Thursday, May 15, 2014

The Monuments Men (2014) - போரில் அலையும் கலை



"ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பதின் மூலம் ஒரு தலைமுறை மக்களையே அழித்தொழிக்க முடியும். அவர்களின் இல்லங்களை மண்ணோடு மண்ணாக ஆக்கி துடைத்தெடுக்க முடியும். என்றாலும் அவர்கள் திரும்ப வருவார்கள். ஆனால் அவர்களின் சாதனைகளை, வரலாற்றை அழிப்பது, அவர்களின் இருப்பையே இல்லாமல் ஆக்குவதாகும். சாம்பல் போல் ஒன்றுமில்லாமல் கரையச் செய்வது. அதைத்தான் ஹிட்லர் விரும்புகிறார். நாம் அதை சுலபமாக அனுமதிக்க முடியாது"

திரைப்படம் துவங்கி சுமார் அரை மணி நேரத்திற்குள் ஃப்ராங்க் ஸ்டோக்ஸ் தன் சகாக்களிடம் பேசும் இந்த வசனம்தான் இத்திரைப்படத்தின் சாரம்.

()
 
இரண்டாம் உலகப் போர் நிகழும் காலக்கட்டம்.  ஜெர்மானியர்கள் தாங்கள் வெற்றி கொள்ளும் பிரதேசங்களில் எல்லாம் அங்குள்ள முக்கியமான ஓவியங்கள், நூல்கள், சிலைகளை எல்லாம் கொள்ளையடிக்கின்றனர். அவற்றையெல்லாம் கொண்டு  மிகப் பெரிய அருங்காட்சியகத்தை உருவாக்க வேண்டும் என்பது ஹிட்லரின் நோக்கமாகவும் கனவாகவும் இருக்கிறது. 'சென்றிடுவீர் எட்டுத்திக்கும். கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்று நாஜிப்படைகளுக்கு உத்தரவிடுகிறார். போரில் தோற்றும் பின்வாங்கும் பிரதேசங்களில் எல்லாம் நாஜிகள் அவசரம் அவசரமாக கலை அடையாளங்களை கொள்ளையடிக்கிறார்கள், ஒளித்து வைக்கிறார்கள், அழிக்கிறார்கள்.

அமெரிக்காவில் உள்ள வரலாற்றுப் பேராசிரியரான ஃப்ராங்க் ஸ்டோக்ஸ் இது குறித்து கவலை கொள்கிறார். உக்கிரமான போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் கலையைப் பற்றி யார் கவலைப்படுவார்கள்? என்றாலும்  இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபரிடம் வாதாடி அனுமதி வாங்குகிறார். கலை ஆர்வலர்கள் உள்ளிட்ட கலவையான ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. அக்குழுவின் பெயரே The Monuments Men. ஜெர்மானியர்களால் ஆக்ரமிக்கப்பட்ட பாரிஸ் நகரத்தில் போரில் தோற்று பின்வாங்கி ஓடும் நாஜிகள் பிக்காஸோ, டாவின்சி, உள்ளிட்ட பல முக்கியமான ஆளுமைகளின் தனியார் ஓவியங்களையும்  தேவாலயங்களில் உள்ள சிலைகளையும் கொள்ளையடித்து கடத்திச் செல்கின்றனர். ஸ்டோக்ஸின் குழு மிகுந்த சிரமங்களுக்கும் சில உயிரிழப்புகளுக்கும் இடையில் அதைத் தடுத்து நிறுத்தி அவற்றை மீட்டெடுத்து அந்தந்த உரிமையாளர்களிடம் சென்று சேர்ப்பதே இப்படத்தின் நிகழ்வுகள்.

()

ஸ்டைலான நடிகரான ஜார்ஜ் க்ளூனி இயக்கியிருக்கும் ஐந்தாவது திரைப்படம் இது. வயதான தோற்றத்தில் ஸ்டோக்ஸாக நடித்திருக்கிறார். 'அமெரிக்காதான் உலகத்தின் நிரந்தர பாதுகாவலன், அனாதை ரட்சகன், என்கிற ஹாலிவுட்தனமான செய்தி மீண்டும் இத்திரைப்படத்தின் மூலம் பதிவாக்கப்படுகிறது. இந்தச் சிக்கலைத் தாண்டி வந்து விட்டால் அருமையான திரைப்படம் இது.

இத்திரைப்படத்தின் உருவாக்கத்திற்காக மிகவும் மெனக்கெட்டிருப்பது இதன் ஆர்ட் டிபார்ட்மெண்ட்டாகத்தான் இருந்திருக்கும். உலகப் போரின் நிகழ்வு காட்சிப் பின்னணிகளை சிறப்பாக உருவாக்கியிருப்பது அருமைதான் என்றாலும் பழமையான ஓவியங்களையும் சிலைகளையும் தத்ரூபமாக உருவாக்கியிருப்பதுதான் சிறப்பான விஷயம். இதற்கான அகாதமி விருதை இத்திரைப்படம் வென்றால் அதில் ஆச்சரியம் ஒன்றுமிருக்காது.
 
ஓவியங்களைத் தேடி பயணிக்கும் ஒரு சமயத்தில் நாஜிகள் டன் டன்னாக ஒளித்து வைத்திருக்கும் தங்கப் பாளங்கள் கிடைக்கின்றன. பத்திரிகைகள் அவற்றையே பிரதானமாக வெளியிடுகின்றன. கலைச் செல்வங்கள் அழிவதைப் பற்றி ஒருவருக்கும் கவலையிருப்பதில்லை. மின்னலாக மறையும் ஒரு காட்சியில் ஒரு பெரிய  தொட்டி நிறைய சிறு சிறு தங்கக் கட்டிகள் இருப்பது காட்டப்படுகிறது. பிறகுதான் தெரியவருகிறது, அவை கொல்லப்பட்ட யூதர்களிடமிருந்து பிடுங்கப்பட்ட தங்கப் பற்கள். இந்த ஒரு சிறுகாட்சியே யூதர்கள் கூட்டம் கூட்டமாக அழிக்கப்பட்ட அந்த மிகப் பெரிய அவலத்தை வலிமையாக நிறுவுகிறது.
 
'ஒரு துண்டு கலையைக் காப்பாற்ற மனித உயிர்களையே இழந்திருக்கத்தான் வேண்டுமா? சில வருடங்கள் கழித்து யார் இதை நினைவில் வைத்திருப்பார்கள்" என்று ஒரு கேள்வி படத்தின் இறுதியில் வருகிறது. உண்மைதான். தங்களுடைய கலாசாரத்தின் சிறப்பான அடையாளங்களை பாதுகாக்கவும் அழியாமல் மீட்டெடுக்கவும் உழைத்த பல நபர்களை அதன் வரலாறுகளை நாம் இன்று அறிந்திருப்பதில்லை, மறந்தும் போய் விடுகிறோம்.

தமிழ் சமூகத்தில் இப்படியான ஒரு பிரதிநிதியாக ஒரு நபர் பிரதானமாக நினைவுக்கு வருகிறார். அவர் பெயர் உ.வே.சாமிநாத அய்யர்.

IMDB


suresh kannan

1 comment:

Anonymous said...

சார், வணக்கம்.

எனக்கு கட்டுரை படிக்க பொறுமை இல்லை. நான் ஒரு படம் பற்றி எழுதினால் 2ஐ மட்டும் எழுதுவேன்.

1. மொத்தம் இருப்பது 8 ranks என வைத்துக் கொண்டால் இந்த படம் எத்தனாவது rank என சொல்வேன்.

2. அடுத்து கதையின் ஒன்லைன். முடிந்தது.வேறு எதையும் விமர்சனத்தில் எழுத மாட்டேன். விமர்சனமே எழுத மாட்டேன்.

நீங்கள் எப்போதும் போல் விமர்சனம் எழுதுங்கள். ஆனால் அதை 3ஆவதாக செய்யுங்கள். முதலில் மேற்சொன்ன இரண்ட்டை எழுதுங்கள். அதன் பிறகு 3ஆவதாக விமர்சனத்தை எழுதுங்கள். முதலிரண்டே எனக்கு போதும். 3ஆவது விமர்சனம் படிக்க ஆர்வம் உள்ளோருக்கு.

படித்ததற்கு நன்றி.