Friday, December 26, 2008

காமம் பொங்கி வழியும் புதினம்

பழைய ஆனந்த விகடன் கட்டுரைத் தொடர் ஒன்றில், கிராமத்தில் ஓடும் தகர டப்பா பஸ்ஸைப் பற்றி எழுதும் போது "ஏதோ ஒர் தர்மத்துக்கு கட்டுப்பட்டு அது தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தது' என்று எழுதியிருப்பார் பாஸ்கர் சக்தி. ஏறக்குறைய இந்தியாவையும் அந்த பஸ்ஸ¥டன் ஒப்பிட்டால் தேச பக்தர்கள் மேலே விழுந்து பிடுங்குவார்களோ என்னமோ. எங்காவது குண்டு வெடிக்கும் போதும் கிரிக்கெட்டின் போதுதான் இவர்களின் தேசபக்தி பொங்கி வழியும். வல்லபாய் பட்டேல் சாம, பேத, தான, தண்ட.. என அனைத்து முறைகளையும் உபயோகித்து கட்டிப் போட்ட தேசத்தின் கயிறு ஏதோ ஒர் தர்மத்திற்கு கட்டுப்பட்டு பிய்ந்து விடாமல் இருக்கிறது. உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியும் தனது அண்டை மாநிலத்தின் விவசாய பயன்பாட்டிற்கு நீர் தராத மாநிலங்களை வைத்துக் கொண்டு 'இந்தியா எனது தாய்நாடு; இந்தியர்கள் அனைவரும் என் உடன்பிறந்தவர்கள்' (நமீதாவை சகோதரியாக நினைக்க எந்த கேணையன் இருக்கிறான்?) என்று சொல்வதுதான் எவ்வளவு அபத்தமாக இருக்கிறது? சரி அரசியல் வேண்டாம். இலக்கியத்தின் பக்கம் வருவோம். தமிழ்நாட்டிலேயே பல பேருக்கு - தமிழ்த்துறை பேராசிரியர்கள் உட்பட- அது பாரதி, பாரதிதாசனோடு முடிந்து போய் விடுகிறது. இந்த லட்சணத்தில் அண்டை மாநிலத்தின் இலக்கிய வரலாற்றைப் பற்றிக் கேட்டால் அவனை எதால் அடிப்பது?. ஹிப்ரூ மொழியில் எழுதும் படைப்பாளியைக் கூட தெரிந்து வைத்திருக்கும் நவீன இலக்கிய உலகம் பக்கத்து மாநிலத்து எழுத்தாளனைப் பற்றிக் கேட்டால் பேய் முழி முழிக்கிறது. சாகித்ய அகாடமி என்றொரு அமைப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். அரசியல் சக்திகளின் அருளாசிகளின் வட்டத்தில் இருப்பவர்களுக்குத்தான் சம்பந்தப்பட்ட விருது கிடைக்கும் என்கிறார்கள். அவர்கள் வெளியிட்ட நூல்களில் உருப்படியாக நான் படித்தது சிவராம காரந்தின் 'அழிந்த பிறகு' மட்டும்தான். பத்தாங்கிளாஸ் பாடப்புத்தகம் ஸ்டைலில் இலக்கிய ஆளுமைகளைப் பற்றின நூல்களும் வெளியிடுகிறார்கள். யார் படிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

Photobucket

'மனிதனின் பெரும்பாலான அகப் பிரச்சினைகளுக்கு அடிப்படைக்காரணியாய் இருப்பது காமம்தான்' என்று சொன்ன உளவியலின் தந்தையான சிக்மண்ட் ·பிராய்டின் வாயில் சர்க்கரை மூட்டையையே போடலாம். 'யார் இந்த பிராடு? எப்போது இதை உன்னிடம் டெலிபோனில் சொன்னார்?' என்று கேட்பவர்கள் இணையத்தில் தேடிக் கண்டடையுங்கள். ஸி.வி. பாலகிருஷ்ணனின் மலையாள நாவலான 'ஆயுஸ்ஸிண்டே புத்தகம்' (தமிழில்: வை. கிருஷ்ணமூர்த்தி) இதைத்தான் புனைவு மொழியில் சொல்கிறது. இந்தப் புனைவெங்கும் காமம் கண்ணுக்குத் தெரியாத ஒரு மலைப்பாம்பைப் போல ஊர்ந்து செல்கிறது. காமத்தை இன்னும் கண்ணாமூச்சி ஆட்டம் போல வைத்திருக்கும் நம் பாசாங்கான சமூகத்தில் அடித்தட்டு மக்கள் இதை மிக எளிதாக கடந்து செல்கிறார்கள்.

மாடு மேய்க்கும் மேரி நைநானுடன் காதல் என்கிற பெயரில் உறவு கொள்கிறாள். அவனோ வேறு பெண்ணைத் திருமணம் செய்துக் கொள்கிறான். ஐம்பது வயதாகும் கிழவனை விரும்பியே பிடிவாதம் செய்து திருமணம் செய்து கொள்ளப் போவதாக சொல்லும் மேரியிடம் ஆனி கேட்கிறாள். ".. அந்த மனுஷனுக்கு உங்கப்பாவ விட வயசு ஜாஸ்தி, தெரியுமில்ல?".

"அது பரவாயில்ல. அவனுக்குப் பதினேழு வயசிலே ஒரு மகன் இருக்கானே? அவன் அப்பாவுக்குத் தெரியாம நாங்க ரெண்டு பேரும் ஜாலியா இருக்கலாமே!".

()

பெளலோவின் மகன் தோமோ. தோமோவின் மகள் ஆனி, மகன் யோஹன்னான்.

இந்த நாவல் குறிப்பாக காற்றில் பறக்கும் காகிதம் போல் அலைக்கழியும் யோஹன்னானைச் சுற்றியே அலைகிறது.

தாத்தா பெளலோ பக்கத்து வீட்டு பெண்ணான ராஹேலிடம் இறந்து போன தன்னுடைய மனைவியின் ஞாபகம் பொங்கிப் பெருகும் நினைவுகளின் ஒரு கணத்தில் முறைதவறி நடந்து விடுகிறார். தாத்தா தடவலின் வித்தியாசத்தை அறிந்த ராஹேல் அழுது கொண்டே ஓடுவதில் நாவல் துவங்குகிறது. இதைப் பார்த்து விடும் பெளலோவின் மகன் தோமோ தன் தந்தையாரை அடிஅடியென அடிக்கிறான். பின்பு முட்ட முட்டக் குடித்துவிட்டு தன் மனைவியின் கல்லறையை நோக்கி ஓடுகிறான். அவமானத்தில் புழுங்கித் தவிக்கும் பெளலோ தூக்கிட்டுச் சாகிறார். அவரின் பழைய செருப்புகள் வீட்டின் கூரையிலிருந்து அனைத்தையும் கவனிக்கிறது. (மேஜிக்கல் ரியலிசமாம்!).

அந்த ஊரின் அழகியான 'ஸாரா'வின் கணவன் ஸக்ரியா ஒரு நோயாளி. ஸாராவையே நினைத்து ஏங்கும் யாகேப் சுயமாக சாராயம் காய்ச்சிக் குடிக்கிறவன். தன்னுடைய காதலை அவளிடம் சொல்கிறான். ஆனால் அவளின் சம்மதம் கிடைக்காமல் போகவே அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டுச் சாகிறான்.

யோஹன்னானின் சகோதரி ஆனிக்கும் அந்த ஊர் சர்ச்சின் பாதிரி மாத்யூவிற்கும் காதல் ஏற்படுகிறது. தன்னுடைய 'வெள்ளை அங்கி' தடுக்கும் நிலையை நினைத்து பரிதவிக்கும் பாதிரிக்கு 'விழிப்பை' ஏற்படுத்துபவன் குடிகார யாகேப்தான்.

... இந்த உலகத்துல அன்பும் நட்பும் நிலவணும்கறதுதான் என்னோட ஆசை, கையாலாகத்தனம், யாருக்கும் தெரியாம, தனக்குள்ளேயே துக்கப்பட்டு இருக்கிறது, தைரியமில்லாமே, கோழையா வாழறது, பயந்தாங்குளித்தனம். இது ஒண்ணுமே இல்லாம இந்த உலகம் அன்பு நிறைஞ்சதா இருக்கணும்கறதுதான் என்னோட விருப்பம்...

தெளிவடைந்த பாதிரி மாத்யூ இது குறித்து மூத்த பாதிரியுடன் நிகழ்த்தும் விவாதம் இந்த நாவலின் முக்கியமான பகுதி. பாதிரி வாழ்க்கையை தேர்ந்தெடுத்து பிரம்மச்சரியத்துடன் வாழ நேர்பவர்கள் எதிர்கொள்ள நேரும் பிரச்சினைகளைப் பற்றி செய்தித்தாளில் வந்திருக்கும் ஒரு கட்டுரையின் துணையோடு விவாதிக்கிறார் மாத்யூ.

... மாத்யூ தொடர்ந்தார். 'செக்ஸ் வேண்டும் என்றல்ல நான் வாதிப்பது. அதில்லாமல் என்னால் வாழ முடியும். ஆனால் தனிமையை நம்மால் பொறுத்துக் கொள்ள முடியாது. ஒரு பெரிய கட்டிடடத்தில் என்னை விட வயதில் மூத்தவர்களுடனும் இளையவர்களுடனும் நான் சேர்ந்து வாழ்கிறேன். ஆனால் மிக அபூர்வமாகவே நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறோம். மனம் திறந்து பேச யாராவது இருக்க மாட்டார்களா என்று நான் பல தடவை ஏங்கியிருக்கிறேன். ...

என்பவர், உலகத்தில் நல்வழிகள் ஏற்கெனவே சொல்லப்பட்டிருந்தாலும் பிரச்சினைகளும் வன்முறைகளும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. எனவே பிரம்மச்சரியத்தோடு செய்வதை திருமணம் செய்து கொண்டும் செய்யலாம் என்று விவாதிக்கிறார்.

.. சொர்க்கத்தில் செய்யப்படுவதையெல்லாம் நாம் பூமியில் செய்ய நினைப்பது சரியல்ல என்று கருதுகிறேன். பூமியின் சட்ட திட்டங்கள் வித்தியாசமானவை. அதனால்தானே யேசு கிறிஸ்துவே அவருடைய சிஷ்யர்களிடையே பிரம்மச்சரியத்தைக் கட்டாயமாக்கவில்லை.! யோவானையும் பவுலையும் தவிர மற்ற எல்லோரும் திருமணம் செய்து கொண்டவர்கள்தானே?"...

இதற்கு மூத்த பாதிரி சொல்லும் பதில் மிகவும் convince- ஆக எனக்குத் தோன்றியது.

... நாம் திருமணத்துக்குப் பிறகு ஏற்படும் நூற்றுக்கணக்கான பிரச்சினைகளைப் பற்றியும் பேச வேண்டும். பாதிரியாகப் பணிபுரியும் கணவன், தன் மனைவியுடன் தினமும் சண்டை பிடித்துக் கொண்டிருந்தால் அது அந்த சர்ச்காரர்களுக்குப் பிடிக்குமா? தனது துக்கத்திலிருந்து விடுதலை பெற விரும்பும் யாராவது அந்தப் புரோகிதனிடம் வருவார்களா?..

என்றாலும் மாத்யூவும் ஆனியும் ஊரை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டு நிறைவான வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஆனியைப் பற்றிய தகவல் நாவலில் பிறகு சொற்பமாகவே வருகிறது.

()

யோஹன்னான் தனது நண்பன் ஜோஷியுடன் ஒரினப்புணர்ச்சி கொள்கிறான். ஜோஷி இறையியில் படிப்பிற்காக ஊருக்குச் சென்றவுடன் நாவலின் ஆரம்பத்தில் வரும் ராஹேலுடன் உறவு கொள்கிறான். மறுநாள் அவளை பார்க்கச் சென்ற போது அவள் 'கன்யா மடத்தில்' சேருவதற்காக சென்றிருப்பதை அறிகிறான். தனிமையின் புழுக்கத்தில் அலைந்து திரியும் அவனுக்கு விதவையான ஸாராவுடனும் உறவு ஏற்படுகிறது. இதையறியும் அவனுடைய தந்தை தோமா அவனைக் கண்டிக்கிறான். ஸாராவை தோமோவே திருமணம் செய்துக் கொள்ளலாமே என்கிற நண்பனின் யோசனையை அறிந்தவுடன் தோமோவுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்படுகிறது. அதுவரை இன்னொரு திருமணத்தைப் பற்றியே யோசிக்காமலிருந்தவன் இந்த யோசனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறான். ஆனால் ஸாரா தோமோவை திருமணம் செய்ய மறுத்து விடுகிறாள். தன்னுடைய மகனுடன் அவள் உறவு கொள்வதைக் காண்கிற தோமோ ஆத்திரத்தில் ஸாராவைக் கொன்று விடுகிறான்.

தனிமையில் ராஹேலின் நினைவுகளுடன் நடந்து போகும் யோஹன்னானுக்கு இறந்து போன யாகேப்பும் தாத்தா பெளலோவும் தென்படுவதோடும் அவனின் கூக்குரலுடனும் நாவல் நிறைகிறது.

()

படைப்பு நிகழும் களம் எதுவென தெளிவாகப் புலப்படவில்லை. ஏதோ சாத்தானால் சிருஷ்டிக்கப்பட்ட ஊர் போலிருக்கிறது. நாவலில் வரும் அனைவருமே கிறிஸ்துவர்களாக இருக்கிறார்கள். இடையே ஓடும் பன்றிக்குட்டியின் பெயர் 'ஜேம்ஸ்' என்றால் கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன். மருந்துக்குக்கூட வேற்று மதத்தவர்கள் அந்த நாவலின் உள்ளே நுழையவில்லை. ஒரு மூன்றாந்தர மோசமான இயக்குநர் படமாக்க நினைத்தால் 'மிகச் சிறந்த பாலியல் காட்சிகளை' கலைப்படம் என்ற போர்வையில் திணிக்கக்கூடிய அனைத்து சாத்தியக் கூறுகளையும் கொண்ட இந்த சிறந்த நாவல் மிக மிக வறட்சியான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. நிகழ்வை சட்டென்று நிறுத்திவிட்டு அடுத்த அத்தியாயத்தில் வருங்கால நிகழ்வில் 'ரிவர்ஸ் கியர்' போட்டு விவரிப்பதான மொழியில் நாவலின் பல அத்தியாயங்கள் புனையப்பட்டிருக்கின்றன. கிருஷ்ணமூர்த்தி இதை சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

காமம்தான் மனிதனை தொடர்ந்து வாழ வற்புறுத்துகிறது என்பதையே இந்த நாவலின் அடிநாதமாகப் பார்க்கிறேன்.

()

சமையல், ஜோதிடம், வாழ்க்கை வரலாறு என்று பரபரப்பான புத்தகங்கள் பிரசுரித்து பணம் பண்ணிக் கொண்டிருக்கும் இன்றைய பதிப்பகங்களுக்கு மத்தியில் 'கிழக்கு பதிப்பகம்' அண்டை மாநில இலக்கியங்களின் மொழி பெயர்ப்பையும் கவனத்தில் கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. நாவலின் ஆசிரியர் கேரள சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர் என்று பின்னட்டை சொல்கிறது.

'இறைவனை நிந்திக்கவில்லை' என்கிற வார்த்தைகள் 'இறைவனை சிந்திக்கவில்லை' என்று பிரசுரமாகியிருக்கிற (பக்கம் 45) கருத்துப்பிழை மயக்கங்களை ஏற்படுத்தும் சொற்ப தவறுகளை தவிர்த்திருக்கலாம் என்பதைத் தவிர புத்தகம் மிக நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

உயிர்ப் புத்தகம், ஸி.வி. பாலகிருஷ்ணன், தமிழில்: வை. கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம், 224 பக்கங்கள், 120 ரூபாய்.
ஆன்லைனில் வாங்க

suresh kannan

2 comments:

PRABHU RAJADURAI said...

"அண்டை மாநில இலக்கியங்களின் மொழி பெயர்ப்பையும் கவனத்தில் கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது"

காமம் என்று சொல்லிவிட்டீர்கள் அல்லவா...இனி சரோஜாதேவி என்றாலும் சரி மற்ற எந்தவித இலக்கிய பம்மாத்து என்றாலும் சரி,

வாங்கி குவிக்க ஆள் இல்லையா இங்கு?

Jegadeesh Kumar said...

அழகான, விரிவான பதிவு.