Saturday, March 10, 2018

வடசென்னை பற்றிய இன்னொரு போலித்திரைப்படம் – ‘வீரா’





வடசென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்று சொல்லப்பட்டதால், ‘வீரா’வை சற்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினேன். ஆனால் இதில் ‘வட’யுமில்லை ‘சென்னை’யுமில்லை, ஒரு சுக்கும் இல்லை. வடசென்னையின் எந்தவொரு அசலான நிலவெளியும் இதில் பதிவாகவில்லை. எல்லாமே சினிமாத்தனமான பின்னணிகள். A fake film.

வடசென்னையைச் சார்ந்த எழுத்தாளர் பாக்கியம் சங்கர் இந்தக் குழுவில் பணிபுரிந்ததால் சில தேசலான அடையாளங்கள் தென்பட்டது மட்டுமே ஆறுதல். ‘பிசிறில்லாம செய்யணும்’ போன்று வடசென்னைக்கேயுரிய சில நுண்மையான வசனங்கள் ஒலித்தன. ‘ஓத்தா.. ஙொம்மாள…’ போன்ற வசைகள் எப்படி தணிக்கைத் துறையில் தப்பின என்று ஆச்சரியமாக இருந்தது. இது போன்ற சொற்களை அசலான உச்சரிப்பில் அதற்கேற்ற பின்னணியில் கேட்கும் சுகமே தனி. அதிலும் பெண்கள் பேசினால் கேட்க கூடுதல் ருசியாக இருக்கும்.

இது காமெடி திரைப்படமா, சீரியஸ் ஆனதா அல்லது இரண்டுங் கலந்ததா என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை. திரைக்கதைதான் சொதப்பலாக இருக்கிறது என்று பார்த்தால் casting-ம் அபத்தம். பாக்ஸர் ராஜேந்திரன் என்கிற பாத்திரத்தில் ‘ஆடுகளம்’ நரேன் சென்னை வசவுகளை உச்சரிப்பதெல்லாம் போலித்தனமாக இருக்கிறது. ஆரண்ய காண்டத்தில் வந்த வில்லனைப் போன்றதொரு முகத்தை தேடிப் பிடித்து போட்டிருக்கலாம். நகைச்சுவை நடிகர் ‘கருணாகரனை’ ரவுடி பாத்திரத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கவெல்லாம் தனியான துணிச்சல் வேண்டும்.

அது ஏன் கிருஷ்ணா நடித்த படங்கள் எல்லாம் விளங்காமல் போகிறதென்று தெரியவில்லை. அல்லது விளங்காமல் போகும் படத்தையெல்லாம் அவர் தேடித் தேடி நடிக்கிறாரா என்பதும். மாம்பழக் கலர் பெயிண்ட் அடித்த காக்கை போல இருக்கும் நாயகியை எங்கே தேடிப் பிடித்தார்களோ! சகிக்கவில்லை. நாயகியின் தோழியாக தோன்றக் கூட லாயக்கில்லை. ஆனால் பெயர் மட்டும் ஐஸ்வர்யாவாம்.

லியோன் ஜேம்ஸ்-ன் இசையில் ஒரு பாடல் சகித்துக் கொள்ளும்படி இருக்கிறது. அதுவும் ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’வின் சாயலில் உள்ளது. இசையமைப்பாளர் எலெக்ட்ரிக் கிடார் வகையறாக்களை வதம் செய்து பின்னணி இசையாக கொத்து பரோட்டா போட்டிருக்கிறார். சகிக்க முடியாத சத்தம்.

நல்ல நோக்கத்தில் உருவாக்கப்பட்ட மனமகிழ் மன்றங்கள் பிறகு அரசியல்வாதிகளின் மறைமுக ஆதரவோடு கூலிப்படைகளின் வணிக மையங்களாக மாறினதைச் சொல்ல முயன்ற வகையில் இதன் மையம் வலுவானதுதான். ஆனால் சுவாரசியமும் நம்பகத்தன்மையும் பெருமளவு இல்லாமல் சிதைத்திருக்கிறார்கள்.

என்னுடைய நீண்டகால புகார் அப்படியேதான் இருக்கிறது. வடசென்னையின் ஆன்மாவைக் வெளிக்கொணரும் திரைப்படம் இதுவரை உருவாகவில்லை. பாரதிராஜாவின் ‘என்னுயிர்த் தோழன்’ போன்ற சில ஆறுதல்கள் மட்டுமே உண்டு. ‘வீரா’ வைப் பார்த்த பிறகு, செல்வராகவனின் ‘புதுப்பேட்டை’யின் மீதான மரியாதை இன்னமும் கூடுகிறது.

இந்த நிலையில் வெற்றிமாறனின் ‘வடசென்னை’யாவது என்னுடைய ஏக்கத்தை தீர்த்து வைக்குமா என்று காத்திருக்கிறேன்.


suresh kannan

1 comment:

silviamary.blogspot.in said...

/இந்த நிலையில் வெற்றிமாறனின் ‘வடசென்னை’யாவது என்னுடைய ஏக்கத்தை தீர்த்து வைக்குமா என்று காத்திருக்கிறேன். / ஒரு படம் வருவதற்கு முன்பேயே அதைப்பற்றிப் பேசுவது சரியில்லை தான் என்றாலும் வெற்றிமாறனின் ஆனந்தவிகடன் நேர்காணலை வாசித்தபின்பு வடசென்னை என்பது புதுப்பேட்டையின் கொஞ்சம் மேம்படுத்தப்பட்ட ஜெராக்ஸ் (வேண்டுமானால் கலர் ஜெராக்ஸ்) பிரதியாகத்தான் இருக்குமோ என்று தோன்றுகிறது.

தனுஷ் மாதிரியான ஹீரோயிஸ நிர்ப்பந்தங்களை வைத்துக் கொண்டு வேறுமாதிரி பண்ண முடியுமா, அப்படிப் பண்ணினால் வியாபாரமாகுமா என்று ஏகப்பட்ட கேள்விகள் முளையிடுகிறன. புதுப்பேட்டை வந்தபோது தனுஷுக்கு அவ்வளவு பெரிய ஹீரோ வேல்யூ இல்லை என்றுதான் நினைக்கிறேன். இருந்திருந்தால் புதுப்பேட்டையே சாத்தியமாகி இருக்குமா என்று தெரியவில்லை.

வாழ்க்கை என்றொரு சிவாஜி நடித்த படம் வந்தது. அதன் மூலப்படமான மலையாளப் பதிப்பில் அதன் கதாநாயகன் பீடிதான் குடிப்பார். ஆனால் சிவாஜி நடித்தபோது குறைந்தவிலை சிகரெட் குடிப்பதாகக் காட்டி இருப்பார்கள். ஏனென்றால் சிவாஜியைப் போய் சிகரெட் பிடிக்க வைத்தால் ரசிகன் ஏற்றுக் கொள்ள மாட்டானோ என்ற வியாபார பயம். அதுவும் சிவாஜிக்கு ஜோடியாக அம்பிகா என்பதெல்லாம் சுத்தமாய் பொருந்தவில்லை. ஆனால் அவர் வயது பெண்களை நாயகியாக்க சினிமா வியாபாரம் இடையூறு.

இவை எல்லாவற்றையும் மீறி வடசென்னை சமரசமில்லாத திரைப்படமாக வந்தால் பாராட்டலாம். வரவேற்கலாம். வரட்டும் பார்க்கலாம்.