவம் உள்ளே அமிழ்ந்திருக்க யாசகத்துக்கு வந்திருப்பவர்கள் போல் பரிதாபமாக அமர்ந்திருந்தோம். எங்களைப் போல சில கவலை முகன்கள் அந்தக் காலை நேரத்திலேயே வந்து காத்திருந்தனர்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து எங்களுக்கு உள்ளே செல்ல அனுமதி கிடைத்தது. உடம்புக்குள்ளே பயப்புறா படபடக்க உள்ளே சென்றேன். உடன்வந்தவன் சமயா சந்தர்ப்பமில்லாமல் அபான வாயுவை வெளியேற்ற சத்தம் அந்த புனித சூழ்நிலையை கெடுக்கிறாற் போல் இருந்தது. நான் சாமியாராக இருந்திருந்தால் அவனை அந்த இடத்திலேயே பஸ்பமாக்கி இருப்பேன்.

அந்த மஹா பெரிய ஹாலில் நுழைந்த போது தோட்டா தரணி போட்ட செட் போல் திகைப்பாயிருந்தது. வெல்வேட் போட்ட ஒரு நாற்காலியில் நட்ட நடுவாக சாமியார் அமர்ந்திருக்க சிஷ்யர்கள் போல் சிலர் பக்தி பரவசத்துடன் நின்றிருந்தனர். அதில் ஒருத்தி ரம்பா ஜாடையில் மேல் உதட்டில் லேசான அரும்பு மீசையுடன் என்னை காதலிக்கிறாற் போல் கிறக்கத்துடன் பார்த்தாள்.

சுவாமிகளுக்கு வயது 50லிருந்து 120க்குள் ஏதோ ஒன்று இருக்கும் போல் இருந்தது. தினமும் தியானம் செய்வார் என்பது அவர் கண்களில் இருந்து தெரிந்தது. எங்கிருந்தோ ஒரு நறுமணம் அறையெங்கும் பரவி இருந்தது. சுவாமிகளின் பெரிய்யயய.. புகைப்படம் தங்க பிரேமிடப்பட்ட பரணீதர சுவாமிகள் என்று கொட்டை எழுத்துக்களுடன். எனக்கு முன்னிருந்த கவலை முகன் கண்ணீருடன் விலக, சுவாமிகள் என்னை வாத்சல்யத்துடன் பார்த்தார்.

"சொல்லுங்க." என்றார் பக்கத்தில் இருந்த ஒரு அஸிஸ்டெண்ட். ஸ்டைபண்ட் பீரியடில் இருக்கிறார் போலும். அதிகம் நேரம் அனுமதிக்க மாட்டார்கள் என்று அவர்களின் பார்வையிலேயே தெரிந்தது.

என்னுடன் வந்தவன் அபத்தமாக ஏதோ ஆரம்பிக்க, அவனை அமர்த்தி விட்டு என்னுடைய பிரச்சினையை தெளிவாக ஆனால் சுருக்கமாக சொன்னேன்.

"நல்லாத்தான் எழுதறேன்னு எனக்கே தெரியுது. படிச்சுப் பாக்கறவங்களும் அடுத்த ஜெயகாந்தன் நீதான்னு பாராட்டறாங்க. ஆனா எந்த பத்திரிகையிலும் போட மாட்டேன்றாங்க. ஏதோ ஒரு சக்தி அவங்கள தடுக்குதுன்னு தெரியுது. நீங்கதான் அத...."

நான் சொல்லி முடிப்பதற்குள் கையமர்த்தி என்னை நிறுத்திய சுவாமிகள் ஒரு சுவாரஸ்யமான புன்னகையுடன் கண்களை மூடினார். இந்த மாதிரி கேஸை இதுவரை பார்த்திருக்க மாட்டார் போலும். சரியாக ஒரு நிமிடம் கழித்து கண்களை திறந்தவர் அவர் உதவியாளருக்கு ஏதோ சைகை காட்டியவர் என்னை அன்னை தெரசா போல் கருணையுடன் பார்த்தார்.

"உங்க பிரச்சினை இன்னும் நாலு வாரத்துக்குள்ள சரியாகிடும்னு சொல்றாரு. சுவாமிகளோட புகைப்படத்த பக்கத்துல வெச்சுக்கிட்டு எழுத ஆரம்பிங்க. நாலு வாரத்துக்குள்ள ஏதாவது ஒரு பத்திரிகைல உங்க கதை வெளியாயிடும்-னு சொல்றாரு. "

'நான் இதை சுவாமியாரே சொல்லட்டுமே' என்று அவரை பலியாடு போல் பார்க்க அவரோ அதே என்னை புன்னகையுடன் போகும்படி சைகை காட்டினார்.

"நம்பிக்கையோடு செய்யுங்க. கண்டிப்பா பலிக்கும்" என்றது உதவி.

ஏதோ ஒரு குழப்பத்துடன் திரும்பிய என்னை உதவி கூப்பிட சுவாமிகள் ஒரு எலுமிச்சம் பழத்தை தூக்கிப் போட்டாற் போல் தர,

"உங்களுக்கு ரொம்ப அதிர்ஷ்டம். சில பேருக்குத்தான் இந்த மாதிரி" என்றது உதவி.

எனக்கு இப்போது குழப்பமெல்லாம் விலகி, பனி மறைந்து சூரியன் தெரிகிறாற் போல் என்னென்னமோ தோன்றியது. உள்ளே ஏதோ ஒன்று உடைந்து சிதறினாற் போலவும், மூக்கு அடைத்துக் கொண்டிருந்தது சட்டென்று சரியானது போலவும் ஏதேதோ தோன்றியது. என்னுடைய கதையில் வருகிற கதாபாத்திரங்கள் எல்லாம் ஒரே சமயத்தில் வந்து வாழ்த்து சொன்னார்கள். வெளியே வந்தோம்.

உடன் வந்தவன் சமயா சந்தர்ப்பமில்லாமல் "போறச்சே உடுப்பி பவன்ல மசால் தோசை சாப்டுட்டு போலாமா?" என்று கேட்க அவனை செருப்பால் அடிக்கிற ஒரு பார்வை பார்த்து விட்டு பிறகு சட்டென்று வந்த சந்தோஷத்துடன், "வாடா பிரியாணியே சாப்பிடலாம்" என்றேன்.

() () ()

பிறகு நடந்ததெல்லாம் ஒரு மாயாஜாலம் போலத்தான் நிகழ்ந்தது. இதுவரை கதை எழுதும் போது வரத்தயங்கிய வர்ணனைகள் எல்லாம் வரிசையில் வந்து என்னை எழுது என்று கெஞ்சின. நான் எழுத நினைத்திருந்ததிலேயே சிறந்த கருவை மிகச்சிறந்த முறையில் எழுதி, என்னை ஒரு முறை அவமானப்படுத்தி வெளியே அனுப்பிய அந்த லட்சக்கணக்கான சர்க்குலேஷன் கொண்ட பத்திரிகைக்கு அனுப்பி வைத்துவிட்டு நகத்தை கடித்துக் கொண்டு காத்திருக்க ஆரம்பித்தேன்.

() () ()

சரியாக இரண்டு வாரம் கழித்து சேகரின் நச்சரிப்பு தாங்காமல் பரங்கிமலை ஜோதி கிளம்ப இருக்கும் போதுதான் அந்த தபால்காரன் வந்தான். ஒரு கணம், கதைதான் திரும்பி வந்து விட்டதோ என்று திக்கென்று ஆகி விட்டது. ஆனால் அவன் கொடுத்தது ஒரு கடிதம். பரபரப்பாகி பிரித்து படிக்க .....

வளர்த்துவானேன்.

என்னுடைய கதை பிரசுரமானதிற்கு தேர்வு செய்யப்பட்ட தகவல் வாழ்த்துக்களுடன் வந்திருந்தது. சுவாமிகள் சொன்னது மாதிரி நாலாவது வாரத்தில் அந்த கதை பிரசுரமாகப் போகிறது. தபால்காரன், நான் தந்த நூறு ரூபாய் நோட்டை பிரமிப்புடன் எடுத்துச் செல்ல சேகரின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தேன். 'என்னடா இது நடு ரோட்ல' என்று கூச்சப்பட்டவனுக்கு இலவச இணைப்பாக பின்பக்கத்தில் ஒரு உதையும் கொடுத்தேன். வீட்டில் சொன்னதற்கு 'எவ்வளவுடா பணம் கொடுப்பாங்க?' என்று கேட்டு என் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டார்கள். அலுவலக நண்பனொருவன் 'நீ எழுதுன கதைதானா?' என்று கேட்க அன்றைக்கு அவனுக்கு வந்த உறவினர் தொலைபேசி அழைப்புக்கு, அவன் இறந்து விட்டான் என்று அழுது கொண்டே சொல்லி, அவனை அலற வைத்தேன். பத்திரிகை அலுவலகத்திற்கு தொலைபேசி கதை பிரசுரமாவதை உறுதி செய்து கொண்டேன்.

() () ()

சுபமுகூர்த்தமான அந்த நாலாவது வாரம்.

விடியற்காலை நாலு மணிக்கே அலாரம் வைத்து எழுந்து வீட்டில் உள்ளவர்களையெல்லாம் எழுப்பி கதை படிக்க ரெடியாகச் சொல்லி, கடைக்காரனை தூக்கத்திலிருந்து எழுப்பி...

போதும் பில்ட்அப். நீங்கள் ஆவலுடன் இவ்வளவு நேரம் எதிர்பார்த்திருந்தாற் போலவே,

*அந்த இதழில் எனது கதை பிரசுரமாகவில்லை.*

யார் வீட்டுக்கோ ஆட்டோவில் போய் மெனக்கெட்டு செருப்படி வாங்கினாற் போல் உணர்ந்தேன். அல்பை சேகரும் சிரித்துக் கொண்டே "என்னடா இன்னிக்கு பார்ட்டி எங்கே?" இளித்துக் கொண்டே வர அவனை ஒரே அப்பு அப்பினேன். ஒரு நிமிடம் என்ன செய்வது செய்வதென்றே புரியவில்லை.

பிரசுரவமாவதாக கண்டிப்பாக சொன்னார்களே. அந்தக் தகவல் கடிதம் வேறு என் மேஜை மீது காற்றில் படபடத்து என் டென்ஷனை எகிற வைத்தது.

() () ()

பத்து மணியானதும் முதல் காரியமாக அந்த பத்திரிகை அலுவலகம் திறக்கும் வரை காத்திருந்து அந்த உதவி ஆசிரியரின் காலரை பிடித்தேன்.

"என்னய்யா கலாட்டா பண்றே?" என்றவரின் முகத்திற்கு நேரே அந்த கடிதத்தை நீட்டினேன்.

"கதைய பப்ளிஷ் பண்றேன்னு சொல்லிட்டு போடாம போனா என்ன அர்த்தம்?"

என் கொலைகார பாவத்துடன் உள்ள முகத்தையும் அந்தக் கடிதத்தையும் மாறிமாறிப் பார்த்தவர் சூழ்நிலையை உணர்ந்து கொண்டவர் போல்

"இப்படி கொஞ்சம் தனியா வாங்க."

"என்னய்யா தனியா வர்றது. இங்கயே சொல்லு."

"இதப்பாரு தம்பி. கடைசி நிமிசத்துல ஒரு மாத்தம் ஆகிப் போச்சு. இது வழக்கமா நடக்கறதில்ல. நீ அனுப்பிச்ச கதை நல்லாத்தான் இருந்தது. நான்தான் செலக்ட் செஞ்சு எடிட்டர் கிட்டயும் அப்ரூவல் வாங்கினேன்."

"அப்புறம் என்னய்யா போடறதுக்கு கேடு?"

"கொஞ்சம் பொறு சொல்றேன். உன் கதைய ரெண்டு பக்கத்துல போடறா மாதிரி கம்போஸ் எல்லாம் பண்ணியாச்சு. ப்ரூப்புக்கும் போயிடுச்சு. அப்பதான் ரெண்டு பக்க விளம்பரம் ஒண்ணு வந்திருக்கிறதா விளம்பர டிபார்ட்மெண்ட்ல இருந்து சொன்னாங்க. கேஷா வேற கட்டிட்டாங்க. எடிட்டரும் இந்தக் கதைய அப்புறம் போடலாம்னு சொல்லி இந்த விளம்பரத்த போடச் சொல்லிட்டாங்க. கடைசி நிமிஷத்துல ஆயிட்டதால உனக்கு தகவலும் அனுப்ப முடியல. நீ நம்பலன்னா இந்த விளம்பரத்தையும் உன் கதை ப்ரூப்பையும் பாரு. அதே பேஜ் நம்பரு."

என் கதையை பிரசுரம் ஆகாமல் தடுத்த அந்த விளம்பரத்தை கோபமும் விரக்தியுமாய் புரட்டிப் பார்த்தேன்.

இரண்டு பக்க வண்ண ஆசிரம விளம்பரத்தில் ஆசிரம படம் சின்னதாக இருக்க, பெரிதான புன்னகையுடன் மந்தகாசமாக பெரிய அளவில் சிரித்துக் கொண்டிருந்தார் பரணீதர சுவாமிகள்.

suresh kannan

18 comments:

Vishnu - விஷ்ணு said...

நல்லா இருக்குங்க

Suresh said...

மிக நன்றாக உள்ளது .... நிங்க சொன்ன மாதிரி அசட்டுத்தனங்களை காணமுடியவில்லை

சரவணகுமரன் said...

ஹா ஹா ஹா

Indian said...

கத பரவாயில்லை. ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டியது.

//காவற்காரன் எங்களை, அவன் மனைவியுடன் சந்தோஷமாயிருக்கையில் எழுப்பப்பட்டவன் போல் எரிச்சலுடன் பார்த்து உள்ளே அனுமதித்தான்.
//


இதைப் படித்ததும் எனக்கு இரா.முருகனின் கீழ்கண்ட வாக்கியம்தான் நினைவுக்கு வந்தது.

'மெய்மறக்க வைக்கும் பாட்டுக்கு நடுவே சதா பேசுவது பாகிஸ்தானில் வழக்கம் போல இருக்கிறது. தொடவேண்டும் உச்சத்தை என்று கணவனும் மனைவியும் அந்தரங்கமாகும் நேரத்தில் “இந்த மாசம் எலக்ட்ரிசிட்டி பில் கட்டியாச்சா?” என்று விசாரிக்கிறது போன்ற தொந்தரவான சமாச்சாரம் இல்லியோ இது.

பிரதீப் said...

சுரேஷ்,

இந்த வாரத்தில் விகடனில் வந்த பல கதைகளை விட இது நன்றாகவே இருக்கிறது.

Øஅன்றைக்கு அவனுக்கு வந்த உறவினர் தொலைபேசி அழைப்புக்கு, அவன் இறந்து விட்டான் என்று அழுது கொண்டே சொல்லி, அவனை அலற வைத்தேன்Ø

இது தானே நீங்க சொன்ன அசட்டுத்தனம்?

Cable சங்கர் said...

அருமையான கதை.. தலைவரே..

பரிசல்காரன் said...

சுறுசுறுப்பான நடை. ஆங்காங்கே எள்ளல்கள் பிரமாதம்.

லக்கிலுக் said...

கதையை விடுங்க. அது வழக்கம்போல தான். நீங்க Blur பண்ணி போட்டிருக்கும் இமேஜில் இருப்பது யார் என்பதை என் காதில் மட்டுமாவது சொல்லுங்க :-)

தீப்பெட்டி said...

கதை நல்லாயிருந்துச்சு பாஸ்..

Good citizen said...

கதை சூப்பர் சரெ,

சுஜாதா தனமான குறும்புககள் அருமை.
(காட்டான சல்பட்டாவு ஏற்ற செல்வம் ஊறுகாய்,செம சோக்கு)

Muruganandan M.K. said...

நன்றாக இருக்கிறது உங்கள் பார்வையும் எழுத்தும்

anujanya said...

ரொம்ப நல்லா இருக்கு சுரேஷ். கதை முழுதும் ஊடுருவிய ஹாஸ்யம். Life imitates art என்பது எவ்வளவு உண்மை !

அனுஜன்யா

சுரேகா.. said...

நல்லா இருக்கு சார்!
இடைப்பட்ட வர்ணனைகளும், நக்கல்களும் யதார்த்தமாக, உங்க திறமையின் உச்சத்தை சொல்லுது..இதுக்கு மேலயும் இன்னும் சிறப்பா இப்ப எழுதுறீங்கன்னா...

அடேயப்பா.. !

கலக்குங்க!

உண்மைத்தமிழன் said...

அண்ணே..

நாலு தடவை படிச்சும் அந்த அசட்டுத்தனம் என் கண்ணுல படவே இல்லைண்ணேன்..!

என்னே ஒரு அடக்கம்..!

iniyavan said...

அற்புதமான கதை. நல்ல நடை.
ரொம்ப ரசிச்சு படிச்சேன். சில இடங்களில் சிரிச்சேன்.

நல்லா ரசனையுடன் எழுதறீங்க.

தொடர்ந்து, இங்கேயும், பத்திரிக்கைகளிலும் எழுதுங்க பாஸ்.

ராஜவம்சம் said...

'அந்த விபச்சாரி இருளை தன் முன்னோர்களை போல பயபக்தியுடன் நேசித்தாள். ஒரு துவாரம்தான் அவள் பசியாற்றுகிறது என்பதை எண்ணும் போது .....'

உண்மையில் உலகதரம் வாய்தவய்

வாழவந்தான் said...

//
கருத்துக்களை பின்னூட்டத்தில் ஆபாசக் கலப்பில்லாமல் சொல்லவும்.
//
சொன்னது நீதானா? சொல்.. சொல்..

முதல் கதையே கதை எழுதருத பத்தியா? நல்லாத்தான் இருக்கு 'என் ஆரம்ப கால எழுத்தின் (இப்ப மட்டும் என்ன வாழுது!) அசட்டுத்தனங்களை' இப்படி எதுவும் தெரியலை. ஒருவேளை இந்த சிற்றறிவுக்கு அவ்ளோதான் எட்டுதோ என்னவோ

Unknown said...

ஆமா இது போன வருஷம் எழுதி இருக்கீங்க... அப்போ உங்களோட inspiration சமீபத்தவர் இல்லையா??