Friday, September 15, 2006

சில முக்கிய(மற்ற) குறிப்புகள்

இந்திய திரைப்பட மேதைகளுள் மிக முக்கியமானவர் சத்யஜித்ரே. வசனத்தைக் குறைத்து காட்சிகளால் ஆக்கப்பட வேண்டியது திரைப்பட ஊடகம் என்கிற அடிப்படையை தனது படைப்புகளின் மூலம் தொடர்ந்து உணர்த்திக் கொண்டிருந்தவர் அவர். பதேர் பாஞ்சாலி, சாருலதா, ஜனசத்ரு, அகாந்துக் போன்ற பல சிறப்பான திரைப்படங்களை உருவாக்கியவர். மனிதனின் நுண்ணிய உணர்வுகளையும், சமூகத்தின் மீதுள்ள விமர்சனங்களையும் மென்மையாக ஆனால் அழுத்தமாக பதிவு செய்தவர். வாழ்நாள் சாதனை விருதுக்காக ஆஸ்கர் விருது பெற்ற ஒரே இந்தியர்.

கலைப்படங்கள் என்றாலே மிக மெதுவான திரைக்கதையமைப்புடையது, பெரிதும் சலிப்பூட்டும் காட்சிகளைக் கொண்டது என்கிற பொதுவான, தவறான ஒரு பிம்பம் சராசரி திரைப்பட பார்வையாளர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரேவின் முதல் படமான "பதேர் பாஞ்சாலி"யை ஒருவர் பார்த்தாலே இந்த குமிழ் உடைந்துவிம்.

சத்யஜித்ரேவைப் பற்றின புதிய இணையத்தளம் ஒன்று அண்மையில் உருவாக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கைக் குறிப்புகள், அரிய புகைப்படங்கள், இயக்கிய படங்களின் பட்டியல் என்று ஒரு முழுமையான தளமாக இது உள்ளது. ரே பிரியர்களுக்கு பிரியமான தளமாக இது இருக்கக்கூடும்.

ரேவைப் பற்றின இன்னொரு இணையத்தளம்

பதேர் பாஞ்சாலியைப் பற்றி நான் எழுதிய கட்டுரை

மரத்தடியில் எழுதின இன்னொரு கட்டுரை

()

சில மாதங்களுக்கு குமுதம் "தீராநதியில்" 'வனம்' என்கிற சிற்றிதழைப் (காலாண்டிதழ்) பற்றின அறிமுகத்தைப் பார்த்தேன். அதில் என்னைக் கவர்ந்த அம்சம், "சிறுகதைகளை பிரதானமாக வைத்து எங்கள் இதழின் உள்ளடக்கம் அமையும்" என்கிற மாதிரியான அறிவிப்புதான். இன்னொன்று, அந்த இதழின் ஆசிரியர் பட்டியலில் ஜீ.முருகன் பெயரை கண்டது. நவீன இலக்கிய படைப்பாளிகளில் குறிப்பிடத்தகுந்தவர் இவர். "கருப்பு நாய்க்குட்டி" என்கிற சிறுகதைத் தொகுப்பு வாசிப்பில் தவற விடக்கூடாதது. சந்தா விபரங்களைப் பற்றி விசாரித்து ஒரு அஞ்சலட்டை அனுப்பியதில் இதுவரை வெளிவந்துள்ள மூன்று இதழ்களையுமே அனுப்பி விட்டனர். உடனேயே சந்தாவை அனுப்பிவிட்டேன்.

சமீபத்திய இதழான (எண் 6) மே-ஜூன் 2006 இதழில் வெளியான ஒரு சிறிய கட்டுரை, உங்கள் பார்வைக்கு.

க.நா.சு கல்லறையிலிருந்து கிளம்பும் 'பட்டியல்' பூதங்கள்

க.நா.சு தொடங்கி வைத்த பட்டியல் சமாச்சாரம் இன்றும் தொடர்கிறது. தங்களுடைய இலக்கிய ஆய்வு (?) கட்டுரைகளிலோ, பேட்டிகளிலோ தரவரிசைப் பட்டியலிடுவதை சிலர் ஆர்வத்துடன் செய்து வருகிறார்கள். பெரும்பாலும் இவை ஆதரவாளர்களின் பட்டியலாகவே இருக்கும். தமிழின் தலைசிறந்த நாவலாசிரியர்கள், சிறுகதை எழுத்தாளர்கள், கவிஞர்களின் வரிசைகள் இவை. பெண்களுக்கும், தலித்துகளுக்கும் இதில் உப பிரிவுகளும் உண்டு. தினசரியில் வெளியாகியிருக்கும் தேர்வு முடிவில் எண்களைத் தேடுவது போல ஆர்வத்துடன் ஒவ்வொரு படைப்பாளியும் இந்தப் பட்டியிலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என்று தேடும் மன நோய்க் கூறு கொண்டவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் ஒவ்வொருவருக்கும் ஆதரவாளர்களும் அதிருப்தியாளர்களும் இன்று பெருகிப் போயுள்ளார்கள். யாருடையப் பட்டியலிலும் இடம் பெறான துரதிர்ஷ்டசாலிகளுக்காக வனம் தன்னுடைய ஆழ்ந்த அனுபாதத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

()

தொடர்புக்கு:
552, பேஸ்-1, சத்துவாச்சேரி, வேலூர்-632 009. செல்: 98420 52294. vanam_net@yahoo.co.in (ஆண்டு சந்தா ரூ.80/-)

()

.......பழனிவேள் ஒரு தேர்ந்த படைப்பாளி, நல்ல விமர்சன நோக்குடையவர் என்பது எனது அபிப்ராயம். அப்படியிருக்க, புதுப்பேட்டை இந்தியக் கருப்பர்களின் திரைப்படம் எனச் சறுக்கியது ஏனோ? மூன்றாந்தரக் குப்பையான புதுப்பேட்டையைப் பழனிவேள் இந்த வகையில் பகுப்பாய்வு செய்வது வாசகர்களின் நல்ல சினிமா ரசனையை மேம்படுத்த உதவுமா? இது போன்ற திரைப்படங்களைப் பற்றி எழுதுவதை விடுத்து ஜானகி விஸ்வநாதன் போன்றோரது வித்தியாசமான சினிமா முயற்சிகள் பற்றி எழுதுவது பயன்தரக்கூடியது.

காலச்சுவடு ஆகஸ்டு 06 இதழில் வெளியான, பழனிவேள் எழுதின புதுப்பேட்டை திரைப்பட விமர்சனத்தையொட்டி செப்06 இதழில் வெளியான வாசகர் (க.அகிலேஸ்வரன், யாழ்ப்பாணம்) கடிதத்தின் ஒரு பகுதி.

()

சமீபத்தில் படித்த நூல்கள்:

தலைமுறைகள் (நீல.பத்மநாபன்)

வட்டாரவழக்கு நாவல்களின் முன்னோடியான படைப்பு இது. மகத்தான பத்து இந்திய நாவல்களில் இது ஒன்று என்று க.நா.சு. ஆங்கிலப் பத்திரிகையில் இந்நூலைப் பற்றி எழுதயிருக்கிறார். ஆய்வுக் கட்டுரைகளிலும், விமர்சனக் கட்டுரைகளிலும் பல முறை இந்த நாவலின் பெயரைக் கண்டதில் இருந்து படிக்க வேண்டிய ஆவல் அதிகமாகி சமீபத்தில்தான் இது சாத்தியமானது. 1967-ல் எழுதி முடிக்கப்பட்ட இந்த நாவல் 1992-ல்தான் முதல் பதிப்பை கண்டிருக்கிறது. (வானதி பதிப்பகம்).

திரவியம் என்கிறவனின் 15 வயது முதல் 25 வயது வரையிலான காலகட்டத்தில் அவனுடைய பார்வையில் விரிகிற, பயணிக்கிற இந்த நாவலில் குமரி மாவட்டத்து செட்டிமார்களின் வட்டார வழக்குகளும், சடங்கு சம்பிரதாயங்களும், வாழ்க்கை முறையுமாக என நிறையச் சங்கதிகள் இந்த நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மிகுந்த நிதானமான நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் சில இடங்களில் சலிப்பூட்டி ஒரு நல்ல எடிட்டரின் தேவையை நினைவுப்படுத்துகிறது. வட்டார வழக்குச் சொற்கள் தாராளமாகவே இந்நாவலில் புழங்கினாலும் வாசகனுக்கு அது ஒன்றும் பெரிய தடையாக இல்லை.

"....... குறைந்தது ஆறு அங்குலமாவது கனமுள்ள அந்த ஒற்றைமரக் கதவு கோட்டை வாசலைப் போலப் பலவிதக் கீரீச்சல்களையும் மடமடவென்று வாந்தியெடுத்தவாறு மிகுந்த கஷ்டத்தோடு திறந்து கொண்டது" போன்ற அபூர்வமான வர்ணணைகள் வாசிப்பவனுத்தை சிறிதேனும் சுவாரசியப்படுத்த உதவுகின்றன.

என்றுமுள தமிழும் இன்று உள்ள தமிழும் (இந்திரா பார்த்தசாரதி)

1991 முதல் 92 வரை தினமணியில் "என் பார்வையில்" என்ற தலைப்பில் இ.பா எழுதிய 21 கட்டுரைகளின் தொகுப்பு இது. (தமிழ்ப் புத்தகாலயம்) அரசியல், கலை, இலக்கியம், ஆன்மிகம், மொழி போன்றவைகளைப் பற்றி அந்த காலகட்டத்தைப் பிரதிபலிக்கிற கட்டுரைகள், இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்தும்படி உள்ளன.

"திராவிட இயக்கங்கள் தங்களது அரசியல் லாபங்களுக்காக கத்தித்தீர்த்த தமிழ் மொழி குறித்த வெற்றுக்கூச்சல்களை (உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு) அவர்களே கைவிட்டு விட்ட நிலையில் சில "அடிப்படைவாதிகள்" இன்றும் கூட விடாதிருப்பதை பார்க்கும் போது "மொழி உணர்வு" என்கிறதை ஆயுதமாக்கி எப்படி ஒரு இனத்தின் மூளையை மழுங்கடிக்க முடியும் என்பதற்கு உதாரணம். மொழியின் வளர்ச்சி குறித்து அறிவுப்பூர்வமாக சிந்திக்க வேண்டுமேயல்லாமல் உணர்ச்சிப்பூர்வமாக அணுகுவது எந்தவித பயனையும் தராது. இந்த மாதிரியான ஆட்டு மந்தைகளை சற்றே அணுகிப் பார்த்தால் தமிழின் அடிப்படை இலக்கணம் கூட தெரியாமல் பிழையுடன் எழுதுவதை, பேசுவதை காணலாம்."

தமிழ் மொழி பற்றி இ.பா. எழுதியுள்ள கட்டுரைகளைப் படித்ததிலிருந்து எனக்கு தோன்றியதுதான் மேலே குறிப்பிட்டிருப்பது.

3 comments:

அருள் குமார் said...

என்னளவில் எல்லாமே முக்கியமான குறிப்புகள் தான் சுரேஷ். மிக்க நன்றி :)

பிச்சைப்பாத்திரம் said...

நன்றி அருள்குமார்.

இதை எழுதி பதிந்த பிறகு, இரவில் சமீபத்திய ஆனந்த விகடனை புரட்டிப் பார்க்கும் போது ஒரு இனிய அதிர்ச்சி. கற்றதும் பெற்றதுமில் சுஜாதாவும் ரேவின் புதிய வலைத்தளத்தைப் பற்றியும் பதேர் பாஞ்சாலியைப் பற்றியும் எழுதியிருந்தார்.

அபுல் கலாம் ஆசாத் said...

//கற்றதும் பெற்றதுமில் சுஜாதாவும் ரேவின் புதிய வலைத்தளத்தைப் பற்றியும் பதேர் பாஞ்சாலியைப் பற்றியும் எழுதியிருந்தார்.//

ஜீ,

கலாய்ச்சல் அலவ்டுதான.

கிரேட்டு மைண்டுசு திங்க் அலைக்கு :)

வுடு ஜூட்...

அன்புடன்
ஆசாத்