Friday, November 22, 2013

இறைந்து கிடக்கும் புத்தகங்கள்


எழுத்தாளர் அ.முத்துலிங்கம், இயக்குநர் மிஷ்கின் ஆகியோர்,  இறைந்து கிடக்கிற புத்தகங்களுக்கு நடுவிலிருக்கும் புகைப்படங்களை  சமீபத்தில் பார்த்ததும் சஹஹிருதயர்களைப் பார்த்த அளவில்லா சந்தோஷம் ஏற்பட்டது. நான் தனியனில்லை என்கிற சந்தோஷமும். என்னளவில், வாசிக்கிறோமோ இல்லையோ அது ஒருபுறம். ஆனால்  புத்தகக் குவியல்களின் நடுவில் சும்மா  இருப்பதே சொல்லவியலாத மகிழ்ச்சியையும் நல்ல அதிர்வலைகளையும் ஏற்படுத்துகிறது. அவைகைள வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதே நமக்கு பிடித்த பெண்களை பிடித்தமான கோணங்களில் கவனித்துக் கொண்டிருக்கும் இன்பத்தை அளிக்கிறது. 'வாயேன் என்னை வந்து வாசியேன்' என்று சுற்றியுள்ள புத்தகங்கள் அழைத்துக் கொண்டேயிருக்கும் குரல்களைக் கேட்பது தனி இன்பம்.

என் படுக்கையறையின் கட்டில் முழுக்க புதத்கங்களால் இறைந்து கண்கொள்ளா காட்சியாக இருக்கும். என் மனைவி என் மீது எரிச்சலும் கோபமும் கொள்ளும் பல விஷயங்களில் இதுவுமொன்று. (வாக்கியங்களுக்கு இடையி்ல் வாசிக்காதீர்கள்). சமையலறையும் வரவேற்பறையும் தேவையற்ற வஸ்துகளால் இறைந்திருக்கும் உண்மையைச் சுட்டிக் காட்டி அவரை பழிவாங்கி விடுவதில் சற்று திருப்தியாக இருக்கும்.  புத்தகங்களை கண்ணாடிச் சிறையில் அடைத்து விருந்தினர்கள் நம்மீது மதிப்பு கொள்வதற்காக காட்டும் வீண் ஜம்பங்களை விட புத்தகங்கள் இப்படி இறைபட்டு விருப்பமான நேரத்தில் கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதை உடனே வாசிப்பதே சிறந்த காரியம். புத்தகங்கள் மாத்திரமல்ல, எவற்றையுமே உபயோகிக்காமல் வீணாக வைத்திருப்பதால் பல கேடுகள் விளையும்.

வீட்டில் மாத்திரமல்ல, என் அலுவலக மேஜையும் (அங்கும் கூட புத்தகங்கள்) காகிதங்களாலும் கோப்புகளாலும் நி(இ)றைந்திருக்கும். என் பாஸ் இதை என்னிடம் நேரிடையாகவும் மறைமுகமாகவும் சொல்லி அலுத்து விட்டு விட்டார். இப்படியாக அஃறிணைகள் ஒழுங்கின்மைகளோடு இறைந்திருக்கும் ஒழுங்குதான் எனக்கு பிடித்திருக்கிறது. இப்படி இறைந்திருந்தால் சட்டென்று தேடி எடுப்பதும் எளிதாக இருக்கிறது.  பொருட்களை இப்படியாக இறைத்து வைத்திருப்பவர்களின் மனோநிலை,  பிசிறுகளும் குழப்பங்களும் நிறைந்ததாக இருக்கலாம்  என்று உளவியல் நிபுணர்கள் ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடித்தும் நிரூபித்தும் இருக்கிறார்களாம். அவர்களின் ஆராய்ச்சி முடிவுகளை இந்த குப்பைகளின் கீழ் ஒளித்து வைத்தால் போகிறது. அதனால் ஒன்றும் பிரச்சினையில்லை.

அது போல் புத்தகங்களை வாசிக்கும் சிலர் அதில் அடிக்கோடிட்டும் குறிப்புகள் எழுதியும் தாம் வாசித்ததை நிரூபிக்கும் ஆவேசத்துடன் செயல்படுவார்கள். என்னைப் பொறுத்தவரை எத்தனை முறை வாசித்தாலும் அந்தப் புத்தகங்கள் அச்சிலிருந்து வெளிவந்த அதே புத்தம்புது அழகுடனும் வாசனையுடனும் தூய்மையுடனும் இருப்பதைத்தான் சரியாக எண்ணுவேன்.

புத்தகங்களை நாமறியாமல் காலால் தொட்டு விட்டால் அதைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளும் மரபு சார்ந்த பழக்கம் நம்மிடமிருக்கிறது. விவரம் அறியாத வயதுகளில் நானும் செய்திருக்கிறேன். ஆனால் நான் மிக மதிக்கும் புத்தகங்களின் மீது எவ்வித குற்றவுணர்வும் தயக்கமுமின்றி என்னால் கால் வைத்து ஏறி நிற்க முடியும். அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்கள் குறித்துதான் எனக்கு மதிப்பே ஒழிய அச்சிடப்பட்டிருக்கும் காகிதங்கள் குறித்தல்ல. பி.ஏ. கிருஷ்ணன் எழுதிய 'புலிநகக் கொன்றை' புதினத்தில், உடலுறவு கொள்ளும் வசதிக்காக தடித்தடியான புத்தகங்களான கார்ல்மார்க்ஸின் 'மூலதனத்தை' பயன்படுத்திக் கொள்ளும் ஒரு பாத்திரம் நினைவிற்கு வருகிறது.

இவையெல்லாம் ஏதோ முற்போக்குத்தனமாக சிந்தித்து அவை சார்ந்தவைகளை அவற்றை ஒரு ஜம்பத்துடன் வெளியிட்டும்  அந்தப் பழக்கங்களை முரட்டுத்தனமாக தனக்குள் திணித்துக் கொள்வது என்பதல்ல. சற்று பகுத்தறிவுடன் சிந்தித்தாலே இவைதான் சரி என்பது இயல்பாக எல்லோருக்கும் தோன்றிவிடுவதுதான் இது. நம்முள் திணிக்கப்பட்டிருக்கும் மரபு சார்ந்த பல கற்பிதங்களின் காரணமாகவும் ஆழ்மன வினைகளை மறுக்க முடியாத காரணங்களினாலும்தான் இவைகள் ஆச்சார மீறலாகவும் தவறுகளாகவும் நமக்கு தெரிகின்றன.

அ,முத்துலிங்கத்தின் முகநூல் குறிப்பு. 

suresh kannan

3 comments:

ஓஜஸ் said...

வணக்கம்.

உடலுக்குள் இருப்பது உயிர். உயிர் இல்லாவிடில் உடல் வெறும் சவமாகும்.

புத்தகத்தனுள் இருப்பது அதன் உயிர் (கருத்துக்கள் எதோ ஒரு வடிவில்). அந்த சொற்கள் இல்லாவிடில் அதுவும் வெறும் காகிதமே, குப்பையே !

உடலுக்கு தரும் மரியாதை, நூலுக்கும் தரளாமே. எத்தனையோ பேருக்கு உயிர் கொடுக்கவல்ல அக்ஷரங்கள் பல உள்ளன !

Vadakkupatti Raamsami said...

சஹஹிருதயர்களைப் பார்த்த ///...
.
.
இங்கே இன்னொன்று

Annogen said...

உங்கள் கருத்துகளுடன் நான் உடன் படுகின்றேன்.. புஸ்தகங்களை புரட்டும் போது ஏற்படும் உணர்வு மிகவும் உத்தமமானது...