Sunday, December 29, 2013

சென்னை சர்வதேச திரைவிழா - சில குறிப்புகள்



11வது சென்னை சர்வதேச திரைவிழா சமீபத்தில் நடந்து முடிந்தது. இதற்குப் பின் நின்று இயங்கிய உழைத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி சொல்வது கடமை. இது போன்ற எந்தவொரு பெரிய நிகழ்ச்சியிலும் அது குறித்த புகார்களோ, முணுமுணுப்புகளோ, அரசியலோ அல்லாமல் போகாது. ஏன் இந்த புகார்களை அடுக்குகிறவர்கள் ஒருங்கிணைத்து உருப்படியான ஏதாவது ஒரு நிகழ்வை முயற்சி செய்தால் கூட அதிலும் குறைகாண வேறு சில குழுக்களின் நபர்கள் காத்திருப்பார்கள். தமிழர்களின் பிரத்யேக குணமிது. இப்படியாக சென்னை சர்வதேச திரைவிழாவிலும் அப்படி சில குறைகள் இருந்திருக்கலாம்.

மற்ற மாநில திரைவிழாக்களில் திரையிடப்பட்ட சில முக்கியமான திரைப்படங்கள் இங்கு விடுபட்டிருப்பதையும் அதன் பின்னால் ஒருவேளை இருந்திருக்கக்கூடிய அரசியல் காரணங்களையும் திரைஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். (கடந்த ஆண்டு லீனா மணிமேகலையின் 'செங்கடல்' முதலில் திரையிட தேர்வு செய்யப்படாதது, பின்னர் சம்பந்தப்பட்ட படைப்பின் குழுவினரின் போராட்டத்திற்குப் பிறகே தேர்ந்தெடுக்கப்பட்டது, இந்த ஆண்டு Fanry போன்ற தலித் அரசியலை உரையாடும் திரைப்படங்கள் தற்செயலாகவோ திட்டமிட்டோ புறக்கணிக்கப்பட்டது) ஆனால் இதன் பின்னால் ஒருவேளை இருந்திருக்கக்கூடிய நியாயமான நடைமுறை பிரச்சினைகளை மனதில் கொண்டு அனைத்தையும் மீறி இந்த விழாவை தொடர்ந்து சாதித்துக் காட்டிக் கொண்டிருக்கிற ICAF ஐயும் அதன் பின்னால் நிற்கக்கூடியவர்களையும் அனைத்து மனத்தடைகளையும் மீறி பாராட்டுவதுதான் பண்பாக இருக்க முடியும்.

(விழா அமைப்பாளர்களின் மீது ஒரு வார இதழ் வைத்த ஆதாரமல்லாத குற்றச்சாட்டிற்கும் படங்களை தேர்வு செய்வதில் உள்ள செலவுகளையும் சிக்கல்களையும் பற்றி அமைப்பாளர்களின் பதில்)

உண்மையில் இதுபோன்ற சா்வதேச திரைவிழாக்களை மற்ற மாநிலங்களைப் போன்று தமிழக அரசே ஏற்று எவ்வித மனச்சாய்வுகளும் அற்ற குழுவை ஏற்படுத்தி அதன் மூலம் நடத்த வேண்டும். இந்தியாவிலேயே அதிக திரைப்படங்களை உருவாக்கும் மாநிலங்களுள் ஒன்றான, கேளிக்கை வரி நீக்கம் என்கிற அபத்தமான அரசியல்களைத் தாண்டி திரைத்துறையின் மூலம் கணிசமான வருவாயைப் பெறும் தமிழ்நாட்டிற்கு இது அவசியமான கடமைகளுள் ஒன்று. ஆனால் அரசோ அதற்கு மாறாக சில லட்சங்களை மாத்திரம் தந்து விட்டு அதற்குப் பதிலாக தன்னை முன்னிறுத்திக் கொண்டு அதற்கான மைலேஜைப் பெறுவதில்தான் குறியாக இருப்பது போல் தோன்றுகிறது. இவ்வாறு அரசின் நிதியைப் பெறுவதால் நிகழ்ச்சயில் ஏற்படும் பின்னடைவுகளுள் ஒன்று, அரசியல் காரணங்களுக்காக சில திரைப்படங்கள் தேர்வு செய்யப்படாமலிருப்பது. எனில் கார்ப்பரேட் நிறுவனங்களின் துணை கொண்டு இதனை சாதிக்க முயலலாம். ஆனால் அவற்றிற்கான அரசியலையும் தவிர்க்கவே முடியாது.


என்னுடைய தனிப்பட்ட பார்வையில் இந்த விழாவில் உணர்ந்த சில குறைகளை, நெருடல்களை பதிவு செய்து வைக்கிறேன். அடுத்த வருடங்களில் இவை நிவர்த்தி செய்யப்படலாம் எனவும் நம்புகிறேன்.

1) படங்கள் திரையிடப்படும் இடங்கள் ஒவ்வொன்றும் வேறு வேறு தூரத்தில் இருக்கின்றன. குறிப்பாக இந்த வருடத்தில் இணைக்கப்பட்ட அபிராமி திரையரங்கம், மற்ற இடங்களை ஒப்பிடும் போது தூரமானது. ராயப்பேட்டையில் ஒரு திரைப்படத்தைப் பார்த்து விட்டு குறைந்த இடைவெளி நேரத்திற்குள் அடுத்த இடத்திற்கு விரைவது சங்கடத்தையும் மனஉளைச்சலையும் தருவது. சுயவாகனவசதியற்ற, பொதுவாகன சேவையை நம்பியிருக்கும் என்னைப் போன்றவர்களின் நிலைமை இன்னமும் சிரமமானது. மதிய உணவிற்கான நேரம் கூட இல்லாமல் வெறும் தேநீரை குடித்து விட்டு சில படங்களுக்கு விரைந்திருக்கிறேன். ஐநாக்ஸ் போன்ற மேட்டிமைத்தனமான குறைந்த இருக்கைகள் கொண்ட அரங்கில் அது நிரம்பியவுடன் மனச்சாட்சியே இல்லாமல் கதவைச் சாத்தி விடுவார்கள் என்பதால் அங்கு போகவே தோன்றவில்லை.

இது போன்ற நடைமுறைப் பிரச்சினையைத் தவிர்க்க நாலைந்து திரையரங்கங்களை ஒரே வளாகத்தில் கொண்ட இடத்தை ஏற்பாடு செய்தால் இப்படி அலைந்து திரிகிற வேலை மிச்சமாவதோடு அடுத்த திரைப்படத்திற்கு சாவகாசமான மனநிலையில் மாறிக் கொள்ளலாம். கடந்த வருடத்தில் அமைச்சர் பேசும் போது கலைவாணர் அரங்கம் இருந்த இடத்தில் இதற்காக ஒரு கலையரங்கம் கட்டப்படும் என்று உறுதியளித்திருந்தார். பிறகு அது பற்றிய பேச்சில்லை. இப்போது அது விரைவில் கட்டி முடிக்கப்படும் என்பதாக ஒரு செய்தி வந்துள்ளது மகிழ்ச்சி. அரசியல் மாற்றங்களைத் தாண்டி, அரசியல்வாதிகள் கைப்பற்றி விடாமல் இந்தக் கட்டிடம், அது உருவாக்கப்பட்ட நோக்கத்திலிருந்து மாறாமல் வருடம் பூராவும் கலை நிகழ்வுகள் அமைவதற்கான சாத்தியங்கள் ஏற்பட வேண்டும். வருடம் பூராவும் இங்கு உலக சினிமாக்கள் திரையிடப்பட்டால் அது பயனுள்ளதாக இருக்கும்.

2) அபிராமி திரையரங்கத்தில் பழக்க தோஷத்திலோ என்னமோ, வெளிநாட்டுத் திரைப்படங்களைக் கூட  நடுவில் நிறுத்தி இடைவேளை எனும் அபத்தமான, அராஜகமான விஷயத்தைச் செய்கிறார்கள். வெளிநாட்டு இயக்குநர்கள் இதைப் பார்த்தால் நொந்து விடுவார்கள். தொழில்நுட்பம் முன்னேறாத காலகட்டத்தில் முடிந்து போன ரீலை மாற்றி அடுத்த ரீலை ஏற்ற கட்டாயமாக ஏற்க நேர்ந்த இடைவெளி இது.  வணிகர்களும் நொறுக்குத்தீனிகளை விற்க இந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்டார்கள். நுட்பம் வளர்ந்து இதற்கான தேவை இல்லாவிடினும் கூட இந்தச் சம்பிரதாயம் மாறவேயில்லை. இந்த அபத்தம் எதுவரை வளர்ந்திருக்கிறது என்றால், நமது இயக்குநர்கள் இடைவேளை என்பதை மனதில் வைத்துக் கொண்டு அதற்கான செயற்கையான திருப்பங்களை தங்களின் திரைக்கதையில் உருவாக்குவது வரை வளர்ந்திருக்கிறது. இந்த அபததம் குறித்து திரைப்பட ஆய்வாளர் தியோடர் பாஸகரன் 'இடைவேளை எனும் குறுக்கீடு' என்று தனிக் கட்டுரையே எழுதியிருக்கிறார். ICAF இதில் தலையிட்டு சம்பந்தப்பட்ட ராமநாதன்களுக்கு உபதேசிக்க வேண்டும்.

3) ஒவ்வொரு திரைப்பட ரசிகருமே எந்த திரைப்படத்தைப் பார்ப்பது என்பதை சில மணி நேரங்கள் செலவழித்து தேர்வு செய்து அதற்காக திட்டமி்ட்டு வருகிறார்கள். ஆனால் எதிர்பாராத காரணங்களினால் அது திரையிடப்படாமல் போகும் போது ஏமாற்றமும் நேரவிரயமும் ஏற்படுகிறது. அபிராமி திரையரங்களில் மதியம் 02.00 மணிக்கு திரையிடப்பட வேண்டியதற்காக காத்திருந்தேன். அது முடிந்தவுடன் மீண்டும் நான் ராயப்பேட்டைக்கு விரைய வேண்டும். எனவே படத்தின் நீளத்தையும் அடுத்த படத்திற்கான துவக்க நேரத்தையும் போக்குவரத்திற்கான நேரத்தையும் கணக்கிட்டு உட்கார்ந்திருந்தால் 45 நிமிடங்கள் வரை தொடர்புள்ள படம் திரையிடப்படவேயில்லை. அரங்கத்தில் இருந்த தன்னார்வ மாணவர்களைக் கேட்டால் தொழில்நுட்ப குறை என்பதாக கூறுகிறாாகள். அவர்களை அதிகம் கோபிக்கவும் இயலவில்லை. வேறு நல்ல திரைப்படத்தையாவது திரையிடலாமே என்றாலும் கூட அதற்கான உத்தரவு இல்லை என்கிறார்கள். இது போன்ற சிக்கலான நேரங்களில் என்ன செய்வது என்கிற மாற்று வழிமுறைகளையும் முன்னமே திட்டமிட்டு செயல்படுத்துவது நல்லது.

4) இது நமது குடிமை உணர்வு பற்றியது. இந்த விஷயத்தில் நாம் எந்தளவிற்கு பின்தங்கியிருக்கிறோம் என்பது நாமே அறிந்ததுதான். இதை சுட்டிக்காட்டினால் குற்றவுணர்வோ வெட்கமோ அடையாமல் அதற்காக கோபம் கொள்ளும் அபத்தமும் நம்முடையதுதான். இந்த முறை திரைப்படங்களின் இடையில் கைபேசியில் பேசி தொந்தரவு தரும் நபர்களை அதிகம் காணாதது நான் செய்த பாக்கியம். மாறாக நான் உணர்ந்த அசெளகரியம், திரைப்படங்களுக்கு இடையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே இருப்பது, படம் துவங்கின பத்திருபது நிமிடங்களுக்கு பிறகும் கதவைத் திறந்து திரையில் வெளிச்சத்தைப் பாய்ச்சி உள்ளே நுழைந்து இருக்கையைத் தேடிக் கொண்டேயிருப்பது. இது மற்றவர்களுக்கு எத்தனை இடையூறைத் தரும் என்கிற நுண்ணுணர்வு நம்மிடம் குறைவானதாக இருக்கிறது. ஒவ்வொரு திரைப்படமும் எத்தனை மணிக்கு திரையிடப்படுகிறது என்பதை பல நாட்களுக்கு முன்பே அறிந்திருந்தும் கூட சில நிமிடங்களுக்கு முன்பு வரவேண்டும் என்கிற திட்டமிடல் கூட இல்லாமல் இருப்பது நம் சமூகத்தின் அலட்சியமான மனோபாவத்தையே சுட்டுகிறது. வெளியிலிருந்து வருகிறவர்கள் கூட பரவாயில்லை, திரையரங்கத்தின் வாசலின் தேநீர்க்கடைகளில் உரையாடிக் கொண்டிருப்பவர்கள் கூட கடைசி நிமிடத்தில்தான் நுழைகிறார்கள்.

5) திரைப்படங்களின் synopsis  புத்தகத்தை துவக்கத்திலேயே தராமல் சில நாட்கள் கழி்நத பின் தருவது ஏன் என தெரியவில்லை. போலவே படத்தின் ஷெட்யூல் பிரதிகளையும் முதலில் வநதவர்களுக்கெல்லாம் இறைத்து வாரி விட்டு பின்னால் வந்தவர்களுக்கு அது இல்லை என்று சொல்லாமல் ஒரு நபருக்கு ஒன்று என்று கட்டாயமாக அமல்படுத்தினால் நன்றாக இருக்கும். ஷெட்யூல் காப்பி இல்லாமல் நான் இணையத்திலிருந்து அச்சிட்டு எடுத்துச் சென்றேன்.


()


குறுந்தகடுகளிலும் இணையத்திலும் தரவிறக்கம் செய்து உலக சினிமாவை பார்த்து விடும் ரசிகர்களுக்கு இது போன்ற திரைவிழாக்களில் கலந்து கொள்ளும் அற்புதமான அனுபவம் பற்றி தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் நானும் அப்படித்தான் இருந்தேன். இதற்கு சமீபத்தில் நான் எழுதிய கட்டுரையின் துவக்க வரிதான் இதற்கு சரியான எதிர்வினையாக இருக்கும்.
ஒரு திரைப்படம் குறித்த நினைவுகள் பார்வையாளர்களுக்குள் தங்குவது பிரத்யேகமாக அத்திரைப்படம் குறித்து மாத்திரமல்ல. மாறாக அத்திரைப்படத்தைக் காண்பதற்கு முன்னும் பின்னும் நி்கழ்ந்த சம்பவங்கள் தொடர்பான மனப்பதிவுகளையும் இணைத்துத்தான்....

வாய்ப்பிருப்பவர்கள இது போன்ற திரைவிழாக்களில் கலந்து கொள்வதை தவற விடாதீர்கள். இந்தக் கடடுரையில் விடுபட்டிருக்கும் ஆலோசனைகளை, பரிந்துரைகளை நண்பர்களும் இணைத்து இந்த அனுபவத்தை செழுமையடைய உதவலாம்.

suresh kannan

2 comments:

kanavuthirutan said...

மிகநல்ல பதிவு.. மேட்டிமையான திரையரங்கமாகவே இருந்தாலும், ஐநாக்ஸ்சில் இடையில் வந்து அமர்பவர்கள், எழுந்து செல்பவர்கள் போன்றவர்களால் ஏற்படக்கூடிய அசெளகரியங்கள் குறைவாகவே இருந்தது அதன் சிறப்பு..
மேலும் 500ரூபாய் பணம் செலுத்தி நமது பெயரை பதிவு செய்யும் போதே, நமது அலைபேசி எண்ணையும் வாங்கிக் கொண்டு, திரையிடலில் ஏற்படும் மாற்றங்களை ஒரு குறுஞ்செய்தி மூலம் தெரிவித்துவிட்டால், நம் திட்டத்தை மாற்றிக் கொள்ள நமக்கு எளிதாக இருக்கும் என்பது என் எண்ணம்...

உலக சினிமா ரசிகன் said...

தமிழக அரசு சென்னை திரைப்பட விழாவை ஏற்று நடத்த வேண்டும்.அதற்காக அனைவரும் ஒரு மித்த குரல் எழுப்ப வேண்டும்.
இந்த ஒன்றை சாத்தியப்படுத்தினால் மீதி அனைத்தும் தானாக நடக்கும்.
குரல் கொடுத்தமைக்கு நன்றி சுரேஷ் கண்ணன்.