Friday, April 25, 2008

ஜெயமோகன் - இளையராஜா விருது விழா

இளையராஜா இலக்கியப் பெருமன்றத்தின் பாவலர் விருது விழா, சரியாக என்றால் மிகச் சரியாக மாலை 04.00 மணிக்கு விழா ஆரம்பித்து விட்டது போலிருக்கிறது. வெயில் பட்டையைக் கிளப்பும் இப்போதைய பருவத்தில் 04.00 மணிக்கு இலக்கியக் கூட்டம் நடத்தும் யோசனை வந்த அமைப்பாளர்களை ஹோமோ கொரில்லா இருக்கிற கூண்டுக்குள் அடைத்துவிடலாம் என்றிருக்கிறது. பின்னே? அத்தனை வெயில்.

'ஆரிய பவன்' என்றால் எளிதாக கண்டுபிடிக்கலாம். தெற்கு மாட வீதியில் கோக்குமாக்காக ஒளிந்து கொண்டிருந்த 'பாரதிய வித்யா பவனை', நான் அலுவலகத்து நுகத்தடியிலிருந்து விடுபட்டு கண்டுபிடித்து போவதற்குள் மணி ஐந்தாகி விட்டிருந்தது.

இந்த மாதிரி கூட்டத்திற்கெல்லாம் பிரியாணி பொட்டலம் தந்து லாரியில் அழைத்து வந்தால்தானே அரங்கு நிறையும் என்று அலட்சியத்துடன் உள்ளே நுழைந்தவனை ஆச்சரியப்படுத்தியது உள்ளே அமர்ந்திருந்த பெரும் கூட்டம். "வாங்க சார்" என்று பாசத்தோடு அழைத்த முரட்டு மீசைக்காரர் உடம்பெல்லாம் அன்பாக தடவி உள்ளே அனுப்பி வைத்தார். (அப்துல்கலாம்!) அப்போதுதான் பாரதிராஜா பேசி முடித்திருந்தார். அவர் என்ன பேசியிருப்பார் என்பதை எளிதாக யூகித்துவிடலாம். "இந்த ராசைய்யா... என் நண்பன், is a genius. ஒரு கொட்டாங்குச்சியில கம்பிய கட்டிக்கிட்டு ... இன்னிக்கு எங்கியோ போயிட்டான்.. பார்க்கவே பிரமிப்பா இருக்கு....marvellous...

இளையராஜா பேசும்போது "என் சொந்தப்பணத்தில் இந்த அமைப்பை நிறுவி படைப்பாளிகளை, கலைஞர்களை தேடி கெளரவித்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் உயர்ந்த கருத்துக்களை எழுத வேண்டும் என்று சொல்ல எனக்கு தகுதியோ, அருகதையோ கிடையாது. அவர்களுக்கே தெரியும்" என்றார்.

அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட ஜெயகாந்தன் மிருதுவாகவே பேசினார். காலம் அவரை கனிய வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அவருக்கு ஞானபீட விருது வழங்கப்பட்ட சமயத்தில் ராணி சீதை ஹாலில் நடத்தப்பட்ட பாராட்டு விழா, நடிகர்களின் ரசிகர்மன்ற விழாக்களை நினைவுப்படுத்துவதாகவே எனக்குத் தோன்றிற்று. "என்னுடைய கோபத்தை கண்டு நானே அஞ்சிய காலம் உண்டு. பிறர்களிடமும் நிறைய கோபப்பட்டிருக்கிறேன். ஆனால் அதையெல்லாம் மீறி என் மீது நிஜமாகவே அன்பு செலுத்துபவர்களைக் காணும் போது நானும் பதிலுக்கு அன்பு செலுத்தலாம் என்று தோன்றுகிறது. அப்துல்கலாம் பேச்சை கேட்பதற்காக என்னுடைய பேச்சை நேரம் கருதி முடித்துக் கொள்கிறேன்." என்று பேசிவிட்டு தளர்வாக சென்று அமர்ந்து கொண்டார்.

அப்துல் கலாம் பேசும் போது தான் சிறுவயதில் படித்த ஜெயகாந்தனின் 'அக்ரஹாரத்துப் பூனை' என்கிற சிறுகதையை நினைவு கூர்ந்து, அதில் வரும் சிறுவன் கதாபாத்திரத்தின் மூலம் உயிர்வதை கூடாது என்பதை அப்போதே உணர்ந்ததாக கூறினார். காலையில் வெளியிடப்பட்ட ஜெயகாந்தன் குறித்த ஆவணப்படத்தையும் பாராட்டிப் பேசினார். (இயக்கம் : ரவி சுப்பிரமணியன், ஒளிப்பதிவு: செழியன், இசை: இளையராஜா) ஜெயகாந்தனின் கவிதை (?) ஒன்றை படித்து கூட்டத்தினரையும் மறுபடி சொல்ல வைத்தார். (மேடையில் இருந்தவர்களில் பொதிகை தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் நடராஜனைத்தவிர வேறு யாரும் சொல்லவில்லை என்பதே நான் கவனித்தது). :-)

பரிசு வாங்கியவர்களின் ஏற்புரை இதற்கு முன்னரே நிகழ்ந்திருக்க வேண்டும் என்றே யூகிக்கிறேன். நல்ல வேளையாக நல்லியும், நடராஜனும் பேசிய பின்னரே நான் சென்றது ஒரு அதிர்ஷ்டமான நிகழ்வு. (இருவரும் கலந்து கொண்ட விழாக்களை எண்ணிக்கையைக் கொண்டு கின்னஸ¥க்கு விண்ணப்பிக்கலாம்). எதனாலோ தாமதமாக ஏற்புரை வழங்க வந்த முனைவர் ம.ரா.பொ.குப்புசாமி பேசத் துவங்கியுடன், பிட்டு முடிந்தவுடன் கிளம்புகிற பரங்கிமலை ஜோதி தியேட்டர் பார்வையாளர்கள் போல் பெரும்பாலானோர் கிளம்பத் துவங்கினர். (தமிழர்களுக்கு நிறைய விஷயங்களில் விவஸ்தை கிடையாது. இதுவும் அதிலொன்று).

ஜெயமோகன் தன்னுடைய ஏற்புரையில் என்ன கூறினார் என்று தெரியவில்லை. அவரின் இணையத்தளத்தில் இதை வெளியிடுவார் என்று நினைக்கிறேன். 'எழுத்தாளர்கள் சிறப்பான பேச்சாளர்கள் அல்ல' என்பது பொதுவானதொரு கருத்து. (சுஜாதா திக்கித்திக்கி பேசுவதை கவனித்திருக்கிறீர்களா) ஜெயமோகனும் இதற்கு விதிவிலக்கல்ல. சுந்தரராமசாமி மறைவையொட்டி நடைபெற்ற நூல்வெளியீட்டு விழாவில் ஜெயமோகன் தாம் எழுதிக் கொண்டு வந்திருந்ததை நீண்ட நேரம் பேசிய (வாசிக்கும்?) போது வந்த நிறைய கொட்டாவிகளை சிரமப்பட்டு அடக்கிக் கொள்ள வேண்டியிருந்தது.

()

'பாலம்' கலியாணசுந்தரம் (இந்த அற்புதமான மனிதரை எத்தனை பேருக்குத் தெரியும்) தங்களுடைய இதழான, ஜெயகாந்தனின் பவளவிழா சிறப்பிதழாக வெளிவந்திருக்கிற 'பாலம்' இதழை விழாவில் அனைவருக்கும் புன்னகையுடன் இலவசமாக வழங்கிக் கொண்டிருந்தார். இதற்கும் கூட்டம் முண்டியடித்தது. (இன்னொரு விவஸ்தை).

ஜெயகாந்தன் குறித்த ஆவணப்படம் காலையில் வெளியிட்டு திரையிடப்பட்டதாக தெரிகிறது. இம்மாதிரி இதுவரை வந்திருக்கும் எழுத்தாளர்கள் குறித்த ஆவணப்படங்களில் நான் பார்த்தது அசோகமித்திரனது மாத்திரமே. (இயக்கம் : சா.கந்தசாமி) மா.அரங்கநாதன் குறித்து வந்திருக்கும் ஆவணப்படத்தை கேள்விப்பட்டதோடு சரி. (இதையும் ரவி சுப்பிரமணியம்தான் இயக்கினார் என்று கேள்வி).

இம்மாதிரியான படங்களை மேல்தட்டு மக்களுக்காகவும், விழாக்களில் ஒளிபரப்பவும் என்று இல்லாமல் குறைந்த விலையில் குறுந்தகடுகளாக அடித்தட்டு மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே என் அவா.

()

வெளியில் ஜெயகாந்தனுடையதும் இளையராஜா எழுதின நூற்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இளையராஜாவின் நூற்கள் சிலதை படித்திருக்கிறேன். அவர் சிறப்பாக இசையமைப்பதோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம் என்று தோன்ற வைத்தவை அவை. என்றாலும் ஒரு அமைப்பை நிறுவி சிறந்த படைப்பாளிகளை அடையாளம் கண்டு விருதுகள் வழங்கும் விஷயம் நிச்சயம் பாராட்ப்பட வேண்டியது. அதிலும், முத்தமிழ் காவலர், தமிழின் தந்தை என்றெல்லாம் அலங்கார வார்த்தைகளால் வர்ணிக்கப்படும் கருணாநிதியை "இலக்கியவாதி அல்ல" என்று வெளிப்படையாக, காட்டமாக கருத்து தெரிவித்த ஜெயமோகனுக்கு சிறந்த படைப்பாளருக்கான பரிசை (கருணாநிதி முதலமைச்சராக இருக்கும் கட்டத்தில்) வழங்குவதும் மிகவும் பாராட்டப்பட வேண்டியதுதான்.

()

விழாவில் சகவலைபதிவர் ஹரன் பிரசன்னா, பி.கே.சிவகுமார், நிர்மலா, மதுமிதா போன்றவர்களோடு 'எண்ணமும் எழுத்தும்' நண்பர்களிடமும் ஒரிரு வார்த்தைகள் பேச முடிந்தது. சிவகுமார் அறிமுகப்படுத்தினதில் பி.ச.குப்புசாமி என்கிற ஜெயகாந்தனின் சமகாலத்து எழுத்தாளருடன் பேச முடிந்தது. (வார்த்தை இதழில் வெளிவந்த இவரின் சிறப்பான கட்டுரையை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன்.)

கொல்கத்தாவோடு ஒப்பிடும் போது சென்னை நகரின் சூழல் தம்மை அதிகம் எழுத வைக்கவில்லை என்கிறார் நிர்மலா. (ஏன் அப்படி?)

விழா முடிந்து ரயில் நிலையத்திற்கு விரையும் போது சிறந்த இளம் படைப்பாளிக்கான விருதைப் பெற்ற கவிஞர் (?) இளம்பிறை வியர்வை வடிய நடந்து செல்வதை கவனிக்க முடிந்தது.

suresh kannan

Saturday, April 19, 2008

பெண் குழந்தை..... இருவர்....... மாம்பழம்....

இன்று காலை செய்தித் தாள்களில் படித்தவொரு செய்தி என்னை மிகவும் பாதித்தது. சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் இரண்டு பெண்மணிகளுக்கு குறைந்த கால இடைவெளியில் ஆண் குழந்தை ஒன்றும் பெண் குழந்தை ஒன்றுமாக பிறந்தன. குழந்தைகள் அந்தந்த தாயாரிடம் ஒப்படைக்ப்பட்டன. ஆனால் இரவு ரவுண்ட்ஸ் வந்த மருத்துவர்கள் குழந்தைகள் மாற்றி ஒப்படைக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்து சம்பந்தப்பட்ட பெற்றோர்களிடம் பேசி குழந்தைகளை மாற்றி பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் இரண்டு தரப்பினருமே ஆண் குழந்தைதான் தங்களுடையது என்று வாதிட்டு தகராறு செய்ததில்.. இப்போது மரபணு சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது வரைக்குமான வழக்கமான செய்தியில் விசேஷமாக ஒன்றுமில்லை. அரசாங்க மருத்துவமனைகளிலிருந்து சிகிச்சை முடிந்து உயிரோடு வருவதே ஒரு சாதனைதான். அரசு மருத்துவமனைகளின் மீது வழக்கமான கூறப்படும் சம்பிரதாயமான குறையாக இதை கூறவில்லை. சுய அனுபவத்திலிருந்தே கூறுகிறேன். ஏறக்குறைய 1970-களில் சுஜாதா எழுதிய 'நகரம்' சிறுகதையில் சித்தரிக்கப்படும் சம்பவங்களை இன்னும் கூட சீரமைக்காமல் தொடர்ந்து தக்க வைத்திருப்பதில் அரசு மருத்துவமனைகளின் சாதனை மகத்தானது.

என்னை பாதித்தது, இன்னொரு குழந்தையான 'பெண் குழந்தையை' இரண்டு தரப்பினருமே வேண்டாம் என்று ஒதுக்கி விட்டதுதான். எப்படியும் இரண்டு பெண்மணிகளுள் ஏதோ ஒருவரின் குழந்தைதான் அந்த மழலை. ஆனால் அதை உணராமல் ஏதோ லாட்டரிச் சீட்டு பணத்திற்கு சண்டையிடுவதைப் போல ஆண் குழந்தைக்கு போட்டியிடுவது, நம்முடைய சமூகக் கட்டமைப்பில் இன்னும் ஆணுடைய இடம் உயர்ந்த ஆதிக்க நிலையில் பொருத்தப்பட்டுள்ளதையே பிரதிபலிக்கிறது. ஏறக்குறைய பெரும்பாலான துறைகளில் ஆண்களுக்கு நிகராகவும் மேலாகவும் பெண்கள் உயர்ந்து கொண்டு வரும் இன்றைய சூழ்நிலையிலும் இவ்வாறான பிற்போக்கு மனப்பான்மை வருத்தத்தையே ஏற்படுத்துகிறது. எங்களின் இரண்டாவது மகள் பிறந்த போது, பெரும்பாலான உறவினர்களும் நண்பர்களும் ஏதோ துக்கம் விசாரிப்பதைப் போல ('ரெண்டுமே பொண்ணாயிடுச்சே') எங்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்த முயன்றனர். நல்ல வேளையாக அந்த வலைக்குள் நாங்கள் சிக்கிக் கொள்ளவில்லை.

தன்னுடைய ஜாதியையும் மதத்தையும் உயர்த்தி வைத்தும் பெருமை அடித்தும், பிற மதத்தினரை வெறுப்பாகவும், இழிவாகவும் பேசும்/எண்ணும் நபர்களிடம் நான் எப்போதும் கேட்க விரும்புகிற கேள்வி இதுதான்.

யாரை நீங்கள் வெறுப்புடன் நோக்குகிறீர்களோ, அந்த பிரிவில்தான் (மேற்சொன்ன சம்பவம் மாதிரியாக) நீங்கள் பிறந்தீர்கள் என்று பிற்பாடு தெரியவந்தால் எப்படி உணர்வீர்கள்?

Photobucket

நேற்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'இருவர்' திரைப்படத்தை சாவகாசமாக பார்க்க நேர்ந்தது.

தேசிய நீரோட்டத்தில் கலப்பதற்கு முன்பான மணிரத்னத்தின் யோக்கியமான முயற்சிகளில் இதை ஒன்றாக நான் கருதுகிறேன். தமிழ்த் திரைப்படங்களின் கதை சொல்லும் முறையில், திரைக்கதையில் ஒரு பெரும் மாற்றத்தை, பாய்ச்சலை (தமிழ் உரைநடையில் சுஜாதா செய்ததைப் போல) உருவாக்கியவர் மணிரத்னம். சென்ற தலைமுறையினர் தங்களின் சமகால நிகழ்வுகளாகவும் இன்றைய தலைமுறையினர் வெறும் வரலாற்றுச் சம்பவங்களாக மட்டும் அறிந்ததை சுவாரசியமாக காட்சிப்படுத்தியுள்ளார் மணி. இந்தத் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறாததின் காரணங்களை எளிதாக யூகிக்க முடியவில்லை. படத்தின் டாக்குமெண்டரித்தனத்தாலா அல்லது தங்களுக்கு நெருக்கமான அறிந்த வரலாற்றை திரையில் வேறு பா¡க்க வேண்டுமா என்கிற அலட்சியமா அல்லது காட்சிப்படுத்துதலுடன் உடன்படாததா என்பது ஆராயப்பட வேண்டியது.

பிரதானமாக எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதி என்கிற ஆளுமைகளின் (பிற்பாடு ஜெயலலிதா) கலைப்பயணமும் அரசியல் பயணமும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைச் சம்பவங்களுடன் இணைத்து முறையே 'ஆனந்தன்' ஆகவும் 'தமிழ்ச்செல்வம்' ஆகவும் புனைவு ரீதியான பாவனையில் நேர்கோடுகளாக சொல்லப்படுகிறது. நிஜத்தில் மலையாளியான எம்.ஜி.ஆருக்காக மலையாளத்திலிருந்தே மோகன்லாலையும், தமிழரான கருணாநிதி பாத்திரத்திற்கு கர்நாடகத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜூம், ஜெயலலிதாவிற்காக வடக்கிலிருந்து ஐஷ்வர்யா ராவையும் இயக்குநர் பொருத்திப்பார்த்திருப்பது ஒரு சுவாரசியம். (பாரதி திரைப்படத்தில் பாரதியாக நடிப்பதற்கு மஹாராஷ்டிரத்திலிருந்து வரவழைக்கப்பட்ட ஷாயாஜி ஷிண்டேவையும் இங்கே நினைவு கூர வேண்டும்.) நிற்க.... சம்பந்தப்பட்ட ஆளுமைக்கு சம்பந்தப்பட்ட நிலப்பிரதேசத்திலிருந்துதான் நடிகர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற குறுகிய பார்வையில் இதை கூறவில்லை. தமிழ் நடிகர்கள் யாரும் இதற்கு பொருத்தமில்லாமற் போனார்களா என்பதையும் அல்லது நடிக்க மறுத்தார்கள் என்றால் அதன் காரணங்களையும், மாற்றாக எந்த தமிழ் நடிகர்கள் இன்னும் பொருத்தமாக இருந்திருப்பார்கள் என்றும் யோசித்தால் சுவாரசியமான சித்திரம் ஒன்று கிடைக்கும் என்று தோன்றுகிறது.

ஆனால் மோகன்லாலும், பிரகாஷ்ராஜூம், ஐஷ்வர்யாவும் தங்களுடைய பாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். அதிலும் மோகன்லாலும் பிரகாஷ¥ம் நடிப்பில் ஒருவரோடு ஒருவர் பலத்த போட்டியிடுகிறார்கள். பிரகாஷ¥க்கு அவரின் ஆரம்பத்திலேயே இந்த மாதிரியான ஒரு பாத்திரம் கிடைத்திருப்பது பெரும் அதிர்ஷ்டம்தான். இந்தப்படத்தில் உதவி இயக்குநராக இருந்த பிரியாவை பிரகாஷ் அவ்வப்போது தொடர்பு கொண்டு 'சம்பந்தப்பட்ட பாத்திரத்திற்கு தான் தேர்வாகிவிட்டோமா' என்று பதைபதைப்புடன் கேட்டுக் கொண்டே இருந்தாராம்.

லாலேட்டனின் மலையாளப் படங்களை நான் பார்த்ததில்லை. ஆனால் இந்தப்படத்தில் அவர் எம்.ஜி.ஆர் பாத்திரத்திற்கு தோற்றத்திலும் உடல் மொழியிலும் மிகவும் நெருக்கமாக பொருந்தியிருக்கிறார். (ஒரு காட்சியில் அரசியல் கூட்டத்திற்கு மேடைக்கு செல்ல படிக்கட்டுகளில் ஏறக்குறைய ஓடுகிறார்). கதாநாயகனாக தான் நடித்துக் கொண்டிருந்த படம் நின்று போனதை அறிந்தவுடனும் பிற்பாடு கான்ஸ்டபிள் போன்ற சிறிய வேடங்களில் நடிக்க நேருகின்ற போது அடைகின்ற துயரத்தையும் மிகவும் அற்புதமான நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார். பின்னர் அவர் பெரிய நடிகராக வளர்ந்து அரசியலில் நுழைந்த பின்னால் செல்வத்திற்கும் அவருக்கும் மெள்ள மெள்ள ஏற்படுகிற முரண்களும் உரசல்களுமாக அந்த love & hate உறவு மிகவும் நுண்ணியமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

எம்.ஜி.ஆரின் சிறப்பம்சமாக ஒன்று சொல்வார்கள். வீட்டிற்கு வருகிற யாரைப்பார்த்தாலும் அவருடைய முதல் கேள்வி "சாப்பிட்டீர்களா" என்பது. இளமையில் வறுமையை அதிலும் பசியை முழுவதுமாக ருசித்தவர்களுக்குத்தான் இவ்வாறாக யோசிக்கத் தோன்றும். இந்த அம்சத்தை சில காட்சிளில் இயக்குநர் சரியாக பொருத்தியிருக்கிறார். ஒரு காட்சி வருகிறது. தன்னுடைய படம் நின்று போன வேதனையான செய்தியை சொல்ல ஆனந்தன் செல்வத்தை நோக்கி ஓடிவருகிறான். ஆனால் அவனோ அப்போதுதான் ஆரம்பிக்கப்பட்ட கட்சியின் புளகாங்கிதத்தில் கேட்கிறான் "உனக்கு அரசியல் முக்கியமா, சினிமா முக்கியமா"?. ஆனந்தன் அடிவயிற்றிலிருந்து கத்துகிறான். "உனக்கென்ன, அப்பாவுக்கு கவர்ண்மெண்ட் உத்தியோகம், மூணு வேள சாப்பாட்டுக்கும் கவலையில்ல. எப்பவாவது நாலு நாளா சாப்பிடாம இருந்திருக்கியா, உங்க அம்மாவ கடன்காரங்க அவமானப்படுத்தினத பாத்து அழுதிருக்கியா?"...

பிரகாஷ்ராஜ் இந்தப்படத்தின் இன்னுமொரு அற்புதம். இந்தமாதிரி திறமையான நடிகர்களை இன்னும் விதவிதமான வில்லன் பாத்திரங்களுக்கு உபயோகித்துக் கொண்டிருப்பது தமிழ் சினிமாவின் சாபக்கேடுகளில் ஒன்று. தமிழர்களே வெட்கப்படும் படியாக மொழியை அவ்வளவு அழகாக உச்சரிக்கிறார். ஆனந்தனை 'நடிகன்தானே' என்று முதலில் அலட்சியாக நினைத்திருப்பதும் கட்சிக்குள் இணைந்தபிறகு அவனின் பிரும்மாண்ட வளர்ச்சியை கண்டு குமைவதும், பின்பு வெளிப்படையாகவே தன்னுடைய வெறுப்பை முன்வைப்பதும், தேர்தலில் தோற்றதை அமைதியான அழுத்தத்துடன் ஏற்றுக் கொள்ளவதும் ஆனந்தன் இறந்தபிறகு அத்தனையும் வடிந்து போய் ஆரம்ப நட்புக்காலத்தை எண்ணி கலங்குவதுமாக.... மனிதர் அசாத்தியமான உயரத்தைத் தொட்டிருக்கிறார். தேர்தலில் தோற்றுப் போன சமயத்தில் ஒரு திருமண மண்டபத்தில் அமர்ந்திருக்கும் போது சம்பிரதாயமான ஆர்ப்பாட்டங்களுடன் முதலைமச்சராக வருகிற ஆனந்தனை அடிபட்ட பார்வையுடன் பார்ப்பதான ஒரு காட்சியே அற்புதமான உதாரணம்.

ஆனந்தன் சினிமாவில் பிரபலமான புதிதில் செல்வம் அவனை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கிறான் மாபெரும் கூட்டம் அவனைக் காண நின்று கொண்டிருக்கிறது. திகைத்து நிற்கும் ஆனந்தனின் கையை உயர்த்திப்பிடிக்கிறான் செல்வம். "பாரு பாரு. எவ்வளவு பெரிய மனித சக்தி. லெனின், ஹிட்லர், ஸ்டாலின் போன்றவங்கள்லாம் கஷ்டப்பட்டு சேர்த்த விஷயம். இதை வெச்சு நீ என்ன செய்யப் போற" (ஆனால் காலம்காலமாக, நிஜத்தில் நடிகர்கள் தங்களுக்கு கிடைத்திருக்கும் ஆயுதத்தின் கூர்மையை உணராமல் கட்அவுட்டுகளுக்கு பால் ஊற்ற ஆட்டு மந்தைகள் மாதிரி பயன்படுத்திக் கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானதொரு விஷயம்.)

ஐஷ்வர்யா ராய் தன்னுடைய ஆரம்ப காலத்திலேயே இவ்வளவு சிறப்பாக நடித்திருப்பது பெரும் ஆச்சரியம். ஆனந்தனின் முதல் மனைவியாக பாந்தமாக அமைதியாக வரும் புஷ்பாவைவிட அதிரடியான பிடிவாதமாக வரும் நடிகை காஞ்சனாதான் அட்டகாசம். ஆனந்தனின் இறந்து போன மனைவியின் சாயலில் இருப்பதை அவர் வாயிலிருந்தே பிடுங்கி "அப்ப என்னையும் காதலிப்பீங்களோ" என்று அவரை திகைக்க வைப்பதும் அரசியல் கூட்டத்தில் உற்சாகமாக கையசைப்பதும் என அச்சு அசலாக ஜெயேதான்.

கெளதமி, தபு, ரேவதி, நாசர், ராஜேஷ்... போன்றோர் பொருத்தமான பாத்திரங்களில் பொருத்தப்பட்டிருக்கின்றனர்.

பழைய சாதத்தை குளிர்பதனப் பெட்டியிலிருந்து எடுத்து சாப்பிட்டது போல் அந்தக்கால மெட்டுக்களில் நவீன இசையை உறுத்தாமல் கலந்து பிரமாதப்படுத்தியிருக்கிறார் ரஹ்மான். ஆனந்தன் கூட்டத்தில் கேள்வி எழுப்பும் காட்சி, செல்வத்தின் இரண்டாவது மனைவி அவரின் மனச்சாட்சியை நோக்கி எழுப்பும் காட்சிகள் உட்பட சில சர்ச்சைக்குரிய வசனங்கள் (இயக்குநரின் சொற்படி) ஆர்ப்பாட்டமான பின்னணி இசையின் மூலம் மழுப்பப்பட்டிருக்கிறது. "பூங்கொடியின் புன்னகை" என்கிற சந்தியா பாடின பாடல் என்னுடைய விருப்பத்தேர்வில் நிரந்தர இடம் பெற்றதொன்று. ... நீ ஒரு முறை திரும்பிக் கொண்டால் என் உயிருக்கு உறுதியில்லை'... என்று வைரமுத்து தன் பாடல்களின் மூலம் நுண்மையான உணர்வுகளை உலுக்கியெடுத்தியிருக்கிறார். மனிதரை சுதந்திரமாக விட்டால் போதும்...ஜமாய்த்து விடுகிறார். சிலரை பிரபலங்கள் என்கிற காரணத்தினாலேயே முன்தீர்மான காழ்ப்புணர்ச்சியுடன் அணுகுவது அபத்தமானது. சங்ககால செய்யுள்களின் சாயல் கொண்ட 'நறுமுகையே' அற்புதத்தை, பட்டிமன்றங்களில் வைரமுத்துவை திட்டும் போது வசதியாக மறந்துவிடுகின்றனர்.

()

தொலைக்காட்சி விளம்பரங்கள் சில சமயங்களில் மறைமுகமாகவும் சில சமயங்களில் நேரடியாகவும் சொல்லும் செய்திகள் எரிச்சலையும் கோபத்தை ஏற்படுத்துகிறது. கறுப்பாக இருப்பவர்களின் மனங்களில் தாழ்வுணர்ச்சியை ஊட்டி சிவப்பழகு க்ரீம்களை விற்பது ஒருபுறமும், இயற்கையாக உடலில் ஏற்படுகிற வியர்வையை ஏதோ எயிட்ஸ் நோய் வந்தவனைப் போல் சித்தரிப்பதும் ஒருபுறம் இருக்கட்டும்.

உலகிலேயே எனக்கு பிடித்தமான விஷயங்களுள் பிரதானமானது மாம்பழம். ஆனால் சிறுவயதில் அம்மா அரிந்து கொடுக்கும் போது கொட்டைக்காக சகோதரர்களாகிய நாங்கள் சண்டை போடுவோம், நீண்ட நேரத்திற்கு சுவைக்கலாம் என்கிற அற்ப காரணத்திற்காக. ஒரு முறை பள்ளியிலிருந்து பசியோடு வீடு திரும்பிய போது யாரோ உறவினர் அனுப்பி வைத்திருந்த கூடை மாம்பழத்தில் சுமார் 12 மாம்பழங்களை ஒரே நேரத்தில் உள்ளே தள்ளி பிற்பாடு அடி வாங்கினேன். இப்போதும் கூட துண்டு துண்டாக வெட்டி சாப்பிடுவதெல்லாம் பிடிக்காது. பங்கனபள்ளி என்றால் மாம்பழத்தின் மேற்பகுதியை கடித்து ஒரு துளையிட்டுக் கொள்வது... பின்பு அந்த துளையில் வாயை வழித்து சக்தியை திரட்டி உறிஞ்சுவது... முழங்கையில் வழியும் சாற்றை நாகரிகம் பார்க்காமல் சுவைப்பது...பழத்தைப் பிளந்து பகுதிபகுதியாக தோல் வரைக்கும் பல்லால் சுரண்டுவது... கொட்டைக்கு மாத்திரம் கால் மணி நேரம் செலவழிப்பது.. என்று ஏறக்குறைய கற்கால மனிதன் போல்தான் சாப்பிடுவேன்.

ஆனால் தொலைக்காட்சி விளம்பரங்களில் என்ன செய்கிறார்கள்.. இயற்கையான மாம்பழம் என்கிற சமாச்சாரத்தையே இளைய மனங்களில் இருந்து அழித்து அவர்கள் பாட்டில்களில் செயற்கையாக அடைத்து விற்கும் பழரசங்கள்தான் உண்மையான மாம்பழம் என்கிற மாதிரி பொய்யான தோற்றத்தை நம்பும்படி காட்சிப்படுத்துகின்றனர். இரண்டு வருடத்திற்கு முன்பு வரை 'சிவாஜி' என்றவுடன் தமிழக மனங்களில் ஒரு மாபெரும் ஆளுமையின் உருவம் வருவது தடுக்கப்பட்டு தற்போது அதற்கு மாற்றாக ஒரு பிரம்மாண்ட குப்பைப்படம் ' நினைவுக்கு வருகிற, ஷங்கர் செய்த வரலாற்று மோசடி மாதிரி நிகழ்த்தப்படும் இம்மாதிரியான விஷயங்கள் உடனே தடுக்கப்பட வேண்டும்.

suresh kannan

Thursday, April 17, 2008

பெண் (நறுமண) வாசனையும் அல்பசினோவும்

இந்தப் பதிவு முழுவதும் அல்பசினோவின் புகழைப் பாடப் போகிறோனோ என்று என் மீது எனக்கே பயமாக இருக்கிறது. அந்தளவிற்கு இந்தப் படம் முழுவதும் (Scent of a Woman) ஒரு eccentric blindman பாத்திரத்தை மிகத் திறமையாகவும் அதே சமயத்தில் அநாயசமாகவும் வாரி இறைத்து விஸ்வரூபமெடுத்திருக்கிறார் Alpacino. நம் தமிழ்த் திரைப்படங்களில் கண்பார்வையற்ற பாத்திரம் என்றால்........... ஒரு கறுப்புக் கண்ணாடியை மாட்டிக் கொண்டும் கையில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டும் .. கேனக்கூ... த்தனமாக (நன்றி சத்யராஜ்) நடிப்பார்கள். நான் கவனித்ததில் ஒரளவிற்கு இதை சிறப்பாக செய்தவர்கள்.. ராஜபார்வையில் 'கமல்ஹாசனும்' அமர்க்களத்தில் 'சார்லியும்'. (காசியில் விக்ரம் செய்தது ஒரு gimmics). அல்பசினோ இந்தப்படத்தில் இயல்பாக நடிக்க வேண்டி கண்பார்வையற்ற மாணவர் ஒருவரை கூர்மையாக அவதானித்தும் பிரத்யேக contact lens அணிந்தும் வெற்றிகரமாக தன்னுடைய பாத்திரத்தை நிறுவியிருக்கிறார். கண்பார்வையற்றவர்களுக்கு காது, மூக்கு, விரல்கள் ...எல்லாமே கண்கள்தான். தன்னுடைய பிரத்யேக அந்தரங்க உலகை இவற்றின் மூலமாகத்தான் தரிசிக்கின்றனர். விமானப் பணிப்பெண்ணின் பெயரை சரியாக அல்பசினோ யூகிக்கும் போது, கூட இருக்கும் சார்லி வியப்படைகிறான். "எப்படி அவள் பெயரை சரியாக கூறினீர்கள்?" 'அவள் உபயோகிக்கும் நறுமணத்தின் பிராண்ட் (Floris) அவளின் கலிபோர்னியா உச்சரிப்பு .. இவற்றின் மூலம் என்னும் அல்பசினோ தொடர்ச்சியாக பெண்களை வர்ணிக்கத் தொடங்கி இப்படியாக முடிக்கிறார்.... "there's only two syllables in this whole wide world worth hearing: pussy."

Photobucket

சார்லி சிம்ஸ் (Chris O'Donnell) அந்த நகரத்தின் உயர்தரமான பள்ளியில் ஸ்காலர்ஷிப்பில் படித்துக் கொண்டிருக்கும் ஓர் ஏழை மாணவன். விடுமுறையில் தன்னுயை ஊருக்குச் செல்ல பணம் சேர்க்க வேண்டி வாரஇறுதி விடுமுறையில் ஓரிடத்தில் வேலைக்குச் செல்கிறான். அந்தக்குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஊருக்குச் செல்லவிருப்பதால் தனிமையாக இருக்கும் அந்த நபரை அவர்கள் வரும்வரை சார்லி கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது மாதிரியான ஏற்பாடு. அந்த நபர்தான், அமெரிக்க ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற, குடிகாரரான, எப்போது கோபம் வரும் என்று தெரியாத சிடுமூஞ்சியான, சார் என்று அழைக்கப்படுவதை விரும்பாத... ·பிராங்க் ஸ்லேட். (Alpacino). அறிமுகத்திலேயே மிரண்டு போகும் சார்லி இந்த வேலை தன்னால் ஆகாது என்கிறான். குடும்பத்தார் அவனை கெஞ்சி, வற்புறுத்தி தலையில் கட்டிவிட்டு கிளம்பி விடுகின்றனர்.

அவர்கள் அந்தப்பக்கம் சென்றதும் "சார்லி வாடா போகலாம் நியூயார்க்கிற்கு" என்று திகைத்து நிற்கிற அவனை இழுத்துக் கொண்டு செல்கிறார் அல்பசினோ. விமானத்தில்தான் மேற்சொன்ன அந்த உரையாடல் நிகழ்கிறது. தான் கண்பார்வையற்றவன் என்பது உணரப்படக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கும் அல்பசினோவை (என் கையை பிடிக்காதே.. தேவையென்றால் நான் உன்னை பிடித்துக் கொள்கிறேன்). ஒருவாறு சமாளிக்கிறான் சார்லி. அங்குள்ள உயர்தரமான ஹோட்டல் ஒன்றில் அறையெடுக்கும் அல்பசினோ, உணவகத்தில் தான் நியூயார்க் வந்திருப்பதின் திட்டத்தை சொல்கிறார். நல்ல ஹோட்டல்... நல்ல உணவு... புணர ஒரு நல்ல பெண்.. பின்னர்...

பின்னர் தற்கொலை.

'என்னடா இது இழவு' என்று சார்லி திகைக்கிறான். ஏற்கெனவே அவன் ஒரு பிரச்சினையில் மாட்டி மனத்தை உழப்பிக் கொண்டிருக்கிறான். பள்ளியில் புதிதாக வந்திருக்கும் தலைமை ஆசிரியரின் மீது வெறுப்புறும் சில மாணவர்கள் குறும்புத்தனமான செய்கையின் மூலம் அவரை அவமானப்படுத்தி விடுகின்றனர். ஸ்தலத்தில் சார்லியும் இருந்திருப்பதால் அவர்கள் யாரென்று தனக்கு காட்டிக் கொடுக்குமாறு கூறுகிறார் த.ஆ. அவனின் மேற்படிப்புத்திட்டத்திற்கு பள்ளியின் மூலம் தன்னால் உதவ முடியுமென்றும், காட்டிக் கொடுக்காவிடில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பள்ளியை விட்டு அவன் வெளியேற்றப்படலாம் என்றும் அந்த ஏழை அப்பாவி மாணவனை எச்சரிக்கிறார்.
·பிராங்க் தற்கொலை செய்து கொண்டாரா?.... சார்லி தன்னுடைய பிரச்சினையில் இருந்து மீண்டானா?..... படத்தைப் பாருங்கள். ஹிஹி.

()

ஏற்கெனவே சொன்ன மாதிரி இந்தப்படம் முமுவதும் அல்பசினோவின் களம். மனிதர் அதகளம் செய்திருக்கிறார். கண்பார்வையற்ற பாத்திரத்தில் நடிப்பவர்கள் வழக்கமாக மழுப்பும் கறுப்புக் கண்ணாடி எதுவும் அணியாமல் நிர்வாண கண்களாலேயே, கண்பார்வையற்றவர்களின் உடல் மொழியை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். முதல் சந்திப்பிலேயே சார்லியை "Get out of here" என்று கத்தி விரட்டும் போது நமக்கும் அந்த மனிதர் மீது வெறுப்பு ஏற்படுகிறது.

நியூயார்க்கில் தன்னுடைய சகோதரரின் வீட்டு விருந்திற்கு அறிவிப்பில்லாமல் செல்கிறார். இவரின் பிரசித்தமான குணத்தை நன்கறிந்த அவர்கள் வெறுப்பை மறைமுகமாக காட்டுகின்றனர். அங்குள்ள ஒரு உறவினர், ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த அல்பசினோவிற்கு எப்படி கண்பார்வை போயிற்று என்பதை அவரை வெறுப்பேற்றும் விதமாக குரூர நகைச்சுவையுடன் விவரிக்கும் போது அவர் தவறும் இடங்களில் எல்லாம் தானே எடுத்துக் கொடுக்கிறார் அல்பசினோ. ஆனால் கூட வந்திருக்கும் சார்லி அவமானப்படுத்தப்பட்டதாக உணரும் போது நகைச்சுவை செய்தவன் மேல் காட்டுத்தனமாக பாய்ந்து தொண்டையில் ஒரு நண்டுப்பிடியை போடும் போது அல்பசினோவிற்கு இருக்கிற இன்னொரு பக்கத்தையும் சார்லியைப் போலவே பார்வையாளனான நம்மாலும் உணர்ந்து கொள்ள முடிகிறது. படத்தின் மிகச் சிறப்பான காட்சிகளுள் ஒன்றிது.

வாடகை ferrari காரை தானே வேமாக ஓட்டுவது, சார்லியின் கையிலிருந்த முகவரிச்சீட்டை பிடுங்கி வாயில் போட்டு மென்றுவிடுவது, உணவகத்தில் சார்லி மது வழங்குபவரிடம் காட்டும் சைகையை உள்ளுக்குள் எப்படியோ உணர்ந்து.. dont do that .. என்பது... முன்பின் தெரியாத ஒரு பெண்ணுடன் அறிமுகமாகி அற்புதமான ஒரு tango நடனமாடுவது....பாலியல் தொழிலாளியிடம் போய் விட்டு வந்தபிறகு ஓரு மாதிரி தடுமாற்றமாக இருப்பது.... என்று பல காட்சிகளில் அல்பசினோவின் நடிப்பை சொல்ல ஆரம்பித்தால் முழு திரைக்கதையையும் இங்கே எழுத வேண்டியிருக்கும். அப்படி எழுதினாலும் அது மேக்னா நாயுடுவின் பக்கவாட்டுத் தோற்றத்தை மட்டுமே பார்த்தமாதிரி அரைகுறையாகவே இருக்கும். முழுவதையும் நீங்களே பார்த்துவிடுங்கள்.

()

அல்பசினோவின் பிரம்மாண்ட நடிப்பிற்கு தன்னால் இயன்றவரை underplay செய்து ஈடுகொடுத்திருக்கிறார் சார்லியாக நடித்திருக்கும் Chris O'Donnell. தன்னுடைய பள்ளி பிரச்சினையை அல்பசினோவிடம் கூறிக் கொண்டு வரும் போது அல்பசினோ கேட்கிறார். " உன் வளர்ப்புத் தந்தை இந்தப் பிரச்சினையை கவனிக்க மாட்டாரா, ஏன்? - "Cause he's an asshole." என்கிறான் சார்லி. அல்பசினோ அதற்கு பதிலாக சொல்கிறார். "Ah. Ha-ha ! Well, that's all right, Charlie. Every family's got one nowadays.". படத்தின் ஆங்காங்கே அல்பசினோ "Hoo-aah" என்று சொல்வதே அத்தனை அழகாக இருக்கிறது.

வெளியே விறைப்பாக முன்கோபத்துடன் உலவிக் கொண்டிருக்கும் உள்ளுக்குள் தோழமைக்காக ஏங்குகிற, தன்னுடைய குறையை நினைத்து உருகுகிற அவரின் இன்னொரு பக்கத்தை உணர்ந்து கொள்கிறான் சார்லி.

()

Il buio e il miele ("Darkness and Honey") என்கிற நாவலை தழுவி 1974-ல் எடுக்கப்பட்ட Profumo di donna என்கிற திரைப்படத்தின் மறுவடிவம்தான் Scent of a Woman. இதன் இயக்குநர் Martin Brest. இந்தப் படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை அல்பசினோ பெற்றார். சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த adapted திரைக்கதை போன்ற பிரிவுகளிலும் இந்தப் படம் நாமினேஷன் தகுதியையும் பெற்றது.

அல்பசினோவின் ஆர்ப்பாட்டமான இன்னொரு பரிமாணத்தை Scarface என்கிற திரைப்படத்தில் பார்க்கலாம்.

()

எந்தவொரு மேலைநாட்டுப்படத்தையும் நம் தமிழ்த்திரைப்படங்களோடு ஒப்பிட்டு எழுதினால் அது நமது தாழ்வுணர்ச்சியை வெளிப்படுத்துவதாக சிலர் கூறுவர். இன்னும் சிலர் வணிக ரீதியில் அவர்களுக்கிருக்கும் சந்தைப்படுத்துதலை காரணம் காட்டுவர். அதெல்லாம் சும்மா ஹம்பக். யோசித்துப் பாருங்கள்.. இரண்டே பிரதான பாத்திரங்களை வைத்துக் கொண்டு ஒரு எந்தவித டமால் டுமீல் ஆக்ஷன் பிரம்மாண்ட செலவுகள் இல்லாமல்.. ஒரு சுவாரசியமான திரைக்கதையையும் திறமையான இரு நடிகர்களையும் வைத்துக் கொண்டு அவர்கள் சாதிக்க முடியுமென்றால் நம்மால் அது முடியாதா என்கிற ஆதங்கமே இவ்வாறாக எழுத வைக்கின்றது. சிவாஜி போன்ற ஒரு பிரம்மாண்ட குப்பையை உருவாக்குவதற்குப் பதில் இவ்வாறான இரண்டு சிறந்த படங்களை எடுத்து முடியும். பெரும்பான்மை மக்கள் யாரும் பார்க்க மாட்டார்கள் என்பதெல்லாம் கட்டுக்கதை. பருத்திவீரன் போன்ற படங்கள் சிறந்த உதாரணம்.

suresh kannan

Tuesday, April 15, 2008

Vantage Point - அசர வைத்த திரில்லர்

பொதுவாக எனக்கு ஆக்ஷன் படங்கள் பார்க்கப் பிடிக்கும். அதிலும் சுவாரசியமான, வேகமான திரைக்கதை என்றால் கதை பெரிதாக இல்லாததைதையும் மெலிதான லாஜிக் மீறல்களையும் கூட மன்னித்து பார்த்து மகிழ்வேன். ஷகிலா படமென்றாலும் கூட திரைக்கதை சுவாரசியமாக இல்லை என்றால் பிட்டுக்காக காத்திருக்காமல் எழுந்து சென்று விடுவேன். :-)


vantage point-ன் குறுந்தகடு சரியாக இருக்கிறதா என்று சோதிப்பதற்காக பா¡க்க ஆரம்பித்தவன் படம் முடியும் வரை என்னால் தொலைக்காட்சியின் இயக்கத்தை நிறுத்தத் தோன்றவில்லை. அப்படி ஒரு வேகமான படமாக இருந்தது vantage point.

vantage point


வி.ஐ.பி ஒருவரை கொல்வதற்கான (வேறு யார்.. அமெரிக்க அதிபர்தான்) முயற்சி நடக்கிறது. ஸ்பெயினில் நடக்கும் தீவிரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் கலந்து கொள்ள வரும் அமெரிக்க அதிபர் உரையாட ஆரம்பிப்பதற்கு முன் சுடப்படுகிறார். கூட்டத்தை நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் (GNN) பரபரப்பான இயக்கங்களோடு தொடங்கும் இத்திரைப்படம், சம்பவம் நடப்பதற்கு சரியாக 23 நிமிடங்களுக்கு முன்பான நிகழ்வை, சம்பந்தப்பட்ட சுமார் எட்டு பேரின் flash back பார்வைகளில; சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் சொல்கிறது.

இந்தப்படத்தின் பெரிய பலம் படுவேகமான திரைக்கதையும், அதை சாத்தியமாக்கின ஒளிப்பதிவும், எடிட்டிங்கும்தான். ஒருவரின் பார்வையில் 23 நிமிடங்களுக்கான முன்பாக தொடங்கி சுமார் பத்து நிமிடம் வரை கொலைச்சம்பவம் சொல்லி முடிக்கப்பட்டவுடன் வேகமாக காட்சிகள் பின்னகர்ந்து இன்னொருவரின் பார்வையில் ஆரம்பிப்பது அட்டகாசமாக இருக்கிறது. (இதே உத்தியை மணிரத்னம் ஆய்த எழுத்துவில் சாவகாசமாக பயன்படுத்தியும் மீண்டும் மீண்டும் காட்டப்பட்ட சம்பவம் ஆயாசத்தையே அளித்தது.)

கூட்டத்தை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் பெண்மணி குண்டு வெடிப்பில் கலங்கிப் போய் அழும் போது, அவருக்கு கட்டளைகள் வழங்கிக் கொண்டிருக்கும் பெண்மணி 'live ஆக ஓடிக் கொண்டிருக்கிறது... அழுகையை நிறுத்திவிட்டு சம்பவத்தைச் சொல்.." என்று கண்டிப்பான குரலில் கூறும் போது பரபரப்பான செய்திகளை வழங்கும் நிறுவனங்கள் மனிதத்தன்மையை இழந்து செயல்படுகின்றன என்பது ஒரு கீற்றாக வெளிப்படுகிறது.

சுடப்பட்டது அமெரிக்க அதிபரே அல்ல என்பது பெரிதும் ஆச்சரியத்தை தரவில்லையென்றாலும், நிஜமான அதிபர் காப்பாற்றப்படுவது பத்து வயது சிறுமி ஒருத்தியால் என்பது ஆச்சரியமாக இருந்தது. எப்படி என்று படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

suresh kannan

Monday, April 14, 2008

வந்து விட்டது சென்னை டைம்ஸ் ஆ·ப் இந்தியா

"புள்ளிராஜா" யாரு? என்றொரு விஷயம் முன்னர் சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது. 'புள்ளி' வாக்கியத்தை கேட்டவுடன் சிலர் "கோலம்' போட்டு "இது ஆணுறைக்கான விளம்ரபமாகத்தான் இருக்கும் சார்" என்று கிளுகிளுப்பு ஜோசியம் சொல்லிக் கொண்டிருந்தனர். அதே போல் டைம்ஸ் ஆ·ப் இந்தியாவின் சென்னைப் பதிப்பையும் 'புலி வருது' பாணியில் சொல்லிக் கொண்டே இருந்ததில் இன்று வந்தே விட்டது புலி. ஆனால் இது புலியா இல்லை பூனையா என்று போகப் போகத்தான் தெரியும் போலிருக்கிறது. டெல்லியையும், பெங்களூரையும் வெற்றி வாகை சூடிய பின்னர் இப்போது சென்னையை நோக்கி பிளாஸ்கோடும், டிராவல் பையுடனும் படையெடுத்ததில் "மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவுக்கு' உடனே சுரம் வந்து தன்னுடைய பத்திரிகையின் விலையை இன்றிலிருந்து குறைத்து விட்டனர்.

எப்படித்தான் இருக்கிறது டைம்ஸின் சென்னை பதிப்பு? ஒரு அவசரப் பார்வை:

காலை வணக்கம் சொல்லி ஆரம்பித்த இந்தப் பத்திரிகை புதுப் பெண்டாட்டி மாதிரி ஜிலுஜிலுவென்று எல்லாப்பக்கங்களிலும் வண்ணமயமாகவும் விளம்பர புஷ்டியாக இருந்தாலும் ஒரு செய்திப்பத்திரிகையின் ஆதார விஷயமான 'செய்தி' என்பதை தேட வேண்டியதாயிருக்கிறது. இணைப்புகளில் போட விஷயத்தையும் பிரதான பக்கங்களில் வைத்து நிரப்பியிருக்கிறார்கள். உள்ளூர் செய்திகளுக்கு போதுமான இடமில்லை. திகட்டத்திகட்ட நிறைய பொதுக்கட்டுரைகளை பிரசுரித்து மேகஸைனாக்கியிருக்கிறார்கள். (இரண்டாம் பக்கத்தை கிழித்து டைம்ஸ் அலுவலகத்தில் கொடுத்து 20ந் தேதி ஏ.ஆர்.ரகுமானின் live இசை நிகழ்ச்சியை ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்து கார் பார்க்கிங் ஏரியா பக்கத்திலிருந்து குத்துமதிப்பாக கண்டுகளிக்கலாம்)

ஆந்திராவின் முன்னணி ஆங்கில பத்திரிகையான டெக்கான் கிராக்னிக்கிள் சென்னைக்கு வரும் போதும் இப்படித்தான் பரபரப்பாக இருந்தது. ஆனால் இப்போது ஓய்ந்து போய் சபர்பன் ரயில்களில் ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு கசக்கி தூக்கி எறியப்படுவதை பார்க்கிறேன். ஆனால் டைம்ஸ் ஆ·ப் இந்தியா அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்காது என்பதால் 'ஹிந்து' விழிப்பாகவே இருக்க வேண்டியிருக்கும்.

வீட்டில் டைம்ஸ் கொடுத்த அதிருப்தியில் அலுவலகத்திற்கு வந்து 'ஹிந்து'வை புரட்டினபின்தான் கைநடுக்கம் சற்று நின்றது. இதே போல் இந்த பேப்பரை படித்தால்தான் காலைக்கடனையே கழிக்க முடியும் என்ற விசுவாசிகள் இருக்கும்வரை மஹாவிஷ்ணுவிற்கு கவலையில்லை.

ஆனால்.... எதுவும் இப்போதைக்கு தீர்மானமாக சொல்லவியலாது.

suresh kannan

Friday, April 11, 2008

வார்த்தை முதல் இதழ் குறித்து......

எனி இந்தியன் பதிப்பகத்தாரின் புதிய மாத இதழான 'வார்த்தை' குறித்து என்னுடைய வெளிப்படையான சில எண்ணங்களையும் / கருத்துக்களையும் / யோசனைகளையும் எழுத உத்தேசம்.

இலவச பல்பொடி பாக்கெட் வகையறாக்களுடன் வெளியாகும் வணிக இதழ்கள் வாசிப்பு பழக்கமுடைய குறுகிய எண்ணிக்கையைக் கொண்ட வாசகர்களிடையே பெரும்பான்மையாக கோலோச்சிக் கொண்டு, சூழலில் மாசை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் அவற்றிற்கு மாற்றாக வெளியாகும் இடைநிலை இதழ்கள், தீவிரமான உள்ளடக்கங்களுடன் வெளியாகும் சிற்றிதழ்கள் போன்றவற்றின் தேவை மிக அவசியமானது. பெரும்பான்மையாக அறியப்பட்டிருக்கும் காலச்சுவடு, உயிர்மை, உயிர் எழுத்து போன்ற இடைநிலை இதழ்களின் வரிசையில் இன்னொரு புதுமுகமான "வார்த்தை"யை வரவேற்கிறேன்.

()

ஏப்ரல் 1 அன்று வெளியாகியிருந்தாலும் இதழ் நம்மை முட்டாளக்கவில்லை என்றே தோன்றுகிறது. (சந்தா தொகையைக் கூட வாங்கிக் கொள்ளாமல் நம்பி அனுப்பிய பிரசன்னாவிற்கு நன்றி).

இந்த இதழ் குறித்த என்னுடைய பார்வைகளும், பரிந்துரைகளும்:

1) மங்கலகரமாக இருக்க வேண்டும் என்ற நினைப்பிலோ என்னமோ, அட்டைப்படம் மஞ்சள் நிறத்தில் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. (இனிமேல் அதிகமாக மஞ்சள் நிறத்தை பயன்படுத்த வேண்டாம். கடைக்காரிடம் "அந்த மஞ்ச பத்திரிகையை எடுப்பா" என்று கேட்க சிலருக்கு தயக்கமாக இருக்கக்கூடும்.). பல்வேறு ஆளுமைகளின் புகைப்படங்கள் உள்ளே பிரசுரிக்கப்பட்டிருக்கும் விஷயங்களைப் பற்றி visual-ஆக கூறிவிடுகின்றன. ஆனால் இப்படி ஸ்டாம்ப் சைசில் பல புகைப்படங்களை அச்சிடுவதை விட ஒரே ஒரு புகைப்படத்தை மாத்திரம் பெரிதாக அச்சிட்டால் தூரத்திலேயே அடையாளங் கண்டு கொள்ளவும் வித்தியாசம் காணவும் உதவியாய் இருக்கும் என்று தோன்றுகிறது.

2) தனிப்பட்ட முறையில் 'வார்த்தை' என்கிற இதழின் பெயரே எனக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லை. வேறு நல்ல பெயரை முயற்சித்திருக்கலாம். (இனிமேல் இலக்கியப் பத்திரிகை ஆரம்பிக்கவிருப்போர், நல்ல தலைப்பிற்கு ஐந்து ரூபாய் ஒட்டிய தபால்உறையை எனக்கு அனுப்பவும்) மேலும் புத்தகத்தின் பெயரை தனித்த, பிரத்யேக அடையாளமாக ஒரு logo-வாக உருவாக்கியிருக்கலாம். சாதாரண எழுத்துருவில் இருக்கிறது.

3) இதழின் வடிவமைப்பு வாசிப்பிற்கு இடையூறாக இல்லாமல் இருப்பது பாராட்டுக்குரியதென்றாலும் இன்னும் மேம்படுத்துவதற்கான முயற்சியை செய்யலாம். (பக்கம் 49-ல் தேவையில்லாமல் ஒரு grey patch இருக்கிறது.).

4) செழியனின் கட்டுரை மாத்திரம் பெரிய அளவான எழுத்துக்களுடன் வித்தியாசமாக தெரிவதை தவிர்த்திருக்கலாம். (பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை பிரசுரிப்பதாக இருந்தால் இந்த யோசனையை நிராகரிக்கலாம்).

5) சில ஓவியங்கள் வணிகப்பத்திரிகைகளில் வரையப்படுபவை போன்று மிகச்சாதாரணமாக உள்ளன. இவற்றை இன்னும் மேம்படுத்தலாம்.

6) 3 ரோசஸ் தேயிலை மாதிரி இன்னும் மணம், நிறம் தூக்கலாக இருக்க வேண்டும். தாளின் நிறம் பழுப்பு நிறத்தில் பழைய இதழ் மாதிரி தோற்றத்தை ஏற்படுத்துவது வரும் இதழ்களில் தவிர்க்கப்படுவது நன்று.

உள்ளடக்கம் பற்றி (படித்த வரை):

1) விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்த சுஜாதாவின் புனைவுகளின் மீது ஒரு காலத்திற்குப் பிறகு எனக்கு நாட்டம் குறைந்து போனது. சமீபத்தில் 'டைம்ஸ் இன்று' இதழில் வெளியான அவரது சலிப்பை ஏற்படுத்தும் சிறுகதையை குறை கூறி "Mr.சுஜாதா, நீங்கள் ஏன் சிறுகதை எழுதுவதை கொஞ்ச காலத்திற்கு நிறுத்தக் கூடாது?" என்று எழுதியிருந்தேன். (எழுதின கை முகூர்த்தம், மனிதர் போய்ச் சேர்ந்து விட்டார். சங்கடமாக இருக்கிறது.) புகழின் உச்சியிலிருந்த ஜெயகாந்தன் புனைவுகள் எழுதுவதை நிறுத்தினது குறித்த கேள்விக்கு அப்போதுதான் விடை கிடைத்தாற் போலிருக்கிறது. நீர்த்துப் போவதற்கு முன் நிறுத்திவிடுவது நல்லது.

இந்த இதழில் வெளியாகியிருக்கும் ஜெயகாந்தனின் பதில்கள் மிகச்சாதாரணமாய் இருக்கின்றன. வெறும் கவர்ச்சிக்காகத்தான் அவர் பெயர் பயன்படுத்தப்படுகிறது என்றால் ஆட்சேபணையில்லை. ஆனால் உள்ளடக்கம் தரமாய் இருக்க வேண்டும் என்று ஆசிரியர் குழு கருதினால் சிறிது: காலத்திற்குப் பிறகு இதை நிறுத்தி விடுவதே நலமான செயலாய் இருக்கும். (இதனால் ஏதோ நான் ஜெயகாந்தனை தாழ்த்தி மதிப்பிடுவதாய் தவறாய் நினைக்க வேண்டாம். என்றைக்குமே நான் மதிக்கும் படைப்பாளிகளில் அவரும் ஒருவர்).

2) நாஞ்சில் நாடனின் சிறுகதை (ஐயம் இட்டு உண்) அவருக்கான பிரத்யேக மொழியுடன் வழக்கம் போல் சிறப்பாய் இருக்கிறது.

3) ஒளிப்பதிவு உலகின் மொழியில் Close-up எனப்படும் 'அண்மைக்காட்சி' என்கிற கோணத்தின் முக்கியத்துவம் குறித்து செழியன் எழுதியிருக்கும் கட்டுரை மிகச்சிறந்த வாசிப்பனுபவத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு கோணத்தைப் பற்றி இவர் தொடர் ஒன்றை எழுதினால் நன்றாக இருக்கும்.

4) இசையில் நனையும் காடு என்கிற சேதுபதி அருணாச்சலத்தின் கட்டுரை கிடார் பிரசன்னாவில் ஆரமபித்து சடாரென்று திசை மாறி பிக்மிக்களின் விசித்திரமான உலகத்தை சுவாரசியமான மொழியில் கூறுகிறது.

5) மலையாள தேசத்தின் வாடையுடன் திண்ணையில் எழுதிக் கொண்டிருந்த 'வாரபலனை' இரா.முருகன் 'வார்த்தைக்கு இடம் மாற்றி விட்டார் போலிருக்கிறது.

6) 'பொருள் பொதிந்த சமரசம்' என்கிற சுஜாதாவைப் பற்றி கோபால் ராஜாராமின் கட்டுரை பெரும்பாலும் ஏற்புடையதாக இருந்தாலும் இன்னும் கூட ஆழமாக எழுதப்பட்டிருக்கலாமோ என்று தோன்ற வைத்தது.

7) இந்த இதழிலேயே என்னை பெரிதும் கவர்ந்தது 'ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் குறிப்புகள்' என்கிற பி.ச.குப்புசாமியின் கட்டுரைதான். எளிமையான மொழியில் சுவாரசியமாக நகர்த்திக் கொண்டு சென்ற இந்த மாதிரி கட்டுரையைப் படித்து நீண்ட காலமாகிறது. தப்பு செய்த மாணவனை காப்பாற்றும் பொருட்டு அவனுக்கு சாதகமாக வாக்கியங்களை மெதுவாகவும் பாதிப்பு ஏற்படுத்துகிற கேள்வியை விரைவாகவும் கேட்பதை ஆசிரியரின் மொழியில் படிக்க சுவையாய் இருந்தது. இவர் எழுதுவது கட்டாயமாக தொடரப்பட வேண்டும். (இவரின் மற்ற படைப்புகள் குறித்து அறிய ஆவலாய் இருக்கிறேன்.)

மற்ற படைப்புகளைப் பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில்.

()

இந்த இதழில் பல புதுமுக எழுத்தாளர்களின் பெயரைப் பார்கக சந்தோஷமாய் இருக்கிறது. 'ஸ்டார்' எழுத்தாளர் என்று கருதப்படுகிறவர்களின் பக்கங்களை அளவோடு நிறுத்தி புது படைப்பாளிகளை / மரபை தாண்டி நிற்கிற படைப்புகளை இனங்கண்டு 'வார்த்தை குழு' நிறைய பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறேன்.

ஆசிரியர் குழுவில் இருக்கும் சிவகுமார், பிரசன்னா போன்றோருக்கு வலைப்பதிவுகளுடான பரிச்சயம் அதிகம் இருப்பதால் இந்தப் பரிந்துரை.

எந்தவொரு தீவிர எழுத்தாளரின் தரத்திற்கும் சற்றும் குறையாமல் (இணையத்தில் மாத்திரம்) எழுதும் படைப்பாளிகள் உண்டு. அச்சு ஊடக வாசகர்களுக்கும் அவர்களை கொண்டு சேர்க்கும் விதமாக அவர்களையும் இனங்கண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகிறேன். (பக்கத்து இலைக்கு பாயசமா? என்று உரத்த சிந்தனை செய்பவர்கள்... 'சிவாஜி' திரைப்படத்தை தொடர்ந்து ஆறு முறை பார்க்கக் கடவது).


suresh kannan